search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட்"

    • மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப்பகிர்வு இல்லை.
    • கர்நாடகாவில் முன்னேற்றத்திற்காக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்கு கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., டி.கே.சுரேஷ், பட்ஜெட்டில் தென் இந்தியா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் டி.கே. சுரேசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டமும் நடத்தினர். மேலும் மாண்டியா மாவட்டத்தில் டி.கே. சுரேஷ் மீது போலீசிலும் புகார் செய்தனர்.

    இதை தொடர்ந்து டி.கே.சுரேஷ் எம்.பி. பேசும்போது, கர்நாடக மக்களுக்காக சிறை செல்லவும் தயார் என்று அறிவித்தார். டி.கே. சுரேஷ் கருத்துக்கு அவரது மூத்த சகோதரரும், கர்நாடக துணை முதல்-மந்திரியுமான டி.கே. சிவக்குமார், தென்னந்திய மக்களின் வலியையும், வேதனையையும் தான் டி.கே.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நாடு ஒரே தேசம்தான். ஆனால் நீங்கள் இந்தி பெல்ட் மாநிலங்களைத் தாண்டி பார்ப்பதே இல்லை. மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப்பகிர்வு இல்லை. மத்திய அரசுக்கு கர்நாடகா பெருமளவு வரி வருவாய் வசூலித்து வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கியமான அறிவிப்புகள் எதுவுமே இந்த பட்ஜெட்டில் இடம் பெறவே இல்லை. தென்னிந்திய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவே கருதுகின்றனர். நாங்கள் இந்தியர்கள். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிராந்திய அடிப்படையிலான தனிநாடு கோரிக்கை பேச்சுகளுக்கே இடமில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது. கர்நாடகாவுக்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.

    மேலும் மத்திய அரசை கண்டித்து இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடகா மாநிலம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். மேலும் இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்கும்படி கடிதம் எழுதினார். அதில் சமச்சீரற்ற வரி விநியோகம் மற்றும் திட்ட அனுமதியில் தாமதம் ஆகியவை கர்நாடக மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரி பகிர்வில் கடுமையான அநீதி, வறட்சி நிவாரணம் வழங்காதது, அலட்சியம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் மானியங்களை வழங்குவதில் தாமதம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து முதல் மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறும்போது, இந்த போராட்டம் கட்சி சார்பற்றது. அநீதி மற்றும் வரி ஒதுக்கீட்டில் உள்ள பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டமாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் முன்னேற்றத்திற்காக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து அனைவரும் பங்கேற்க வேண்டும். இது எந்த கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல. அநீதிக்கு எதிரான போராட்டம் என்று தெரிவித்தார்.

    இவரது இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இது ஒரு தேர்தல் ஸ்டண்ட். போராட்டத்திற்கு பதிலாக மத்திய நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கலாம். இந்த போராட்டம் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அதை செய்கிறார்கள். விமான கட்டணம், தங்கும் விடுதி, உணவு மற்றும் இதர செலவுகள் வரி செலுத்துவோரின் பணத்தால் ஏற்கப்படுகிறது என்று கூறினார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அனைவரும் நேற்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரவு டெல்லி போய் சேர்ந்தனர்.

    இதை தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:

    வரி வசூலில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த வருடம் கர்நாடகா 4.30 லட்சம் கோடியை விட அதிக வரிவசூல் பங்களிப்பை கொடுத்துள்ளது. நாங்கள் 100 ரூபாய் வரிவசூல் செய்து, அதை மத்திய அரசிடம் கொடுத்தால், அதன்பின் மத்திய அரசு எங்களுக்கு 12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரைதான் தருகிறது. இதுதான் எங்களுடைய பங்கீட்டு தொகை." என்று பேசினார்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 28 எம்.எல்.சி.க்கள், ஒரு எம்.பி., 5 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட மொத்தம் 135 பேர் கலந்து கொண்டனர்.

    கர்நாடகா சார்பில் டெல்லியில் நடந்த இந்த போராட்டத்தை பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் புறக்கணித்தன.

    • சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.
    • வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அதையும் வழங்கவில்லை.

    சென்னை:

    மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்த சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    கடந்தகால சாதனைகளையும் இந்த பட்ஜெட் சொல்லவில்லை; நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை. எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை.

    மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்து அளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலை குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த பட்ஜெட்.

    வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை.

    எந்தப் பொருளுக்கும் வரி குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை. சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.

    உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை.

    இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவேண்டும்?

    நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லாநிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.


    இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.

    மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா என சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, பாராளுமன்ற தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்க குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

    நாட்டில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

    ஆனால் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வரிகள் மீது கூடுதல் வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிரவேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

    இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.

    மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 'தீவிர இயற்கைப் பேரிடர்' ஆக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.


    மெட்ரோ ரெயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டு காலமாக சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

    பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி, நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை ஒன்றிய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்?

    இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய 4 பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த 4 பிரிவினர்களையும் 4 சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூக நீதிக்குப் புறம்பானது.

    "சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்" என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையை சரிசம விகிதத்தில் 'பறிப்பதுதான்' பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்து சிரிப்பு வருகிறது.

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும், சூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சக்கட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பா.ஜ.க.வுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.

    2047-ம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதன் முதலாக நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இந்தியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

    தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
    • பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:

    பட்ஜெட்டை கவனமாகக் கேட்டேன். இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இது அவர்களின் அன்றாடப் பணிகளுக்கான பட்ஜெட். 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளின் விவரத்தை கொடுக்கவில்லை.

    எத்தனை வாக்குறுதிகளை அளித்தார்கள், எத்தனை நிறைவேற்றினார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். ஒப்பிட்டு அறிக்கை கொடுக்கவேண்டும்.

    2014-க்கு பிறகுதான் நாடு சுதந்திரம் பெற்றது என்றும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாடு ஜனநாயகத்தைப் பார்க்கிறது என்றும் நினைக்கிறார்கள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறிய வாக்குறுதி என்ன ஆனது?

    கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் எனக்கூறிய அனைத்து வாக்குறுதிகளும் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

    ஆம் ஆத்மி கட்சி எம்பி சுஷில் குமார் ரிங்கு:

    இளைஞர்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் தங்களது மேம்பாடு பற்றி இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டில் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டினால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

    காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா ஷிண்டே:

    மத்திய அரசு இன்னும் மறுப்பு நிலையில் உள்ளது. பிரச்சனைகளை ஏற்க தயாராக இல்லை. இந்த இடைக்கால பட்ஜெட்டில் சாமானிய மக்கள், வேலைவாய்ப்பு, விவசாயம், பெண்கள் குறித்து எதுவும் இல்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையான வருமானம் 25 சதவீதம் குறைந்துள்ளதாக அரசின் தகவல் கூறுகிறது.

    தி.மு.க. எம்.பி. சிவா:

    அடுத்த முழு பட்ஜெட்டுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நாங்கள் வந்து தாக்கல் செய்வோம். இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வருகிற தேர்தலுக்குப் பிறகு சிறந்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என தெரிவித்தார்.

    • இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள், பெண்களுக்கானது.
    • பாராளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்டு, புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

    இறக்குமதி வரி உள்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.7 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும் என தெரிவித்தார்.

    மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், இலக்குகள் குறித்த விவரங்களும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்தது.

    இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் எளிய மக்களுக்கானது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், பாராளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள், பெண்களுக்கானது. மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை கொடுக்கும் என்றார்.

    • மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
    • மொரார்ஜி தேசாய் ஆறுமுறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தபோது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

    அதில் இருந்து தற்போது வரை அவர்தான் நிதியமைச்சராக இருந்து வருகிறார். வருகிற 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கு முன்னதாக முழுமையாக 5 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது 6-வது முறையாக பட்ஜெட் (இடைக்கால) தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதன்மூலம் தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது நிதியமைச்சர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக மொரார்ஜி தேசாய் (1959-1964) ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் ஐந்து முறை முழுமையான பட்ஜெட். ஒருமுறை இடைக்கால பட்ஜெட். இதுபோன்றுதான் நிர்மலா சீதாராமனும் ஐந்து முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது அருண் ஜெட்லி நிதியமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் ஐந்து பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். 2017-ல் பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 1-ந்தேதிக்கு மாற்றி முதன்முறையாக தாக்கல் செய்தார்.

    உடல்நலக்குறைவால் அவரிடம் இருந்த நிதியமைச்சர் பதவி பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.
    • நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2023-24ல் மொத்த செலவினம் ரூ.45,03,097 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்த மூலதனச் செலவு ரூ.10,00,961 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளின் அமளி, ராகுல் காந்திக்கு எதிராக ஆளும் பாஜக எம்.பி.க்களின் போர்க்கொடி என பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் பணிகள் முடங்கின. இதனால் பட்ஜெட் மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எனவே, மக்களவையில் விவாதம் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

    மக்களவையில் அடுத்தடுத்த ஒத்திவைப்புகளுக்கு பிறகு மாலையில் மீண்டும் அவை கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா, அரசின் செலவின திட்டத்தில் திருத்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் 2023-24க்கான மானிய கோரிக்கைகள் மற்றும் அதன் தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், விவாதமின்றி மசோதா நிறைவேற்றப்பட்டது. பட்ஜெட் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் மோடி அவையில் இருந்தார்.

    பட்ஜெட்டுக்கு பாராளுமன்ற ஒப்புதல் வழங்க தேவையான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நடைமுறை 12 நிமிடங்களில் நிறைவடைந்தது. இனி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்வைத்த வரி திட்டங்களை கொண்ட நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

    பட்ஜெட் தொடர்பான மசோதாக்கள் அனைத்தும் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் மசோதாக்கள் மீது எந்த மாற்றமும் செய்ய முடியாது. மக்களவையில் மட்டுமே ஒப்புதல் தேவைப்படும் 'பண மசோதாக்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மசோதாக்கள் விவாதத்திற்குப் பிறகு மக்களவைக்கு திருப்பி அனுப்பப்படும்.

    நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைய உள்ளது. பட்ஜெட் நடைமுறைகள் முடிந்த பிறகு கூட்டத் தொடரின் காலம் குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • மத்திய பட்ஜெட் குறித்த பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசார கூட்டம் வட்ட பிள்ளையார் கோவில் முன்பு நடந்தது. மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துராமன், ரவிசந்திரன், ரங்கசாமி, முத்துசெல்வம், குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னதாக நடந்த மண்டல கூட்டத்தில் கட்சி நிதி வழங்கப்பட்டது. நிர்வாகி ராஜாராம் நன்றி கூறினார்.

    இதேபோல் முள்ளிப்பள்ளம் கிராம சமுதாய கூடத்தில் பா.ஜ.க. வாடிப்பட்டி தெற்கு மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது. மண்டல பார்வையாளர்-மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிராஜன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • ஐதராபாத் தெருக்களில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
    • ஐதராபாத் நகர பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ந் தேதி ஐதராபாத் நகருக்கு வருகிறார். செகந்திராபாத் ரெயில் நிலையத்தை நவீன மயமாக்குதல் மற்றும் பிற ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, ஐதராபாத் தெருக்களில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    குறிப்பாக ஐதராபாத் நகர பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இந்த போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

    "இந்தியாவின் வளர்ச்சிக் கதை என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள போஸ்டர்களில் விஷ பட்ஜெட் பை பை மோடி" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் 2014-ல் முழுவதுமாக வளர்ந்த தலைமுடியும், 2023-ல் வழுக்கையுடைய நபரின் படங்களும் அதில் உள்ளன.

    போதை பட்ஜெட்டுக்கு நன்றி மோடிஜி-தெலுங்கானா நடுத்தர வர்க்க மக்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த போஸ்டர்கள் ஐதராபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் ரெயில் பாதை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் புதிதாக 9 வழித்தடங்களில் ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. ரூ.1057 கோடி செலவில் இந்த பாதைகள் அமைக்கப்படுகிறது.

    சென்னை எண்ணூர் துறைமுகமான அத்திப்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் புத்தூருக்கு 88 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா, ஆந்திரா மற்றும் எண்ணூர் துறைமுகத்துக்கு இரும்பு தாது மற்றும் நிலக்கரி கண்டெய்னர்களை கொண்டு செல்ல அத்திப்பட்டு-புத்தூர் வழித்தடம் அவசியமாகும்.

    தற்போது திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில்பாதை அமைக்கப்படுகிறது.

    இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திண்டிவனம்-திருவண்ணாமலை இடையே 8 ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    திண்டிவனத்தில் இருந்து ஆரணி, வாலாஜா வழியாக நகரிக்கு 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு 155 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட உள்ளது.

    மேலும் மொரப்பூரில் இருந்து தர்மபுரிக்கு 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    ஈரோட்டில் இருந்து பழனிக்கு 91 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.57.9 கோடி ஒதுக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள புதிய ரெயில் பாதைக்கு ரூ.385.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய ரெயில் பாதைகள் மாமல்லபுரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் தனுஷ்கோடியை தமிழகத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும்.

    மேலும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரெயில் இயக்குவதற்கும் வழிவகுக்கும்," என்றார்.

    • 2022-23-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்காக தமிழகம் பெற வேண்டிய தொகை ரூ.38,731.24 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 2023-24-ம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற கருத்து பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிதித்துறை மூத்த அதிகாரி கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு துறை வாரியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்தவித திட்ட அறிவிப்பும் குறிப்பிட்டு அதற்கு நிதி எதுவும் ஒதுக்காதது ஏமாற்றம் தான்.

    ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதை குறைந்தது மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. அதுமட்டுமல்ல மாநிலங்களுக்கு கடன் வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளும் வரையரைக்கப்பட்டு உள்ளது.

    2022-23-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்காக தமிழகம் பெற வேண்டிய தொகை ரூ.38,731.24 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வருவாய் உயரும். இது 2022-23-ம் ஆண்டுக்கான மாநிலத்தின் பட்ஜெட் ரூ.33,311 கோடியை விட அதிகமாகும்.

    2023-24-ம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 0.5 சதவீதம் மின்துறை சீர்திருத்தங்களுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    2023-24-ம் ஆண்டிற்கான மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு ரூ.41,664.86 கோடியாக இருக்கும் என்று அதில் மதிப்பிடப்பட்டுள்ளது.

    தோல் மற்றும் தோல் அல்லாத பாதணிகள் மற்றும் எலக்ட்ரோ லைசர் உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம் மற்றும் மரப்பொருட்கள் துறையில் முதலீட்டை ஈர்க்க இறக்குமதி செய்யப்படும் மரத்தின் மீதான வரியை குறைக்கவும் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அது பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    கர்நாடகா மாநிலத்துக்கு 5 ஆயிரம் கோடி அளவுக்கு நிதிஒதுக்கப்பட்டது போன்று தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஜி.எஸ்.டி. வரி வருவாய் தான் நமக்கு முக்கியமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது சொல்லப்படவில்லை.
    • இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கிறார்களோ அதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் விலை குறையும்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் சிகரெட்டுக்கு 16 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மீது தேசிய பேரிடர் தொகுப்பு வரி போடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்த வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

    சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிகரெட்டின் விலை 5 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரையில் உள்ளது. 16 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் 10 ரூபாய் சிகரெட்டின் விலை ஒரு ரூபாய் 60 காசு அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் 5 ரூபாய் சிகரெட் 80 காசுகள் உயர்ந்து ரூ.5.80 ஆகும். இதேபோன்று 20 ரூபாய் மதிப்பிலான சிகரெட்டின் விலை 3 ரூபாய் 20 காசு உயர்கிறது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வருவதால் சிகரெட் பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    செல்போன், டி.வி. ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலைகள் குறையும். தொலைக்காட்சி பாகங்களுக்கான சுங்கவரி 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டி.வி. விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.வி.யின் விலை ரூ.3 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன், பேட்டரி மீதான இறக்குமதி மீதான வரியும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் செல்போன் விலை ரூ.500 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக பிரியதர்ஷினி செல் யூனிவர்ஸ் நிறுவனர் எம்.ஜி.சுரேஷ் குமார் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் செல்போன்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

    இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களின் விலை இனி குறைய வாய்ப்பு உள்ளது.

    இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது சொல்லப்படவில்லை. இறக்குமதி வரி எத்தனை சதவீதம் குறைக்கிறார்களோ அதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் விலை குறையும்.

    இருந்தாலும் இனிவரும் காலங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்கள் விலை 5 சதவீதம் வரை விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களின் விலை ரூ.500 வரை குறையும். அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பு இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
    • 2 ஆண்டுகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.

    அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×