search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "monsoon session"

    • மழைக்கால கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    • இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான ஜூலை 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பாராளுமன்ற கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    இதற்கிடையே, இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் தியாகிகள் தினம் என்ற பெயரில் ஜூலை 21-ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. இதனால் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    • நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
    • எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.

    இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள்  சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    • வருடாவருடம் வழக்கமாக 3 கூட்டத்தொடர்கள் நடைபெறும்
    • சிறப்பு கூட்டத்தொடரின் மசோதாக்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகிறது

    ஒவ்வொரு வருடமும் இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக கூட்டப்படும். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றுவரை பாராளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவல்கள் நாளை முதல் புதியதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற துவங்கும்.

    இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்காக எடுத்து கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023, அஞ்சல் அலுவலக மசோதா 2023 மற்றும் மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மற்றும் "இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றம் செய்வது" ஆகிய திட்டங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    • மக்களவையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி
    • முன்னதாகவே அவைக்கு வந்திருந்தால் ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெற்றிருக்கும்- கார்கே

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அதன்மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் உரை அளித்தார்.

    அப்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் எதிர்க்கட்சிகள் குறித்தே பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில், அவையில் நாங்கள் இருந்த 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரம் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மக்களவையை தேர்தல் பேரணியாக பயன்படுத்தியுள்ளார் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ''கடைசியாக பிரதமர் மோடி மக்களவை வந்து பேசியதற்கு நன்றி. முன்னதாகவே, தனது ஆணவத்தை விட்டுவிட்டு பாராளுமன்றம் வர சம்மதம் தெரிவித்திருந்தால், பராளுமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் சேமிக்கப்பட்டு, சிறந்த விவாதத்திற்குப் பிறகு, முக்கியமான மசோதாக்கல் நிறைவேற்றப்பட்டிருக்கும்'' என்றார்.

    ''எதிர்பாராத விதமாக மணிப்பூர் விசயம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஆனால், நீங்கள் மக்களவையை தேர்தல் பேரணி போன்று பயன்படுத்தியுள்ளீர்கள்'' என மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும், ஒட்டுமொத்த பேச்சியின்போது பிரதமர் மோடி காங்கிரசை தாக்கு பேசினார். மணிப்பூரை பற்றி சிறிதளவே பேசியுள்ளார். காங்கிரசை விமர்சனம் செய்தபோது, அவரிடம் காங்கிரஸ் மீதான பயனத்தை நாங்கள் பார்க்க முடிந்தது.'' என்றார்.

    • குரல் வாக்கெடுப்பில் போதிய ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
    • நம்பிக்கையில்லா தீர்மானம் நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிரான தீர்மானம்.

    மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

    இந்நிலையில், பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசு வெற்றிப்பெற்றுள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன.

    மக்களவையில் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் போதிய ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.
    • உள்துறை மந்திரி அமித் ஷா புதன்கிழமை மணிப்பூர் குறித்து நீண்ட நேரம் பேசினார்.

    புதுடெல்லி:

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, மணிப்பூர் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்து பிரதமர் பேசியதாவது:-

    தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. வடகிழக்கு மாநிலங்கள் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்கும் காங்கிரசே காரணம். காங்கிரசின் ஆட்சிதான் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்சனைகளுக்குக் காரணம். வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் புறக்கணித்ததன் விளைவை தற்போது அனுபவிக்கிறோம். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். உள்துறை மந்திரி அமித் ஷா புதன்கிழமை மணிப்பூர் குறித்து நீண்ட நேரம் பேசினார்.

    மணிப்பூர் வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளிக்கிறது. மணிப்பூர் மாநிலம் விரைவில் அமைதியின் ஒளியைக் காணும். மணிப்பூர் மாநிலம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கமாக பேசவில்லை என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியடைந்து வெளிநடப்பு செய்தனர். 

    • எதிர்க்கட்சிகளின் விமர்சனம் எனக்கு வலிமையை தருகிறது.
    • எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பொய்யாக்கி நாட்டின் வளர்ச்சி உயர்ந்து வருகிறது.

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார்.

    பிரதமர் மோடி பேசியதாவது:-

    நாட்டில் ஏழ்மை மிக வேகமாக அகன்று கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டகளில் 13.5 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    இந்தியா ஏழ்மையை ஒழித்து இருப்பதாக சர்வதேச நிதியமும் பாராட்டியுள்ளது.

    கர்வமும், நம்பிக்கையின்மையும் எதிர்க்கட்சிகளின் ரத்தத்தில் கலந்துள்ளது. எதிர்க்கட்சியினர் பழமையான சிந்தனை உடையவர்கள். இந்தியாவில் நல்லவைகள் நடப்பதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் நம்பிக்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

    தூய்மை இந்தியா திட்டம் 3 லட்சம் உயிர்களை காப்பாற்றி உள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் எனக்கு வலிமையை தருகிறது.

    நாடு முடங்கிவிடும், நாட்டின் வங்கி அமைப்புகள் முடிந்துவிடும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தனர். ஆனால் நமது பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பொய்யாக்கி நாட்டின் வளர்ச்சி உயர்ந்து வருகிறது.

    உலக அரங்கில் சிலர் நமது தோற்றத்தை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.

    உலகிற்கு உண்மை தெரியும் எனவே அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. பாதுகாப்புத்துறை ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் எச்ஐஎல் நிறுவனம் முடிந்துவிட்டது என்றெல்லாம் பேசினார்கள்.

    குற்றச்சாட்டுகளை உடைத்து எசஐஎல் நிறுவனம் தேசத்தின் முக்கிய சின்னமாக உருவெடுத்துள்ளது.

    அழிந்துபோகும் என எதிர்க்கட்சிகள் கூறிய நிறுவனங்கள், வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    எதிர்க்கட்சிகள் நாட்டின் திறமை, உழைப்பு, துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்.

    நாட்டின் ஜனநாயகத்தையும், நாட்டையும் கூட எதிர்க்கட்சிகள் அவமதித்தனர்.

    நம் மேலும் மேலும் வலிமை அடைவோம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

    ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவது எப்படி என கூட அவர்களுக்கு கற்றுத்தர வேண்டியுள்ளது.

    எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு என்னை தாக்குகிறார்களோ அந்த அளவுக்கு நான் மேலும் மேலும் வெற்றி பெறுவேன்.

    காங்கிரஸ் ஆட்சியில் நாட்டை சீரழித்துவிட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டை பாழாக்கிவிட்டனர். இப்போது இந்தியா முதல் 5 நாடுகளில் ஒன்றாக மாறி உள்ளது.

    3 விஷயங்களில் கவனம் செலுத்தி, கடுமையாக நான் உழைத்தேன். இதனால் நாடு வளர்ச்சி கண்டுள்ளது.

    2028ம் ஆண்டில் நீங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானதம் கொண்டுவரும்போது நாடு பொருளாதார வளர்ச்சியில் 3ம் இடத்தில் இருக்கும்.

    தூய்மை இந்தியா திட்டத்தை அறிவிக்கும்போது, எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

    ஸ்டார்ட் அப் இந்தியா பற்றி பேசும்போது, அது நடக்கவே நடக்காது என்று அவர்கள் கூறினார்கள்.

    டிஜிட்டல் இந்தியா பற்றி பேசியபோது, அவர்கள் விமர்சனம் செய்தனர்.

    இந்தியாவின் திறமை மீது அவர்களுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்தது இல்லை.

    எதிர்க்கட்சிகளுக்கு பாகிஸ்தான் மீது பேரன்பு உள்ளதால் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை பிரிவினை வாதிகள் மீது இருந்ததே தவிர எளிய மக்களவை அவர்கள் நம்பவில்லை.

    பயங்கரவாத அச்சுறுத்தலின்போது இந்திய நாட்டின் படைகள் மீது எதிர்க்கட்சியினருக்கு நம்பிக்கை இருந்ததில்லை.

    இந்தியாவை யாரெல்லாம் கிண்டல் செய்கிறார்களோ அவர்களையே எதிர்க்கட்சிகள் நம்பினர்.

    காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு கள நிலவரம் என்னவென்று புரியவில்லை.

    தமிழ்நாட்டில் 1962ம் ஆண்டு கடைசியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் கடைசியாக 1972ம் ஆண்டில் காங்கிரஸ் வென்றது.

    உ.பி., பீகாரில் 1982களில் காங்கிரஸ் கடைசியாக வெற்றி பெற்றது. பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மீது நீண்ட காலத்திற்கு முன்பே மக்கள் நம்பிக்கைய இழந்துவிட்டனர்.

    இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றனர்.

    ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உங்கள் கூட்டணிக்கு இறுதி காரியங்களை செய்துவிட்டீர்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டுவிட்டது.

    எதிர்க்கட்சியினர் யாரை பின் தொடர்கிறார்களோ, அவர்களை இளைஞர்கள் நம்பவில்லை. பழைய கூட்டணிக்கு பெயிண்ட் அடித்து புதிய பெயர் வைத்துவீட்டீர்கள்.

    மக்களின் எண்ணங்களை உங்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. யுத்தத்திற்கு பயந்தவர்கள், ரணதீரன் என பெயரிட்டு கொள்வார்கள். உங்களின் சீரழிவை நீங்களே கொண்டாடி இருக்கிறீர்கள்.

    மாடு மேய்த்துக் கொண்டு நிலவிற்கு செல்ல ஆசைப்படுவது போலதான் எதிர்க்கட்சியினரின் கூட்டணி பெயர் மாற்றம்.

    எதிர்க்கட்சிகளுக்கு இந்திய சலாச்சாரத்தின் மீது எந்த விதமான புரிதலும் இல்லை. இந்தியா எனும் பெயரை பயன்படுத்துவது மூலம் மக்களிடம் தங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

    திமுக அமைச்சர் ஒருவர் தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என பேசியுள்ளார். ராஜாஜி, அப்துல்கலாம் பிறந்த தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து பேசுகிறார்கள்.

    தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக NDA-வில் இரண்டு I-யை எதிர்க்கட்சிகள் சேர்த்துள்ளனர். பெயர், கொள்கை என எதுவும் அவர்களுடையது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய கூட்டணிக்கு புதிய பெயிண்ட் அடித்து புதிய பெயர் வைத்துள்ளீர்கள்.
    • எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இறுதிச்சடங்கை நடத்திவிட்டன.

    புதுடெல்லி:

    மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியையும் கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் உறங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எந்த இலக்கும் கிடையாது; இந்தியாவை காங்கிரஸ் எப்போதும் நம்பியது இல்லை. இந்தியாவுக்கு எதிரான அனைத்தையும் காங்கிரஸ் உடனடியாக பற்றிக்கொள்ளும். தொலைநோக்கு சிந்தனை காங்கிரசில் இல்லை.

    பழைய வாகனத்திற்கு புதிய பெயிண்ட் அடிப்பதன் மூலம் அந்த பழைய வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற முயற்சிக்கிறீர்கள். பழைய கூட்டணிக்கு புதிய பெயிண்ட் அடித்து புதிய பெயர் வைத்துள்ளீர்கள். உங்கள் சீரழிவை நீங்களே கொண்டாடி வருகிறீர்கள். எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இறுதிச்சடங்கை நடத்திவிட்டன. I.N.D.I.A. கூட்டணி பெயரை NDA -வில் இருந்துதான் திருடி உள்ளனர். NDA-வில் இரண்டு I -க்களை சேர்த்து புதிய பெயரை சூட்டிக்கொண்டுள்ளனர். இதில் உள்ள முதல் I கூட்டணியில் அங்கம் வகிக்கும் 26 கட்சிகளின் ஆணவத்தைக் குறிக்கிறது, மற்றொரு I ஒரு குடும்பத்தின் ஆணவத்தைக் குறிக்கிறது.

    பெயர், கொள்கை என எதுவும் அவர்களுடையது இல்லை. I.N.D.I.A. எனும் பெயரால் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த பார்க்கிறார்கள். பெயரை மாற்றுவதன் மூலம் ஆட்சியை பிடிக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மோடியின் பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். குறிப்பாக, மணிப்பூர் விவகாரம் பற்றி பேசவேண்டும் என்பதை வலியுறுத்தி, 'மணிப்பூர், மணிப்பூர்' என முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில் மோடியின் உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • 2024ம் ஆண்டில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது.
    • உலக நாடுகள் நம்மை பாராட்டும் தருணத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி தனது பதிலுரையை தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    2024ம் ஆண்டில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது.

    இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்டமுன் வரைவுகளை கொண்டு வந்துள்ளோம். சட்டமுன் வரைவுகள், மீனவர்கள் மசோதா தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சியினர் பங்கேற்கவில்லை.

    வரும் காலம் தொழில்நுட்பத்தின் காலமாக அமையும். பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்திற்காக பல சட்டமுன் வரைவுகளை கொண்டு வந்தோம்.

    கடந்த 3 நாட்களாக பல்வேறு மூத்த தலைவர்களும் மக்களவையில் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

    எதிர்க்கட்சியினருக்கு நாட்டைவிட அவர்களது கட்சி தான் முக்கியமாக உள்ளது. எதிர்க்கட்சியினருக்கு ஏழைகளின் பசியை பற்றி கவலையில்லை, ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற பசிதான் உள்ளது.

    எதிர்க்கட்சியினர் ஒரு நாள் கூட அவையை நடத்தவில்லை. நீங்கள் பொய்யானவர்கள், உங்கள் நம்பிக்கையில்லா தீர்மானமும் பொய்யானது.

    என்னை அவைக்கு வரவழைப்பதற்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தீர்கள். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியினர் வெறும் நோ பால்களே வீசினர்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேச எதிர்க்கட்சியினர் கொஞ்சம் தயாரித்து கொண்டு வந்திருக்கலாம்.

    ஒவ்வொரு முறையும் இந்த தேசத்திற்காக எதிர்க்கட்சியினர் நல்லதை செய்யவில்லை.

    இந்த தீர்மானத்தில் பேசப்பட்ட விஷயங்கள் ஆச்சரியமானது. நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.

    இந்த முறை விவாதத்தை தொடங்கி வைக்க எதிர்க்கட்சி தலைவருக்கே சொந்த கட்சியினர் நேரம் கொடுக்கவில்லை.

    கூடுதலாக நேரம் கொடுத்தும், நேரத்தை வீணடித்துவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர். நேரத்தை வீணடிப்பதில் அவர்கள் வல்லவர்கள்.

    காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் அதிர் ரஞ்சன் சவுத்திரியை அவமானப்படுத்துகிறது. அதிர் ரஞ்சன் சவுத்திரிக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்.

    எங்கள் அரசு செய்துள்ள பணிகள் 100 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இது நாட்டிற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான காலகட்டம். இந்த யுகம் இந்தியாவிற்கு பொன்னான யுகம்.

    நாட்டில் உள்ள இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதிலேயே நமது கவனம் இருக்க வேண்டும்.

    உலகம் இந்தியாவை புரிந்து கொண்டுள்ளது. உலக நாடுகள் நம்மை பாராட்டும் தருணத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

    ஏழைகளுக்கு தங்கள் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மக்களின் நம்பிக்கையை தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்தியாவை பல புதிய உச்சங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளோம். இன்று இந்தியாவின் ஏற்றுமதி புதிய உச்சங்களை தொட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டு மக்கள் எங்கள் அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
    • இந்த தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்குதான் சோதனையே தவிர, எங்களுக்கு அல்ல.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று 3-வது நாள் விவாதம் நடந்தது. கடந்த 2 நாட்களில் பெரும்பாலான கட்சிகளுக்கு இந்த தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே இன்று இவர்களுக்கு குறைந்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    விவாதத்தை இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழியின் குற்றச்சாட்டுக்கும் காரசாரமாக பதில் அளித்தார்.

    விவாதம் நிறைவடைந்ததை அடுத்து 5 மணியளவில் விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

    நாட்டு மக்கள் எங்கள் அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா தீமானத்தை கடவுளின் ஆசீர்வாதமாக கருதுகிறேன். 2018ல் என் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அதன்பின் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பெற்ற இடங்களைக்கூட பெற முடியவில்லை. எனவே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு நல்ல சகுனமாக உள்ளது. இந்த தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்குதான் சோதனையே தவிர, எங்களுக்கு அல்ல.

    மக்களின் ஆசியுடன், முந்தைய சாதனைகளை முறியடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பாஜகவும் மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நீங்கள் (எதிர்க்கட்சிகள்) முடிவு செய்துள்ளதாகவே நான் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மவுனம் காப்பதாக கூறி கேள்வி எழுப்பினார்.
    • காங்கிரஸ் ஆட்சியின் போது வடகிழக்கு மாநிலத்தில் நடந்த மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை சிந்தியா நினைவூட்டினார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால் பிரதமர் மோடி இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது கடந்த மூன்று தினங்களாக விவாதம் நடத்தப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடி பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் மக்களவைக்கு வந்தார். ஆனால் அவையில் வழக்கம்போல் அமைதியற்ற சூழல் நிலவியது. கடும் அமளிக்கு மத்தியில் விவாதம் தொடர்ந்தது.

    பிரதமர் மோடி மக்களவைக்குள் நுழைந்ததை அடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மணிப்பூரில் நடந்த வன்முறையை நாட்டில் உள்நாட்டுப் போர் என்று கூறி, இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பதாக கூறி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் ஆட்சியின் போது மணிப்பூர் மாநிலத்தில் நடந்த மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை நினைவூட்டினார்.

    மேலும் அவர் பேசும்போது, 'பாராளுமன்றத்திற்கு வெளியே மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் உணர்வுபூர்வமான கருத்தை தெரிவித்தார். ஆனால், பிரதமர் பாராளுமன்றத்தல்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் (எதிர்க்கட்சி) வலியுறுத்தினார்கள். எந்த தேதியிலும் நேரத்திலும் விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று உள்துறை மந்திரி மீண்டும் மீண்டும் கூறினார். ஆனால், 17 நாட்களாக அவையை செயல்பட விடவில்லை' என்றார்.

    வெறுப்பு சந்தையில் அன்பின் கடையை திறப்பதாக காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கடை ஊழல், பொய், சமாதானம், ஆணவத்துக்கான கடை. அவர்கள் கடையின் பெயரை மட்டுமே மாற்றுகிறார்கள், ஆனால் தயாரிப்பு அப்படியே உள்ளது என்றும் சிந்தியா குற்றம்சாட்டினார்.

    • பெண்கள் பாதிக்கப்படுவதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அரசியல் செய்யக்கூடாது என்றார்.
    • சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார்.

    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது" என்றார்.

    1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார். "அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தி.மு.க. உறுப்பினர்கள் அவரைப் பார்த்து சிரித்தனர். முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டசபைக்கு வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரானார்" என குறிப்பிட்டார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களைப் பார்த்து பேசிய அவர், "கௌரவர்களின் சபை பற்றி பேசுகிறீர்கள், திரவுபதியை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா?" என கேள்வி எழுப்பினார்.

    மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழியின் மற்றொரு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதி மந்திரி, சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

    ×