search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளிகள்"

    • அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டுக்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
    • அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணி நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் 5.45 மணி வரையில் உள்ளதால், பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாகக் குறைபாடு ஏற்படுகிறது.

    பள்ளிகளின் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்படவேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது.

    மேலும், அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டுக்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எனவே, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைக்கப்படுகிறது.

    கோடை விடுமுறை, பள்ளி விடுமுறை நாள்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.

    ஓட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒட்டநத்தம் கிராம் விநாயகர் கோவில் திடலில் முன்பு நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தார். மாவட்ட பிரதிநிதி சோசுப மோகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    மாதம் ரூ. 1000

    தி.மு.க அரசின் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.

    தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில்கள் கடன் வழங்குவது மூலம் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் சிவராஜ், தமிழக அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்தும், மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூரமணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், யூனியன் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் சிவா நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன.
    • பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

    தாராபுரம்:

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு வரும் ஜூன் மாதம் 6 -ந்தேதி முதல் செயல்பட உள்ளது.இக்குழுவில் தலைமையாசிரியர், உயர்வழிகாட்டல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர், கருத்தாளர் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இடம்பெறவுள்ளனர்.

    உடுமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் குழு வாயிலாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.உயர்கல்விக்கு தயார் செய்வதும், விண்ணப்பிக்கச் செய்வதும் இக்குழுவின் முக்கிய பணியாகும். இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டும் வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
    • 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் 2023-24-ம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுள்ளது.

    இந்த புத்தகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள. டி.பி.ஐ. வளாகம், அடையாறு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பாட நூல் கழக கிடங்கு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.

    இந்த புத்தகங்களை பெற தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பணம் செலுத்திய பிறகு இந்த பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களை வினியோகம் செய்ய டி.ஜி.பி. வளாகத்தில் 4 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவை பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    தமிழ்நாடு பாட நூல் கழகம் மொத்தம் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சடித்துள்ளது. இதில் 3.75 கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 1.25 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும். பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    மேலும் மாணவர்களுக்கான பைகள், காலணிகள், சாக்ஸ் வினியோகமும் தொடங்கியுள்ளது. கலர் பென்சில்கள், கிரேயான்கள், ஜியோ மெட்ரிபாக்ஸ் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு வரும் ஜூன் மாதத்திற்கு முன்பு வழங்கப்படும்.

    9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முதல் பாடம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி 'செம்மொழியான தமிழ்மொழியாம்" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

    • அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.
    • 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்த நிலையில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.

    இந்த பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளி கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

    இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தில் இருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

    1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வர நடைபெறும் கலைத்திருவிழா நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
    • மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

    திருச்சி:

    அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கத் தயங்கும் இந்த காலகட்டத்தில் மேற்படிப்பை தொடர கல்லூரிகளில் அரசு கல்லூரி கிடைக்குமா என்ற ஏக்கம் நிறைந்து தான் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.

    ஆனாலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின் அரசு பள்ளியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அரசு ஒரு புது யுத்தியை கையில் எடுத்திருக்கிறது.

    அரசு பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவிகளுடைய தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான புது முயற்சியாக கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.

    பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை முதலில் பள்ளிகளில் நடைபெற்றது.

    அதன் பிறகு வட்டார அளவில் ஒரு பள்ளியை தேர்வு செய்து அந்த பள்ளியில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ச்சியாக மாவட்டம், மாநிலம் என ஒவ்வொரு நிலைக்கும் வெற்றி பெற்றவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.

    இந்த கலைத்திருவிழாவை பொறுத்தவரை மாணவர்கள் தங்களிடம் உள்ள எந்த திறமையாக இருந்தாலும் அதை மேடையில் வெளிப்படுத்தலாம். அதன்படி பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நடன போட்டி, இசை, நாடகம், ஊமை நாடகம், நாட்டியம் என மாணவர்கள் விரும்பியவாறு அவர்களின் திறமைகளை போட்டிகளில் காட்டலாம்.

    இப்படியாக நடைபெற்ற போட்டிகளில் அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாண,வ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டி உள்ளனர்.

    அரசு பள்ளி மாணவர்களும் இவ்வளவு விஷயங்களை வைத்திருப்பவர்களா என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் அனைத்து போட்டிகளிலும் தங்களின் தனித்திறமையை வெகுவாகவே மெய்ப்படுத்திருக்கிறார்கள். அரசின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    படிப்பு மட்டுமின்றி மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை மேம்படுத்துவதற்கு அரசு பள்ளிகளில் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

    • கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர்.
    • மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 லட்சம் பேர் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்ததற்கு காரணம் அதில் குறைந்த கல்வி கட்டணம் மட்டுமின்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் முறை படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதும் முக்கிய காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். அதனால் பல பேர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினார்கள்.

    இப்போது நடுத்தர குடும்பத்தினரும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    மாநில அளவில் 37,636 அரசுப் பள்ளிகளில் 81 சதவீதம் கணினிகளை கொண்டிருந்தாலும் 79 சதவீத பள்ளிகளில்தான் அவை இயங்கும் நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

    • தரம் உயர்த்தப்பட்ட லால்குடி உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் கூறுகையில், பல அரசு பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    திருச்சி:

    கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளிலும் அதிகமாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளில் குடிநீர் வசதி, போதிய கழிப்பிட வசதிகள் இல்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பூவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. கழிப்பிடம் கட்ட பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார்.

    இது பற்றி சமூக ஆர்வலர் உமா மகேஸ்வரி என்பவர் கூறும் போது, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு நிர்வாகம் தவறும் நிலையில் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழிக்க நேரிடுகிறது. அனைத்து தேவைகளையும் அவர்களால் பூர்த்தி செய்ய இயலாது. மாணவர்களுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.

    அதே போன்று சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட லால்குடி உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். நடுநிலைப் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளிக்கூடம் கடந்த 2017-ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இதையடுத்து 450 ஆக இருந்த மாணவர் சேர்க்கை தற்போது 1,000 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் வகுப்பறைகளின் எண்ணிக்கை மாறவில்லை. போதிய வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால் பள்ளி வராண்டா மற்றும் விளையாட்டு மைதானங்களிலும், மரத்தடியிலும் மாணவர்களை உட்கார வைத்துவிட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமாயி என்பவர் கூறும்போது, எனது மகனை இந்த பள்ளியில் முதலில் சேர்த்தேன். ஆனால் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் தற்போது வேறு பள்ளிக்கு மாற்றி விட்டேன். ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது என தெரிவித்தார்.

    லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கூறும்போது, இந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய வேண்டிய அவலம் நீடிப்பதாக வேதனை தெரிவித்தார்.

    இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் கூறுகையில், பல அரசு பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச்- டெஸ்க் பொன். கவுதமசிகாமணி எம்.பி. வழங்கினார்.
    • அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ள க்குறிச்சி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, நெடுமானூர் அரசு மேல்நிலை ப்பள்ளி, சங்க ராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் தேவை என நாடாளுமன்ற உறுப்பி னரிடம் கோரிக்கை விடுத்தனர். அ த ன்படி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ள க்குறிச்சி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தாகபிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அப்துல் கலீல், செயலாளர் கிரி ராசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ள க்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி கலந்து கொண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் 50 பெஞ்ச், டெஸ்க் வீதம் 4 பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் 200 பெஞ்ச், டெஸ்க் வழங்கினார். இதில் மாவட்ட தொ.மு.ச. துணைத் தலைவர் அன்பழகன், துணைச் செயலாளர் திராவிட மணி, வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார்

    • அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    கொரோனாவால் 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எனவே 1 முதல் 3-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகளுக்காக எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செயல் மற்றும் விளையாட்டு வழியில் கற்றாலும், அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாக பிரித்து பாடங்களை கற்று தருவதே இதன் அடிப்படை. பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடைபெறும்போது ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் பெற்றோரிடம் எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்தும் மாணவர்களின் கற்றல் நிலை சார்ந்தும் பகிரப்பட வேண்டும்.வரும் 2025க்குள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு.

    இதன் மாதிரி வகுப்பறை செயல்பாடுகள் கல்வி தொலைக்காட்சியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று அந்த வாரத்தில் மாணவர்கள் அடைந்த கற்றல் விளைவு குறித்து அறிய வளரறி மதிப்பீடு மற்றும் இறுதியில் தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.மேலும்எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்று கற்பதை பெற்றோர் அறியும் வகையில் வகுப்பறையை பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும். இதுகுறித்து பெற்றோர் கூட்டத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் செயல்பாடின்றி உள்ளது.உள்கட்டமைப்பு வசதி உட்பட எல்லா வகையிலும் அரசு பள்ளிகளை தன்னிறைவு பெறச்செய்ய தமிழகம் முழுவதும்அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்டமேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 89 அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளிகள், 76 உயர் நிலைப்பள்ளிகள் எனமொத்தம் 165 பள்ளிகளில் மேலாண்மை குழு பிரதிநிதிகள் பதவியேற்றனர்.இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,333 அரசு, நகராட்சி பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாரம் ஒருமுறையாவது பள்ளியை பார்வையிட வேண்டும். மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கவேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு, தன்னார்வலர்கள், தங்களது சுய பங்களிப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    • தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுகிறது.
    • அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    பனஸ்கந்தா:

    குஜராத் மாநிலத்தில் புதிய மாற்றமாக தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.

    குஜராத் அரசின் தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மாநிலம் முழுவதும் 2018-19 ஆண்டில் 33,822மாணவர்களும், 2019-20 ஆண்டில் 31,382 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு இடமாறியுள்ளனர்.

    பனஸ்கந்தா மாவட்டத்தில் மட்டும் 2,969 தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், இந்த ஆண்டு, ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளின் தரம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

    தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுவது, உணவு, டிஜிட்டல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள், பெற்றோரை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றுவதற்கு தூண்டியது என்று, உத்தம்புரா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலேஷ் தக்கர் கூறியுள்ளார்.

    அகமதாபாத் நகரில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில், 40,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021-22 கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் உள்ள 32,000க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 61,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் கல்வியாண்டில் இந்த இரு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர் சங்க தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை விட ஆங்கில வழியில் படிக்கும் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழி கல்விதான்.

    இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு புதிதாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இதற்காக 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் அதிகம் பேர் சேர்ந்தனர் .

    இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் இந்த இரு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர் சங்க தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஏனென்றால் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இருக்கும்போது அரசு பள்ளியில் மட்டும் மூட வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

    அங்கன்வாடிகளில் ஏற்கனவே மழலையர் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனை முறைப்படுத்தி, மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளுக்கு குழந்தைகளை மாற்றி எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது மீண்டும் சமூகநலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    பள்ளிக் கல்வித்துறையின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

    ×