search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"

    • நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர்.
    • புதிய முறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று (பிப்ரவரி 28) துவங்கி வைத்தனர்.

    மேலும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.

    யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.

    இன்று முதல் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார். 

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
    • தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

    கோவை:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளல் பங்கேற்பதற்காக இன்று இரவு கோவை வருகிறார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை காலை கோவை கொடிசியாவில் நடைபெறும் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் பங்கேற்று, ஆணைகளை வழங்குகிறார்.

    நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு, நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சி ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து அதே வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுததுறை சார்பில கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர், தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

    • உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்கிற திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
    • நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.

    கோவை:

    பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இந்த திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான குறுஞ்செய்தியும் பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த திட்டமானது தங்களது குடும்ப தேவைக்கு உதவும் என்றும் செல்போனில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பார்க்கும் போது மன நிறைவாக உள்ளதாகவும் பயனாளிகள் கூறுகிறார்கள்.

    அத்துடன் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் இந்த 1000 ரூபாயானது பெரிதும் உதவி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் பயனாளிகள்.

    மேலும் ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைத்த சில நாட்களில், அவர்களின் செல்போனுக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ மற்றும் ஆடியோக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து வழக்கம் போல பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வீடியோ வந்தது.

    அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பேசுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு பதிலாக அந்த வீடியோவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் வீடியோ வந்திருந்தது.

    அந்த வீடியோவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

    தமிழக மக்களுக்கு வணக்கம். நான் உங்கள் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறேன். நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க.

    மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழக்கம் போல இந்த மாதமும் உங்களுக்கு வந்திருக்கும்.

    உங்கள் பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய திராவிட மாடல் அரசுடைய ஒரே நோக்கம்.

    காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்குற வரைக்கும் ஓயாமால் உழைக்கும் உங்கள் உழைப்புக்கு ஈடு இணையானது எதுவுமே இல்லை.

    உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்கிற திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

    இது எதோ சலுகை தொகை கிடையாது. உங்களுக்கான உரிமை தொகை.

    இந்த தொகையானது உங்களது சொந்த தேவைக்கோ, உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கோ, மருத்துவ செலவிற்கோ நிச்சயம் உதவும்.

    செலவு போக மீதமுள்ள பணத்தை முடிந்தவரை சேமித்து வையுங்கள். என்றைக்காவது ஒரு நாள் அது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    தி.மு.க அரசு உங்களுக்கான உரிமையையும், சமத்துவத்தையும் எப்போதும் நிலைநாட்டும். உங்களுக்கு ஆதரவாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. முதலமைச்சரும் இருக்கிறார்.

    நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.

    திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிட்டராக மக்களாகிய நீங்கள் தான் உள்ளீர்கள்.

    நம் முதலமைச்சரின் முகமாக இருந்து அரசின் திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும். நன்றி வணக்கம்.

    இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

    • ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.
    • அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    * புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள்.

    * ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்

    * அவர் மறைந்ததும், திருட்டுத்தனமாக மத்திய அரசான பா.ஜனதாவுக்கு பயந்து அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது.

    * நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

    * நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம், தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • தகுதி உள்ளவர்களில் 85-ல் இருந்து 90 சதவிகித மகளிருக்கு உரிமைத் தொகை சென்றடைந்து உள்ளது.
    • நம் பிரச்சாரம் வெற்றிப் பிரச்சாரமாக அமைந்திட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வின் சார்பில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பாராளுமன்றத் தொகுதிவாரியாக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளன.

    இந்த பொதுக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அனைத்து மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியது.

    இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் பயனடைந்து இருக்கிறார்கள். அதாவது தகுதி உள்ளவர்களில் 85-ல் இருந்து 90 சதவிகித மகளிருக்கு உரிமைத் தொகை சென்றடைந்து உள்ளது.

    கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில்தான் இந்த மகளிர் உரிமைத் திட் டம், மகளிருக்குக் கட்டணம் இல்லா பேருந்து வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிருக்குக் கட்டணம் இல்லா பேருந்துத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதந்தோறும் கிட்டத்தட்ட 900 ரூபாய் சேமிக்கிறார்கள்.

    2 லட்சத்து 71 ஆயிரம் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் இந்த இரண்டரை வருடங்களில் பயனடைந்து இருக்கிறார்கள். அதேபோல் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம். இதில் தினமும் 17 லட்சம் குழந் தைகள் பயன்பெற்று வருகிறார்கள். 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக இது வரைக்கும் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள்.

    இதை மக்களிடம் எடுத்துக் கொண்டு சென்று பேசுங்கள். இதை ஒரு பேசு பொருளாக்குங்கள்.

    ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசிய ஒன்றிய அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது. இதனை நாம் சொல்லவில்லை, சி.ஏ.ஜி அறிக்கையே அம் பலப்படுத்தி இருக்கிறது.

    இன்றைக்கு அ.தி.மு.க. வினர் ஏதோ பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்று திடீரென சிறுபான்மையினர் மீது பாசத்தைப் பொழிகிறார்கள்.

    இதை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. பத்தாண்டு காலம் பா.ஜ.க தமிழ்நாட்டைச் சீரழித்தது என்றால், நேரடியாக அவர்கள் வந்து செய்யவில்லை. அ.தி.மு.க.வின் உதவியோடுதான் எல்லா வற்றையும் நமக்கு எதிராகச் செய்து முடித்தார்கள்.

    இதையெல்லாம்தான் நாம் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். நம் பிரச்சாரம் வெற்றிப் பிரச்சாரமாக அமைந்திட வேண்டும்.

    தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மிகப்பெரிய, ஒரு பிரமாண்டக் கூட்டம் நம் தலைவரின் பிறந்த நாளான மார்ச் 1 அன்று நடைபெற இருக்கிறது. எனவே, இந்தக் கூட்டங்களை யெல்லாம் மிகப்பெரிய வெற்றி அடையச் செய்ய வேண்டியது நம் கடமை.

    விடியலை நோக்கி தலைவரின் குரலாக நாம் 2021-ல் தமிழ்நாடு எங்கும் எதிரொலித்தோம். தமிழ் நாட்டுக்குப் புதிய விடியல் கிடைத்தது. அதே போல் இப்போது உரிமைகளை மீட்க தலைவரின் குரலாக எதிரொலிப்போம். ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை. கலைஞர் நூற்றாண்டில் 'பாசிசம் வீழ்ந்தது, இந்தியா வென்றது' என்ற வரலாற்றைப் படைத்திடுவோம் என்று கூறி விடை பெறுகிறேன்."

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு.
    • திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் இன்று புதிய குடிநீர் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் , 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1362 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு. அது திருப்பூரை மனதில் வைத்துதான் சொல்லப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு பெரியார் மண்ணான ஈரோட்டில் ரூ.310 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தேன். இன்று விழாவில் பங்கேற்க வரும் போது மகளிர் சுய உதவி குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். எனது இல்லத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரித்த பொருட்கள்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட மகளிர் சுய உதவிக்குழு பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்.

    சட்டமன்றத்தில் பேசும் போது உறுப்பினர்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார். ஏனென்றால் அந்த அளவுக்கு பொருட்கள் தரமாக இருப்பதுதான். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்-முறையாக திருப்பூர் வந்துள்ளேன். திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.

    தமிழகத்தின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக முதல்வர் உள்ளார். மாநில நிதி சுமையை மீறி திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். மற்ற மாநிலத்தவர்கள் ஜி.எஸ்.டி என்பது என்னவென்று தெரியாமல் படித்து கொண்டிருந்த போது அதன் பாதகங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்கள் திருப்பூர் மக்கள் தான்.

    நாம் மத்திய அரசுக்கு 5 ஆண்டுகளில் கொடுத்த வருவாய் ரூ. 6 லட்சம் கோடி. ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி கொடுத்தது ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி மட்டுமே. 1 ரூபாய்க்கு 23 பைசா மட்டுமே தருகின்றனர்.

    அமைச்சர் கே.என் நேரு கழகத்திற்கு மட்டும் முதன்மை செயலாளர் அல்ல. மக்களின் களப்பணியில் முதன்மையானவர். திராவிட இயக்கம் , திராவிட மாடல் அரசு அன்றைய தேவையை சிந்திப்பது மட்டுமல்ல. எதிர்கால தேவையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2024க்கு மட்டுமல்ல 2040 ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திருப்பூருக்கு குடிநீர் உள்ளிட்ட திட்டத்தை வழங்கியுள்ளோம்.

    தொழில்துறையினர் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநாட்டு அரங்கம் மிகப்பெரிய அளவில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் திருப்பூர் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

    மகளிருக்கு உதவித்தொகை , அரசு பேருந்தில் இலவச பயணம் , கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை , இல்லம் தேடி கல்வி என அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர். தெலுங்கானாவில் இருந்து வந்து நம் திட்டங்களை பார்த்து செல்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையிலும் நாம் சாதித்து வருகிறோம். இதற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகிறது.

    இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை தருகிறது. பாராட்டும் நன்மதிப்பும் எட்டு திக்குகளில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நீங்கள் பயனாளிகள் அல்ல. இந்த அரசின் பங்கேற்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முதல்வரின் முகமாக இங்கு இருக்கிறீர்கள். அரசின் திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
    • விழாவுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

    திருப்பூர்:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய த்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட ப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் தொடக்க விழா, 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் தொடக்க விழா மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் கிறிஸ்துராஜ் வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் மகளிர் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு த்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை, பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மை நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அயலக தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திக்கேய சிவ சேனாதிபதி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விழாவுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வந்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து 2 முறை உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தந்துள்ளது தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் மாநகர் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் நிகழ்ச்சிகள் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

    • ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

    கோவை மாநகரில் 2035-ம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகத்துக்காக ரூ.780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது கூட்டுக்குடி நீர் திட்டம் கோவை மாநக ராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பில்லூர் 3-வது திட்டத்துக்காக முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டன்மலைக்கு தண்ணீர் செல்கி றது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு, பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளை (11-ந் தேதி) பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. குடிநீர் வினியோகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் இதற்கான விழா நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பங்கேற்று பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.362.20 கோடி மதிப்பீல் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அன்னூர், சூலூர், அவினாசி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

    இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகிறார். அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால் தற்போது 10 நாள், 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யும் நிலை உள்ளது. இந்த பில்லூர் திட்டம் தொடங்கினால் தினமும் தண்ணீர் அளிக்கும் நிலை ஏற்படும்.

    கோவையின் மக்கள் தொகை 22 லட்சமாக உள்ளது. இவர்களுக்கு 300 எம்.எல்.டி. தண்ணீர் இருந்தால் தினமும் தண்ணீர் வழங்க முடியும்.

    ஆனால் 300 எம்.எல்.டி. தண்ணீருக்கு மேலாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிச்சி பகுதிக்கு 8 எம்.எல்.டி. கவுண்டம் பாளையம் பகுதிக்கு 22 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்படுகிறது.

    மேலும் பில்லூர்-2 திட்டத்தின் கீழ் மாவட்ட த்திற்கு மொத்தம் 125 எம்.எல்.டி. கிடைக்கும் நிலையில் நகராட்சிக்கு 3 எம்.எல்.டி. மட்டுமே வழங்கி வருகிறோம். பில்லூர் 2 திட்டத்தில் நகராட்சிக்கு 125 எம்.எல்.டி. தண்ணீர் வருகிறது. எனவே பில்லூர் 3-வது திட்டம் வந்தால் மாநகரில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தினமும் வழங்க முடியும். இத்திட்டத்தை உடனடியாக கோவைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாடு.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி பங்கீடு தொர்பாக கருத்து.

    மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியில் பாரபட்சம் காட்டுவதாக தென்னிந்திய மாநிலங்களில் இருந்து குரல் ஓங்கி ஒலிக்கிறது. நிதி பங்கீட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில், நிதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது."

    "ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தர பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்."

    "மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்?"

    "உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது, எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள்," என்று தெரிவித்தார்.

    • பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    • மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள்.
    • மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம்.

    இந்தியாவில் வரும் ஏப்ரல்-மே மாத வாக்கில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்."

    "இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்."

    "ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி," என்று குறிப்பிட்டுள்ளார். 



    • பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியை நாம் வென்றாக வேண்டும்.
    • தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பொதுமக்களிடம் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவில் தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளை சந்தித்து தேர்தலையொட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் 6-வது நாளாக நேற்று ராமநாதபுரம், கடலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் நிர்வாகிகளிடம் அவர்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பாராளுமன்ற தொகுதிகள் குறித்த நிலவரம், மக்களின் எதிர்பார்ப்பு என்ன?, அரசின் திட்டங்கள் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

    அதிலும் ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நின்று வெற்றி பெற்ற தொகுதியாக உள்ள நிலையில், இந்த முறை தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    மேலும் நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியை நாம் வென்றாக வேண்டும். இன்னும் தேர்தலுக்கு 60 முதல் 65 நாட்கள்தான் இருக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலைவிட, இந்த தேர்தல் மிக மிக முக்கியம். தி.மு.க. தலைவர் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் பிரதமராக வர வேண்டும். எதிர்க்கட்சியாக நாம் இருக்கும்போதே 40 தொகுதிகளில் வெற்றி அடைந்தோம். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். அந்த தேர்தலைவிட நடைபெற உள்ள தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்துதான் காணப்பட வேண்டும்.

    இந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளம். எனவே தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பொதுமக்களிடம் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். மக்களிடம் ஆதரவு பெற்ற ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். கருணாநிதிதான் உங்கள் தொகுதியில் வேட்பாளர் என்று மனதில் வைத்து நீங்கள் பணியாற்ற வேண்டும்' என்றார்.

    ×