search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnancy Before Marriage"

    திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.
    திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். காலம் மாறிவிட்டது என்று நாம் வாய்வலிக்க பேசினாலும், இது போன்ற கலாசாரம் சார்ந்த நடைமுறையில் நாம் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கமாட்டோம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.

    இது பற்றி பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இ்ல்லை. நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்களே, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பான ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அஜ்மீர் பகுதியில் 4500 இளம் பெண்களிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள். 8 கிராமங்களிலும், 8 நகரங்களிலும் ஆய்வு நடந்துள்ளது.

    ஆய்வு முடிவில், ‘படிக்கச் செல்லும் பெண்களைவிட வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாக, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைகிறார்கள். முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளால் அவர்கள் பலியாகவும் செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் கிராமப் பெண்கள் 60 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நகரத்து பெண்களில் இது 40 சதவீதமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

    குடும்ப நல அமைச்சகம் இது பற்றிய விவரங்களை சேகரித்து, குறிப்பிட்ட பகுதிகளில் ஊர் ஊராகச் சென்று ஆய்வு நடத்தியது. பின்பு அவர்கள் ‘கிராமத்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராமங்களில் தனிமைக்கான இடங்கள் அதிகமாக இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடைபெறுகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கிராமத்துப் பெண்கள் இதற்கு அப்பாவித்தனமாக பலியா கிறார்கள்’ என்று கூறி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.



    நகரத்துப் பெண்கள் ஓரளவு விஷயம் தெரிந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஏற்படும் வேண்டாத கர்ப்பத்தை சிதைத்துவிடும் வழிமுறைகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மாட்டிக்கொள்ளும் பெரும்பாலான கிராமத்து பெண் களுக்கு கர்ப்பத்தை மறைக்கத் தெரிவதில்லை. அந்த சிக்கலிலிருந்து விடுபட முடியாமல் சமூகத்திற்கு பயந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.

    இந்த ஆபத்தான நிலையை மாற்ற, குடும்பநல அமைச்சகம் இதற்கென பணியாளர்களை நியமித்து கிராமம் கிராமமாகச் சென்று அங்கு வசிக்கும் திருமணமாகாத பெண்களை சந்தித்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுடைய எதிர்காலத்தை காப்பாற்றும் முயற்சியாக வரவேற்கப்படுகிறது.

    16 வயதிற்கும் குறைவான பெண்கள், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலான பெண்கள் என்னவென்றே புரியாத வயதில் தங்களிடம் கட்டாய உறவுகொண்டதாக கூறியிருக்கிறார்கள். விளைவுகளை எதிர்கொள்ளும்போதுதான் அதன் தீவிரம் அவர் களுக்கு புரிகிறது.

    தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணரும்போது வாழ்க்கையில் விரக்தியடைகிறார்கள். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர்களாலேயே வெறுக்கப்படுகிறார்கள். சமூகம் தங்களை மட்டுமல்லாமல் குடும்பத்தாரையும் இழிவாக பேசுவதால் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகிறோம் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பரிதாபமாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த அறியாப் பெண்களை பெற்றோர்களும் கைவிடுவது ஆபத்தின் உச்சம்.

    பெரும்பாலான வெளிநாடுகளில் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் ஒரு இயல்பான விஷயமாகவே கருதப்படுகிறது. அதனால் அந்நாட்டு பெண்கள் அதனை அவமானகரமானதாக கருதுவதில்லை. எந்த மன உளைச்சலுக்கும் அவர்கள் உள்ளாவதில்லை. ஒருவேளை மனஉளைச்சலுக்கு உள்ளாகினாலும், பெற்றோர்களும், மனநல அமைப்புகளும், அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அந்த தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்துவிடுகிறது.



    இங்கு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் அதனை தனது பெற்றோரிடம் சொல்லவே பயப்படுகிறாள். மகள் அதை சொன்னாலும், உடனே பெற்றோர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி பிரளயத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் தவறான வழியைக்காட்டி அவர்களை பெரும் சிக்கலுக்குள்ளாக்கிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட சில பெண்கள், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். சிலருக்கு சொந்தத்தில் உடனடியாக மாப்பிள்ளை தேடிப்பிடித்து அவசர திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

    விடுதிகளில் தங்கிப்படிக்கும் பெண்கள், வேலைக்குப்போகும் பெண்கள், பெற்றோரைப் பிரிந்து உறவினர்களிடத்தில் வசிக்கும் பெண்கள் போன்றோரே திருமணத்திற்கு முன்பு அதிக அளவில் கர்ப்பமடைவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. காதல் என்ற பெயரில் கற்பை பறிகொடுக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

    ஜெய்ப்பூரில் உள்ள அஸ்ரா என்ற பெண்கள் பாதுகாப்பு மையத்தின் தலைவியான யாமினி ஸ்ரீவாஸ்தவ் இது பற்றி கூறுகையில், “சிறு வயதிலே பெண்களுக்கு சமூகத்தில் நிலவும் நெருடலான விஷயங்களை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். விஞ்ஞானரீதியான விளக்கங்களை அவர்கள் பெறும்போது, அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாதுகாப்பு சூழலையும் உணர்வார்கள். காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடிவந்த பெண்கள்தான் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    காதலிப்பது தவறல்ல. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போவது தவறு. இந்தியாவில் 1000 பெண்களில் 86 பேர் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அதனால் பெண்கள் அனைவரும் இதில் விழிப்புடன் இருக்கவேண்டும். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடைவதை தடுக்க கல்வி நிலையங்களும், சமூக அமைப்புகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும்” என்கிறார்.
    தடைகளை தகர்த்து, பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும்.
    ஆண், பெண் இடையேயான நட்பு, காதலாவதை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு ‘காதலர்கள்’ என்று பெயர்சூட்டி கவுரவமாகத்தான் பார்க்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டு அதன் பின்பே தாம்பத்யத்தில் இணையவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிராசையாக்கும் சம்பவங்கள் தற்போது இந்தியாவில் அதிகம் நடக்கிறது. அதனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் இளம் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இதனால் சமூகத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து, எல்லைமீறிய காதலில் ஈடுபடுவதுதான் இந்த பரிதாபத்தின் மையமாக இருக்கிறது.

    காதலிக்க தூண்டுவது ஒரு ஹார்மோன் விளையாட்டுத்தான். ஆனால் அதை புரிந்துகொண்டு பக்குவமாகவும், பாதுகாப்பாகவும் காதலிக்கத் தெரியவேண்டும். ‘என் அழகிற்கும் அறிவுக்கும் என் பின்னால் இத்தனை பேர் வருகிறார்கள் பார்’ என்று, மற்றவர்களிடம் சொல்லவேண்டும், அதன் மூலம் மற்றவர்களை பொறாமைப்பட செய்யவேண்டும் என்று சில பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி ஆழம் தெரியாமல் காதலில் காலை விட்டுவிட்டு தடுமாறும் பெண்களே கர்ப்பக் கவலைக்கு உள்ளாகிறார்கள்.

    கவனமாக கையாளவேண்டிய கண்ணாடி போன்றது பெண் களின் இளமைப்பருவம். சிறிய தவறு நேர்ந்தாலும் எதிர்காலம் சுக்குநூறாகிவிடும். எத்தகையோ சமூக மாற்றங்களுக்குப் பிறகும் இந்தியா இன்னும் பழமையை பாதுகாக்கும் நாடாகவே இருந்து கொண்டிருப்பதற்கு காரணம், இங்குள்ள பெண்களின் தாய்மை உணர்வும், பெண்மையும்தான். பெண்கள், ஆண்களுக்கு சமமாக வளர்கிறார்கள். வாழ்கிறார்கள். அந்த ‘சமம்' அவர்கள் அறிவை விசாலப்படுத்தவேண்டும். அதன் மூலம் தனக்கும்- தன் ஆண் நண்பனுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணரவேண்டும். அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே பிரச்சினைகள் இன்றி வாழ்கிறார்கள். இடைவெளியை குறைக்கும் பெண்கள் பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கிறார்கள்.

    தடைகளை தகர்த்து, பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ‘திருமணத்திற்கு பின்புதான் உடல் வழி பந்தம்’ என்ற பாரம்பரியத்தை முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும். அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும். அதைவிடவும் சுத்தமான மனதோடு அவர்கள் இறுதிக்காலம் வரை வாழ முடியும்.

    பெற்றோர்களும், சமூகமும் சுதந்திரம் தந்துவிட்டன என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். பெற்றோர்கள் நம் சந்தோஷத்திற்கு தடையாக இருப்பவர்கள் அல்ல. அதே நேரத்தில் தவறான வழியில், முறையற்ற சந்தோஷத்தை தேட நினைக்கும் பெண்கள் பெற்றோர்களுக்கு பெரியபாரமாகி விடுகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் தரும் வலியை சொல்லிமாளாது. அது கஷ்டம், குழப்பம், சிக்கல், அவமானம் போன்ற அனைத்தையுமே சேர்த்து தரும். அந்த வலியையும், அவமானத்தையும் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல, அந்த குடும்பமே சேர்ந்து அனுபவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அவமானத்தை பணத்தால் மறைக்க இயலாது.

    திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகிவிடுகிறவர்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்த விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். திடீர் கர்ப்பம் அவர்களை பலவிதங்களில் குழப்பி, அடுத்து என்ன செய்வது என்று சரியான முடிவினை எடுக்க முடியாத அளவுக்கு தயங்கவைத்துவிடுகிறது. எந்த மருத்துவரிடம் போய் ஆலோசனை கேட்பது என்று தெரியாமல், தவறானவர்களிடம் போய் நின்று கொண்டு கொடூர கருக்கலைப்பிற்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.



    பிரபல மருத்துவர் ஒருவரின் அனுபவம் இது:

    “திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களில் பலர் என்னிடம் கருக்கலைப்பு செய்ய வருகிறார்கள். மருத்துவரீதியாக, மனோதத்துவரீதியாக நான் சொல்வதை புரியும் நிலையில் அவர்கள் இல்லை. முதன்முதலில் உருவாகும் கருவை கலைப்பது பெண்ணின் உடலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம். அதை கவனமாக கையாளாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடக்கூடும். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, முரண்பாடான முறையில் கலைத்துவிட்டு, திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைய வாய்ப்பில்லாமல் போனவர்கள் அதிகம்.

    திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான டீன்ஏஜ் பெண் ஒருத்தி என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள். கர்ப்பமாகி மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அதனால் ‘கருவை கலைக்க வாய்ப்பில்லை’ என்று நான் கூறிவிட்டேன். உடனே அவள் அம்மா என் காலைப்பிடித்துக்கொண்டு கதறியழுதார். ‘என்னால் கருவை கலைக்க முடியாது. மருத்துவ விஞ்ஞான முறைகளை மீறி நான் ஏதாவது செய்தால், உங்கள் பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக முடியும்’ என்று கூறி விட்டேன். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாக சொன்னார். ‘கர்ப்பத்திற்கு காரணமானவன் என்னை தவிக்க விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டான்’ என்று அந்த பெண்ணும் அழுதாள். நான், ‘காலம் கடந்து வந்திருக்கிறீர்கள். எது கிடைத்தாலும் அதை துணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பிவைத்தேன்.

    அவர்கள் நான் சொன்னதை கருத்தில்கொள்ளாமல் வேறொரு மருத்துவரை பார்த்து கருக்கலைப்பு செய்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். பிறகு எதுவுமே நடக்காதது போல் அந்தப் பெண்ணுக்கு திருமணமும் முடித்துவிட்டார்கள். அதன்பிறகு தான் ஆரம்பமானது வினையே. முதலில் கருவை கலைத்ததால் கர்ப்பப்பை வெகுவாக பாதிக்கப்பட்டு, அதை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன்பு அவளுக்கு நடந்த கொடூரமான கருக்கலைப்பின் காரணமாக அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே இருட்டாக்கிவிட்டார்கள்” என்கிறார், அவர்.

    பெண்கள் தங்கள் உடலுக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்கவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எல்லைமீறமாட்டேன் என்ற உறுதியோடு நட்பையும், காதலையும் தூரத்தில் வைத்திருக்கவும் தெரிந்திருக்கவேண்டும். ஒரு பெண்ணுடைய நட்பு கிடைத்துவிட்டால் அவளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கைவிடும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள்தான் அப் படிப்பட்ட ஆண்களின் மனநிலையை புரிந்துகொண்டு கவனமாக இருக்கவேண்டும்.

    ஒரு பெண், திருமணத்திற்கு முன்பே கர்ப்பிணியாகிவிடும்போது அதில் சம்பந்தப்பட்ட ஆண் கூடுமானவரை தப்பிக்கவே முயற்சி செய்கிறார். ஒரு சிலர் அந்தப் பெண்ணை கருக்கலைப்பிற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யக்கூட துணிகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. ‘உன்னை திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் சம்மதிக்கவில்லை’ என்று கூறிவிடு கிறார்கள்.

    திருமணத்திற்கு முன்பு ஏற்படும் கர்ப்பத்தை தனி மனிதர்களும், சமூகமும் அவமானமாகவே கருதுகிறது. அதனால் அந்த அவமான செயலுக்கு பெண்கள் இடம்கொடுக்காமல் இருப்பதே நல்லது

    மனித ஜென்மம் மகத்துவம் நிறைந்தது. மனித உடல் புனிதமானது. அந்த புனிதத்தை காக்கவே சமூகம் சில நியதிகளை வகுத்துவைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டு வாழ்வதே முறையான வாழ்க்கை. இஷ்டத்திற்கு வாழ்வது கஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். அப்போது கைகொடுக்கவோ, காப்பாற்றவோ யாரும் முன்வருவதில்லை. 
    ×