என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karunanidhi death"
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை, தாலுகா அலுவலக சாலை, பழைய பெங்களூரு சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தமிழக பஸ்கள் மற்றும் கர்நாடக மாநில அரசு பஸ்களும் இயக்கப்படாததால், ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள்.
ஓசூர் பஸ் நிலையம் எதிரே பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் நகர துணை செயலாளரும், பூ வியாபாரிகள் சங்க தலைவருமான கே.திம்மராஜ் தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்தை சுற்றிலும் ரோஜா, சாமந்தி, அரளி, பன்னீர் இலை, பட்டன் ரோஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட வகைகளில் 2 டன் பூக்களை கொண்டு அலங்கரித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சிகளில், ஓசூர் நகர பொருளாளர் சென்னீரப்பா, நகர துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி சரவணன், மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்தில் கருணாநிதி மறைவையொட்டி அவருடைய படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பெண்கள் கதறி அழுதார்கள்.
பர்கூர் அண்ணா நகரில், கடந்த 1972-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தை தொடங்கினார். 24 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மறுவாழ்வு இல்லத்தில் 160 பேருக்கு மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களுக்கு வாழ்வு அளித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பெங்களூரு சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மவுன ஊர்வலமாக சென்றனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் அஸ்லம், தண்டபாணி, திருமலைச்செல்வன், மாதவன், பிர்தோஸ் கான், கராமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த மவுன ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன் தலைமையில் தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை, 5 ரோடு ரவுண்டானா, பழைய சப்-ஜெயில் ரோடு, சேலம் சாலை வழியாக ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலை வரை சென்றது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்ட நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் சங்கம் சார்பிலும், கிருஷ்ணகிரி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மவுன ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் எதிரில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநில இணை செயலாளர் நந்தகுமார், ஒன்றிய சட்ட திட்ட விதிகள் திருத்தக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கருணாநிதி உருவப்படத்திற்கு ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார்ராவ், நிர்வாகிகள் சந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனை எதிரில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பன்னீர்செல்வம், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், மாதேப்பள்ளி, நேர்லகிரி தீர்த்தம் போன்ற பகுதிகளில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு தி.மு.க.வினர் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல மாவட்டம் முழுவதும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மவுன ஊர்வல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரி தொலைபேசிநிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, சிசுபாலன், ராமச்சந்திரன் கிரைசாமேரி, அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரசெயலாளர் ஜோதிபாசு, விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட நிர்வாகி பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) மாவட்டசெயலாளர் கோவிந்தராஜ், ம.தி.மு.க நகரசெயலாளர் வஜ்ரவேல் சமூகநல்லிணக்கமேடை நிர்வாகி ராஜசேகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. மேலும் அவர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கருணாநிதி மறைவையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதோடு மட்டுமின்றி தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டன. தி.மு.க. கட்சி கொடிகளும் கருணாநிதி மறைவையொட்டி அரை கம்பத்தில் பறந்தன. கருணாநிதி உயிரிழந்ததை தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அங்கிருந்த தொண்டர்கள், மகளிரணியை சேர்ந்த தொண்டர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. தி.மு.க.வின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.
பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஒரு சிறுமி கருணாநிதியின் உருவப்படத்திற்கு பாசத்துடன் முத்தம் கொடுத்து மரியாதை செலுத்தியதை காண முடிந்தது. பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கட்சி பாகுபாடின்றி பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தலைமை அனைத்து நடிகர் ரசிகர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரசிகர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தன. அங்கு நகர தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ரசிகர்கள், தி.மு.க. தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியர்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.
இதேபோல் தி.மு.க.வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். இதில் கட்சியின் மாநில செயலாளர் செங்கோலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய தாலுகாவில் உள்ள கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கீரனூர்:
கீரனூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவில் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிக்குமார், துணை தலைவர் பழனி, இம்தியாஸ், மணிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மாலை வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள் ஏதும் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்கம், விவசாய சங்கம், அரிமா சங்கம் என அனைத்து தரப்பினரும் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொம்மாவூரில் மாவட்ட தொண்டர் அணிஅமைப்பாளர் கராத்தே முத்து தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது.
இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர், கீரனூர் அடுத்த குளத்தூரில் தி.மு.க. கிளை கழகம் சார்பில் செயலாளர் சேகர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடைவீதி பகுதியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பெரியசாமி, சரத்துகுமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலைக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் படிப்படியாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் மதுரை தத்தனேரி சாலையில் சென்றது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் முருகேசன் பஸ்சை ஓட்டினார். அப்போது 25 வயது வாலிபர் பஸ் மீது கல்வீசினார்.
இந்த சம்பவத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர் முருகேசன், கல்வீசிய வாலிபரை பிடிக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் இருளில் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து செல்லூர் போலீசில் டிரைவர் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
மதுரை நேதாஜி ரோட்டைச் சேர்ந்த முருகன் (43), தாணப்ப முதலி தெருவில் டீ ஸ்டால் மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை திறந்து வியாபாரம் பார்த்தார்.
அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் மணிகண்டன் வாக்குவாதம் செய்து கடையை சூறையாடியதாக திலகர்திடல் போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்