search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடை"

    • இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு.
    • ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர்,ஜூலை.31-

    இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு. பருத்தி உள்ளிட்ட மூலப்பொருள் அதிகம் கிடைக்காது என்பதால் சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

    காரணம் பொருளாதா ரத்தில் பின்தங்கிய நாடு என்ற அடிப்படையில் உலக நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவா னதுதான். இந்தியாவுடன் 2011ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச ஜவுளி இந்தியாவுக்குள் வராதபடி கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி., அமலான பின் அந்த வரி விலக்கப்பட்டதால், எவ்வித தடையுமில்லாமல் வங்கதேச வர்த்தகர்கள், தமிழகத்தின் தென் மாவட்ட எல்லை வரை கடை விரிக்க துவங்கியுள்ளனர். இறக்குமதி வரியும் இல்லாததால் 30 முதல் 40 சதவீதம் குறைவான செலவுடன் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கிறது.

    இவ்வாறு கடந்த ஒரே ஆண்டில் வங்கதேச இறக்குமதி, 113 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது உள்நாட்டு சந்தைகளை பதம்பார்த்துவிட்டது. இதனால் உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகளுடன் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் போராடி வெற்றி கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக சீனாவின் வர்த்தகர்களும், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.

    குறிப்பிட்ட பொருள் இறக்குமதியால் உள்நாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்படுகிறது. உள்நாட்டு விவசாயிகள் பாதுகாப்புக்காக பஞ்சு இறக்குமதிக்கு வரி விதிப்பதும் அத்தகைய வரிதான். வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கும் 12 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. 2016 முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கும் ஜி.எஸ்.டி.,க்கும் சம்பந்தமில்லை. உள்நாட்டு சந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு மீண்டும் கவுன்டர் வெய்லிங் வரி விதிப்பை தற்காலிகமாக அமலாக்க முடியும்.

    இது குறித்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி, நுால்விலை குறைந்த பின் சீராகி விட்டது. இருப்பினும், கடந்த ஓராண்டாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். நுால் விலை உயர்ந்து இருந்த போது, உள்நாட்டு தயாரிப்பு பாதிக்கப்பட்டது. அப்போது, வங்கதேச இறக்குமதியை பலரும் ஊக்குவித்தனர். அதன் விளைவு, தற்போது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு, உள்நாட்டு சந்தைகளிலேயே மதிப்பில்லாமல் போய்விடும். மலிவான விலையில் வங்கதேச ஆடையை வழங்குகின்றனர். வரிச்சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் வங்கதேச ஆடைகள் ஆக்கிரமித்துள்ளன. சீனாவில் இருந்து வங்கதேசம் வந்து அங்கிருந்து திருப்பூருக்கு ஆடைகள் வருகின்றன. இது சீனாவின் தலையீடாகவும் மாறியுள்ளது. உற்பத்தி செலவில் 30 சதவீதம் வரை குறைவு என்பதால் வங்கதேச ஆடை குறைவான விலைக்கு கிடைக்கிறது. உள்ளூரில் தயாரித்த ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே வங்கதேச இறக்குமதியை கட்டுப்படுத்தி, தொழிலை பாதுகாக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, சீனாவின் வர்த்தகர்களும் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.

    • பெண்களிடையே துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது.
    • இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்'அணிய விரும்புகிறார்கள்.

    இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    தேவையான பொருட்கள்:

    சில்க் காட்டன் துணி - ¼ மீட்டர்

    1.50 அங்குல லேஸ் - 19 அங்குலம்

    1.25 அங்குலம் எலாஸ்டிக் - 9 அங்குலம் (2 துண்டுகள்)

    கொக்கி செட் - 1

    செய்முறை:

    படம் 1: 36 அங்குல இடுப்பளவு உள்ள பெல்ட் தயாரிப்பதற்கு முதலில் துணியை 19 x 4 அங்குல நீள அகலம் கொண்ட 3 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். எலாஸ்டிக்கை 9 அங்குல நீளம் கொண்ட 2 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    படம் 2: மூன்று துண்டு துணிகளையும் ஒன்றோடு ஒன்று (நீளவாக்கில்) இணைத்து தையல் போடவும். இரண்டு தையல்கள் போட்டால் பிரியாமல் இருக்கும். (இதில் 1 மற்றும் 3-வது துண்டுகளின் உள்ளே எலாஸ்டிக்கை நுழைக்க வேண்டும். நடு துண்டின் மேலே 'லேஸ்' வைத்து தைக்க வேண்டும்).

    படம் 3: படத்தில் காட்டி இருப்பதுபோல துணிகளை இரண்டாக மடித்து தையல் போட வேண்டும். இரண்டாவது துண்டை இணைத்து இருக்கும் ஜாயிண்ட் வரை தையல் போட்டால் போதும்.

    படம் 4: அந்த துண்டை படத்தில் காட்டி இருப்பதுபோல லூப் டர்னர் அல்லது சேப்டி பின் கொண்டு வெளிப்புறமாக திருப்பவும்.

    படம் 5: ஒரு துண்டு எலாஸ்டிக்கின் ஒரு முனையில் சேப்டி பின்னை இணைத்து இதற்குள் நுழைத்து உள்ளே தள்ளவும்.

    படம் 6: இரண்டு துணி துண்டுகளை இணைப்பதற்காக போடப்பட்ட தையலின் மீது எலாஸ்டிக்கை வைத்து தையல் போடவும். இதே போல மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும்.

    படம் 7: நடுதுண்டு துணியின் ஓரத்தை உள்புறமாக மடித்து மேலே தையல் போடவும்.

    படம் 8: லேஸ் துணியை நடு துண்டின் மீது வைத்து, நீளவாக்கிலும், அகல வாக்கிலும் தையல் போடவும். அகலவாக்கில் தைக்கும்போது, லேஸ் முனைகளை உட்புறமாக மடித்து அதன் மேலே தையல் போடவும்.

    படம் 9 & 10: இரண்டு முனைகளிலும் எலாஸ்டிக்கை துணியின் விளிம்பு வரை கொண்டு வந்து சேப்டி பின்னை அகற்றிவிட்டு, துணியோடு சேர்த்து சதுர வடிவில் தையல் போடவும்.

    படம் 11: இரண்டு பக்கங்களிலும் உள்பக்கம், கொக்கி செட்டை பொருத்தவும். இதன்மூலம் இடுப்பு அளவுக்கு ஏற்றபடி ஹிப் பெல்ட்டை அணிந்துகொள்ள முடியும்.

    படம் 12: இப்போது அழகான 'ஹிப் பெல்ட்' தயார்.

    • கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும்.

    திருப்பூர்:

    கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மும்பையில் நாளுக்கு நாள் மழை தீவிரமடைந்து வருகிறது.இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    திருப்பூரில் உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி சில மாதங்களாக சற்று வேகமெடுத்துள்ளது. ஏப்ரல் முதல் இம்மாதம் வரை கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஆடை வர்த்தகத்தில் 30 சதவீதம் மும்பை சந்தையை சார்ந்துள்ளது. மழையால் தற்போது மும்பையில் ஆடை வர்த்தகம் சரிந்துள்ளது.

    இதனால் திருப்பூரிலிருந்து ஆடை கொள்முதல் செய்வதை மும்பை வர்த்தகர்கள் குறைத்து வருகின்றனர். மழை தீவிரமடையும் போது வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு சரக்கு அனுப்புவதும் தடைபடும். வெயில் நீடிப்பதால் ஆந்திரா, டில்லி, பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கோடைக்கால ஆடை ரகங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

    பருவமழை தீவிரமடைந்து செப்டம்பர் வரை திருப்பூரின் உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை பாதிக்க செய்யும். அதன் பின் தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆடைகள் வாங்கியதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர்.
    • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் உற்பத்தியாளர்கள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் சிறிய அளவில் நடத்தி வருகிறோம். எங்களிடம் சென்னை தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.

    ஆடைகள் வாங்கியதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் ரிட்டன் ஆகி விட்டது. அவர்கள் இது போல் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களிடம் ரூ.11கோடியே 62 லட்சத்து 64ஆயிரத்து 218க்கு ஆடைகள் வாங்கி பணம் கொடுக்காமல் உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இது பற்றி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • 'குர்த்தி' எனப்படும் சல்வார் பெண்கள் விரும்பி அணியும் உடையாகும்.
    • எந்த வகை குர்திக்கு எத்தகைய பேண்ட் அணிய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

    'குர்த்தி' எனப்படும் சல்வார், கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் இளம் பெண்கள் மட்டுமில்லாமல், நடுத்தர வயதினரும் விரும்பி அணியும் உடையாகும். இதற்கு பொருத்தமான வகையில் பேண்ட் அணிவது தோற்றத்தை மேம்படுத்தி காட்டுவதோடு, சவுகரியமாகவும் உணர வைக்கும். எந்த வகை குர்திக்கு எத்தகைய பேண்ட் அணிய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

    1 சிகரெட் பேண்ட்: தற்போதைய லேட்டஸ்ட் ஸ்டைல் சிகரெட் பேண்ட்தான் மாணவிகள், இளம்பெண்கள், நடுத்தர வயதினர் என அனைவருக்கும் பொருத்தமானது. தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும். எடை குறைவானது மற்றும் சவுகரியமானது. எல்லாவகை குர்த்திகளுடனும் அணிவதற்கு ஏற்றது.

    2 ஸ்கர்ட்ஸ்: குர்த்தியுடன் முழுநீள ஸ்கர்ட் அணிவது இன்றைய இளம் பெண்களுக்கு பிடித்த ஸ்டைலாக இருக்கிறது. இது 'ரிச் லுக்' அளிப்பதுடன், அணியவும் வசதியாக இருக்கிறது. முழங்கால் நீள குர்த்தியுடன் இந்தவகை ஸ்கர்ட்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    3 பளாசோ: இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் இருக்கும் பளாசோ, 'ஸ்ரெய்ட் கட்' குர்த்தியுடன் அணிவதற்கு பொருத்தமாக இருக்கும். குறிப்பாக முழங்காலுக்கு கீழ் நீளும் குர்த்தி அணிந்தால் 'ஸ்டைலிஷ் லுக்' அளிக்கும். உயரமாக இருப்பவர்கள், சிறிய அளவு கிராப் டாப்புடன் இதை அணியலாம். உயரம் குறைவாக இருப்பவர்கள் வெவ்வேறு நிறங்களில் குர்த்தியும், பளாசோவும் அணிந்தால் சற்று உயரமாகத் தெரிவீர்கள்.

    4 லெக்கின்ஸ்: இறுக்கமாக காலுடன் ஒட்டி இருந்தாலும், பெண்களால் பெரிதும் விரும்பப்படும் பேண்ட் வகை லெக்கின்ஸ். முழு நீள குர்த்தி, அனார்கலி வகை குர்த்தி போன்றவற்றுக்கு லெக்கின்ஸ் பொருந்தும். பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம். ஷார்ட் குர்த்தியுடன் லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

    5 ஜீன்ஸ்: ஜீன்ஸ் உடன் குர்த்தி அணிவது மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடையே வரவேற்பைப் பெற்ற ஸ்டைலாகும். எல்லாவகையான நிகழ்வுகளுக்கும் அணிவதற்கு ஏற்ற காம்பினேஷன் இது. ஸ்லிட் கட், ஷார்ட், முழங்கால் நீளம் கொண்டது என எந்த வகை குர்த்திக்கும் ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். ஸ்லீவ்லெஸ் அல்லது முழு கை கொண்ட குர்த்தியுடன் அணியும்போது, உங்களை உயரமாகக் காண்பிக்கும். ஷார்ட் ஸ்லீவ்லெஸ் குர்த்தியுடன் இது பொருந்தாது.

    6 சுடிதார் பேண்ட்: பாரம்பரிய வகையான இது 'கிளாஸிக் லுக்' கொடுக்கக்கூடியது. தினசரி பயன்பாட்டுக்கும், விசேஷங்களுக்கு அணிவதற்கும் பொருத்தமாக இருக்கும். அனார்கலி, முழு கை, காலர் குர்த்தி போன்றவற்றுக்கும் இதை அணியலாம். ஷார்ட் குர்த்தியுடன் அணியக்கூடாது.

    7 பட்டியாலா பேண்ட்: ஷார்ட் குர்த்தியுடன் அணியும்போது பாரம்பரியமான தோற்றம் கொடுக்கக்கூடியது பட்டியாலா பேண்ட். சாதாரண உடைக்கும் பொருத்தமாக இருக்கும். எல்லாவகை சீசனுக்கும் அணிவதற்கு சவுகரியமானது பட்டியாலா பேண்ட்.

    8 தோதி பேண்ட்: இது ஷார்ட் குர்தியுடன் மட்டும் அணிவதற்கு ஏற்றது. தொடைப் பகுதியில் அதிக பிரில்கள் இருக்கும் என்பதால் சற்று பருமனாக காண்பிக்கும். நீங்கள் அணியும் குர்த்தி எளிமையாக இருந்தால் பேண்ட் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருப்பது தோற்றத்தை அழகாக்கும்.

    • கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது.
    • பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுகிறது.

    கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது. தற்போது ஆரெம்கேவி இயற்கை வண்ண சாயங்களை கொண்டு, கைவினை நெசவாளர்களால், கோர்வை மற்றும் பெட்னி போன்ற பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகளை தயாரித்து வழங்குகின்றனர். நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வண்ணம் நம்முடைய கட்டிடக்கலை அதிசயங்கள் கோவில் சுவர்கள் இயற்கை மற்றும் அக்கால அரச தோற்றங்கள் போன்றவை இந்த மறுமலர்ச்சி புடவையில் காண முடியும். இத்தகைய அற்புத புடவைகளின் தொகுப்பை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என ஆரெம்கேவி இயக்குனர் சங்கர் குமாரசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

    நம் கலை வடிவங்கள் இயற்கை அழகு போன்றவற்றை இயற்கை வண்ணத்தில் கைவினைகளின் புத்துருவாக்க சிந்தனையுடன் இந்த மறுமலர்ச்சி புடவைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவைகள் முறையே:-

    கோடாலி கருப்பூர் புடவை

    18-ம் நூற்றாண்டில் தஞ்சை அரச பரம்பைர மட்டுமே பயன்படுத்திய டிசைன்கள், மல்பரி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட பச்சை வண்ணம் ஏற்றப்பட்ட அற்புதமான புடவை இயற்கையின் "மறுமலர்ச்சி" படைப்பு.

    பைத்தானி முந்தானையுடன் டிஷ்யூ மீனாக்காரி புடவை

    18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பரம்பரை பெண்கள் விழாக்காலத்தில் அணிந்த, பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையும், மீனாக்காரி வேலைப்பாடமைந்த டிஷ்யூ புடவை.

    உப்படா கிளி சித்திர புடவை

    மரப்பிசினிலிருந்து எடுக்கப்பட்ட கருஞ்சிவப்பு இயற்கை வண்ணத்தில் பாரம்பரியமிக்க கிளி வடிவங்களோடு உப்படா நெசவு றையில் நெய்யப்பட்டது.

    இயற்கை வண்ண 2000 புட்டா புடவை

    தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலின் வரலாற்று அடையாளங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்து 2000 பூக்கள் மிளிரும் காட்சியை இண்டிகோ இயற்கை வண்ணமேற்றி நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவை.

    உடல்பேட்டு பேல்தார் புடவை

    செவ்வல்லி கொடியும் மரப்பிசினும் கலந்த செங்காவி வண்ணத்தில் தூய ஜரிகையும் பச்சை வண்ணமும் கொண்ட கிரிம்சன் கோடுகளோடு அழகில் மிளிரும் அற்புத புடவை.

    பவுன் புட்டா புடவை

    பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையில் மீனாக்காரி வேலைப்பாடமைந்த மெல்லிய கருஞ்சிவப்பு இயற்கை வண்ணம் உடலெங்கும் தூய ஜரிகை புட்டாக்கள் கொண்ட புடவை. 18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பெண்கள் மட்டுமே பயன்படுத்திய இந்தப் புடவை மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    கந்தபெருண்டா புடவை

    மைசூர் அரண்மனையால் ஈர்க்கப்பட்ட கருஞ்சிவப்பு கந்தபெருண்டா புடவை, சிக்கலான தங்க ஜரி வேலைப்பாடுகளுடன் கர்நாடகாவின் மாநில அடையாளத்தை பிரதிபலிக்கிறது மற்றும் இயற்கையாகவே லாக்சாயம் பூசப்பட்டது.

    கமலம் புடவை

    கமலம் பட்டுப் புடவை இயற்கையாகவே சப்பான் மரத்தால் சாயமிடப்பட்டு, தாஜ்மஹாலில் இருந்து உத்வேகம் பெறுகிறது, பீச் மற்றும் கோல்டன் ஜாரி வடிவங்கள் மற்றும் நேர்த்தியான பார்டர் வடிவமைப்பு ஆகியவற்றுடன் தலைசிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டது.

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், ‘புடவை’ என்று பெயர்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    * நம் ஊரில், என்னென்ன புடவை வகைகள் இருக்கிறது?

    பட்டு, கைத்தறி, பனாரஸ், காட்டன், டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்டிவேர், டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா, ஹாப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைக்கின்றன. பிரி ஸ்டைல், டிரெடிஷ்னல், தென் இந்திய முறை, வட இந்திய முறை, மடிசார், கேன் கேன், குஜராத்தி பல்லு, சிங்கிள் பிலீட்ஸ்.. இப்படி புடவைகளுக்கு ஏற்ப உடுத்தும் முறைகள் வேறுபடும்.

    * கட்டுவதற்கு சுலபமானது எது? கடினமானது எது?

    இதில் ஜார்ஜ்ஜெட், ஷிபான் மற்றும் சாப்ட் சில்க் ஆகியவை கட்டுவதற்கு சுலபமானவை. அயன் செய்யவேண்டிய தேவை இருக்காது. அதேபோல மடித்து, மோல்ட் செய்வதும் எளிதானது. ஆனால் கனமான பட்டு புடவைகள் குறிப்பாக காஞ்சி பட்டு, கனமான கல் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளை கட்டுவது கொஞ்சம் சிரமமானது. ஏனெனில் இதை நினைத்தபடி மடிப்பதும், 'பின்' குத்துவதும், கையாள்வதும் கடினமாக இருக்கும்.

    * எவ்வளவு நேரத்தில் புடவை கட்டலாம்?

    ஒருசில கொண்டாட்டங்களில் மட்டும் புடவை கட்டுபவர்கள், அதிகபட்சம் அரை மணி நேரம் எடுத்து கொள்வார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை உடுத்துபவர்கள், 15 முதல் 20 நிமிடங்களில் புடவையை கட்டிவிடுவார்கள். தினந்தோறும் புடவை கட்டுபவர்களுக்கு, 10 நிமிடமே போதுமானதாக இருக்கும். ஆனால் புடவை எக்ஸ்பெர்ட்ஸ், 2 நிமிடத்திலேயே கட்டிமுடித்துவிடுவார்கள்.

    * பெண்கள் புடவை விஷயத்தில், செய்யும் தவறுகள் என்ன?

    புடவைக்கு ஓரம் அடிக்காமல் அணிவது, உள் பாவாடையை கொலுசு இருக்கும் கணுக்காலில் நிற்கும்படியாக அணியாமல் ஒழுங்கற்று மேல்-கீழாக இருக்கும்படி அணிவது, உடலுக்கு சம்பந்தமில்லாத முறையில் மடிப்பு (பிலீட்ஸ்) எடுப்பது, புடவையை அயன் செய்யாமல் அணிவது, பிலீட்ஸ்-ஐ இடுப்பில் சொருகி அதை சரிசெய்யாமல் விடுவது, புடவை உடலில் நிற்பதற்காக நிறைய இடங்களில் பின் குத்துவது... இப்படி நிறைய தவறுகளை செய்கிறார்கள்.

    * புடவையை சிறப்பான முறையில் அணிவது எப்படி?

    'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    * புடவை கலாசாரம் தமிழ்நாட்டில் எப்படி நவீனமாகி இருக்கிறது?

    உறவினர்களை கொண்டு புடவை கட்டிய காலம் மலையேறி, இன்று புடவை கட்டிவிட 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்களை அழைக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களும், பெண்களின் புடவை மோகத்தை சூடேற்றிவிட்டுள்ளன. மேக்கப், புடவை அலங்காரம் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்துகிடப்பதால், அழகு கலையில் புதுமைகளை எதிர்பார்க்கிறார்கள்.

    * சிறப்பாக புடவை கட்ட தெரிந்தவர்கள், 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்டாக ஆகமுடியுமா?

    நிச்சயமாக. இதற்கு எந்தவிதமான தியரி படிப்புகளும் அவசியம் இல்லை. அனுபவமும், பயிற்சியும்தான் அவசியம். அது பெண்களுக்கு இயற்கையாக இருந்தால், சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடுமாறுபவர்கள், 'சாரி டிரேப்பிங்' பயிற்சி பெற்று, புடவை கட்டிவிடும் வேலை செய்யலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள்...! இன்று நிறைய கல்லூரி பெண்களும், குடும்ப தலைவிகளும் பகுதி நேரமாக சாரி டிரேப்பிங் வேலை செய்கிறார்கள். ஏன்..? ஆண்களும், சாரி டிரேப்பிங் பயிற்சி களை முடித்துவிட்டு, நிறைய பெண்களுக்கு புடவை கட்டிவிடுகிறார்கள்.

    2 நிமிடத்திலேயே பட்டுப்புடவை கட்டிவிடலாமா?

    ஆம்...! இப்போது எல்லாமே நவீனம்தான். 'பாக்ஸ் போல்டிங்' முறையில் ரெடிமேட் உடைகளை போல புடவை தயாராகிவிடும். முந்தானை எடுப்பதில் தொடங்கி எல்லா வேலைகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அயன் செய்து தயாராக வைத்துவிடுவார்கள். அதை ரெடிமேட் உடைபோல அப்படியே எடுத்து உடுத்தவேண்டியதுதான்.

    • சாயம் போகும் ஆடைகளை சூரிய ஒளியில் நேரடியாக உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
    • சாயம் போகும் ஆடைகளை உள்பக்கமாக மடித்து வைப்பது நல்லது.

    ஆடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் பெண்களுக்கு பொறுமை அதிகம். துணியின் தரம், நிறம், விலை, தங்களுக்கு அந்த உடை பொருத்தமாக இருக்கிறதா? என்றெல்லாம் கவனமாக பார்த்து வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும் ஆடைகளின் விஷயத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று சாயம் போவது. இதற்கு முக்கிய காரணம் தரமற்ற சாயங்களை ஆடைகளுக்கு பயன்படுத்துவது தான்.

    மேலும் ரசாயனம், வெப்பநிலை, சுற்றுச்சூழல் மாசு போன்ற இதர காரணங்களாலும் துணிகள் வெளுத்து போக நேரிடும். சாயம் போகும் ஆடைகளை சரியாக பராமரிப்பதன் மூலம் பொலிவு குறையாமல் வைத்திருக்க முடியும். அதற்கான சில பராமரிப்பு முறைகளை இங்கே காண்போம்.

    புதியதாக வாங்கிய துணிகளை முதன்முதலில் துவைக்கும்போது தனியாக ஊற வைப்பதன் மூலம்,அந்த துணிகள் சாயம் போகுமா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதோடு, அந்த சாயம் பிற துணிகள் மீது பற்றிக்கொள்வதையும் தவிர்க்கலாம். சாயம் போகும் ஆடைகளை சில நாட்களுக்கு தனியாக துவைப்பதே சிறந்தது. உப்பு மற்றும் வினிகர் கலந்த தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் துவைத்து அலசுவதன் மூலம் துணிகள் சாயம் போவதை சீக்கிரமே தடுக்க முடியும்.

    சில துணிகள் இரண்டு அல்லது மூன்று சலவைகளிலே முழுவதும் சாயம் போய் வெளிர் நிறமாக மாறிவிடும். இயற்கையான சோப்பு அல்லது மென்மையான ஷாம்பு பயன்படுத்தி இந்த துணிகளை துவைப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். சாயம் போகும் ஆடைகளை சூரிய ஒளியில் நேரடியாக உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் துணிகள் விரைவாகவே வெளிறிவிடும்.

    இதனைத் தவிர்க்க நிழலில் உலர்த்தலாம். சில நேரங்களில் சாயம் போகும் துணியுடன் வெள்ளை நிற உடைகளை தெரியாமல் ஊறவைத்திருப்போம். அப்போது அந்த சாயம் வெள்ளை உடைகளில் பற்றிக்கொள்ளும். அதைப் போக்க இவ்வாறு செய்ய வேண்டும். சாயம் பிடித்த உடையை உலர வைக்கும் முன்பே, வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பிளீச்சிங் பவுடரை கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

    அதில் பாதி எலுமிச்சம்பழத்தின் சாற்றினை ஊற்றி, அந்த நீரில் வெள்ளைத் துணிகளை ஐந்து நிமிடம் ஊற வைத்து துவைப்பதன் மூலம் சாயக்கறையை நீக்கிவிடலாம். சாயம் போகும் ஆடைகளை உள்பக்கமாக மடித்து வைப்பது நல்லது. மடித்து வைத்த பின்பும் சில துணிகளில் சாயம் போகலாம். எனவே நிறங்களின் அடிப்படையில் துணிகளை தனித்தனியே பிரித்து அடுக்கி வைப்பது சிறந்தது.

    • புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன.
    • இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின

    பாரம்பரிய ஆடைகளில் புடவைக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இதில் பட்டு, காட்டன், ஷிபான் என பல ரகங்கள் உள்ளன. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போலவே இதன் வரலாறும், சுவாரசியம் மிக்கது

    பண்டைய காலத்தில் உடல் முழுவதும் சுற்ற அணியப்படும் ஓர் ஆடையாகத்தான் புடவை இருந்தது.

    புடவை அணிவதற்குகென்று எந்தவிதமான சிறப்பு முறையும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பின்பு சங்ககால பெண்கள் தான் இதற்கு அடிப்படையான முறையை முதலில் கண்டறிந்தனர்.

    அந்த காலத்தில் பெண்கள் தொப்புள் தெரியும் படிதான் புடவையை அணிந்தார்கள். பிறகு அவ்வாறு அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னரே தற்போது உடுத்தும் முறை தோன்றியது,. அந்த காலத்தில் தைக்கப்படாத ஆடைகள் அணிபவர்கள் சிறந்தவர்கள் எனும் நியதி இருந்தது. அதன் காரணமாகவே விழா, கோவில் திருவிழக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்கள் புடவை அணிய வேண்டும் என்பது கட்டாயமானது.

    முகலாயர்களின் வருகைக்கு பிறகே புடவையில் கற்கள், ஜர்தோசி கற்கள் பதிப்பு போன்ற அலங்காரங்கள் புகுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்பு தான் ரவிக்கை, உள்பாவாடை உடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இடுப்பை மறைத்தபடி நீண்ட ரவிக்கை அணிந்து அதன்மேல் புடவை உடுத்த ஆரம்பித்தார்கள். இந்த முறைக்கு நிவி ஸ்டைல் என்று பெயர்.

    ஆரம்ப காலத்தில் பட்டுப்புடவைகள் பிரபலமாக இருந்தன. பருத்தி அணிந்தால் மரியாதை குறைவாக கருதி புறக்கணிந்தனர்.

    நாம் வீர மங்கைகளாக கருதும் ஜான்சி ராணி, ருத்ரமா தேவி போன்ற பலரும் பாரம்பரிய உடைகளாக புடவையை அணிந்துதான் போரிட்டனர்.

    தென்னிந்தியாவில் புடவைகள் பெண்களின் பிரதான ஆடையாக இருந்தாலும் இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின.

    ஆரம்பத்தில் புடவை ஒரு நிறத்திலும், ரவிக்கை வேறு நிறத்திலும் அணிந்தனர். காலப்போக்கில் புடவையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் அணியத்தொடங்கி இப்போது பல டிசைன்களில் அணிந்து வருவதை பார்க்கிறோம்.

    புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, வங்காளத்தில் பல்சுரி பட்டு என பல ரகங்கள் உண்டு.

    • நாம் அணியும் ஆடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும்.
    • அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும்.

    'ஆள் பாதி ஆடை பாதி' என்பதற்கு ஏற்ப, நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேலும் சிறப்பாக காட்டும். ஆனால், பல பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதை அறிந்து மாற்றிக்கொண்டால், மேலும் தன்னம்பிக்கையோடும், அழகோடும் திகழலாம். அதற்கான குறிப்புகள் இதோ…

    கண்களை உறுத்தாத ஆடைகள்: நாம் அணியும் ஆடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக, சுடிதார் டாப்ஸ்சுக்கு தேர்வு செய்யும் லெக்கின்ஸ்சில் இந்தத் தேர்வு முக்கியம். உயரம் குறைவான டாப்ஸ் அணியும் போது, அதற்கு லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பக்கவாட்டில் திறந்திருக்கும் வகையிலான ஆடை உடுத்தினால், லெக்கின்ஸ் அணியாமல், பளாசோ, சாதாரண சுடிதார் பேண்ட், ஜீன்ஸ் போன்றவற்றை தேர்வு செய்து அணியலாம். லெக்கின்ஸ், உடலுடன் ஒட்டிக் கொள்ளும் என்பதால், பிறரின் கவனத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அனார்கலி, உயரம் அதிகமான டாப்ஸ்சுக்கு லெக்கின்ஸ் அணியலாம். அதேபோல், தரமான துணிகள் வாங்குவதும் முக்கியம். பளாசோ அணியும் போது, டாப்ஸ் கணுக்கால் வரையில்லாமல், முழங்கால் வரை இருக்கும்படி அணியலாம். சரும நிற லெக்கின்ஸை தவிர்த்து, அடர் நிறங்களைத் தேர்வு செய்யலாம்.

    உள்ளாடையில் கவனம்: உள்ளாடையில், எலாஸ்டிக் தளர்வாகவோ, ஒருபுறம் ஏற்ற, இறக்கத்துடனோ இருப்பவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஜிம்முக்குச் செல்லும்போது, அணியும் உள்ளாடை சரியாகவும், அடர் நிறத்திலும் இருக்க வேண்டும். மேலே அணியும் ஆடை மெல்லியதாக இருந்தால், உள்புறம் 'சிலிப்' போன்ற உள்ளாடையைத் தேர்வு செய்து அணியலாம்.

    நிறத்தேர்வில் தெளிவு: அடர் நிற மேலாடையைத் தேர்வு செய்யும்போது, அதற்கேற்ப இணை உடை, லேசான நிறத்திலோ அல்லது அதற்கு ஒத்துப் போகும் நிறத்திலோ இருக்க வேண்டும். மேலே அணியும் டாப்ஸில் அதிக டிசைன் இருந்தால், அதற்கு அணியும் பேண்ட், டிசைன் இல்லாமல் இருக்கலாம். இது போன்று அணிந்தால், நம் அழகை மேலும் மெருகேற்றிக்காட்டும்.

    நகைகளில் அழகு: அணிந்திருக்கும் ஆடை ஆடம்பரமாக இருந்தால், நகை சாதாரணமாக இருக்கலாம். கழுத்தில் ஆடம்பரமான பெரிய நகைகள் அணிந்தால், காதுக்கு சிறிய காதணியை தேர்ந்தெடுக்கலாம். மார்டன் உடைகள் உடுத்தும் போது, ஆடம்பரமான பெரிய நகையை அணியாமல், சாதாரண வகையிலான சிறிய நகைகள் போடலாம்.

    சரியான அளவு: அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும். எனவே, தேர்வு செய்யும் ஆடை, நமக்கு சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கைப்பை: பெண்களுக்குத் தேவைப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று, ஹேண்ட் பேக். அலுவலகத்திற்கு பெரிய கைப்பைகள் எடுத்துச் சென்றாலும், விசேஷங்களுக்குச் செல்லும்போது சிறிய அளவிலான கைப்பைகளைத் தேர்வு செய்யலாம். ஒல்லியாக இருப்பவர்கள் பெரிய அளவிலான கைப்பைகளைத் தேர்வு செய்யாமல், நடுத்தர அளவிலான கைப்பைகளை வாங்குவது சிறந்தது.

    • கடந்த 20 ஆண்டுகளில் திருப்பூர் அபார வளர்ச்சி பெற்றுள்ளது.
    • சர்வதேச வர்த்தகம் 80 சதவீதம் செயற்கை நூலிழை, 20 சதவீதம் பருத்தி என்ற அடிப்படையில் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் ஐ.கே.எப்., அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 49வது இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிராண்ட்ஸ் அண்ட் சோர்சிங் அசோசியேஷன் சேர்மன் சுவாமிநாதன் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர், செயற்கை நூலிழை ஆடை கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.

    முன்னதாக சுவாமிநாதன் கூறியதாவது:- கடந்த 20 ஆண்டுகளில் திருப்பூர் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.சீனாவுக்கு மாற்றாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய பல்வேறு நாடுகளும் விரும்புகின்றன. அந்நாடுகளை ஈர்க்கும் வகையில் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மறுசுழற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பிடம் பெற்று நாட்டின் தலைசிறந்த தொழில் நகராக திருப்பூர் உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக பின்னலாடை உற்பத்தி யை டிஜிட்டல்மயமாக்க தொழில்துறையினர் திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல் கூறுகையில், பின்னலாடை உற்பத்தியில் தனிமுத்திரை பதித்துள்ள திருப்பூர் 80 சதவீதம் பருத்தி, 20 சதவீதம் செயற்கை நூலிழை ஆடை தயாரித்து வருகிறது.சர்வதேச வர்த்தகம் 80 சதவீதம் செயற்கை நூலிழை , 20 சதவீதம் பருத்தி என்ற அடிப்படையில் நடக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி திருப்பூரின் பருத்தி மற்றும் செயற்கை நூலிழை ஆடைகள் ஏற்றுமதி 50:50 என்று உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    சாக்கடை கால்வாய்களில் குப்பை மேட்டில் நீக்கமற நிறைந்து சுற்றுச் சூழலுக்கு பேராபத்து விளைவிக்கும் 'பெட் பாட்டில்' எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து சாயமிடப்பட்ட பாலியஸ்டர் நூல் தயாரிப்பதில் திருப்பூரை சேர்ந்த தனியார் காட்டன் குழுமம் சாதனை படைத்துள்ளது.

    சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மலை போல் செலவு வைக்கும் நிலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் நூலிழை தயாரிக்கும் போதே, நிறமேற்றப்பட்ட நூலாக மாற்றும் தொழில்நுட்பமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் தினமும் 70 லட்சம் பெட் பாட்டில்களில் இருந்து பைபர் தயாரிக்கிறது.இதன் வாயிலாக 1.30 லட்சம் கிலோ நூலிழை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒன்று, இரண்டல்ல இதுவரை 60 வகையான நிறங்களில் நூலிழை தயாரித்து துணியாகவும், ஆடையாகவும் மாற்றி அசத்தியுள்ளனர்.

    இதேபோல் பனியன் ஆடை தயாரிக்கும் போது மொத்த துணியில் 15 சதவீதம் வரை கட்டிங் வேஸ்டாக நீக்கப்படுகிறது. அவற்றை மீண்டும் பைபர் ஆகவே மாற்றி அதிலிருந்து நூல் தயாரிக்கும் தொழில்நு ட்பமும் வெற்றியடைந்துள்ளது.

    மறுசுழற்சி முறையில் பருத்தி நூலிழை தயாரிக்கும் போது 98 சதவீத கார்பன் டை ஆக்ைஸடு உருவாவது தவிர்க்கப்படுகிறது. வழக்கமான மின்திறனில் 78 சதவீதம் சேமிக்கப்படுவதோடு தண்ணீர் பயன்பாடும் 100 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது.பாலியஸ்டர் நூலிழை தயாரிக்கும் போது 96 சதவீதம் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு உருவாவது குறைந்துள்ளது. மின்திறனில் 78 சதவீதமும், தண்ணீர் பயன்பாட்டில் 96 சதவீதம் குறைந்துள்ளது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனியார் காட்டன் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குனர் பிரித்வி கூறியதாவது:- எங்கள் நிறுவனம் மறுசுழற்சி முறையில் பெட் பாட்டில் களில் இருந்து பாலியஸ்டர் நூல் தயாரிக்கிறது. சொகுசு மெத்தை தயாரிக்க பயன்படும் ஹாலோ பைபர்களும் இதிலிருந்து கிடைக்கிறது. நிட்பேர் கண்காட்சியில் வைத்துள்ளடி-சர்ட்டுகள், 80 சதவீதம் மறுசுழற்சி பாலியஸ்டர், 20 சதவீதம் மறுசுழற்சி விஸ்கோஸ் என 100 சதவீதம் மறுசுழற்சி முறையில் தயாரித்துள்ளோம். ஒரு டி-சர்ட் தயாரிப்பின் மூலம் 7.82 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுவது குறைந்துள்ளது. மேலும் 39.74 லிட்டர் தண்ணீர் பயன்பாடு சேகரமாகியுள்ளது. அதாவது காரில் 28.56 கி.மீ., தூரம் பயணிக்கும் போது உருவாகும் சுற்றுச்சூழல் மாசு அளவுக்கு மாசுபடுவது குறைந்துள்ளது. 160.37 நாட்களுக்கு பயன்படுத்தும் குடிநீர் சேகரமாகியுள்ளது. பெட் பாட்டில் கழிவில் இருந்து பாலியஸ்டர் நூல் தயாரிக்கும் போது நிறமிகளை சேர்ப்பதால் எதிர்பார்க்கும் வண்ணத்தில் பாலியஸ்டர் நூல் தயாரிக்கிறோம். ஒரு சொட்டு தண்ணீர் கூட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள் எவை? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டால் அழகோடும், தன்னம்பிக்கையோடும் ஜொலிக்கலாம்.
    அணியும் ஆடை நமக்கு பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பதாக உணரும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். கச்சிதமான ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு சந்தேகங்கள் வரலாம். உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள் எவை? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டால் அழகோடும், தன்னம்பிக்கையோடும் ஜொலிக்கலாம். அதற்கான ஆலோசனைகளை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

    ஒல்லியாக இருப்பவர்களுக்கு... மெலிந்த தோகம் கொண்டவர்களுக்கு பெரும்பாலான உடைகள் பொருத்தமானதாக இருக்கும். பென்சில் வகை பேண்ட்கள் கால்களை அழகாக காட்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் நீளமான பாவாடைகள் அணியலாம். சுடிதான் மற்றும் ரவிக்கை அணியும் போது குட்டையான கைப்பகுதிகளை கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

    உயரமாக இருப்பவர்களுக்கு..

    உயரமாக இருப்பவர்கள் அவர்களின் உயரத்தை காட்டும் வகையில் இருக்கும் நீளமான ஆடைகளை அணியலாம். லெகங்கா, நீளமான பாவாடைகள், கவுன் போன்றஉடைகள் பொருத்தமாக இருக்கும். கால் பாதம் வரை மறைக்கும் போஹோ ஸ்கர்ட் அழகை அதிகரிக்கும். உயரத்தை குறைத்துக்காட்ட விரும்புபவர்கள் பாவாடை கிராப் டாப் போன்றவற்றை அணியலாம்.

    உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு...

    உயரம் குறைவாக இருப்பவர்கள் டாப் ஒரு வண்ணத்திலும், பாட்டம் மற்றொரு வண்ணத்திலும் இருக்குமாறு உடை அணியலாம். ஸ்கர்ட். கிராப் டாப் என்று பிரித்து அணியக்கூடிய உடைகள் உயரத்தை குறைத்து காட்டும் அணிவது உயரத்தை அதிகரித்து காட்டும். கால்கள் தெரிவது போன்ற ஆடைகளும் உயரத்தை அதிகரித்து காட்டும்.

    பருமனாக இருப்பவர்களுக்கு..

    அடர்ந்த நிறம் கொண்ட ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் ஒல்லியாகத்தெரியலாம். பச்சை, கருப்பு, மெரூன் போன்ற நிறங்கள் பருமனான தோற்ம் கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகள், பல லேயர்கள் கொண்ட ஆடைகள், பருத்தி ஆடைகள் மேலும் பருமனாக காட்டும் என்பதால் அவற்றை தவிர்த்துவிடலாம். கிரேப் சில்க், ஷிபான் போன்ற உடலோடு ஒட்டும் ஆடைகளை அணியலாம்.

    இவ்வாறு எடைக்கும், தோற்றத்தைக்கும் ஏற்றவாறு உடை அணிவதன் மூலம், அழகோடும், தன்னம்பிக்கையோடும் மிளிரலாம்.
    ×