search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணிகள்"

    • கழிவுநீரை சுத்திகரிக்காததால், ஆலைகள் மலிவான கட்டணத்தில் துணிக்கு சாயமேற்றுகின்றன.
    • சிறப்பாக செயல்படும் உள்ளூர் சாய ஆலைகளுக்கு ஆர்டர் வழங்கி கைகொடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதி சாய ஆலைகள்மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதியுடன் விதிகளை பின்பற்றி இயங்குகின்றன. சாயக்கழிவுநீர் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. 18 பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு உட்பட்டு 400க்கும் மேற்பட்ட சாய ஆலைகள், தனியார் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய 100சாய ஆலைகள் திருப்பூரில் இயங்குகின்றன.ஈரோடு, விருதுநகர், தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில், வாரிய அனுமதி பெறாமலும், சாயநீரை சுத்திகரிக்காத விதிமீறல் ஆலைகள் அதிகளவில் செயல்படுகின்றன. சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றி, சுற்றுச்சூழலை பாழ்படுத்துகின்றன. கழிவுநீரை சுத்திகரிக்காததால், இந்த ஆலைகள் மலிவான கட்டணத்தில் துணிக்கு சாயமேற்றுகின்றன.

    செலவு குறையும் என்பதால், திருப்பூரில் உள்ள சில பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், வெளியூர் ஆலைகளுக்கு துணியை அனுப்பி சாயமேற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி சில ஆசாமிகள் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து துணியை கபளீகரம் செய்துவிடுகின்றனர்.

    இதுகுறித்து, ஏற்றுமதியாளர் சங்கம், சைமா, டீமா, உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க தலைவர்களுக்கு சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு துணியை கொண்டுசென்று, குறைந்த கட்டணத்தில் சாயமேற்றித்தருவதாக ஏஜென்ட்கள் சிலர் ஆசை வார்த்தை கூறுகின்றனர். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள், இதை நம்பி அவர்களிடம் துணியை கொடுத்துவிடுகின்றனர். இவ்வாறு வாங்கிச் செல்லும் துணிக்கு மோசடி ஆசாமிகள் சாயமேற்றுவதில்லை. நல்ல விலைக்கு விற்பனை செய்துவிட்டு தலைமறைவாகிவிடுகின்றனர். இதுகுறித்து எங்கள் சங்கத்துக்கு பல புகார்கள் வந்துள்ளன.சிறிய லாபத்துக்காக போலி ஏஜென்ட்களிடம் துணியை கொடுத்து, பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஏமாறக்கூடாது.திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரிக்கின்றன. சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும் பாதுகாத்து சிறப்பாக செயல்படும் உள்ளூர் சாய ஆலைகளுக்கு ஆர்டர் வழங்கி கைகொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    ×