search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Care"

    பெண்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு கையாளுவது என்ற விளக்கங்களை அறிந்து கொண்டு பயன்படுத்தினால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
    நம்மை எப்போதும் அச்சத்திலேயே ஆழ்த்தி, அழுத்தி வைத்து இருக்கும் ஸ்மார்ட்போன் யுகம் இது. கவர்ச்சியான பெயரை சுமக்கும் இந்த ஸ்மார்ட்போன்களால் மகிழ்ச்சி ததும்பிய பல இல்லங்கள் நிம்மதியை இழந்து தவிக்கின்றன. பல தம்பதியினர் மகிழ்ச்சியை தொலைத்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரிடமும் குதூகலம் இல்லை.

    காரணம் நன்மைகளை அள்ளித்தரும் ஸ்மார்ட்போன்கள்தான், கூடவே தீமைகளையும் அன்பளிப்பாக வழங்குகின்றன. அனைத்தும் அறிந்தும் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் யாரும் இல்லை. அதை சரியாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருக்கிறது.

    ஸ்மார்ட்போன்களை பல வழிகளில் தவறாக பயன்படுத்த முடியும். குறிப்பாக பெண்களின் அந்தரங்கங்களை வெளிச்சம்போட்டு காட்டும் செயலிகள் (ஆப்) கயவர்கள் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. இக்கயவர்களின் குறிக்கு சிறுமிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என யாரும் விதிவிலக்கல்ல.

    தங்களை அறியாமலே கயவர்களுக்கு சில பெண்கள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் ஆபத்தை உணராமல் தங்களின் ரகசிய புகைப்படங்களை, வீடியோக்களை செல்போன்களில் வைத்திருக்கிறார்கள். சிலர் தங்களின் காதலனுக்காக ரகசிய புகைப்படம், வீடியோக்களை எடுக்கிறார்கள். தம்பதியினர் சிலரும் தங்களின் அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

    இதுதான் பேராபத்தை விளைவித்துவிடுகிறது. அதாவது செல்போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் என எதையும் வெளியில் இருந்து ஒருவரால் பார்க்க முடியும். இதற்கு எமன் வடிவில் வந்திறங்கும் ‘டிராக்கிங்’ செயலிகள் துணை நிற்கின்றன.

    ஒருவருக்கு தெரியாமல் அவருடைய ஸ்மார்ட்போனில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் போதுமானது. எங்கிருந்து வேண்டுமானாலும் அந்த செல்போனின் செயல்பாடுகளை உளவு பார்க்க முடியும். இது பெண்களுக்கு பேராபத்தை தேடித்தந்துவிடும்.

    அதாவது, செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியும். வாட்ஸ்-அப் உரையாடல்களை பார்க்கலாம். புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்க முடியும். பெண்ணுக்கு தெரியாமல் அவரின் செல்போன் கேமராவை இயக்கி அவரை ரகசியமாக படம் பிடிக்க முடியும். படுக்கை அறை காட்சிகளை, உடை மாற்றும் காட்சிகளை கயவர்களால் எங்கிருந்தோ பதிவு செய்ய முடியும்.

    கொடுமை என்னவென்றால், ஒரு செல்போனில் இந்த செயலியை பொருத்தி இருந்தால், அதை கண்டுபிடிப்பதும் கடினம். அது வேறு தோற்றத்தில் செல்போனில் நிறுவப்படும். இந்த உளவு செயலி கிட்டத்தட்ட நம் செல்போனில் இருக்கும் ‘கால்குலேட்டர்’ மாதிரிதான் இருக்கும். இதனால் யாரும் எளிதில் சந்தேகம் அடையமுடியாது.



    இன்னொருவரின் செல்போனில் இந்த செயலியை ‘இன்ஸ்டால்’ செய்யும் கயவர் கூட்டம், அதற்காக பயன்படுத்திய ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை கொண்டு மாஸ்டர் உளவு செயலியில் இருந்து சம்பந்தப்பட்ட செல்போனை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.

    சமீபத்தில் கூட ‘டிராக் வியூ’ என்னும் செயலியை ஒருவன் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஸ்மார்ட்போன்களில் ரகசியமாக இன்ஸ்டால் செய்து அப்பெண்களின் குளியல் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை ரகசியமாக படம் பிடித்த அதிர்ச்சி தகவல்களை செய்திகளில் படித்து இருப்போம்.

    அந்த ஆபாச படங்கள் மூலம் பல பெண்களை மிரட்டி, தனது இச்சைக்கு இணங்க வற்புறுத்தியதும், பயந்துபோய் பலர் அவன் விரித்த வலையில் வேறு வழியின்றி வீழ்ந்ததையும் மறந்திருக்க முடியாது. இதில் கொடுமை என்னவென்றால், அவன் தனது அக்கா உறவுமுறை கொண்ட பெண்ணின் அந்தரங்கத்தையும் படம்பிடித்து இருக்கிறான். காமம் அவன் கண்ணை மறைத்துவிட்டது.

    இந்த நிகழ்வு ஸ்மார்ட்போன் யுகத்தில் பெண்களுக்கு அடிக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை மணி. இதுபோன்ற காம கயவர்கள் உறவினர், பக்கத்து வீட்டுக்காரர், நண்பர்கள் என எந்த முகமூடிக்குள்ளும் பதுங்கி இருக்கலாம். எனவே, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு போதிய அறிவுரைகளை பெற்றோர் வழங்க வேண்டும்.

    ஆபாச இணையதளங்களில் அந்தரங்க படங்களுக்கு அதிக மவுசு இருப்பதால், பெண்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை முகப்பு படமாக வைப்பதையும், தங்கள் படங்களை பதிவு செய்வதையும் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், அந்த படங்களை பதிவிறக்கி மார்பிங் செய்து ஆபாச இணையதளங்களுக்கு விற்றுவிடும் ஆபத்தும் உள்ளது.

    இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பெண்கள் தப்பிக்க வேண்டுமானால், முதலில் தங்களின் செல்போன்களை வேறு எந்த நபரையும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தங்களின் இ-மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை யாரிடமும் கண்டிப்பாக தெரிவிக்கக்கூடாது. தெரிவித்தால், அதை தெரிந்த நபர்கள் இணையதளத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை பார்க்க முடிவும்.

    மேலும், தங்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுக்கவோ, அவற்றை யாருக்கும் பகிரவோ கூடாது.

    உங்கள் செல்போன் வழியாக யாரோ உங்களை கண்காணிப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது பழுது ஏற்படும்போது செல்போன் கடையில் கொடுத்து பழுது சரி செய்து வாங்கிய பின்னர் செல்போனில் ஏதேனும் ரகசியமாக இணைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ, ஒருமுறை ‘பேக்டரி ரீசெட்’ செய்வது நல்லது. அப்போதுதான் தேவையில்லாத ஆபத்துகளில் இருந்து பெண்கள் தப்பிக்க முடியும்.

    அதே போல, பெண்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பான விளக்கங்களை அறிந்து கொண்டு செல்போனை பயன்படுத்தினால் பெரும்பாலான பிரச்சினைகளில்இருந்து விடுபடலாம்.

    க.தர்மராஜ்,
    தகவல் தொழில்நுட்ப செயற்பாட்டாளர்
    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்.
    வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்; விழுப்புண் பெறாமல் போர்க்களத்தில் வெற்றிகாண முடியுமா? வாழ்க்கை என்பது காட்டாறு; எதிர் நீச்சல் போடாமல் காட்டாற்றில் நீந்தி எதிர்க்கரை சேர முடியுமா? விழியில் நீரோட்டமும், வழியில் போராட்டமும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பயணம்.

    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும். மனஉறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர்.

    குப்பைக்கழிவுகளை உரமாக்கிக் கொண்டு பூக்கவில்லையா குண்டுமல்லிகள்? காய்க்கவில்லையா கொய்யாக்கனிகள்? வரும் சோதனைகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கிறவன் வாசலில்தான் தினம் மாலைகள் அவன் கழுத்துக்காக காத்துக்கிடக்கின்றன.

    மன உறுதியை நாள்தோறும் இதயத்தில் விதைத்து வந்தவர்கள், மகத்தான சாதனைகளையே மகசூல் செய்திருக்கிறார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்று எக்காளமிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். மகாத்மா காந்தியின் மனஉறுதிக்கு முன்னால் அவர்களின் எதேச்சதிகாரம் என்ன ஆனது? இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டு வந்த வழியே திரும்பி ஓடவேண்டியதாயிற்று.



    எதிரியின் கூடாரத்திற்கு உளவறிய சென்றான் நெப்போலியன். பகைவரின் படைகள் அவனை கண்டுபிடித்துவிட வேகமாக குதிரையைச் செலுத்தினான். தப்பிப்பதற்குள் மூன்று திசைகளிலிருந்தும் எதிரியின் படைகள் நெருங்கி வந்தன. நான்காவது திசையை நோக்கினாலோ, ஆழமான பெரும் பள்ளத்தாக்கு. குதிரையால் முழுப்பள்ளத்தையும் தாண்ட முடியாது என்பது நெப்போலியனுக்கே தெரியும்.

    இருந்தும் மனதில் உறுதி இருந்ததால் குதிரையைச் செலுத்தினான் அவன். குதிரை பள்ளத்தாக்கின் முக்கால் பகுதியை தாண்ட அது தவறி விழுவதற்கு முன்பே அக்குதிரை மீது நின்றபடி தாவி எதிர்ப்புற மலைச்சரிவில் குதித்து தப்பித்தான் அம்மாவீரன். எதிரிகளே வியக்கும் வண்ணம் இப்பேற்பட்ட மன உறுதி இருந்ததால்தான், ‘முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில்தான்’ என்று சொல்ல முடிந்தது நெப்போலியனால்.

    ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புக்களால் பிரகாசமாய் ஒளிர்ந்துவிட முடியாது. எனவே எந்த செயலானாலும் சரி, மன உறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் இப்போதே நன்றாக ஆலோசித்து சரியான இணையை தேர்ந்தெடுத்தால் அவர்களது எதிர்கால மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.
    திருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவீதம் பேர் கணவர் மீது குறை சொல்கிறார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ‘கணவரோடு மனப்பூர்வமாக சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை’ என்று புலம்புகிறார்கள். 10 முதல் 15 சதவீதம் பேர், விட்டால் இப்போதே ஓடிவிடுவோம் என்பதுபோல் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறார்கள். 20 சதவீதம் பேர் ‘எல்லாம் முடிந்துவிட்டது.. மீதி காலத்தையும் இவரோடு இப்படியே ஓட்டிவிடுவதை தவிர வேறுவழியில்லை’ என்று விரக்தியோடு சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

    இதுபோன்ற விரக்தி எதிர்கால தம்பதிகளின் வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க, ‘திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் எப்படிப்பட்ட இணையை தேர்ந்தெடுக்கவேண்டும்? தனது இணையை பற்றி தெரிந்துகொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இறுதி முடிவை எப்படி எடுக்கவேண்டும்?’ என்பதை பற்றி எல்லாம் இங்கு காண்போம்!

    திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் இப்போதே நன்றாக ஆலோசித்து சரியான இணையை தேர்ந்தெடுத்தால் அவர்களது எதிர்கால மணவாழ்க்கை சிறப்பாக அமையும். விவாகரத்துக்களும் குறையும். அதை கருத்தில்கொண்டு திருமண விஷயத்தில் பொதுவாக நடக்கும் தவறுகளையும், அதை சரியாக்கும் முறைகளையும் பார்ப்போம்!

    தவறான சிந்தனை:

    ‘தனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் இணையை தன்னால் முழுமனதோடு தற்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், திரு மணத்திற்கு பிறகு அவரை திருத்திவிடலாம் என்று நினைக்கிறேன்’ என்ற திருமண சிந்தனை தவறானது.

    சரியான வழிமுறை:

    இணையின் பேச்சு, செயல், நடத்தை போன்ற குணாதிசய குறைபாடுகள் இருந்தால், திருமணத்திற்கு பின்பு அவரை இயல்பான நடத்தைக்கு கொண்டு வருவது சிரமம். அதனால் அப்படிப்பட்டவரை திருமணம் செய்துகொள்ள முன்வராதீர்கள். திருமண பந்தம் ஆயுள் முழுக்க நீடிக்கவேண்டியது. அதனால் அதில் அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். பெற்றோர்களில் சிலர், மகளை ஒரு சுமைபோல் கருதிக்கொண்டு ‘அவளுக்கு திருமணமானால்தான் நிம்மதி பெருமூச்சுவிடுவேன்’ என்பதுபோல் தீவிரம் காட்டுகிறார்கள். அத்தைகய தீவிரம் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை உணருங்கள். அதிவேக(பயண)ம் ஆபத்து என்பது சாலை விதிக்கு மட்டுமல்ல மணவாழ்க்கை விதிக்கும் பொருத்தமானது. உங்களுக்கு பிடிக்காதவரை பெற்றோர் தேர்ந்தெடுத்தால் தைரியமாக ‘நோ’ சொல்லுங்கள்.

    உங்கள் விருப்பப்படி இணை தேடும் முயற்சி நடந்துகொண்டிருப்பதை ஒவ்வொரு கட்டத்திலும் கண் காணியுங்கள். தேர்ந்தெடுக்கப்படுகிறவர் உங்களுக்கு பிடித்தமானவராக தெரிகிறார் என்றால், திருமண முடிவினை எடுப்பதற்கு முன்னால் அவரோடு பேசிப்பாருங்கள். காதல் திருமணத்திற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால் ஜாதி, மதம், பொருளாதார சூழல் போன்ற பல விஷயங்கள் இன்று அல்லது நாளை பிரச்சினைக்குரிய விஷயங்களாக மாறும். உங்கள் இருவரிடமும் வற்றாத அன்பும், நம்பிக்கையும், மரியாதையும் இருந்தால்தான் அதில் இருந்து உங்களால் மீளமுடியும். எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் கடைசி வரை ஒருங்கிணைந்து சமாளிப்போம் என்ற நெஞ்சுரம் இருந்தால் மட்டும் காதலை, கல்யாணமாக்குங்கள். ‘தெரியாமல் காதலில் சிக்கிக்கொண்டோமே!’ என்ற எண்ணம் இருந்தால், ஒருபோதும் திருமணத்திற்கு சம்மதிக்காதீர்கள்.



    தவறான சிந்தனை:

    ‘எனக்கு தலைக்குமேல் வேலை இருந்துகொண்டிருந்தது. நான் மனதளவிலும், உடலளவிலும் திருமணத்திற்கு தயாராகவில்லை. ஆனாலும் என் பெற்றோர் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களது விருப்பத்திற்கு அவர்களே தேர்ந்தெடுத்து தந்த துணை இது. அதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம்’ என்று, ஆணோ, பெண்ணோ சொல்லும் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகுவது தவறானதாகும்.

    சரியான வழிமுறை:

    இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் எத்தனையோ வேலைகள் இருக்கலாம். அதுபோல் திருமணத்தையும் ஒரு வேலையாக எடுத்துக்கொண்டு, நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடாதீர்கள். திருமணத்திற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுங்கள். அதற்காக மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகுங்கள். திருமணத்தை பற்றிய தவறான கருத்துக்களோ, தாம்பத்ய தொடர்பு பற்றி தவறான எண்ணங்களோ, பெண் என்றாலே மோசமானவள் (அல்லது ஆண் என்றாலே மோசமானவர்) என்ற முரண்பாடான எண்ணத்தில் ஊறிப்போயிருந்தாலோ அவசரப்பட்டு திருமணத்திற்கு சம்மதிக்காதீர்கள். தெளிவடைந்து, உங்கள் எண்ணங்களை சரிசெய்த பின்னர் திருமணம் செய்துகொண்டால்போதும். அதுபோல் உடல் கோளாறுகள் ஏதேனும் இருப்பதாக அறிந்தால், அதற்குரிய மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, திருப்தியடைந்த பின்பு திருமணம் செய்து கொள்ள முன்வாருங்கள்.

    திருமணத்தில் ஒரு ஆணும்- பெண்ணும் மட்டும் இணைவதில்லை. இருவேறு சூழ்நிலைகளில் இருந்து இரண்டு குடும்பங்கள் அந்த உறவின் மூலம் இணைகின்றன. கணவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள பெண் தயாராகவேண்டும். அதுபோல் மனைவியை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக்கொள்ள கணவரும் தயாராகவேண்டும். ஆண் தனது அம்மாவுக்கும், சகோதரிக்கும் எவ்வளவு உரிமைகளை கொடுப்பாரோ அதுபோன்ற உரிமைகளை மனைவிக்கு வழங்க முன்வரவேண்டும். திருமண வாழ்க்கை தோல்வியடைந்தால் அந்த பழியை பெற்றோர் தலையில் சுமத்தலாம் என்ற எண்ணத்தில், பொறுப்பில்லாமல் திருமண முடிவு எதையும் எடுத்துவிடாதீர்கள்.

    தவறான சிந்தனை:

    பெரும்பாலான ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை பார்க்கும் இடத்திலோ, வெளியிலோ பல்வேறுவிதமான நட்புகள் இருக்கும். அவைகளை அப்படியே திருமணத்திற்கு பின்பும் தொடரலாம் என்று நினைப்பது தவறு.

    சரியான வழிமுறை:

    நீங்கள் திருமணம் செய்துகொள்ள தயாராகும்போதே, ‘எதிர் காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்’ என்று நினைக்கும் உறவுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் தொழில்ரீதியான தொடர்பினை மட்டும் வைத் திருங்கள். அதற்கு அப்பால் எந்த உறவையும் கொண்டு செல்ல முயற்சிக்காதீர்கள். கணவரிடம் இருந்து மனைவிக்கு அன்பு கிடைக்காவிட்டாலோ, மனைவியிடம் இருந்து கணவருக்கு அன்பு கிடைக்காவிட்டாலோ அதை அலுவலகத்தில் உள்ள மூன்றாம் நபரிடம் இருந்து பெறும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. அந்த அன்பை வீட்டிலே பெறும் வழியை பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். உடன் பணிபுரிபவர்களிடமிருந்து உதவிகள் பெறலாம். ஆனால் அது எல்லையற்றதாக இருந்தால், பிற்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை இப்போதே புரிந்துகொண்டு எல்லையை வகுத்திடுங்கள். அலுவலக பிரச்சினைகளை அங்கேயே பேசி முடித் திடுங்கள். வீடு வரை கொண்டு செல்லவேண்டாம். வீட்டில் இருந்துகொண்டு அலுவலக நண்பர்களிடம் அளவுக்கு அதிகமாக பேசும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் திரு மணத்திற்கு தயாராகும்போதே அதற்கும் முற்றுப்புள்ளிவைத்திடுங்கள். திருமணமான சில மாதங்களிலே பல தம்பதிகள் விவாகரத்தை நோக்கிச்செல்ல இந்தவித அரட்டை காரணமாக இருந்துகொண்டிருக்கிறது.

    ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பு வாழும் வாழ்க்கை வேறு. திருமணத்திற்கு பின்பு வாழவேண்டிய வாழ்க்கை வேறு. திருமணத்திற்கு முன்பு பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் எவ்வளவு நேரமானாலும் மூழ்கி கிடக்கலாம். திருமணத்திற்கு பின்பும் அதே நிலை தொடர்ந்தால், அது மணவாழ்க்கையை மங்கவைத்துவிடும். அதனால் இப்போதே அதை குறைத்துக்கொள்ள முன்வாருங்கள். உங்கள் இணையை மனதாலும், உடலாலும், உணர்வுகளாலும், அறிவாலும் மகிழ்ச்சிப்படுத்தவேண்டிய கடமை திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் தேவைப்படுகிறது. அவை இருதரப்பில் இருந்தும் குறைவின்றி கிடைத்தால் மட்டுமே மணவாழ்க்கையை காப்பாற்றி, மகிழ்ச்சியாக வாழமுடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வையுங்கள்.

    - விஜயலட்சுமி பந்தையன். 
    பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.
    பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

    காலத்திற்கு ஏற்ற விஷயங்கள் என்பவை எவை?

    தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

    இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.

    பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண் களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.



    செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

    பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.

    காதலில் சிக்கும் பெரும்பாலான பெண்கள் பயந்துவிடுகிறார்கள். அதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கமுடியும். ஒன்று, காதலர் ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்து அவளை மிரட்டலாம். அவள் தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்பது போலெல்லாம் பேசி அவள் மனதில் கலவரத்தை ஏற்படுத்தலாம். இரண்டு, அவள் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் எதையாவது உருவாக்கிவைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட மிரட்டலுக்கு உள்ளாகி ஏற்கனவே மிரண்டு போயிருக்கும் பெண்ணை பெற்றோரும் தங்கள் பங்குக்கு மிரட்டினால் அவள் மனதளவில் நொறுங்கிப்போய்விடுவாள்.

    அதனால் பெற்றோர் அவள் நம்பிக்கையை பெற்று, பக்குவமாக பேசி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவள் உண்மையை சொன்ன பிறகு, ‘நடந்தது நடந்துவிட்டது. நீ எதற்கும் கவலைப் படாதே. எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று நம்பிக்கையூட்டவேண்டும். நம்பிக்கைதான் இந்த பிரச்சினையை தீர்க்கும். மாறாக மகளிடம் அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ளவேண்டும்.



    இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும். உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

    உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

    ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.

    படித்துக்கொண்டிருக்கும் மகள் காதல் வசப்பட்டால், அவள் அவனை ‘உலகிலே மகா யோக்கியன்’ என்பாள். அதை அப்படியே தாய் நம்பிவிடக்கூடாது. ஒருவேளை அந்த பையன் வசதிபடைத்தவனாக இருப்பான். அதனால் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பி, அந்த காதலை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. ‘இப்போது நீ படிக்கவேண்டும். அதுமட்டுமே உன்வேலை. காதலை எல்லாம் உடனே ஒதுக்கிவிடு’ என்று கூறி, படிப்பின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் நினைவுபடுத்துங்கள். எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கிவிடுவாள்.

    டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம். 
    இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த செய்வதற்காக ‘கூகுள் இந்தியா’ என்ற தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த செய்வதற்காக ‘கூகுள் இந்தியா’ என்ற தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணைய தளம் மூலமாக, பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடுத்த 5 ஆண்டுக்குள் இணையத்தை பயன்படுத்தும் இந்தியப் பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் இருப்பது போல இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா 2-வது இடத்திற்கு வர உள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தை தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு 2-வது இடத்திலும் உள்ளது.

    இந்த நிலையில் ‘கூகுள் இந்தியா’ இந்தியாவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு இணைய தளத்தை அமைத்துள்ளது. hwgo.com (ஹெல்பிங் உமன் கெட் ஆன் லைன்) எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம், இணைய பயன்பாட்டின் அடிப்படை பற்றி பெண்களுக்கு வழி காட்டுகிறது. இணையத்தை எளிதாக அறிமுகம் செய்யும் வகையில் அதை பயன்படுத்த தேவையான அடிப்படை விஷயங்களை முகப்பு பக்கத்திலேயே கொடுத்துள்ளது.

    கம்ப்யூட்டர் அடிப்படையில் தொடங்கி, இணைய அடிப்படை, இ-மெயில், வீடியோ சேவை ஆகியவற்றை எளிமையாக இந்த பகுதி விளக்குகிறது. இணையத்தில் பெண்களுக்கு பயன் படக்கூடிய விஷயங்களையும் வீடியோ விளக்கத்துடன் அளித்துள்ளது. இணையத்தை பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று வழி காட்டும் இந்த தளத்தில், இணையத்தை பயன்படுத்தி பயன் அடைந்த பெண்களின் அனுபவமும் கொடுக்கப்பட்டுள்ளது. இணைய பயன்பாடு என்பது சகஜமாக கருதப்பட்டாலும் கூட, இதுவரை இணையத்தை பயன்படுத்தியிராத பெண்களை இணையம் அருகே கொண்டு வரும் முயற்சியாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. 
    நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.
    வித, விதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன்தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

    படுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும், துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான் நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.

    அத்தியாவசிய தேவைக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் செல்போன்களை இன்றைக்கு அதிகமாக சார்ந்திருக்கிறோம். திரைப்படங்கள், நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்க்க தொலைக்காட்சியை போல செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

    அந்த வகையில், நம்மில் பலரும் செல்போன் கேம்ஸ் விளையாட நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். தூங்கும் நேரம், பணியில் இருக்கும் நேரத்தை கூட செல்போன் கேம்ஸ் களவாடிவிடுகிறது. இதனால் ஏற்படும் விபரீதத்தை பலரும் உணர்வதில்லை.

    காரணம், ஸ்மார்ட்போன் கேம்ஸ் விளையாடுவது இயல்பான செயல் என்று நம்புகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, சோம்பலும் அதிகமாகிறதாம்.

    நம் எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மனிதன் நிம்மதிக்கு அடிப்படையான விஷயம். நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் நமது எண்ண வெளிப்பாடுகள் மற்றும் உரையாடல்கள் குறைகின்றன. இது நம்மை ஆழ்ந்த அழுத்தத்துக்கு கொண்டு செல்கிறது.

    அதுமட்டுமின்றி, இந்த பழக்கம் ஒருவித போதை என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு. அதாவது, ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கேம்ஸ் விளையாடுபவர்கள் அந்த போதைக்கு அடிமையானவர்களாக கருதப்படுகிறார்கள்.

    ‘கூகுள் பிளே ஸ்டோர்’ நமக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இலவச விளையாட்டுகளை தருகிறது. குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான கேம்சை தேர்வு செய்து விளையாடுகின்றனர். நீண்ட நேர செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது எளிதான காரியமல்ல.

    நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கேம்ஸ் விளையாடும்போது வெவ்வேறு உடல் தோரணைகள் கொண்டு விளையாடுவது வழக்கம். இது நமது கண், காது, கை போன்ற உறுப்புகளையும், மனித உடல் செயல்பாட்டின் தூண்களாக விளங்கும் முதுகு எலும்பையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.



    அதாவது, செல்போன் கேம்ஸ் விளையாடும்போது, இருக்கையில் அமர்ந்து, முதுகெலும்பை 90 டிகிரி நேரான கோட்டில் வைத்து, தலையை மிகவும் குனியாமல், கைகளை ஒரே கோணத்தில் வைத்து, 10 முதல் 20 நிமிடங்கள் விளையாடினால் அது விளையாட்டாக அமையும். அதே சமயம், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விளையாடினால் அது கண்டிப்பாக உடலுக்கு பல பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கும்.

    விளையாடுபவர்கள் பெரும்பாலும் தன்னையும், தன் சூழலையும் மறக்கின்றனர். இது அவர்களின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கிறது. ஒரு மனிதன் நீண்ட நேரம் ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சுவாசித்துக் கொண்டு இருப்பதால், சுற்றுச்சூழல் தரும் மாசற்ற மற்றும் சுகாதார சூழல் அவருக்கு அங்கு கிடைக்காமல் போகிறது.

    மனிதன் சுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் காற்று. நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால், நமக்கு ஆக்சிஜன் குறைவாகவும், மாசடைந்தும் கிடைக்க நேர்கிறது.

    ஏற்கனவே மனிதன் 6-ல் இருந்து 8 மணி நேரம் உறங்குவதால் அவனுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்கள் பங்குக்கு மனிதனை சிறைபிடிக்கின்றன.

    மீதமுள்ள நேரத்திலாவது நாம் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை மறந்து ஸ்மார்ட்போன் கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம். இது நமக்கு மட்டுமின்றி நம் சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.

    தூக்கமின்மைை-யும் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. நீண்ட நேரம் கண் விழித்து கேம்ஸ் விளையாடுவதால், நம் மூளை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப சில மணி நேரம் ஆகிறது. இரவில் கேம்ஸ் விளையாடுவது, நமது தூக்கத்தின் இயல்பை பெரிதும் பாதிக்கிறது.

    கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகும், நாம் அதன் ஒலி ஓட்டத்திலே உறங்குகிறோம். இது நமக்கு சிறப்பான தூக்கத்தை அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுவோம்.

    கேம்ஸ் விளையாடும் சிலர் தங்களது தூக்கத்தில் கூட விளையாடுவது போல் கனவு காண நேரிடும். எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு கேம்ஸ் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    ஒரு பக்கம் பலவகையான கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ளும் நாம், நமது ஸ்மார்ட்போன் தரும் ஆபத்தான கதிர்வீச்சை உணர மறுக்கிறோம். பெரிதளவில் ஆய்வுகள் இல்லாத போதிலும், பல தன்னலமற்ற அமைப்புகள், ஸ்மார்ட்போன் மூலம் வரும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை குறைக்க பரிந்துரைத்து வருகின்றன.

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால், அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை உணராமலேயே, அவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மனம், உடல், சமுதாயம், படிப்பு, வேலை, வருமானம் போன்ற மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

    எனவே, நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.

    உதவி பேராசிரியர் டாக்டர் ஜனார்த்தனன்
    காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.
    காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டாலும், தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.

    பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளை திருமணம் செய்யும் ஆண், நல்லவராக இருக்க வேண்டும், நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் தங்கள் மகளின் காதலன் மீது ஆரம்பத்தில் தவறான எண்ணத்தையே வைத்திருப்பார்கள். இதனால், பெண்ணின் பெற்றோர் உடனான முதல் சந்திப்பு என்பது மிகவும் முக்கியமானது. அதில் அவர்களை எப்படி கவர்வது என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

    நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்காக அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது அவ்வளவு நல்லதல்ல. அது முதல் பார்வையிலேயே உங்களைப் பற்றிய தவறான புரிதலை உண்டாக்கும்

    உங்கள் டிரசிங் நீங்கள் யார் என்பதை பிரதிபலிக்கும் ஒரு அம்சம். அதனால், முடிந்த வரை நேர்த்தியான உடையில் அவர்களை சந்திக்கவும்.



    உணவு உண்ணும் போது முடிந்த வரையில் மிகவும் பொறுமையாக, நாகரீகமாகவும் உணவு உட்கொள்ளவும்.

    அதிகமாக உணவு உட்கொள்வது உங்களைத் தவறான கண்ணோட்டத்தில் காண செய்யும். குறைந்தளவு மட்டும் உண்பது உங்களை கூச்ச உணர்வு கொண்டவராகக் காட்டும்.

    பெற்றோரின் முன் அவர்களின் மகளை மரியாதையுடன் நடத்துங்கள். அப்போதுதான் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகும்.

    உங்கள் காதலியின் பெற்றோருடன் பேசி முடித்தவுடன், அங்கிருந்து சரியான நேரத்தில் கிளம்பவும். அவர்களின் நேரத்தை வீணடிக்கவோ அல்லது அங்கிருந்து அவர்களே கிளம்ப வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டாம்.
    தடைகளை தகர்த்து, பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும்.
    ஆண், பெண் இடையேயான நட்பு, காதலாவதை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு ‘காதலர்கள்’ என்று பெயர்சூட்டி கவுரவமாகத்தான் பார்க்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டு அதன் பின்பே தாம்பத்யத்தில் இணையவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிராசையாக்கும் சம்பவங்கள் தற்போது இந்தியாவில் அதிகம் நடக்கிறது. அதனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் இளம் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இதனால் சமூகத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து, எல்லைமீறிய காதலில் ஈடுபடுவதுதான் இந்த பரிதாபத்தின் மையமாக இருக்கிறது.

    காதலிக்க தூண்டுவது ஒரு ஹார்மோன் விளையாட்டுத்தான். ஆனால் அதை புரிந்துகொண்டு பக்குவமாகவும், பாதுகாப்பாகவும் காதலிக்கத் தெரியவேண்டும். ‘என் அழகிற்கும் அறிவுக்கும் என் பின்னால் இத்தனை பேர் வருகிறார்கள் பார்’ என்று, மற்றவர்களிடம் சொல்லவேண்டும், அதன் மூலம் மற்றவர்களை பொறாமைப்பட செய்யவேண்டும் என்று சில பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி ஆழம் தெரியாமல் காதலில் காலை விட்டுவிட்டு தடுமாறும் பெண்களே கர்ப்பக் கவலைக்கு உள்ளாகிறார்கள்.

    கவனமாக கையாளவேண்டிய கண்ணாடி போன்றது பெண் களின் இளமைப்பருவம். சிறிய தவறு நேர்ந்தாலும் எதிர்காலம் சுக்குநூறாகிவிடும். எத்தகையோ சமூக மாற்றங்களுக்குப் பிறகும் இந்தியா இன்னும் பழமையை பாதுகாக்கும் நாடாகவே இருந்து கொண்டிருப்பதற்கு காரணம், இங்குள்ள பெண்களின் தாய்மை உணர்வும், பெண்மையும்தான். பெண்கள், ஆண்களுக்கு சமமாக வளர்கிறார்கள். வாழ்கிறார்கள். அந்த ‘சமம்' அவர்கள் அறிவை விசாலப்படுத்தவேண்டும். அதன் மூலம் தனக்கும்- தன் ஆண் நண்பனுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணரவேண்டும். அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே பிரச்சினைகள் இன்றி வாழ்கிறார்கள். இடைவெளியை குறைக்கும் பெண்கள் பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கிறார்கள்.

    தடைகளை தகர்த்து, பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ‘திருமணத்திற்கு பின்புதான் உடல் வழி பந்தம்’ என்ற பாரம்பரியத்தை முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும். அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும். அதைவிடவும் சுத்தமான மனதோடு அவர்கள் இறுதிக்காலம் வரை வாழ முடியும்.

    பெற்றோர்களும், சமூகமும் சுதந்திரம் தந்துவிட்டன என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். பெற்றோர்கள் நம் சந்தோஷத்திற்கு தடையாக இருப்பவர்கள் அல்ல. அதே நேரத்தில் தவறான வழியில், முறையற்ற சந்தோஷத்தை தேட நினைக்கும் பெண்கள் பெற்றோர்களுக்கு பெரியபாரமாகி விடுகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் தரும் வலியை சொல்லிமாளாது. அது கஷ்டம், குழப்பம், சிக்கல், அவமானம் போன்ற அனைத்தையுமே சேர்த்து தரும். அந்த வலியையும், அவமானத்தையும் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல, அந்த குடும்பமே சேர்ந்து அனுபவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அவமானத்தை பணத்தால் மறைக்க இயலாது.

    திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகிவிடுகிறவர்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்த விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். திடீர் கர்ப்பம் அவர்களை பலவிதங்களில் குழப்பி, அடுத்து என்ன செய்வது என்று சரியான முடிவினை எடுக்க முடியாத அளவுக்கு தயங்கவைத்துவிடுகிறது. எந்த மருத்துவரிடம் போய் ஆலோசனை கேட்பது என்று தெரியாமல், தவறானவர்களிடம் போய் நின்று கொண்டு கொடூர கருக்கலைப்பிற்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.



    பிரபல மருத்துவர் ஒருவரின் அனுபவம் இது:

    “திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களில் பலர் என்னிடம் கருக்கலைப்பு செய்ய வருகிறார்கள். மருத்துவரீதியாக, மனோதத்துவரீதியாக நான் சொல்வதை புரியும் நிலையில் அவர்கள் இல்லை. முதன்முதலில் உருவாகும் கருவை கலைப்பது பெண்ணின் உடலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம். அதை கவனமாக கையாளாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடக்கூடும். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, முரண்பாடான முறையில் கலைத்துவிட்டு, திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைய வாய்ப்பில்லாமல் போனவர்கள் அதிகம்.

    திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான டீன்ஏஜ் பெண் ஒருத்தி என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள். கர்ப்பமாகி மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அதனால் ‘கருவை கலைக்க வாய்ப்பில்லை’ என்று நான் கூறிவிட்டேன். உடனே அவள் அம்மா என் காலைப்பிடித்துக்கொண்டு கதறியழுதார். ‘என்னால் கருவை கலைக்க முடியாது. மருத்துவ விஞ்ஞான முறைகளை மீறி நான் ஏதாவது செய்தால், உங்கள் பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக முடியும்’ என்று கூறி விட்டேன். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாக சொன்னார். ‘கர்ப்பத்திற்கு காரணமானவன் என்னை தவிக்க விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டான்’ என்று அந்த பெண்ணும் அழுதாள். நான், ‘காலம் கடந்து வந்திருக்கிறீர்கள். எது கிடைத்தாலும் அதை துணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பிவைத்தேன்.

    அவர்கள் நான் சொன்னதை கருத்தில்கொள்ளாமல் வேறொரு மருத்துவரை பார்த்து கருக்கலைப்பு செய்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். பிறகு எதுவுமே நடக்காதது போல் அந்தப் பெண்ணுக்கு திருமணமும் முடித்துவிட்டார்கள். அதன்பிறகு தான் ஆரம்பமானது வினையே. முதலில் கருவை கலைத்ததால் கர்ப்பப்பை வெகுவாக பாதிக்கப்பட்டு, அதை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன்பு அவளுக்கு நடந்த கொடூரமான கருக்கலைப்பின் காரணமாக அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே இருட்டாக்கிவிட்டார்கள்” என்கிறார், அவர்.

    பெண்கள் தங்கள் உடலுக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்கவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எல்லைமீறமாட்டேன் என்ற உறுதியோடு நட்பையும், காதலையும் தூரத்தில் வைத்திருக்கவும் தெரிந்திருக்கவேண்டும். ஒரு பெண்ணுடைய நட்பு கிடைத்துவிட்டால் அவளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கைவிடும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள்தான் அப் படிப்பட்ட ஆண்களின் மனநிலையை புரிந்துகொண்டு கவனமாக இருக்கவேண்டும்.

    ஒரு பெண், திருமணத்திற்கு முன்பே கர்ப்பிணியாகிவிடும்போது அதில் சம்பந்தப்பட்ட ஆண் கூடுமானவரை தப்பிக்கவே முயற்சி செய்கிறார். ஒரு சிலர் அந்தப் பெண்ணை கருக்கலைப்பிற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யக்கூட துணிகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. ‘உன்னை திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் சம்மதிக்கவில்லை’ என்று கூறிவிடு கிறார்கள்.

    திருமணத்திற்கு முன்பு ஏற்படும் கர்ப்பத்தை தனி மனிதர்களும், சமூகமும் அவமானமாகவே கருதுகிறது. அதனால் அந்த அவமான செயலுக்கு பெண்கள் இடம்கொடுக்காமல் இருப்பதே நல்லது

    மனித ஜென்மம் மகத்துவம் நிறைந்தது. மனித உடல் புனிதமானது. அந்த புனிதத்தை காக்கவே சமூகம் சில நியதிகளை வகுத்துவைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டு வாழ்வதே முறையான வாழ்க்கை. இஷ்டத்திற்கு வாழ்வது கஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். அப்போது கைகொடுக்கவோ, காப்பாற்றவோ யாரும் முன்வருவதில்லை. 
    பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.
    நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல பொருட்களுக்கு நாம் உரிய மரியாதையை வழங்குவதில்லை. அவைகளை தேவையற்றவைகளாக நினைத்து ஒதுக்கிவிடவும் செய்வோம். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு பொருள் தான் சுண்ணாம்பு.

    முன்பு எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.

    சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.

    இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பின் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்கலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.

    இப்பொழுதெல்லாம் சுண்ணாம்புக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். எந்த மாத்திரையானாலும் அது பக்கவிளைவுகளை தரக்கூடியதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் நம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதிகப்படியாக உள்ளதை வெளியேற்றிவிடும். ஆனால் மாத்திரைகள் அப்படியில்லை. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கிவிடும்.

    பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும். கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும்.

    அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம். மிக குறைந்த அளவில் சுண்ணாம்பு கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள், பற்கள் பலம்பெறும். தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.

    நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து. தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத் திருப்பதற்கு இதுதான் காரணம்.

    பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடைநாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது. வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.
    பெண்களே ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம்.
    ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது பழமொழி. மேலும், ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என நம்முடைய முன்னோர்கள் ஆடைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல தத்துவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒருவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அவரது ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது.

    மனிதர்களின் ஆடைகளை பார்த்தே அவர்களது தகுதியை நிர்ணயித்துவிடுவார்கள். ஆகையால் தான் தற்போதைய சூழ்நிலையில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடைகளை வாங்கும் விஷயத்தில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால்தான் சில ‘ஜவுளிக்கடைகள்’ இப்போது ‘ஜவுளிக் கடல்’ களாக மாறிவருகின்றன. இந்த அளவுக்கு ஆடைகளை வாங்கும் போது கவனம் செலுத்தும் நாம் அதனை பராமரிக்கும் விஷயத்தில் விழிப்புணர்வாக இருக்கிறோமா என்றால் இல்லை.

    விலையுயர்ந்த துணிகளை வாங்குகிற நமக்கு, அதைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துணியை எந்தெந்த ரக ஆடைகளை எப்படித் துவைக்க வேண்டும் என்றும் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் பார்ப்போம். ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை (துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில்) பார்த்து படித்துக்கொள்வது நல்லது. குளிர்ந்த நீரில் அலச வேண்டுமா, காய வைக்கும் முறை, சொட்டு நீர் முறையை பயன்படுத்த வேண்டுமா போன்ற குறிப்புகளை படித்து அதன்படி செய்வது துணியின் தன்மையையும் நிறத்தையும் காக்கலாம்.



    1 கப் வினிகர் இருந்தால் போதும் உங்கள் துணி புதிது போல மின்ன வைக்கலாம். டிடர்ஜென்ட் மற்றும் குளிர்ந்த நீர் இல்லாமல் வெறும் வினிகரை கொண்டு அலசினாலே துணிகளில் உள்ள அழுக்கு, வியர்வை நாற்றம் நீங்கி துணிகளின் நிறத்தை அப்படியே புதிது போல் காக்கிறது. உங்கள் துணிகளை வெறுமனே ஒரு பக்கெட் தண்ணீரில் உள்ளங்கை அளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்தால் போதும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆடைகளை திருப்பி போட்டு அதன் உட்புற பகுதியை டிடர்ஜென்ட் கொண்டு அலசினால் அடர்ந்த நிற ஆடைகள் மங்கி போவதை தடுக்கலாம். சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும்.

    இதனால் ஆடைகளின் நிறம் மங்காது. சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே பெண்களே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது. ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.
    இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
    இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, பொது இடங்களில் பயணம் செய்வது, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் உருவாகாமல் தடுக்க தேவையான அளவு தூக்கம் மிக அவசியம்.

    பெண்கள் தூக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ‘எவ்வளவு நேரம் தூங்கினாலும் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சோம்பேறித்தனம் இருந்தால்- கண்களை திறக்க முடியாமல், அப்படியே மணிக்கணக்கில் படுத்திருக்கலாம் என்று தோன்றினால்- எப்போதும் கசப்பான சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால்- எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள், என் வாழ்க்கை மட்டும்தான் இவ்வளவு மோசமாக இருந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்துக்குள்ளே உழன்று கொண்டிருந்தால்- நீங்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம்.

    இதில் இருந்து மீள நீங்கள் மனோதத்துவ நிபுணரை அணுகுவதற்கு முன்னால், உடல் நலத்தை பரிசோதிக்க டாக்டரை சந்திக்கவேண்டும். ஏன்என்றால் மேற்கூறிய அறிகுறிகளில் பெரும்பாலானவை பெண்களின் உடல்நலத்தோடும் சம்பந்தப்பட்டவை. ஆரோக்கியமான மன நலத்திற்கு ஆரோக்கியமான உடல் நலமும் அவசியம்.

    மனஅழுத்தத்திற்கு உட்பட்டிருந்தால் அதில் இருந்து மீள சில எளிய வழிகள்:



    * மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் சிந்தனையை திசை திருப்பவேண்டும். அதற்கு சுயிங்கம் துணைபுரியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் சுயிங்கத்தை வாயில்போட்டு நிதானமாக மெல்லுங்கள்.

    * எல்லா விஷயங்களையும் சீரியஸ் ஆக்குவதை கைவிடவேண்டும். ‘இதெல்லாம் சாதாரணம் அப்படியே விட்டுவிடுவோம்! சரி.. நடந்தது நடந்துபோச்சு அதுக்கு என்ன செய்ய முடியும்!’ என்று நினைத்து சிறிய விஷயங்களை மனதில் போட்டுவைக்காமல் அப்போதே அப்புறப்படுத்திவிடுங்கள்.

    * நான் ரொம்ப சுத்தமானவள். அதனால் என்னைப் போல் நீங்களும் சுத்தமாக இருக்கவேண்டும். நான் ரொம்ப நல்லவள். அதுபோல் நீங்களும் நல்லவராக இருக்கவேண்டும். நான் கடும் உழைப்பாளி. அதுபோல் நீங்களும் உழைக்கவேண்டும்’ என்று உங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மீது திணித்து, அவர்களும் அதுபோல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

    * பிடித்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அவைகளை வாசிக்கும்போது உங்கள் உலகத்தில் இருந்து விடுபட்டு அந்த புத்தகத்தின் கருத்து உலகத்திற்கு நுழைந்துவிடுங்கள். நாய், பூனை போன்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பிராணியை வளருங்கள். அதனுடன் பொழுதை செலவிடுங்கள். தினமும் தியானம் மேற்கொள் ளுங்கள்.
    சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம்.
    இது டிஜிட்டல் யுகம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் செல்போன், கணினி திரையில் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்தவொரு விஷயத்தையும் முன் பின் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவர்கன் கருத்துகளையும் அறிந்து கொள்வதோடு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடிகிறது. அந்த அளவிற்கு சமூகவலைத்தளங்கள் சமூகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.

    ‘ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்ளலாம். முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்துக் கொள்ளலாம், ஒரே நேரத்தில் பலருக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம். பண உதவி, அவசர உதவி, ரத்ததானம் என எந்தவொரு உதவியாக இருந்தாலும் நொடிப்பொழுதில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு நிறை வேற்றிவிடலாம்’ என நவீன தொழில்நுட்பங்களின் வரப்பிரசாதமாக சமூக வலைத்தளங்கள் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. அதனை நாம் நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

    ஆனால் இன்று சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி வாழ்வின் ஒரு அங்கமாக பாவிப்பவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆரம்பத்தில் செல்பி மோகத்தில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்றவர்களின் ‘லைக்’ கிடைப்பதற்காக ஏங்கினார்கள். இப்போது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று யாரும் நினைப்பதில்லை. நிறைய பேர் இதை ஒரு சமூக அந்தஸ்தாகவே நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

    சமூக வலைத்தளங்களால் பிரிந்த குடும்பங்கள் ஏராளம் என்று சர்வே கூறுகிறது. சாதாரணமாகவே ஊர்வம்பு பேசுவதில் விருப்பம் உடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுவும் அடுத்தவரைப் பற்றி பேசுவதாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயத்தைக் கண், காது, மூக்கு வைத்து உண்மை போலவே சித்தரித்து விடுவார்கள். இது பின்னாளில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று யாரும் சிந்திப்பதில்லை. தெருவில் நான்கு பேர் கூடி ஊர் வம்பு பேசும் வேலையை இப்போது சமூக வலைத்தளங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

    நிறைய பேர் எதைத் தான் சொல்ல வேண்டும், பேச வேண்டும் என்ற வரம்பே இல்லாமல் மனம் போன போக்கிலே விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால் உருவாகும் பின்விளைவுகள் அவர்களுக்கே தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.



    நம்மைப் பற்றி நம் குடும்பத்தை பற்றி பொது இடத்தில் பேசினால் நன்றாகவா இருக்கும்? அதைப் போல தான் இதுவும். எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் தோன்றாது. சைபர் கிரைம்கள் உருவாக இது போன்ற தகவல் பரிமாற்றங்கள் வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க மக்களிடையே போதுமான விழிப்புணர்வு தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    மனோரீதியாக இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் பல. எந்த ஒரு விஷயத்தையும் நேரில் சொல்ல தயங்குபவர்கள் கூட இப்படி சமூகவலைத்தள குழுக்கள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். மற்றவர்கள் பதிவு செய்யும் விஷயங்களுக்கு இணையாக தங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். மனதில் பூட்டிவைத்திருந்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதால் மனம் ‘ரிலாக்ஸ்’ ஆவதாக உணர்கிறார்கள். அப்படி பகிர்ந்து கொள்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது நடந்து விட்டால் அதை எப்படி சரி செய்வது? என்று யாரும் யோசிப்பதில்லை.

    இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை ஒதுக்கிவிடமுடியாது. இயந்திரத்தனமாக ஓடோடி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நண்பர்களிடம் ஆசுவாசமாக பேசுவதற்கான சூழல் உருவாகாதபோது மன அழுத்தத்தை போக்க சமூகவலைத்தள குழுக்கள் உதவுகிறது. அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    தொழில் சம்பந்தமான விஷயங்கள், முக்கிய ஆலோசனைகள், சாதனைகள், மதிப்புரைகள், வாழ்த்துகள், பாராட்டுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கருத்துக்கள் என்று பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்போது சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க நேரிட்டால் அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். கருத்து மோதல்கள் உருவாக வழிவகுத்துவிடக்கூடாது. ஒரு விஷயத்தை நேருக்கு நேர் பகிர்ந்து கொள்வது வேறு, பலரோடு பகிர்ந்து கொள்வது வேறு. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

    சமீபகால ஆய்வின் படி சமூகவலைத்தளங்கள் பல உறவுகளைப் பிரித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவீனத் தொழில் நுட்பங்களால் பயனடையலாம். மாறாக அதை தவறாக பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடாது.

    மின்சாரம் பயனுள்ளது தான். ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதை மீறி பயன்படுத்தினால் உயிருக்கே உலை வைத்துவிடும். எல்லா தொழில் நுட்பமும் அப்படித்தான். ஒருபோதும் அவை மனித உணர்வுகளை பாதித்து விடக்கூடாது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதை சரி செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக பெண்கள். தங்களின் தனிப்பட்ட விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே அவர் களின் பாதுகாப்புக்கு உலைவைத்துவிடும்.
    ×