search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajapaksa"

    இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. #Rajapaksa #Sampanthan #TNA
    கொழும்பு:

    இலங்கை பாராளுமன்றத்தில் வருகிற 7-ந் தேதி யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற ராஜபக்சே எம்.பி.க்களுக்கு வலைவீசி குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் 15 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.



    இது தொடர்பாக இன்று மதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, “பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது நடுநிலை வகித்தால் அது ஜனநாயக விரோத செயலாக மாறிவிடும். எனவே ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம்” என்று தெரிவித்துள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ராஜபக்சே தோல்வியடைய வாய்ப்பு உள்ளது. #Rajapaksa #Sampanthan #TNA

    இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு இடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி. வியாழேந்திரன் இன்று ராஜபக்சே அணிக்கு தாவி துணை மந்திரியாக பதவியேற்றார். #rajapaksa #Viyalendiran #ranilwickramasinghe #sirisena
    கொழும்பு:

    ரணில் விக்ரமசிங்கே - மகிந்த ராஜபக்சே இவர்களில் இலங்கையின் பிரதமர் யார்? என்று விரைவில் பலப்பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் இன்று ராஜபக்சே தலைமையிலான அணிக்கு தாவினார்.

    மேலும், அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) துணை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனா முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #rajapaksa #Viyalendiran #ranilwickramasinghe #sirisena
    இலங்கையில் நடைபெற்று வரும் குழப்பதிற்கிடையில் பாராளுமன்ற முடக்கம் உத்தரவை தளர்த்தினார் அதிபர் சிறிசேனா. #SriLankanParliament #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமங்சிங்கேவும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் இலங்கை அரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

    நான்தான் இன்னும் இலங்கையின் பிரதமர் என்று கூறிய ரணில், விரைவில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கும்படி உத்தரவிட்டார். இது சபாநாயருக்கு அதிருப்தியை ஏற்பட்டது.

    கோப்புப்படம்

    பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்திய சபாநாயகர் இதுகுறித்து அதிபர் சிறிசேனாவிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்க உத்தரவிட்டதை இன்று தளர்த்தினார்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 5-ந்தேதி இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது. #SriLankanParliament #Sirisena 
    இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றபோது பிரதமரின் செயலாளர் கீழே விழுந்து விட்டார். இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். அப்போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்து விட்டார்.

    இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. எனினும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர்.

    செயலாளர் கீழே விழவில்லை. அவர் கீழே அமர்ந்திருந்த நிலையில் எழுந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajapaksa
    ராஜபக்சே அமைச்சரவையில் வடகிழக்கு மாகாண தமிழர்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. #Rajapaksa #DouglasDevananda
    கொழும்பு:

    இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.

    அமைச்சரவையில் 14 பேர் மந்திரிகளாக இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    ராஜபக்சே அமைச்சரவையில் வடகிழக்கு மாகாண தமிழர்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்து விவகாரம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    ரனில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழரான சுவாமிநாதன் நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துறைகள் அப்படியே டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மந்திரி பதவி ஏற்ற பிறகு டக்ளஸ் தேவானந்தா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே நான் மந்திரியாக இருந்தபோது மக்களுக்காக இடைவிடாது பாடுபட்டேன். நான் ஓய்வின்றி உழைத்ததை மக்கள் அறிவார்கள். இப்போது மக்களுக்காக உழைக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இலங்கை வடகிழக்கில் போர் இல்லாத சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாடுபடுவேன்.

    தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம் என்று முந்தைய ஆட்சியாளர் கள் நிறைய வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் தமிழர்கள் மறுவாழ்வு பெற ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை மட்டுமே அவர்கள் பெற்றனர்.

    தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான கோரிக்கை தான் பிரதான கோரிக்கையாக உள்ளது. இது தவிர காணாமல் போனவர்கள் விவகாரம், நிலங்கள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்பட பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியதுள்ளது.

    இந்த பிரச்சனைகளுக்காக தமிழர்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இந்த பிரச்சனைகளுக்கு ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்.

    தமிழர்களுக்கு தேவையானதைப் பெற்றுத்தர ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும். மேலும் மாகாண சபைகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் மாகாண சபைகளை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்று நடத்தும் சூழல் ஏற்படும்.

    இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார். இவர் மீது சென்னை போலீசில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Rajapaksa #DouglasDevananda
    இலங்கையில் விரைவில் பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவுடன் சம்பந்தன் முக்கிய ஆலோசனை நடத்தினார். #Rajapaksa #Sampanthan #SriLankanPolitics
    கொழும்பு:

    இலங்கையில் புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்று பணிகளை தொடங்கிவிட்ட போதிலும் அரசியல் குழப்பம் இன்னமும் தீரவில்லை.

    “அரசியல் சாசனப்படி நான்தான் பிரதமர்” என்று ரனில் விக்ரமசிங்கே கூறி வருவதால் சிக்கல் நீடிக்கிறது.

    பாராளுமன்றத்தை கூட்டுங்கள், நான் எனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று ரனில் விக்ரமசிங்கே சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் முயற்சி செய்தார். ஆனால் அதிபர் சிறிசேனா தலையிட்டு பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

    இந்த நிலையில் இலங்கை பிரதமர் யார் என்ற சர்ச்சை நீடிப்பதால், பாராளுமன்றத்தை கூட்டி முடிவு செய்யுமாறு பல்வேறு நாடுகளும் அதிபர் சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ளன. நேற்று வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பின் போதும் பாராளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டது. இதனால் இலங்கை பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக சபாநாயகர் ஜெயசூர்யா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படும் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ராஜபக்சேயும், ரனில் விக்ரமசிங்கேயும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி.க்களை பிடிப்பதற்காக அங்கு குதிரை பேரம் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு எம்.பி.க்கும் சுமார் 300 மில்லியன் ரூபாய் முதல் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது தவிர எம்.பி.க்கள் கடத்தி செல்லப்படும் அபாயமும் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே- ரனில் விக்ரமசிங்கே இருவரும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 95 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற இன்னமும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள சுமார் 20 எம்.பி.க்களை ராஜபக்சே பேரம் பேசி வளைத்து இருப்பதாக கூறப்படுகிறது.


    ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 106 எம்.பி.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மேலும் 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்தால் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்று ரனில் விக்ரமசிங்கே- ராஜபக்சே இருவரும் கருதுகிறார்கள். எனவே இரு தரப்பினரும் சம்பந்தனுடன் போட்டி போட்டு பேசி வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் சம்பந்தன் தனது ஆதரவாளர்களுடன் சென்று சிறிசேனாவை சந்தித்தார். பிறகு ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். இன்று காலை அவர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு ராஜபக்சேவின் வீட்டில் நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் இலங்கை அரசியல் நிலைமை குறித்து விரிவாக பேசினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்களின் ஆதரவை தனக்கு தர வேண்டும் என்று சம்பந்தனிடம் ராஜபக்சே கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு பதில் அளித்த சம்பந்தன், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்று நீங்கள் உறுதிமொழி தர வேண்டும். அந்த உறுதிமொழி எழுத்து மூலம் இருக்க வேண்டும். அப்படி தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு தருவதை பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

    முன்னதாக ரனில் விக்ரமசிங்கேயிடமும் சம்பந்தன் இதுபோன்று 2 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் கூட்டம் கொழும்பில் நடக்கிறது.

    அந்த கூட்டத்தில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்ய உள்ளது. இந்த முடிவை அறிய இரு தரப்பு தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர்.

    இதற்கிடையே கொழும்பில் இன்று மதியம் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வீடு முன்பும், ராஜபக்சே வீடு முன்பும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு உள்ளனர்.

    இதையடுத்து கொழும்பில் கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு தகவல்களை அரசுக்கு அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பில் உள்ள அமெரிக்க மக்கள் உஷாராக இருக்கும்படி வாஷிங்டனில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. #Rajapaksa #Sampanthan #SriLankanPolitics
    இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் புதிய பிரதமர் ராஜபக்சே தனது பணிகளை இன்று கவனிக்க தொடங்கினார். #SriLankanPolitics #Rajapaksa #SririSena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கை அரசியலில் கடந்த வாரம் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக அதிபர் சிறிசேனா நீக்கினார்.

    அவருக்கு பதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயை அழைத்து புதிய பிரதமராக சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பதாக கூறிய அவர் பிரதமர் இல்லமான அலரி மாளிகையில் இருந்தும் வெளியேற மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான நிலையை சபாநாயகர் கரு ஜெயசூர்யா எடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படும் வரை ரனில் விக்ரமசிங்கேதான் பிரதமராக நீடிப்பார் என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பமும், பதட்டமும் நிலவுகிறது.

    பிரதமர் பதவியில் ராஜபக்சே, ரனில் விக்ரமசிங்கே இருவரும் இருப்பதாக கூறி வருகிறார்கள். இதனால் இலங்கை பிரதமர் யார் என்பதில் சர்வதேச அளவில் குழப்பம் எழுந்துள்ளது. ராஜபக்சேக்கு சீனாவை தவிர வேறு எந்த நாடும் வாழ்த்து சொல்லவில்லை.

    மாறாக எல்லா நாடுகளும் ரனிலுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றன. என்றாலும் இலங்கை அதிபர் சிறிசேனா எதையும் கண்டு கொள்ளாமல் ராஜபக்சேக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மூன்று ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் கை கோர்த்து இருப்பதால் இலங்கையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கொழும்பில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இது பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.

    குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் பீதி நிலவுகிறது. இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பேணுமாறு பல்வேறு சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்த தொடங்கியுள்ளன. அரசியல் சாசன சட்டப்படி செயல்படும்படி இலங்கையை ஐ.நா.வும் அறிவுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென யாருக்கும் தெரியாமல் பிரதமர் பதவியை ஏற்ற ராஜபக்சே இன்று (திங்கட்கிழமை) அதிகாரப் பூர்வமாக பிரதமர் பொறுப்பை ஏற்றார். கொழும்பு அரசவை மண்டபத்தில் அவர் பொறுப்பு ஏற்கும் விழா 11 மணிக்கு தொடங்கி நடந்தது.

    இன்று அதிகாரப்பூர்வமாக ராஜபக்சே பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால் பிரதமருக்குரிய அதிகாரப்பூர்வ அதிகாரம் அனைத்தும் ராஜபக்சே கைகளுக்கு சென்றுள்ளது. அமைச்சரவையில் வெளியுறவு இலாகா, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு, பொது நிர் வாகம், ஊடகம், பாதுகாப்பு, நிதி ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

    ராஜபக்சே தலைமையில் அமைக்கப்படும் அமைச்சரவையில் 30 பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் ராஜபக்சேயின் தீவிர ஆதரவாளர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவருக்கும் நாட்டின் முக்கியமான பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

    இலங்கையின் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை ராஜபக்சே ஏற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் இன்று முதல் ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைவசம் போய் சேர்ந்துள்ளது.



    அனைத்து அதிகாரங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட ராஜபக்சே இனி மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. சீனா ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக இனி துணிச்சலுடன் செயல்படுவார் என்று கருதப்படுகிறது.

    அதற்கு முன்பு ராஜபக்சே தனது பிரதமர் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றம் மீண்டும் எப்போது கூட்டப்படும் என்று தெரியவில்லை.

    பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சேக்கும் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடும் பலப்பரீட்சை நடக்கும். தற்போது ராஜபக்சேக்கு 95 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேக்கு 106 எம்.பி.க்களும் ஆதரவாக உள்ளனர்.

    மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்ட 113 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும். ராஜபக்சேக்கு 18 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவுக்கு 7 எம்.பி.க்களும் குறைவாக உள்ளனர்.

    இந்த நிலையில் 16 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டணியும், 6 எம்.பி.க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. கட்சியும் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. இதனால் இலங்கையில் குதிரை பேரம் தொடங்கியுள்ளது. சுமார் 20 எம்.பி.க்களுக்கு ராஜபக்சே விலை பேசி உள்ளார்.

    ரனில் விக்ரமசிங்கேயை முழுமையாக தனிமைப்படுத்த சிறிசேனாவும் ராஜபக்சேக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாத சிறிசேனா தொடர்ந்து அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார்.

    பொது நிர்வாகம், ஊடகம் அனைத்தையும் சிறிசேனா முடக்கியுள்ளார். இதனால் இலங்கையில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் ராஜபக்சே கையில் அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டதால் அவர் பழைய மாதிரி தனது அரசியல் எதிரிகளை பழி வாங்கும் செயல்களை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜபக்சே அரசு முதல் அதிரடியாக அரசு ஊழியர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை சரிவர செய்ய வேண்டும். விதிகளுக்கு முரணாக செயல்படும் அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊடக பேச்சாளர்களாக மகிந்த சமரசிங்கா, கெகலிய நம்புக்வெல் ஆகிய இருவரையும் நியமித்துள்ளனர். இதன் மூலம் ராஜபக்சே தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. #SriLankanPolitics #Rajapaksa #SririSena #RanilWickremesinghe
    சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்த ராஜபக்சே முயற்சிப்பார் என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Rajapaksa
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது இந்திய அரசின் வெளி விவகார கொள்கைக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகும். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கை நெருக்கடி மூலம் வெளியேற்றி விட்டு தங்களின் ஆதரவாளரை சீன பேரரசின் விசுவாசிகள் ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளனர்.

    இலங்கையில் தங்களுக்குத் தான் செல்வாக்கு உள்ளது என்பதை சீன பேரரசு, இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜ பக்சே, மீண்டும் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவார். மேலும் சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்த முயற்சி செய்வார். அதை ஆரம்பத்திலேயே மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ரணில் விக்ரமசிங்கே ஒரு புறமும், மற்றொரு பகுதியில் சிறிசேனா மற்றும் ராஜபக்சேயும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சம்பந்தம் தலைமையிலான குழுவினர் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொலை நோக்கு பார்வையுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடும்.

    சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி மேடைக்கு வந்த போது பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியிருந்தது. இது தனிநபர் அவமதிப்பல்ல. ஜனாதிபதிக்கு செய்யும் அவமதிப்பாகும். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று இருக்கையில் அமர்ந்து அவரை அவமதித்துள்ளனர்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதனால் மாவட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
    இலங்கை பாராளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். #LankaParliamentspeaker #Wickremesinghe
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

    இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு விக்கிரமசிங்கே கடிதம் அனுப்பினார்.

    பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்தார்.

    இந்நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்தார். இதைதொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் அரசு கார் திரும்பப்பெறப்பட்டது.

    தற்போது, இலங்கை அரசியலில் உச்சகட்ட திருப்பமாக ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். அவருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பாராளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதிவரை முடக்கி வைத்துள்ள அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றையும் சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற முடக்கம் நாட்டில் மிக தீவிரமான, விரும்பத்தகாத எதிரிவிளைவுகளை ஏற்படுத்தி விடும் என தனது கடிதத்தில் அவர் எச்சரித்துள்ளார்.

    சபாநாயகருடன் ஆலோசித்த பின்னரே பாராளுமன்றத்தை கூட்டவும், முட்டகவும் வேண்டும். எனவே, உங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மைத்ரிபாலா சிறிசேனாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கேவின் சிறப்பு உரிமைகள் தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் இலங்கை அரசியலில் தற்போது உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. #LankaParliamentspeaker #Wickremesinghe 
    இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. #MEA #SrilankaIssue
    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கினார். அவருக்குப் பதிலாக ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இது இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    அதிபர் தனது பதவியை பறிக்க அதிகாரம் இல்லை. நான்தான் இலங்கையின் பிரதமர் என்று ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். மேலும் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், சிறிசேனா அதிரடியாக நாடாளுமன்றத்தை முடக்கினார்.



    இந்நிலையில் அண்டை நாடான இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.


    மேலும், ‘‘ஜனநாயகம் மற்றும் நெருங்கிய அண்டையான நாடு என்ற வகையில், ஜனநாயகனம் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா எப்போதும் தயராக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது.
    இலங்கை அரசில் நடைபெற்றுள்ள தலைகீழ் மாற்றங்கள் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Rajapaksa
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இலங்கையின் பிரதமராக திடீரெனப் பதவியேற்று இருக்கிறார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. அந்நாட்டு சட்டவிதிகளுக்கு புறம்பாகவும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமலும் ராஜபக்சேவைப் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அதிபர் மைதிரிபால சிறிசேனாவின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

    இத்தகைய நிலையில், தானும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக இத்தனை காலம் அதிபரின் கூட்டாளியாக விளங்கிய ரனில் விக்ரமசிங்கேவும் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசில் நடைபெற்றுள்ள இந்த தலைகீழ் மாற்றங்கள், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் பதற்றத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதுபோல, ரனில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுக்கு வந்தார். ராஜபக்சேவின் வருகையின்போது அரசியல் காழ்ப்புணர்வுடன் பேட்டிகள், செய்திகள் வெளியிடப்பட்டன. அதே சூழலில், இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேனாவை கொல்வதற்கு இந்திய உளவுப்பிரிவான ‘ரா’ அமைப்பு திட்டமிட்டிருப்பதாக இலங்கையில் செய்திகள் வெளியாயின. பின்னர் மறுப்பறிக்கையும் அவசரமாக தரப்பட்டது. எனினும், இது தொடர்பாக அந்நாட்டில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்தியாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் பிரமுகர்களின் பயணங்களும், குற்றச்சாட்டுகளும் வெளியான நிலையில், பிரதமர் பொறுப்பில் ரனில் விக்ரமசிங்கே நீடிக்கும் நிலையிலேயே, பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்சே திடீர் பிரதமராக பொறுப்பேற்றிருப்பதன் பின்னணி, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இலங்கை தொடர்பான வெளிநாட்டு உறவு மற்றும் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் பனிப்போரின் பின்னணியில் இலங்கை அரசில் இந்த திடீர் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆங்கில ஊடகங்களும், அயல்நாட்டு செய்தி நிறுவனங்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இத்தகைய நிலை தொடருமானால் அது இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு சவாலாக அமையும் ஆபத்து உண்டு என்ற கவலையையும் பிரதமருக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

    ஒரே இரவில் இலங்கை அரசில் நடந்துள்ள மாற்றங்கள் பல மர்மங்களை உள்ளடக்கிய நிலையில், அவை அனைத்துமே வாழ்வுரிமை மறுக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வதைபடுகின்ற ஈழத்தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளன. அதுபோலவே தமிழக மீனவர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது. எனவே இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், அதன் வெளியுறவுத்துறையும் தமிழர்கள் நலன் கருதியும், இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதியும் இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்தும், ரா உளவுப்பிரிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தெளிவுபடுத்திட வேண்டும்.

    தமிழர்கள் நலன் சார்ந்த எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருக்கும் 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் பிரதிநிதியான தமிழக கவர்னருக்கு அனுப்பி இத்தனை காலம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு விடுக்கப்பட்ட சவாலாக தெரிகிறது.

    கவர்னர் இனியும் காலம் தாழ்த்தாமல், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது சாதகமான முடிவினை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதன் மீது மத்திய அரசும் கவனம் செலுத்திட வேண்டும். தமிழர்கள் பிரச்சினையைத் தனது கவனத்திற்கு அப்பாற்பட்டதாகவோ, சம்பந்தம் இல்லாததாகவோ மோடி அரசு கருதிடக்கூடாது. தமிழர் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எத்தகைய செயல்பாடுகளையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்று இருப்பது மீண்டும் 2009ஐ ஞாபகப்படுத்துகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #Rajapaksa
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் துவார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்வாழ்வு மையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 50 கோடி மக்களுக்காக நல்வாழ்வு திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

    மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். லாபத்திற்காக அரசியல் செய்ய வேண்டிய நிலைமையில் பா.ஜ.க.வுக்கு இல்லை.

    இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. பா.ஜ.க. கூட்டணிக்காக தனது கொள்கையை மாற்றி கொள்ளாது. கூட்டணிக்காக யாரிடமும் கையேந்தக்கூடிய நிலையில் இல்லை.



    இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளது மீண்டும் 2009ஐ ஞாபகப்படுத்துகிறது. இனப்படுகொலை சம்பவத்தை மக்கள் மறந்து விட மாட்டார்கள். அதுபோன்ற சம்பவம் இனி நடக்க மோடி அரசு விடாது. ஏனென்றால் அவர் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்.

    கடந்த மாதம் இந்தியா வந்த ராஜபக்சே 2009 போரின் போது காங்கிரஸ், தி.மு.க. அரசுதான் எங்களுக்கு உதவி செய்தது என்று கூறி அப்ரூவராக மாறி உள்ளார். இதற்கு தி.மு.க. -  காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #Rajapaksa
    ×