search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Droupadi Murmu"

    • ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது.
    • பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    கடந்த ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் முதல் கூட்டுக்கூட்ட உரை இதுவாகும்.

    பாராளுமன்றத்தில் உரையாற்ற திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். குதிரைப்படையினர் புடை சூழ பாராளுமன்றத்துக்கு சென்றார்.

    பாராளுமன்றத்துக்கு வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை சபாநாயகர் ஓம்பிர்லா, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    பாராளுமன்றத்துக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு நுழைந்ததும் எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றனர்.

    பின்னர் பாராளுமன்ற மைய மண்டபத்துக்கு திரவுபதி முர்மு சென்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    அதன் பின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுதந்திரத்தில் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம்.

    2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

    புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதில் பழங்காலத்து பெருமையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும்.

    இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும். 2047-ம் ஆண்டில் முழு வளர்ச்சியை காண்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் இருக்கும் நிலை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக வேண்டும்.

    வெளிநாடுகளில் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுய சார்பு நாடாக மாறி உள்ளது. இந்தியா நவீன கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்திருக்கிறது.

    9 ஆண்டுகளில் இந்தியா வின் மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது.

    நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது.

    நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது.

    நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளன. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக, இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள் ஆகும். முன்பு வரி திரும்பப்பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்த சில நாட்களுக்குள் பணம் திரும்ப பெறப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வெளிப்படைத் தன்மையுடன் வரி செலுத்துவோரின் கண்ணியமும் உறுதி செய்யப்படுகிறது.

    கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்கியது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது.

    கொரோனா காலத்தில் ஒரு ஏழைக்கூட பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊழல் என்பது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

    ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பது அரசின் தெளிவான கருத்து ஆகும். கடந்த ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    ஊழலை ஒழித்து பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஊழலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஊழலை ஒழித்திருக்கிறோம்.

    குற்றமிழைத்து வெளிநாட்டுக்கு தப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். சரியாக முடிவுகள் காரணமாக பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

    நிலையான மற்றும் உறுதியான முடிவெடுக்கும் அரசால் நாட்டு மக்கள் பலன் பெறுகின்றனர். பழங்குடியினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வளர்ச்சி குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    பழங்குடி பெண்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு பணித்துறையிலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    அரசின் திட்டங்களால் பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்பது குறைந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

    ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது. முன் மாநில மாவட்டங்கள் திட்டம் மேலும் 500 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட உள்ளது.

    நாடு முழுவதும் 50 கோடி பேர் அரசின் இலவச மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழை, எளியோர் மருத்துவ வசதி பெற்று உள்ளனர்.

    கரீப் கல்யாண் யோஜன திட்டம் மூலம் கோடிக் கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறு கின்றனர்.

    2014-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 260 மருத்துவ கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது. மாவட்டங்கள் தோறும் மருத்துவ கல்லூரி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறோம். புத்தாக்க தொழில்கள் எண்ணிக்கை பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது.

    நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்திய விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    கேலோ இந்தியா திட்டம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை நினைவூட்டம் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. ராஜ பாதையை கடமை பாதை என பெயர் மாற்றியதன் மூலம் அடிமைத்தன விசயங்கள் மாற்றப்பட்டுள்ளன. பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    அரசின் புதிய முயற்சிகளால் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான தாங்கி கப்பலை நாமே கட்டியுள்ளோம். தனியார் நிறுவனம் கூட செயற்கைகோளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பசுமை வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது. ஜி.20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளை காண இந்தியா முயற்சிக்கிறது.

    இவ்வாறு ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது.

    2023-24-ம் ஆண்டுக் கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கூட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் முதல்கட்டம் பிப்ரவரி 14-ந்தேதி வரையும், 2-வது கட்டம் மார்ச் 12-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையும் நடைபெறும்.

    பட்ஜெட் கூட்டத்தொட ரின்போது இரு அவைகளும் 23 அமர்வுகளில் கூடவுள்ளது. இதில் 36 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    • டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
    • பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:

    * கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.

    * ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்.

    * ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.

    * டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமே இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது

    * பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. அரசு துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது

    * பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி.

    * அரசு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.

    * பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்.

    * விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.

    * உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கான அடையாளமாக பண்டிகைகள் திகழ்கின்றன.

    புதுடெல்லி :

    பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் லோரி பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாளை மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதற்காக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கான அடையாளமாக பண்டிகைகள் திகழ்கின்றன. அவை நமது கலாசாரத்தை பாதுகாக்கின்றன. வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு விதமாக கொண்டாடினாலும், அவற்றின் நோக்கம், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் உணர்வுகளை வலுப்படுத்துவது ஆகும். இந்த பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலம் நாம் இயற்கைக்கு நன்றி சொல்கிறோம்.

    பண்டிகைகள் அனைத்தும் வெவ்வேறு சமூகங்களை அன்பு, நல்லிணக்கம், பாசம் ஆகியவற்றால் இணைத்து அனைவருக்கும் மகிழ்ச்சியும், வளமையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புத்தாண்டு விடியல், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
    • குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு விடியல், மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.

    தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். புத்தாண்டில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:


    இந்த மகிழ்ச்சியான தருணம், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர ஒரு வாய்ப்பாகும். இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.

    முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய வேண்டும்.
    • மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

    ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இன்றைய உலகில் முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளுக்கும் விரைவான தீர்வை காண, பொறியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.பொறியியலாளர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களும் மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களையும் சென்றடைவதுடன், சமூக நீதிக்கான கருவியாக பயன்பட வேண்டும். 


    சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்னும் மந்திரத்தை இந்தியா உலகின் முன் வைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலந்த எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றின் மூலம் புதிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த முன்முயற்சிகள் மூலம் சிறந்த முடிவுகளை நாம் பெறலாம்.

    பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் பரிமளித்து வருகின்றனர். தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, எந்திர வடிவமைப்பு, கட்டுமானப்பணிகள், செயற்கை நுண்ணறிவு உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் பங்காற்றி வருகின்றனர். தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும்.
    • சாதாரண மனிதர்கள், காவல் துறையினரை நண்பராக கருத வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டும் பணியின் போது ஆயிரக்கணக்கான காவல் துறையினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறும் போது அரசின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும். 


    ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் பணி துவங்கும் போதிலிருந்தே தலைமைப் பண்புடன் திகழ வேண்டும். ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, துணிவு, திறமை மற்றும் உணர்திறன் ஆகிய 5 அடிப்படை பண்புகளை மனதில் வைத்து காவல் துறை அதிகாரிகள் தங்களது திறனை நிரூபிக்க வேண்டும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்கள் கருணையுடன் அணுகுவதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

    குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும், அதே நேரம் சாதாரண மனிதர்கள் காவல் துறையினரை நண்பராகவும் தங்களை காப்பாற்றுபவராகவும் கருத வேண்டும். அந்த வகையில் காவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு பெண் காவல் அதிகாரிகள் அதிக அளவில் உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.
    • கிறிஸ்து போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    கிறிஸ்துமஸ் பண்டிகை மொத்த மனிதகுலத்திற்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் தியாகத்தின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூருவோம். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.

    இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயேசு கிறிஸ்து அன்பு, பரிவு மற்றும் கருணை ஆகியவற்றின் வழியை நமக்குக் காட்டியுள்ளார். இது நமது வாழ்க்கையை நல்லொழுக்கம் உள்ளதாக்குகிறது. அத்துடன் சமூகத்தில் சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்தைக் கொண்டு வருகிறது.

    இது உலகில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், இணக்கமான, சகிப்புத்தன்மையுடன் கூடிய மற்றும் அமைதியான சமுதாயத்திற்காகப் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று 51 ஆண்டுகள் நிறைவு.
    • வீரர்களின் இணையற்ற துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது.

    1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம், சுதந்திர நாடாக மாறியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1971 ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தூய்மையான காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை.
    • சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் மனித உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும்.

    தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப் போட்டிக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் மின்னணு வாகனங்களுக்கு அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களை கண்டறிய உதவும் ஈவி-யாத்ரா என்ற இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 


    நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது: தூய்மையானக் காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் பல்வேறு மனித உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும். எதிர்காலத் தலைமுறையினர் மாசு இல்லாத காற்றை சுவாசிப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்,

    அவர்கள் ஆரோக்கியமாக நலமுடன் வாழ்வதே நமது முதன்மையான குறிக்கோள். எரிசக்தி சேமிப்பு என்பது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்தது. பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள அது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும் உருவாக்க வேண்டும்.
    • மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது.

    டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    இந்தியாவின் மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதால், அவர்கள் யாரையும் சார்ந்திராமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை.

    மாற்றுத் திறனாளிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது. மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைவிட, அசாத்தியத் திறமை கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். துணிவு, திறமை, திட்டமிடல் மூலம் இலக்கை எட்டி ஏராளமான மாற்றுத்திறனாளி சகோதர-சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர். 


    ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தனிநபர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே மாற்றுத்திறனாளிகளை அதிகாரமிக்கவர்களாக, தற்சார்பு பெற்றவர்களாக மாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம்.
    • மற்றவர்கள் உரிமைக்காக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம் உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியும். இந்தியா வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் பெண்களின் பங்களிப்பு அவசியமாகும். 


    மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் அதிக அளவிலான பங்களிப்பு, பொருளாதாரம், சமுதாயம் மற்றும் நாட்டை வலுப்படுத்தும். பெண்கள் ஒருவொருக்கொருவர் ஊக்குவித்து, உதவி செய்து, மற்றவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம். வளர்ச்சியின் பல்வேறு திசைகளில் அவர்களை முன்னேற்ற இது உதவுகிறது.

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலம் நுகர்வோரை சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நமது சகோதரிகளும், புதல்விகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைத்து பொருளாதார தன்னிறைவு அடைந்து வருகின்றனர். இதன் பயனாக ஊரக குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன.
    • நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது:

    குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிக அழகான கட்டம். அதுவே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. குழந்தைகளின் களங்கமில்லா தன்மையையும், தூய்மையையும் நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு புதிய தலைமுறையும், புதிய வாய்ப்புகள் மற்றும் கனவுகளை கொண்டு வருகின்றன. 


    தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன. சிறந்த முறையில் குழந்தைகளுக்கு கற்பித்து அவர்களை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுத்துவது மிக முக்கியமானது. நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.

    பள்ளிக் குழந்தைகள் இந்தியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருக்க வேண்டும். பெற்றோரை எப்போதும் மதிக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காண வேண்டும். இன்றைய கனவுகள் நாளைய நனவாக மாறும்.

    நீங்கள் வளரும் போது எந்த மாதிரியான இந்தியாவில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் கடமையை செய்ய வேண்டும். அது தானாகவே மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை, வருங்கால இந்தியாவின் பயணத்தை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×