search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilanka president sirisena"

    இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராம சேவகர் பணி தொடர்பான நிகழ்ச்சியை நிறுத்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ‘கோப்பி கடை’ என்ற பெயரில் சிங்கள தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

    இதில் “கிராம சேவகருக்கு பைத்தியம்” என்ற பெயரில் ஒரு பாகம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதில் கிராம சேவகருக்கு பைத்தியம் பிடித்து வாள் எடுத்துக் கொண்டு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இந்த தொலைக்காட்சி தொடர் பற்றி அறிந்த அதிபர் சிறிசேனா உடனடியாக தொடரை நிறுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அந்த தொடரின் “கிராம சேவகருக்கு பைத்தியம்” என்ற பெயரில் ஒளிபரப்பான பாகம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    இதற்கான காரணம் பற்றி விசாரித்தபோது, ருசிகர தகவல் வெளியானது. அதிபர் சிறிசேனா, ஆரம்பத்தில் பொலன்நறுவை கிராமத்தில் கிராம சேவகராக பணியாற்றினார். அதுதான் அவரது முதலாவது அரசு பணியாகும். இதனால் தனது முதலாவது அரசு பணியை அவமதிக்கும் விதமாக டி.வி. தொடர் எடுக்கப்பட்டு இருந்ததால் அதை நிறுத்த உத்தரவிட்டதாக தெரிய வந்தது.

    கோப்பி கடை என்ற சிங்கள தொடர் அன்றாட அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.  #Sirisena
    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. #SriLanka #SriLankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. பாராளுமன்றத்தில் இந்த கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ளன.


    அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் இந்த கட்சிகள் தங்கள் மனுவில் கூறியுள்ளன.  #SriLanka #SriLankaParliament
    இலங்கையில் நடைபெற்று வரும் குழப்பதிற்கிடையில் பாராளுமன்ற முடக்கம் உத்தரவை தளர்த்தினார் அதிபர் சிறிசேனா. #SriLankanParliament #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமங்சிங்கேவும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் இலங்கை அரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

    நான்தான் இன்னும் இலங்கையின் பிரதமர் என்று கூறிய ரணில், விரைவில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கும்படி உத்தரவிட்டார். இது சபாநாயருக்கு அதிருப்தியை ஏற்பட்டது.

    கோப்புப்படம்

    பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்திய சபாநாயகர் இதுகுறித்து அதிபர் சிறிசேனாவிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்க உத்தரவிட்டதை இன்று தளர்த்தினார்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 5-ந்தேதி இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது. #SriLankanParliament #Sirisena 
    இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றபோது பிரதமரின் செயலாளர் கீழே விழுந்து விட்டார். இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். அப்போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்து விட்டார்.

    இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. எனினும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர்.

    செயலாளர் கீழே விழவில்லை. அவர் கீழே அமர்ந்திருந்த நிலையில் எழுந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajapaksa
    ராஜபக்சே அமைச்சரவையில் வடகிழக்கு மாகாண தமிழர்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. #Rajapaksa #DouglasDevananda
    கொழும்பு:

    இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.

    அமைச்சரவையில் 14 பேர் மந்திரிகளாக இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    ராஜபக்சே அமைச்சரவையில் வடகிழக்கு மாகாண தமிழர்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்து விவகாரம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    ரனில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழரான சுவாமிநாதன் நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துறைகள் அப்படியே டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மந்திரி பதவி ஏற்ற பிறகு டக்ளஸ் தேவானந்தா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே நான் மந்திரியாக இருந்தபோது மக்களுக்காக இடைவிடாது பாடுபட்டேன். நான் ஓய்வின்றி உழைத்ததை மக்கள் அறிவார்கள். இப்போது மக்களுக்காக உழைக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இலங்கை வடகிழக்கில் போர் இல்லாத சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாடுபடுவேன்.

    தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம் என்று முந்தைய ஆட்சியாளர் கள் நிறைய வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் தமிழர்கள் மறுவாழ்வு பெற ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை மட்டுமே அவர்கள் பெற்றனர்.

    தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான கோரிக்கை தான் பிரதான கோரிக்கையாக உள்ளது. இது தவிர காணாமல் போனவர்கள் விவகாரம், நிலங்கள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்பட பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியதுள்ளது.

    இந்த பிரச்சனைகளுக்காக தமிழர்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இந்த பிரச்சனைகளுக்கு ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்.

    தமிழர்களுக்கு தேவையானதைப் பெற்றுத்தர ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும். மேலும் மாகாண சபைகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் மாகாண சபைகளை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்று நடத்தும் சூழல் ஏற்படும்.

    இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார். இவர் மீது சென்னை போலீசில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Rajapaksa #DouglasDevananda
    இலங்கையில் விரைவில் பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவுடன் சம்பந்தன் முக்கிய ஆலோசனை நடத்தினார். #Rajapaksa #Sampanthan #SriLankanPolitics
    கொழும்பு:

    இலங்கையில் புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்று பணிகளை தொடங்கிவிட்ட போதிலும் அரசியல் குழப்பம் இன்னமும் தீரவில்லை.

    “அரசியல் சாசனப்படி நான்தான் பிரதமர்” என்று ரனில் விக்ரமசிங்கே கூறி வருவதால் சிக்கல் நீடிக்கிறது.

    பாராளுமன்றத்தை கூட்டுங்கள், நான் எனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று ரனில் விக்ரமசிங்கே சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் முயற்சி செய்தார். ஆனால் அதிபர் சிறிசேனா தலையிட்டு பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

    இந்த நிலையில் இலங்கை பிரதமர் யார் என்ற சர்ச்சை நீடிப்பதால், பாராளுமன்றத்தை கூட்டி முடிவு செய்யுமாறு பல்வேறு நாடுகளும் அதிபர் சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ளன. நேற்று வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பின் போதும் பாராளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டது. இதனால் இலங்கை பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக சபாநாயகர் ஜெயசூர்யா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படும் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ராஜபக்சேயும், ரனில் விக்ரமசிங்கேயும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி.க்களை பிடிப்பதற்காக அங்கு குதிரை பேரம் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு எம்.பி.க்கும் சுமார் 300 மில்லியன் ரூபாய் முதல் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது தவிர எம்.பி.க்கள் கடத்தி செல்லப்படும் அபாயமும் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே- ரனில் விக்ரமசிங்கே இருவரும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 95 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற இன்னமும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள சுமார் 20 எம்.பி.க்களை ராஜபக்சே பேரம் பேசி வளைத்து இருப்பதாக கூறப்படுகிறது.


    ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 106 எம்.பி.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மேலும் 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்தால் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்று ரனில் விக்ரமசிங்கே- ராஜபக்சே இருவரும் கருதுகிறார்கள். எனவே இரு தரப்பினரும் சம்பந்தனுடன் போட்டி போட்டு பேசி வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் சம்பந்தன் தனது ஆதரவாளர்களுடன் சென்று சிறிசேனாவை சந்தித்தார். பிறகு ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். இன்று காலை அவர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு ராஜபக்சேவின் வீட்டில் நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் இலங்கை அரசியல் நிலைமை குறித்து விரிவாக பேசினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்களின் ஆதரவை தனக்கு தர வேண்டும் என்று சம்பந்தனிடம் ராஜபக்சே கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு பதில் அளித்த சம்பந்தன், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்று நீங்கள் உறுதிமொழி தர வேண்டும். அந்த உறுதிமொழி எழுத்து மூலம் இருக்க வேண்டும். அப்படி தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு தருவதை பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

    முன்னதாக ரனில் விக்ரமசிங்கேயிடமும் சம்பந்தன் இதுபோன்று 2 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் கூட்டம் கொழும்பில் நடக்கிறது.

    அந்த கூட்டத்தில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்ய உள்ளது. இந்த முடிவை அறிய இரு தரப்பு தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர்.

    இதற்கிடையே கொழும்பில் இன்று மதியம் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வீடு முன்பும், ராஜபக்சே வீடு முன்பும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு உள்ளனர்.

    இதையடுத்து கொழும்பில் கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு தகவல்களை அரசுக்கு அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பில் உள்ள அமெரிக்க மக்கள் உஷாராக இருக்கும்படி வாஷிங்டனில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. #Rajapaksa #Sampanthan #SriLankanPolitics
    இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் புதிய பிரதமர் ராஜபக்சே தனது பணிகளை இன்று கவனிக்க தொடங்கினார். #SriLankanPolitics #Rajapaksa #SririSena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கை அரசியலில் கடந்த வாரம் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக அதிபர் சிறிசேனா நீக்கினார்.

    அவருக்கு பதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயை அழைத்து புதிய பிரதமராக சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பதாக கூறிய அவர் பிரதமர் இல்லமான அலரி மாளிகையில் இருந்தும் வெளியேற மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான நிலையை சபாநாயகர் கரு ஜெயசூர்யா எடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படும் வரை ரனில் விக்ரமசிங்கேதான் பிரதமராக நீடிப்பார் என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பமும், பதட்டமும் நிலவுகிறது.

    பிரதமர் பதவியில் ராஜபக்சே, ரனில் விக்ரமசிங்கே இருவரும் இருப்பதாக கூறி வருகிறார்கள். இதனால் இலங்கை பிரதமர் யார் என்பதில் சர்வதேச அளவில் குழப்பம் எழுந்துள்ளது. ராஜபக்சேக்கு சீனாவை தவிர வேறு எந்த நாடும் வாழ்த்து சொல்லவில்லை.

    மாறாக எல்லா நாடுகளும் ரனிலுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றன. என்றாலும் இலங்கை அதிபர் சிறிசேனா எதையும் கண்டு கொள்ளாமல் ராஜபக்சேக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மூன்று ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் கை கோர்த்து இருப்பதால் இலங்கையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கொழும்பில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இது பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.

    குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் பீதி நிலவுகிறது. இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பேணுமாறு பல்வேறு சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்த தொடங்கியுள்ளன. அரசியல் சாசன சட்டப்படி செயல்படும்படி இலங்கையை ஐ.நா.வும் அறிவுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென யாருக்கும் தெரியாமல் பிரதமர் பதவியை ஏற்ற ராஜபக்சே இன்று (திங்கட்கிழமை) அதிகாரப் பூர்வமாக பிரதமர் பொறுப்பை ஏற்றார். கொழும்பு அரசவை மண்டபத்தில் அவர் பொறுப்பு ஏற்கும் விழா 11 மணிக்கு தொடங்கி நடந்தது.

    இன்று அதிகாரப்பூர்வமாக ராஜபக்சே பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால் பிரதமருக்குரிய அதிகாரப்பூர்வ அதிகாரம் அனைத்தும் ராஜபக்சே கைகளுக்கு சென்றுள்ளது. அமைச்சரவையில் வெளியுறவு இலாகா, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு, பொது நிர் வாகம், ஊடகம், பாதுகாப்பு, நிதி ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

    ராஜபக்சே தலைமையில் அமைக்கப்படும் அமைச்சரவையில் 30 பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் ராஜபக்சேயின் தீவிர ஆதரவாளர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவருக்கும் நாட்டின் முக்கியமான பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

    இலங்கையின் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை ராஜபக்சே ஏற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் இன்று முதல் ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைவசம் போய் சேர்ந்துள்ளது.



    அனைத்து அதிகாரங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட ராஜபக்சே இனி மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. சீனா ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக இனி துணிச்சலுடன் செயல்படுவார் என்று கருதப்படுகிறது.

    அதற்கு முன்பு ராஜபக்சே தனது பிரதமர் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றம் மீண்டும் எப்போது கூட்டப்படும் என்று தெரியவில்லை.

    பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சேக்கும் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடும் பலப்பரீட்சை நடக்கும். தற்போது ராஜபக்சேக்கு 95 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேக்கு 106 எம்.பி.க்களும் ஆதரவாக உள்ளனர்.

    மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்ட 113 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும். ராஜபக்சேக்கு 18 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவுக்கு 7 எம்.பி.க்களும் குறைவாக உள்ளனர்.

    இந்த நிலையில் 16 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டணியும், 6 எம்.பி.க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. கட்சியும் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. இதனால் இலங்கையில் குதிரை பேரம் தொடங்கியுள்ளது. சுமார் 20 எம்.பி.க்களுக்கு ராஜபக்சே விலை பேசி உள்ளார்.

    ரனில் விக்ரமசிங்கேயை முழுமையாக தனிமைப்படுத்த சிறிசேனாவும் ராஜபக்சேக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாத சிறிசேனா தொடர்ந்து அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார்.

    பொது நிர்வாகம், ஊடகம் அனைத்தையும் சிறிசேனா முடக்கியுள்ளார். இதனால் இலங்கையில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் ராஜபக்சே கையில் அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டதால் அவர் பழைய மாதிரி தனது அரசியல் எதிரிகளை பழி வாங்கும் செயல்களை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜபக்சே அரசு முதல் அதிரடியாக அரசு ஊழியர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை சரிவர செய்ய வேண்டும். விதிகளுக்கு முரணாக செயல்படும் அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊடக பேச்சாளர்களாக மகிந்த சமரசிங்கா, கெகலிய நம்புக்வெல் ஆகிய இருவரையும் நியமித்துள்ளனர். இதன் மூலம் ராஜபக்சே தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. #SriLankanPolitics #Rajapaksa #SririSena #RanilWickremesinghe
    ×