search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிர் ரஞ்சன் சவுத்ரி"

    • தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவர உமா பாரதி கோரிக்கை
    • எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ஏழை சாதி.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பின் கட்டமைப்பை மீறவில்லை என்று, தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஒரு உறுதியான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

    ஆனால் தமது கேள்வி என்னவென்றால், நாடு முழுவதும் வேலை பற்றாக்குறை நீடிக்கும் இந்த மோசமான சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய அரசால் செயல்படுத்த முடியுமா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதி அரசு பணிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியிருப்பது வரவேற்கதக்கது என்றும், தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ஏழை என்ற சாதி. இந்த இடஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும், அனைத்து ஏழை மக்களும் ஒன்றிணைந்து தங்களுக்கான சிறந்த வாழ்க்கைக்காக போராட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
    • வேட்பு மனு தாக்கல் செய்ய 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு படிவங்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடைக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

    30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 1-ந் தேதி, வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசிநாள். அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 19-ந் தேதி, ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி இயல்பான தலைவர் என்றும், அவருக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தி போட்டியிட மறுத்து விட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவதாகவும், இனிமேல் ராகுல்காந்தி குடும்பத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காங்கிரஸில் ஜனநாயகம் உள்ளது, அதனால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும், ஆனால் பாஜகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததா என கேள்வி எழுப்பிய சவுத்ரி, அந்த கட்சியின் தலைவர் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டார் என குறிப்பிட்டார்.

    • இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது.
    • ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதிப்பு

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார்.

    இந்த விவகாரம் பாராளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இதையொட்டி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரச்சினை எழுப்பி பேசினார். அப்போது அவர், "ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதித்து விட்டார். அவர் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தை, பெண்களை, ஏழைகளை, நலிவுற்றோரை அவமதித்து விட்டார்" என சாடினார்.

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.

    நண்பகல் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சோனியா காந்தி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் வரிசைக்கு சென்றார். பீகார் பா.ஜ.க. எம்.பி. ரமாதேவியிடம், "இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்?" என கேட்டார்.

    அப்போது அங்கே மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வந்து, சோனியா காந்தியை நோக்கி சைகை காட்டினார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் ஸ்மிரிதி இரானியின் எதிர்ப்பை சோனியா காந்தி புறக்கணிக்க முயற்சித்தார். ஆனால் ஏனோ திடீரென ஸ்மிரிதி இரானியை நோக்கி சோனியாவும் சைகை செய்து கோபமாக பேசினார்.

    சோனியாவும், ஸ்மிருதி இரானியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதும், அவர்களை ஆளும் கட்சி எம்.பி.க்கள் சூழ்ந்ததும், பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த மோதலால் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டபோது சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலேயும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா பொத்தாரும் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

    பின்னர் ரமாதேவி நிருபர்களிடம் பேசுகையில், "இந்த விவகாரத்தில் என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள், நான் என்ன தவறு செய்தேன் என சோனியா கேட்டார். நான் அவரிடம், நீங்கள் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியை மக்களவை காங்கிரஸ் தலைவராக நியமித்ததுதான் தவறு என்று சொன்னேன்" என குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "பா.ஜ.க. எம்.பி.க்களிடம் மிரட்டும் தொனியில் சோனியா காந்தி பேசினார். என்ன விவாதிக்கப்படுகிறது என தெரிந்து கொள்ள விரும்பிய பா.ஜ.க. எம்.பி.க்களிடம் அவர் நீங்கள் என்னிடம் பேசக்கூடாது என கூறினார்" என்று தெரிவித்தார்.

    "மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என பிரச்சினையை அவர் திசை திருப்பினார்" என்றும் நிர்மலா சீதாராமன் சாடினார்.

    இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் குறிப்பிடுகையில், "இன்று மக்களவையில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் நடத்தை கொடூரமானது, மூர்க்கத்தனமானது. அவரை சபாநாயகர் கண்டிப்பாரா? விதிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா?" என குறிப்பிட்டுள்ளார்.

    சோனியா காந்திக்கு ஆதரவு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "மக்களவையில் இருந்தபோது, 75 வயதான மூத்த பெண்மணியை (சோனியாவை) ஓநாய் பாணியில் சுற்றி வளைத்தனர். அவர் செய்ததெல்லாம் மற்றொரு மூத்த பெண் குழு தலைவரிடம் நடந்து சென்று பேசியதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

    மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, "ஒரு பெண்ணாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களவையில் உள்ள அவரது சொந்தக் கட்சி தலைவர் அவமதித்ததற்காக நாட்டின் முன் அவர் வந்து, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, "இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது. அத்தகைய கருத்துக்களை கூறுவது தவறு. இது ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இது தவறுதான்" என குறிப்பிட்டு பிரச்சினையை முடித்து வைத்தார்.

    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
    • பாஜ.க. இதை பிரச்சினை ஆக்குகிறது.

    புதுடெல்லி :

    விலைவாசி உயர்வு, அத்தியாசிய பொருட்கள் மீது சரக்கு சேவை வரி விதிப்பு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் விஜய் சவுக்கில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தி, அணிவகுத்து செல்ல முற்பட்டனர்.

    அவர்கள் எங்கே அணி வகுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ஜனாதிபதி மாளிகையைக் குறிக்கும் 'ராஷ்டிரபதி பவன்' என்பதற்கு பதிலாக 'ராஷ்டிரபட்னி' என்ற வார்த்தையை பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தவறாக பயன்படுத்தினார். ஜனாதிபதியை அவமதிக்கும் இந்த வார்த்தையால், பெரும் சர்ச்சை உருவானது.

    இதில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், விவசாய ராஜாங்க மந்திரி ஷோபா கரண்ட்லஜே உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நேற்று போர்க்கொடி உயர்த்தினர்.

    அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் கோரிக்கை வாசகங்கள் கொண்ட அட்டைகளை ஏந்தி நின்று, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே இந்த விவகாரம் குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் கவனக்குறைவாக ராஷ்டிர பட்னி என்ற வார்த்தையை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி விட்டேன். நாக்கு பிறண்டதால் அவ்வாறு கூறி விட்டேன். ஒருபோதும் ஜனாதிபதியை மரியாதைக்குறைவாக பேசவில்லை.

    நான் என்ன செய்ய வேண்டும்? நான் அதைக்கூறி விட்டேன், தவறாக அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். அதில் கவனம் செலுத்தி விடாதீர்கள் என்று கூற பத்திரிகையாளர்களை கூட தேடினேன். ஆனால் அவர்களை பார்க்க முடியாமல் போய்விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், "நான் ஓரு வங்காளி. இந்தியில் பேசி பழக்கம் இல்லை. இந்தி எனது தாய்மொழியும் இல்லை. நான் ஒரு தவறு செய்து விட்டேன். நான் ஒப்புக்கொள்கிறேன். நான் ஜனாதிபதியிடம் நேரம் ஒதுக்கி கேட்டிருக்கிறேன். நான் அவரிடம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் இந்த பகந்திகளிடம் (பா.ஜ.க.வினரிடம்) அல்ல" என கூறினார்.

    சில பா.ஜ.க.வினர் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே மலையாக்கப் பார்க்கிறார்கள் என சாடினார்.

    வீடியோ வெளியீடு

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் எந்த சூழ்நிலையில் தான் ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை பயன்படுத்த நேர்ந்தது என்பதை எடுத்துக்கூறி உள்ளார். மேலும், பாஜ.க. இதை பிரச்சினை ஆக்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

    புதுடெல்லி:

    நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். தான் ஒருபோதும் இந்திய ஜனாதிபதியை அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும், ஊடகங்களிடம் பேசும்போது கவனக்குறைவாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆளும் பாஜக இந்த விஷயத்தை பெரிதாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

    எனினும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே இவ்வாறு ஜனாதிபதியை அவமதித்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுதியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மதியம்வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 12 மணிக்கு பிறகும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்தியில் ஜனாதிபதி "ராஷ்டிரபதி" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • மார்கரெட் ஆல்வா தேர்வில் தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் புகார்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க திரிணாமுல் முடிவு

    கொல்கத்தா:

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரசின் முடிவு எதிர்க்கட்சிகளுக்கும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இந்த தேர்தலில் பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படும் போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தாபானர்ஜி விரும்பினார், அது நடக்காது என்று தெரிந்த உடன் ஓடிவிட்டார். அனால் காங்கிரஸ் பின்வாங்க வில்லை.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதல்வர் மம்தா உதவவில்லை. அவர் பாஜகவுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க விரும்புகிறார்கள்.

    பாஜகவிற்கும் திரிணாமுல் இடையே ஒரு புரிதல் உள்ளது. ஜெகதீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது அவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    ×