search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rangaswamy"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22-ந்தேதி அன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

    சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22-ந்தேதி அன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 22-ந்தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வரும் 22-ந்தேதி பொது விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது.

    தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்- இல் பிரமாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு நேற்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். 

    வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

    லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

     டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

     இந்த மியூசியத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலா பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார். 

    • மாணவர்களுக்கு லேப்டாப்புக்கு பதிலாக பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும்.
    • மத்திய அரசிடம் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில்,40,000 குடும்பத்தலைவிகளுக்கு, ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் பரிசோதனை முயற்சியாக, 1 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    அடுத்து, 50 எம்.எல்.டி குடிநீர் வழங்க திட்டமிடப்படப்பட்டுள்ளது.

    பிரீபெய்டு மீட்டர் திட்டத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தின் சாதகம், பாதகம் குறித்து அறிந்து திட்டம் செயல்படுத்தப்படும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மாணவர்களுக்கு லேப்டாப்புக்கு பதிலாக பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும். அதுபோல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரமில்லாத சைக்கிள்களை மாற்றி தர ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    அரசு அதிகாரிகள் மக்களுக்கு தேவையான திட்டங்களை வேகமாக செயல்படுத்தினால் தான் வளர்ச்சி இருக்க முடியும். இதை வலியுறுத்த வேண்டியது அரசின் கமை என்பதால், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    அதனால் அரசு. அதிகாரிகள் அதிகமாக கேள்விகளை கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பக்கூடாது.

    இது போன்ற பிரச்சினைகளுக்கு மாநில அந்தஸ்து தான் தீர்வாக இருக்கும். இதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து

    வலியுறுத்தி வருகிறேன். நிர்வாகம் வேகமாக செயல்பட மாநில அந்தஸ்து தேவை.

    மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். தேசிய ஜனநாயகக்கூட் டணி அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி வருகிறது.

    மத்திய அரசிடம் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் பா.ஜனதா கூட்டணியில் உங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எனவே அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி நிலை தான் உங்களுக்கு ஏற்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியது குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி அதுபோன்று எந்த நிலையும் எப்போதும் ஏற்படாது என்றார்.

    மேலும் அவரிடம் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் உங்களை முதலமைச்சராக ஏற்க தயார் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனரே என்று கேட்டதற்கு முதலமைச்சர் ரங்கசாமி சிரித்து கொண்டே நன்றி என பதில் தெரிவித்தார்.

    • சந்திரப்பிரியங்காவை நீக்க முதலமைச்சர் ரங்கசாமி கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.
    • நீக்கப்பட்ட பின் சந்திரபிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை அவர் சந்திக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    புதுவை அமைச்சரவையில் பெண் அமைச்சராக என்ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரப்பிரியங்கா இருந்தார். கடந்த அக்டோபரில் அமைச்சரவையிலிருந்து சந்திரப்பிரியங்காவை நீக்க முதலமைச்சர் ரங்கசாமி கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.

    அதை அறிந்த சந்திரப்பிரியங்கா தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். சந்திரப்பிரியங்கா பதவி நீக்கம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த நிலையில், சந்திரப்பிரியங்கா தனது கணவரிடமிருந்து விவகாரத்துக் கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

    நீக்கப்பட்ட பின் சந்திரபிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை அவர் சந்திக்கவில்லை. இந்த நிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள்அமைச்சர் சந்திரப்பிரியங்கா நேற்று மாலை கோரிமேடு பகுதியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக சந்திரபிரியாங்கவிடம் கேட்டதற்கு, "எனது தொகுதியில் உள்ள கோவில்களில் ஒருகால பூஜைக்கான காசோலை பெற முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்தேன். அதன்படி அவரது அலுவலகத்துக்கு சென்று ரங்கசாமியை சந்தித்தேன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன்.
    • இணையதள பயன்பாட்டாளர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த பழங்குடியினர் விழாவில் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது குறித்து 2 துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்துதான் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது போல் செய்திகள் வருகிறது. அது தவறானது.

    நான் ஆந்திராவில் 6 பழங்குடியின கிராமங்களை தத்து எடுத்துள்ளேன். அங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன். இப்படி இருக்கையில் நான் எப்படி பழங்குடியினரை அரசு விழாவில் தரையில் அமர வைத்ததற்கு காரணமாக இருக்க முடியும்?

    எனது ஆளுமைக்குட்பட்ட புதுவையில் இத்தகைய நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இது குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.

    நாங்கள் மேடையின் கீழ் அமர்ந்திருந்ததால் எங்களுக்கு பின்னால் அவர்கள் அமர்ந்திருந்ததை பார்க்க முடியவில்லை. மக்களுக்கு தவறான தகவல்கள் சென்று விடக்கூடாது.

    புதுவையில் நான் சூப்பர் முதல்வர் என செய்திகள் வருகிறது. நான் சூப்பர் முதல்வர் இல்லை. ரங்கசாமி தான் சூப்பர் முதல்வர். நான் தினமும் என்னை பற்றி என்ன செய்தி வந்திருக்கிறது என பார்ப்பதில்லை. குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் துறை அதிகாரிகளிடம் பேசி, புதுவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைதான் பார்ப்பேன்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    • ஆப்பிரிக்கா நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி வரை மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி நடைபெற உள்ளது.
    • போட்டியில் கலந்துகொள்ள சான் ரேச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தி தேவராஜ். இவரது மகள் சான்ரேச்சல் (வயது 23). இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.

    மிஸ் புதுச்சேரி-2020, மிஸ் பெஸ்ட் ஆட் டிட்யூட்-2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு-2019, குயின் ஆப் மெட்ராஸ்-2022 ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா-2023 அழகி போட்டியில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி வரை மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள சான் ரேச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து

    பெற்றார். மேலும் இப்போட்டியில் பங்கேற்க நிதியுதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

    • பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
    • புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டது. புதுவையில் 3 கட்ட கலந்தாய்வுதான் நடந்துள்ளது.

    பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும். இந்த உத்தரவுக்கான காலக்கெடுவும் முடிந்துள்ளது. இறுதி காலக்கெடுவுக்கு பின்னரும் சென்டாக் நிர்வாகம் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்து ஆணை வழங்கி வருகிறது.

    இந்த மாணவர் சேர்க்கை ஆணை சட்டப்படி செல்லுமா? என பெற்றோர், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தள்ளிப்போனது.

    இதை காரணம் காட்டி தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா ஆகியோர் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த 2 கடிதங்களுக்கும் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

     

    இந்த நிலையில் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைப்பது தள்ளிப்போனதால் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தள்ளிப்போனது.

    எனவே புதுவையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
    • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.

    எனவே அவர் நேற்று பகல் முழுவதும் சட்டசபைக்கு வரவில்லை. அவரது அலுவலக ஊழியர்கள் நேற்று மாலை வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இரவு 10 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருவதாக சட்டசபை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று முதலமைச்சரின் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முதலமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணியளவில் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். சுமார் 20 நிமிடம் அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 10.20 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் ரங்கசாமி இரவில் திடீரென சட்டசபைக்கு வந்ததால் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
    • ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

    தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கோப்பை கவர்னருக்கு அனுப்பியது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை.

    கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு இந்த கோப்பும் கிடப்பில் போடப்பட்டது.

    புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    கடந்த மாதம் கவர்னர் தமிழிசை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி உள்ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பினார்.

    இதனிடையே நீட் அல்லாத கலை, அறிவியல், தொழில்படிப்புகளுக்கான 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து, 3-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

    ஆனால் புதுவையில் மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கவில்லை. உள் ஒதுக்கீடு அனுமதிக்காக கவுன்சிலிங் தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 இடங்கள் கிடைக்கும். அரசு மருத்துவக்கல்லூரியில் புதுவைக்கு 10, காரைக்காலுக்கு 2, மாகி 1 என 13 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் 6, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தலா 9 இடங்களும் கிடைக்கும்.

    இதுதவிர பி.டி.எஸ். 11 சீட், பி.ஏ.எம். 4 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவ கல்விக்கான உத்தேச தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.

    இதற்காக இன்று மாலை 5 மணி வரை அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க சென்டாக் அனுமதி அளித்துள்ளது.

    விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதன்பிறகு மீண்டும் இறுதி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இதன்பிறகு கவுன்சிலிங் நடைபெறும். இதனால் ஓரிருநாளில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காங்கிரஸ் கட்சியினரும் மரியாதை செய்தனர்
    • வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    மறைந்த பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா இன்று புதுவை அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி..ரமேஷ், பாஸ்கர், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி சத்பவனா உறுதிமொழி வாசிக்க மற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, வக்கீல் மருது பாண்டியன், ஆர்.இ.சேகர், ரகுமான், இளையராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் மலரஞ்சலி செலுத்த ப்பட்டது.

    • தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் சிவா பேட்டி
    • அவருக்கு இதைப்பற்றி யெல்லாம் கவலையும் இல்லை, ரங்கசாமிக்கு 5 ஆண்டு முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    புதுச்சேரி:

    நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசு, தமிழ்நாடு கவர்னரை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

    அது போல் நீட் தேர்வு விவகாரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது நிலைப்பாடை வெளிப்படை யாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படும் புதுவை கவர்னர் தமிழிசையை கண்டித்தும் புதுவை மாநில தி.மு.க. சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    புதுவை மாநில தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்திய போராட்டத்துக்கு தி.மு.க மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமை வகித்தார்.

    உண்ணாவிரதப் போராட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், மருத்துவர் அணி ஆனந்த ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே.கல்யாணி குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், லோகையன், ஜே.வி.எஸ்.ஆறுமுகம், காந்தி, அருள்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோசுந்தரம், செல்வநாதன், தர்மராஜன், சக்திவேல், தங்கவேலு, கோபால், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்பரிதி, பழநி, பிரபாகரன், செந்தில்குமார், மாறன், கோபால கிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ், மற்றும் தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொய் பிரசாரம்

    நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை - எளிய மக்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது. நாங்கள் குழப்புவது போல ஆளும் கட்சியினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    2024 மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் . அப்போது நீட் தானாகவே ஒழிந்து விடும். புதுவை, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர் தடுக்கிறார்.

    இந்த நிலையில் நீட் எதிர்ப்பு என்ற போராட்டத்தை தொடர்ந்து நாங்கள் முன்னெடுப்போம். மருத்துவ படிப்பில் 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட, தீர்மானத்தை ஒப்புதல் வாங்கியிருக்கலாம்,

    ஆனால் புதிதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பி ஒப்புதல் பெறுகிறேன் என மக்களை ஏமாற்றி வருகி ன்றனர். மாநில முதல்-அமைச்சருக்கு நீட் தேர்வு பற்றியும், மாநில அந்தஸ்து பற்றி எந்த பார்வையும் இல்லை. அவருக்கு இதைப்பற்றி யெல்லாம் கவலையும் இல்லை, ரங்கசாமிக்கு 5 ஆண்டு முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    நீட் தேர்வில் தி.மு.க. அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏழை மாணவர்களுக்கான உரிமைக்காக போராடி வருகிறோம். இது அரசியலுக்கானது அல்ல, மாணவர்களுக்கான அத்தியாவசியமான போராட்டம். நீட் தேர்வு களையப்படும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு சிவா கூறினார்.

    • எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன.
    • யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது.

    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தையொட்டி கம்பன் கலையரங்கில் தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து, இனிப்பு வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், வீரர்கள் நம் நாடு வளர்ச்சியடைய வேண்டும் என எண்ணினர். அவர்கள் எண்ணம்போல நம் நாடு இப்போது பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

    உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா விளங்கி வருகிறது. எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன. நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் வகையில் புதுவையும் வளர்ச்சி பெற்று வருகிறது.

    யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். பல ஆண்டாக மாநில அந்தஸ்து கேட்டு வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து என்று எப்போதும் மத்திய அரசை அணுகி கோரிக்கை வைத்து வருகிறோம்.

    மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.

    நேரடியாகவும் சந்தித்து மத்திய அரசை கேட்டுள்ளோம். எம்.எல்.ஏ.க்கள், தலைவர்களை டெல்லி அழைத்துச் சென்று பிரதமரிடம் மாநில அந்தஸ்தை கேட்டு வலியுறுத்துவோம். நிச்சயமாக மாநில அந்தஸ்தை பெறுவோம். புதுவையில் ஆயிரத்து 348 தியாகிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படுகிறது.

    இந்த தொகையை உயர்த்த வேண்டும் என தியாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தியாகிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ, கலெக்டர் வல்லவன், அரசு செயலர் பத்மாஜெய்ஸ்வால், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன், துறை அதிகாரிகள், விடுதலை போராட்ட தியாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×