search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deve Gowda"

    • இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • 90 வயதான தேவகவுடா வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மற்ற மாநில முதல்-மந்திரிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து குமாரசாமி மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் 90 வயதான தேவகவுடா பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை 11 நாட்கள் மாநிலத்தில் 42 இடங்களில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 90 வயதான தேவகவுடா வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இதனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒருமுறை அவர் ஓய்வெடுப்பது வகையிலும் அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தேவகவுடா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

    • துமகூரு மாவட்டம் மதுகிரி தொகுதியில் தேவகவுடா கலந்துகொண்டு உருக்கமாக பேசினார்.
    • துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தர வேண்டும்.

    துமகூரு :

    துமகூரு மாவட்டம் மதுகிரி தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.கைமாராவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சிவேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்துகொண்டு உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 1995-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது துமகூரு மாவட்டத்தில் 9 இடங்களில் வெற்றியை இந்த மக்கள் வழங்கினார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பஞ்சரத்ன யோஜனா திட்டத்தைசெயல்படுத்த நினைக்கும் குமாரசாமி, இனி முதல்-மந்திரி ஆவார். துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தர வேண்டும்.

    ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலில் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று காங்கிரஸ், பா.ஜனதாவினர் கூறிவருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூட்டு வலியால் எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் இருந்தேன். ஆனால் சிலர் என்னை துமகூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்படி வற்புறுத்தினர். இதனால் நான் இங்கு வந்து போட்டியிட்டேன்.

    ஆனால் தோல்வி அடைந்தேன். என்னை தேர்தலில் தோற்கடித்ததை நினைத்து நான் கண்ணீர்விட்டேன். என்னை அழவைத்தவர்களை இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வாக்களித்து அழ வைக்க வேண்டும். அப்போது தான் என் ஆன்மா சாந்தி அடையும்.

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    அதாவது, மதுகிரி காங்கிரஸ் வேட்பாளர் ராஜண்ணாவை வீழ்த்த தேவகவுடா மறைமுகமாக இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

    • சுயநல நோக்கம் கொண்டவர்கள் பொய்களை பரப்புகிறார்கள்.
    • எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெறும். நாங்கள் பிரித்தாளும் கொள்கை அடிப்படையில் ஓட்டு கேட்கவில்லை. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடிப்படையில் ஆதரவு கேட்கிறோம். பஞ்சசூத்ரா திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். அதை முன்வைத்து ஓட்டு கேட்கிறோம்.

    ஜனதா தளம் (எஸ்) கட்சி மைசூரு மண்டலத்தில் மட்டுமே உள்ளதாக தேசிய கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. எங்கள் கட்சிக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

    மைசூரு மண்டலம் எங்களுக்கு அதிகளவில் ஆதரவு வழங்கியுள்ளது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த முறை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும்.

    சுயநல நோக்கம் கொண்டவர்கள் பொய்களை பரப்புகிறார்கள். எனது அரசியல் வாழ்க்கையில் பிற கட்சிகளின் பொய்களுக்கு பதில் சொல்ல நான் நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியது இல்லை. கடவுளும், மக்களும் தான் என்னை அரசியலில் கடந்த 60 ஆண்டு காலமாக வளர்த்துள்ளனர். எங்கள் கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களின் கடின உழைப்பு, தொலைநோக்கு திட்டங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    தேசிய கட்சிகள் பெரிய திட்டங்களை அமல்படுத்துவதாக பொய் சொல்கிறார்கள். அவர்களின் நாடகம் மற்றும் பொய்களை மக்கள் பார்த்துள்ளனர். பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும்.

    நாட்டில் காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சி அல்ல. அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் முதலில் காங்கிரஸ் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும்.

    எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. நாட்டுக்கு தலைமை தாங்கும் திறன் கொண்ட தலைவர்கள் அதிகமாக உள்ளனர். ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

    எங்கள் கட்சி தலைவர்கள் இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது துரதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

    • கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் டிக்கெட் வாங்குவது தொடர்பாக தேவ கவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.

    இதற்கிடையே, ஹாசன் தொகுதியில் தனது மனைவி பவானிக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று ரேவண்ணா கேட்டு வருகிறார். இதற்கு குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்த தொகுதியில் கட்சி தொண்டர் ஒருவருக்கு டிக்கெட் வழங்குவதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேவ கவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். இந்த பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு ஓரிரு நாளில் வீடு திரும்புவேன். எனது உடல்நிலை குறித்து யாரும் பயப்பட தேவை இல்லை என பதிவிட்டுள்ளார்.

    • சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது இடஒதுக்கீடு பற்றி பேசவில்லை.
    • சித்தராமையா தலை கணம் பிடித்த அரசியல்வாதி.

    கொள்ளேகால் :

    சாம்ராஜ்நகருக்கு நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சித்தராமையா ஒரு தலை கணம் பிடித்த அரசியல்வாதி. முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளிவிட்டு தான் முதல்-மந்திரி அரியணையில் அமர்ந்துவிட வேண்டும் என்று சித்தராமையா கணக்கு போட்டுள்ளார். அவர் தான் மற்றவர்களுக்கு தலைவலியாக இருக்கிறார்.

    சாதிகளின் பெயரால் சித்தராமையா அரசியல் செய்வது வெட்கக்கேடானது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது இடஒதுக்கீடு பற்றி பேசவில்லை. அவர் எந்த சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அவர் இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தும்படி ஒவ்வொரு சமுதாயத்தினரையும் ஊக்குவித்து வருகிறார்.

    இடஒதுக்கீடு பற்றி சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ?, அதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு செய்து வருகிறது.

    அரசியல் ஆக்கவில்லை

    ராய்ச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் பேசினார். இது கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையா மன்னிப்பு கேட்கும் வரை நான் ஓய மாட்டேன். இதை நான் அரசியல் ஆக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவ கவுடாவிடம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.
    • இந்தச் சந்திப்பின்போது குமாரசாமி உடன் இருந்தார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவால் பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், தேவ கவுடாவை அவரது இல்லத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் தேவ கவுடா விரைவாக குணம் அடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட விரும்புவதாக கூறி வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது குமாரசாமி உடன் இருந்தார்.


    • நெஞ்சில் அடிக்காமல் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் பலம்.
    • தேவகவுடாவால் நிற்கவோ, உட்காரவோ முடியாது என்று கேலி செய்பவர்களும் உண்டு.

    பெங்களூரு:

    பெங்களூருவில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 'ஜனதா மித்ரா' எனும் மக்களை குறை கேட்கும் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. வீடு, வீடாக சென்று மக்களிடம் குறை கேட்பதும், ஜனதாதளம் (எஸ்) ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறுவதும் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த ஜூலை 1-ந்தேதி (நேற்று) முதல் 17-ந்தேதி வரை பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளிலும் நடக்கிறது. 17-ந்தேதி நிறைவு நாளில் பெங்களூருவில் பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஜே.பி.பவனில் உள்ள சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா, அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எச்.டி.குமாரசாமி, கேரள மாநில நிர்வாகி கிருஷ்ணன் குட்டி, எம்.எல்.ஏ. தாமஸ் டி.மேத்யூ உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஜனதா மித்ரா நிகழ்ச்சியை தேவகவுடா கொடி அசைத்து தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று நல்ல நாள். ஜனதா மித்ரா நிகழ்ச்சியை தொடங்கிவைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் குமாரசாமி, சி.எம்.இப்ராகிம் உள்பட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், தேர்தலில் போட்டியிடுபவர்களும் வந்துள்ளனர். கேரளாவில் நமது கட்சியின் பெருமையை எடுத்துக்கூறி வரும் கிருஷ்ணன்குட்டியும் இங்கு வந்துள்ளார். முதலில் ஜனதா ஜல்தாரே திட்டத்தை செயல்படுத்தினோம்.

    இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்தொடர்ச்சியாக தற்போது ஜனதா மித்ரா திட்டத்தை தொடங்கியுள்ளோம். பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி வரை இந்த திட்டம் நடைபெறும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூருவின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தேன். தேவகவுடா ஒரு கிராமத்துக்காரர், பெங்களூருவுக்கு என்ன செய்ய முடியும் என்று சொல்பவர்களும் உண்டு.

    கட்சியை கவிழ்க்க யார் முயன்றாலும் பரவாயில்லை. நான் கட்சியை பலப்படுத்த போராடுவேன். பல முறை கட்சியை அழிக்க சிலர் முயன்றனர். இருப்பினும் கட்சியை காப்பாற்றி இன்றும் கட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். தேவகவுடாவால் நிற்கவோ, உட்காரவோ முடியாது என்று கேலி செய்பவர்களும் உண்டு. அதை பொருட்படுத்தாமல் நான் நூற்றாண்டாக போராடி இன்று கட்சியை வெற்றி பாதையில் அழைத்து சென்று வருகிறேன். இங்குள்ள மக்களைப் பார்த்தால் நமது கட்சியின் பலம் என்னவென்று தெரியும். நெஞ்சில் அடிக்காமல் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் பலம். ஜனதா மித்ரா திட்டத்துடன் நான் இருப்பேன். கட்சியை யார் அழிக்க முயன்றாலும், முடியாது. கட்சியை காக்கவும், வெற்றிக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக மாநிலம், தும்கூரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமரும் அம்மாநிலத்தின் முதல் மந்திரி குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா தோல்வி அடைந்தார்.
    பெங்களூரு:

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரும் அம்மாநிலத்தின் முதல் மந்திரி குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தொகுதிமாறி தும்கூரில் போட்டியிட்டார்.

    அங்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பசவராஜ் 5 லட்சத்து 96 ஆயிரத்து 127 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 5 லட்சத்து 82 ஆயிரத்து 788 வாக்குகளை பெற்ற தேவேகவுடா 13 ஆயிரத்து 339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
    திருச்சி:

    கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று காலை மன்னார்குடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலை அவர் திருச்சி ஸ்ரீரங்கம் வந்து ரெங்கநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகன் ரேவண்ணாவும் வந்திருந்தார். அவர்களை கோவில் தலைமை பட்டரான சுந்தர் பட்டர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து கருடாழ்வார், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் தேவேகவுடா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தேவேகவுடா வருகையையொட்டி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து, நாளை மறுநாள் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் முக்கிய தலைவர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு சென்றார். இதே போல் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவிலில் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆனால், அவருக்கு பக்கபலமாக இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #Rahul
    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கி உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் பாராளுமன்றத் தொகுதியில், பாஜக வேட்பாளர் ஜிஎஸ் பசவராஜை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தனது எதிர்கால திட்டம் குறித்தும் தேவேகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நான் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எந்த லட்சியமும் இல்லை. ஆனால், எப்போதும் கூறுவது என்னவென்றால், நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை.



    நான் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக குமாரசாமி கூறியது பற்றி பெரிதுபடுத்தவில்லை. எங்கே மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிடுவாரோ என்பதுதான் என் கவலை. இதை பிரதமரின் முகத்தை பார்த்து சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் உள்ளது. ராகுல் காந்தி பிரதமராக வந்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருப்பேன். பிரதமர் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #DeveGowda #Rahul
    மோடியை விட தனது தந்தை தேவேகவுடா சிறந்த பிரதமராக மக்களுக்கு சேவை செய்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Kumaraswamy #DeveGowda
    ஹூப்ளி:

    கர்நாடக முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவேகவுடா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    எனது தந்தை தேவேகவுடாவின் ஆட்சிக்காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் அதிக அக்கறை செலுத்தினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.



    தேவேகவுடாவின் 10 மாத ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது? மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன நடந்தது? என்பதை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    தேவேகவுடா ஆட்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரில் ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை. நாட்டிற்குள்ளேயும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கவில்லை.

    பாலக்கோட் விமான தாக்குதலை பாராளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்துகிறார். இதுவரை எந்த பிரதமரும் இதுபோன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில் ஆதாயம் தேடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவேகவுடா 1996ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Kumaraswamy #DeveGowda
    கர்நாடகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நானும், சித்தராமையாவும் இணைந்து கூட்டு பிரசாரம் செய்ய உள்ளோம் என்று தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #Siddaramaiah
    பெங்களூரு :

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறார். 86 வயதிலும் கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நான் யாரை பற்றியும் தரக்குறைவாக பேச மாட்டேன். அவ்வாறு பேசும் பழக்கம் எனக்கு இல்லை. மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஊடகங்களுக்கு ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பா.ஜனதாவின் சாதனைகள், தனிப்பட்ட பிரசாரத்தை ஒளிபரப்புவது போன்ற விஷயங்களை ஊடகங்கள் செய்கிறார்கள்.

    பிரதமர் மோடி கர்நாடகத்தில் 6 இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். பா.ஜனதா வேட்பாளர்கள், தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக மோடிக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள். ஊடகங்களும் மோடிக்கு ஆதரவாக பேசுகின்றன.



    இன்று ஆந்திராவுக்கு செல்கிறேன். சந்திரபாபு நாயுடு கட்சியின் பிரசாரத்தில் கலந்து கொள்கிறேன். 9-ந் தேதி (நாளை) முதல் நானும், சித்தராமையாவும் ஒன்றாக இணைந்து கூட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். நாங்கள் வருகிற 13-ந் தேதி வரை ஆதரவு திரட்ட உள்ளோம்.

    நாங்கள் என்ன செய்துள்ளோம், அவர்கள் என்ன செய்துள்ளனர் என்று கூறி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். இறுதியில் கர்நாடக மக்கள் என்ன முடிவு செய்கிறார்களோ செய்யட்டும்.

    மண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. தேவேகவுடா குடும்பத்தை இலக்காக வைத்துக்கொண்டு சோதனை நடத்துகிறார்கள்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #Siddaramaiah
    ×