search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur Violence"

    • மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.
    • மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி, பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள். மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    இதையடுத்து, 20 வழக்குகளை சி.பி.ஐ.யிடம் மணிப்பூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அந்த வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. தொடங்கி உள்ளது.

    அவற்றில், ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கும் அடங்கும். மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.

    டான்சிங் ஹங்சிங் என்ற 7 வயது சிறுவனின் தாயார் மீனா ஹங்சிங், மெய்தி இனத்தை சேர்ந்தவர். அவனுடைய தந்தை ஜோசுவா ஹங்சிங், குகி பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஒரு நிவாரண முகாமில் டான்சிங் ஹங்சிங் தங்கி இருந்தபோது, மெய்தி இன போராட்டக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், துப்பாக்கி குண்டு ஒரு இரும்பு தூணில் பட்டு தெறித்து, டான்சிங்கை காயப்படுத்தியது. அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

    சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண் லிடியாவும் மெய்தி இன கிறிஸ்தவர்கள் என்பதால், அவர்கள் சிறுவனுடன் ஆம்புலன்சில் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது. டிரைவரையும், நர்சையும் விரட்டியடித்தது.

    சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண்ணும் தங்களை விட்டுவிடுமாறு எவ்வளவோ கெஞ்சியும் போராட்ட கும்பல் ேகட்கவில்லை. ஆம்புலன்சுக்கு தீவைத்தனர். இதில் சிறுவனுடன் 3 பேரும் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.

    போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைக்க முயன்றபோதிலும், பலன் கிட்டவில்லை.

    இச்சம்பவம் தொடர்பாக லம்பெல் போலீஸ் நிலையத்தில் போலீசார் பதிவு செய்த வழக்கும், கங்போக்பி போலீஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    கடந்த மே 3-ந் தேதி, குகி பழங்குடியின தலைவர்களால், தான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு மெய்தி இன பெண் அளித்த புகாரும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் அடங்கும்.

    • குகி தோவாய் கிராமம் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர்.

    மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    லிட்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து இன்று அதிகாலையில் கடுமையான துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.

    இதையடுத்து, குகி தோவாய் கிராமம் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களின் உடல்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

    மேலும், மூன்று பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர்.

    மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையால் மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த தேவையான அனைத்தும் பிரதமரிடம் உள்ளன.
    • பாராளுமன்றத்தில் 2 மணி நேரமாக உரையாற்றிய பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் பற்றி எரிந்து, கொலைகளும், பாலியல் கொடுமைகளும் நடைபெறும்போது பிரதமர் மோடி ஜோக் அடித்து வருகிறார். மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்று தான் பிரதமர் நினைக்கிறார். அதை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை.

    பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மணிப்பூரில் பாரத அன்னையை கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டேன்.

    மணிப்பூர் இன்று ஒரே மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலமாக பிளவுபட்டு கிடக்கிறது. அதனால்தான் மணிப்பூரில் பாஜக, பாரத அன்னையை கொலை செய்துவிட்டது என்று குறிப்பிட்டேன்.

    பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை, பெண்களை கிண்டல் செய்கிறார்.

    நான் பல பிரதமர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு பிரதமரை பார்த்ததில்லை. பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என்பது எனக்கு தெரியும், ஆனால் பொதுவெளியில் சொல்ல இயலாது.

    பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதம் பிரதமர் பற்றியது அல்ல, மணிப்பூரை பற்றியது.

    நான் பேசிய பாரத மாதா என்ற வார்த்தைகள் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    நமது நாட்டில் என்ன நடக்கிறது என்று பிரதமருக்கு தெரியவில்லை.

    அரசியலில் 19 ஆண்டு காலமாக இருக்கும் நான் பல மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் நான் கேட்டது, பார்த்தது எல்லாம் அசாதாரணமானது.

    மணிப்பூரில் அரசு ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதை மாநில முதலமைச்சரால் தடுக்க முடியவில்லை. மணிப்பூரில் நடப்பவற்றை இந்திய ராணுவத்தால் 2 நாட்களில் நிறுத்த முடியும்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதன் மூலம் எங்கள் நடவடிக்கையை நிறுத்த முடியாது.

    மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த தேவையான அனைத்தும் பிரதமரிடம் உள்ளன. ஆனால் அதனை செய்ய மறுக்கிறார் பிரதமர் மோடி.

    பிரதமரின் கைகளில் பல சாதனங்களும் கருவிகளும் உள்ளன. ஆனால் அதனை அவர் பிரயோகிப்பதில்லை. பாரத அன்னை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்.

    பாராளுமன்றத்தில் 2 மணி நேரமாக உரையாற்றிய பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

    பிரதமர் என்பவர் கட்சி தலைவரை போன்று அரசியல் செய்ய கூடாது. பிரதமர் பொதுவானவராக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடியின் கால்களை தொட்டு வணங்கியவர் மில்பென்
    • நாட்டின் மதிப்பை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமைக்கான பண்பில்லை

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மேரி ஜே. மில்பென் (Mary J. Millben).

    இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் இவர் ஒரு நடிகையாகவும், ஊடக பிரபலமாகவும் திகழ்கிறார். கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்று பயணம் செய்தபோது, மோடி பங்கேற்ற பயண நிறைவு நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் இந்திய தேசிய கீதத்தை பாடியவர் மில்பென்.

    அந்நிகழ்ச்சியில் அவர் மோடியின் கால்களை தொட்டு வணங்கினார். இது குறித்த வீடியோ அப்போது வைரலானது.

    கடந்த மே மாதம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே துவங்கிய ஒரு மோதல் இனக்கலவரமாக மாறி வன்முறை வெடித்தது.

    கடந்த ஜூலை மாதம், ஒரு இனத்தை சேர்ந்த இரு பெண்களை மே மாதம் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மற்றொரு இனத்தை சேர்ந்தவர்கள் மானபங்கப்படுத்திய அரை நிமிடத்திற்கும் குறைவான ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலானது.

    இந்த சம்பவத்திற்காக பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மோடிக்கு ஆதரவாக மில்பென் குரல் கொடுத்திருக்கிறார்.

    மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற பாலியல் வன்முறைகளை மோடி வெளிப்படையாக பேசியதை ஜூலை மாதமே பாராட்டிய மில்பென் மணிப்பூர் வன்முறை, மோடியின் தலைமை மற்றும் இந்திய எதிர்கட்சிகள் குறித்து சமூக வலைதளமான எக்ஸ்ஸில் (டுவிட்டர்) பதிவு ஒன்றை செய்திருக்கிறார்.

    இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் கடவுளின் குழந்தைகள். மணிப்பூரில் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்காக என் மனம் மிகவும் வருந்துகிறது. உண்மை என்னவென்றால் மோடியின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கை உள்ளது. மணிப்பூரின் பெண்களுக்கான நீதியை மோடி பெற்று தருவார். பிரதமர் மோடி மணிப்பூர் பெண்களின் விடுதலைக்காக போராடுவார்.

    கலாசார மரபுகளை அவமரியாதை செய்து, தன் நாட்டின் மதிப்பினை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமை பண்பாகாது. பொய் கதைகளை நேர்மையற்ற ஊடகங்கள் உரக்க சொன்னாலும் அவற்றில் வலு இருக்காது. உண்மைதான் எப்போதும் மக்களை சுதந்திரமாக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்காவில் மக்கள் உரிமைகளுக்காக பாடுபட்ட தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் முழக்கமான "சுதந்திரம் ஒலிக்கட்டும்" எனும் வார்த்தைகளை குறிப்பிட்டு "என் இனிய இந்தியாவே, உண்மை ஒலிக்கட்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • அவமானத்தால் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாலியல் வன்கொடுமை, வீடுகள் சூறை, தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் ஏராளமானோர் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மே 3ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடந்த வன்முறை தொடர்பாக 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வன்முறையின் கோரமுகம் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மே மாத துவக்கத்தில் வன்முறையின்போது 2 பெண்கள் நிர்வாணமாக ஊருக்குள் அழைத்து வந்தது தொடர்பான வீடியோ வெளியானபின்னர் மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கலவரம் நடந்த அன்று மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பலில் இருந்து உயிர்தப்பி நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய அந்த பெண், தனது வீடு வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்து தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் அவரது அண்ணி ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார்.

    'என்னையும் எனது குடும்பத்தின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவமானத்தால் என் வாழ்வை நானே முடித்துக் கொள்ள விரும்பினேன். பின்னர் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேசும் செய்திகளைப் பார்த்த பிறகு, போலீசில் புகார் அளிப்பதற்கு எனக்கு தைரியம் வந்தது' என அந்த பெண் கூறியிருக்கிறார்.

    அவரது புகார் தொடர்பாக பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    நான் என் மருமகளை என் முதுகில் தூக்கிக்கொண்டு என் இரண்டு மகன்களையும் கையில் பிடித்துக்கொண்டு என் அண்ணியுடன் அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தேன். அண்ணியும் ஒரு குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது நான் தடுமாறி சாலையில் விழுந்தேன். அப்போது என் அண்ணி என்னை நோக்கி ஓடி வந்து என் மருமகளை என் முதுகில் இருந்து தூக்கிக் கொண்டு என் இரண்டு மகன்களுடன் தப்பி ஓடினார்.

    பின்னர் ஒரு வழியாக நான் எழுந்திருக்கையில், ஐந்தாறு ஆண்கள் என்னைப் பிடித்துவிட்டனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இவ்வாறு அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

    'ஜீரோ எஃப்ஐஆர்' என்பது எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம். குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம் அந்த எப்.ஐ.ஆரை சரியான அதிகார வரம்பிற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அந்த காவல்நிலையம் அதை விசாரிக்கும். இந்த வழக்கைப் பொருத்தவரை சுராசந்த்பூரில் உள்ள காவல் நிலையம் விசாரணை நடத்துகிறது.

    • தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.
    • உள்துறை மந்திரி அமித் ஷா புதன்கிழமை மணிப்பூர் குறித்து நீண்ட நேரம் பேசினார்.

    புதுடெல்லி:

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, மணிப்பூர் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்து பிரதமர் பேசியதாவது:-

    தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. வடகிழக்கு மாநிலங்கள் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்கும் காங்கிரசே காரணம். காங்கிரசின் ஆட்சிதான் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்சனைகளுக்குக் காரணம். வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் புறக்கணித்ததன் விளைவை தற்போது அனுபவிக்கிறோம். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். உள்துறை மந்திரி அமித் ஷா புதன்கிழமை மணிப்பூர் குறித்து நீண்ட நேரம் பேசினார்.

    மணிப்பூர் வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளிக்கிறது. மணிப்பூர் மாநிலம் விரைவில் அமைதியின் ஒளியைக் காணும். மணிப்பூர் மாநிலம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கமாக பேசவில்லை என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியடைந்து வெளிநடப்பு செய்தனர். 

    • வன்முறை சம்பவங்களுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
    • தொடர்ச்சியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று தொடங்கப்பட்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. வன்முறை சம்பவங்களுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து நீடித்ததால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதையொட்டி கடந்த மாதம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று தொடங்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். 2 மாதங்களுக்கு பிறகு பள்ளியில் தங்கள் நண்பர்களை நேரில் பார்த்ததும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
    • உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது.

    எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தால் உங்கள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் வைப்பது கைகொடுக்காது.

    நாட்டை ஆளும் அதிகாரத்தை அரசாங்கம் இழக்கும்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தவறான நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் வருத்தம் தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மணிப்பூரில் பாஜக அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங். எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார்.
    • மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என சுகதா ராய் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கின.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

    பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், 10-ந்தேதி பதில் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி பாராளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

    தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். பிரதமரின் இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. மணிப்பூரில் அவரது அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார்.

    திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசும்போது, "மணிப்பூரில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையில் 143 பேர் பலியாகியுள்ளனர். 65,000 பேர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மணிப்பூரின் தெருக்களில் இரண்டு பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, அந்த மாநிலத்துக்கும் செல்லவில்லை. அதேசமயம், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி கட்சியினர் அங்கு சென்று என்ன நடந்தது என்று புரிந்துகொண்டனர்" என்றார்.

    மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் கேள்வி எழுப்பினார்.

    மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே வலியுறுத்தினார். 

    • படுகொலை சம்பவங்கள் தொடர்வதால் கூடுதலாக துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
    • நீதிபதிகள் குழு நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய வன்முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி 160 உயிர்களை பலி வாங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையின் கோரத்தாண்டவம் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி நாட்டையே உலுக்கி உள்ளன. குறிப்பாக இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாரணமாக ஊருக்குள் அழைத்து வந்து சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    தொடர்ந்து வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் தொடர்வதால் 800 வீரர்களை கொண்ட கூடுதல் துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சனிக்கிழமை இரவு மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு வந்த அவர்கள் வடகிழக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை மேற்பார்வையிடுவதற்கு, உயர் நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது.

    ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவில், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி பி ஜோஷி (ஓய்வு), டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என உச்ச நீதிமன்றம் கூறியது.

    நீதிபதிகள் குழு நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்து நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், 11 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், கிரிமினல் வழக்குகள் தொடர்பான விசாரணையை கண்காணிக்குமாறு மகாராஷ்டிர முன்னாள் காவல்துறை தலைவர் தத்தாத்ரே பட்சல்கிகரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 

    • மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக பிரேன் சிங் உள்ளார்.
    • பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை குக்கி மக்கள் கூட்டணி வாபஸ் பெற்றது.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது.

    குக்கி இனத்தவர்களுக்கும், மெய்தி பழங்குடியின மக்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருகிறது.

    மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக பிரேன் சிங் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், மணிப்பூரில் ஆளும் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, குக்கி மக்கள் கூட்டணி கட்சி தலைவர் டோங்மங் ஹவோகிப் ஆளுநர் அனுசுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    குக்கி மக்கள் கூட்டணிக்கு 2 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதால், ஆதரவை வாபஸ் பெற்றாலும் மணிப்பூர் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிகிறது.

    • வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போராட்டம் நடைபெறும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய கலவர தீ இன்னும் அணையாமல் இன்று வரை கொளுந்து விட்டு எரிந்த வண்ணம் உள்ளது.

    அம்மாநிலத்தில் வசித்து வரும் மெய்தி மற்றும் குகி சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் இதுவரை 160 பேர் வரை பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி தான் வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக நேற்று ஹரோதெல், சென்ஜம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் வெடித்தது. வன்முறை கும்பல்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். பிஷ்ணுபூர் மாவட்டம் உகா தம்பக் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத கும்பல் புகுந்தது. அவர்கள் வீடுகளில் இருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கியும் துப்பாக்கியாலும் சுட்டு விட்டு ஓடிவிட்டது. இதில் தந்தை- மகன் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இறந்தனர்.

    கவுகட்டாவில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் குகி சமூகத்தினர் வசித்து வரும் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த வீடுகளை சூறையாடி தீ வைத்தது. இந்த சம்பவத்தில் பல வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி இந்த தீ வைப்பு சம்பவம் எப்படி நடந்தது? என்று தெரியவில்லை. நேற்று 6 மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி துப்பாக்கி சூடு, தீ வைப்புகளும் நடந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பிஷ்ணுபூரில் உள்ள பாதுகாப்பு படை ஆயுத கிடங்கிற்கு சென்ற கும்பல் அங்கு வைக்கப்பட்டு இருந்த 298 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள், வெடி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டது. இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் வன்முறை சம்பவங்களை கண்டித்தும், உடனே சட்டசபையை கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரியும் மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 27 சட்டசபை தொகுதிகளில் இன்று ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இந்த பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. பெரும்பாலான பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஓடவில்லை. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போராட்டம் நடைபெறும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதம் தாங்கிய துணை ராணுவ படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    ×