search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ben stokes"

    • ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 16 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலப்பட்டியலில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உள்பட 405 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும். இதையொட்டி ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களில் இருந்து 405 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதில் 273 பேர் இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 4 பேர் உறுப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் உடையவர்கள். 282 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடாதவர்கள். உறுப்பு நாட்டை சேர்ந்த 4 வீரர்களும் இதில் அடங்குவார்கள்.

    ஏலத்தில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வளர்ந்து வரும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ரிலீ ரோசவ், சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜாசன் ராய், வெஸ்ட்இண்டீசின் நிகோலஸ் பூரன் உள்பட 19 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.2 கோடியில் இருந்து இவர்களின் ஏலத்தொகை தொடங்கும்.

    இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா உள்பட 11 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாகவும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே உள்பட 20 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சீனியர் வீரர்கள் இஷாந்த் ஷர்மா, ரஹானே, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் தொடக்க விலை ரூ.50 லட்சமாகும்.

    எப்போதுமே வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். எனவே பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் போன்ற வீரர்களை வாங்க பல அணிகள் முயற்சிக்கும் என்பதால், அவர்களுடைய ஏலத்தொகை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது.

    ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் தான் ஏல கையிருப்பு தொகை அதிகமாக இருக்கிறது. ரூ.42¼ கோடி வைத்து இருக்கும் அந்த அணி 13 வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.20.45 கோடி உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 7 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பாபா அபராஜித், பாபா இந்திரஜித், திரிலோக் நாக், சோனு யாதவ், முருகன் அஸ்வின், சூர்யா, பி.அனிருத், என்.ஜெகதீசன், பி.ராக்கி, சுரேஷ்குமார், அஜிதேஷ், சஞ்சய் யாதவ், சித்தார்த், ஹரி நிஷாந்த், சந்தீப் வாரியர், எஸ்.அஜித் ஆகிய 16 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். லிஸ்ட் ஏ போட்டியில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த என்.ஜெகதீசனை வசப்படுத்த அணிகள் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சமாகும்.

    • மூன்று டெஸ்டில் இரண்டு சதம், ஒரு அரைசதம் விளாசியுள்ளார்.
    • இரண்டு டெஸ்டிலும் அடுத்தடுத்து சதம் விளாசியுள்ளார்.

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    ஆனால், இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பயமில்லா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இருவருடைய எண்ணம்போன்று இங்கிலாந்து முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடியது.

    ஒவருக்கு சராசரியாக 6 ரன்கள் என்றவிதம் பேட்டிங் செய்து பாகிஸ்தான் பந்து வீச்சை திணறடித்தனர். இதன் காரணமாக இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

    அந்த அணியின் ஹேரி ப்ரூக் பேட்டிங் இங்கிலாந்து வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ராவல்பிடிண்யில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 116 பந்தில் 153 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 65 பந்தில் 87 ரன்கள் சேர்த்தார்.

    ஹேரி ப்ரூக்

    ஹேரி ப்ரூக்

    முல்தானில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 149 பந்தில் 108 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.

    22 வயதாகும் ப்ரூக் கடந்த ஜனவரி மாதம் டி20 அணியில் அறிமுகம் ஆனார். செப்டம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். ஒருநாள் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார்.

    இந்த நிலையில் ஹேரி ப்ரூக்கை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் ஒப்பிட்டுள்ளார். ப்ரூக் குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாகவது:-

    கடந்த கோடைக்கால சீசனில் அணியில் இணைந்த ப்ரூக் தற்போது, கோடைக்கால சீசன் முடிவடைவதற்குள் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகும் வகையில் முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் தொடரில் அவர் விளையாடிய விதம் அபாரமானது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஜொலிக்கும் அரிய வீரர்களில் ஒருவராவார். எந்த இடத்திலும் ஜொலிக்கும் வீரராக அவரை பார்க்கலாம்.

    அதேவேளையில், அரிய வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் விராட் கோலி. அவருடைய தொழில்நுட்ப ஆட்டம், மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் எந்த இடத்திலும் ரன்கள் குவிக்க எளிதாக்குகிறது.'' என்றார்.

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது.

    கராச்சி:

    17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் நவம்பர் 27 அன்று இஸ்லமாபாத் வந்தடைந்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9-ந் தேதி முலதானிலும், கடைசி டெஸ்ட் போட்டி 17-ம் கராச்சியிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் போட்டிக்கான சம்பளத்தொகையை பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புக்கு தருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தானில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்பு உணர்வு உள்ளது மற்றும் இங்கு இருப்பது சிறப்பிக்குரியது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. இது பாகிஸ்தான் நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது.

    கிரிக்கெட்டை தாண்டி திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இருந்து எனது போட்டிக்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள்.
    • ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சூர்ய குமார் யாதவின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடரில் அடிலெய்டில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியை, இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக ஜொலித்து வருகிறார். அவர் சிறப்பு வாய்ந்த வீரர். அவர் அடிக்கும் சில ஷாட்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிரமாதமாக உள்ளது. அவரது அதிரடியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் சில சமயங்களில் பவுலர்கள் விழிபிதுங்குவதை பார்க்க முடிகிறது. தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும் அவரது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்துக்கு எங்களால் அணைபோட முடியும் என்று நம்புகிறோம்.

    விராட்கோலியை பொறுத்தவரை எல்லா வடிவிலான போட்டிகளிலும் அவர் குவித்து இருக்கும் ரன்களே அவரது திறமையை பறைசாற்றும். ஒரு சில சமயங்களில் அவர் சரியாக ஆடாத போது, அவரது கதை முடிந்து விட்டது என்று விமர்சனங்கள் வருவது ஏன்? என்பது தெரியவில்லை. அவருக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். அவரை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம்.

    எங்களிடம் இருந்து இன்னும் மெச்சத்தகுந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆனாலும் சமாளித்து அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டோம். இப்போது இங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறோம். அதனால் போட்டியை உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளோம்.

    நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். இந்திய அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். நாங்கள் எதிரணியை பற்றி அதிகமாக சிந்திக்காமல் எங்களுடைய அணி குறித்து அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம்.

    ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் இந்த வடிவிலான போட்டியில் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பென் ஸ்டோக்ஸ் பதில் அளிக்கையில், 'அப்படி நடந்தால் அது இந்தியா, பாகிஸ்தான் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால் இதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காகவே வந்து இருக்கிறோம். அதனை செய்ய முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.

    • வலுவான இந்திய அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
    • இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதினால் அது சிறந்த போட்டியாக அமையும்.

    அடிலெய்டு:

    டி20 உலகக் கோப்பை தொடரில் வியாழன் அன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும்  2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பாக விளையாடவில்லை. இந்தியாவுடனான அரையிறுதி மோதலுக்கு முன்னதாக எங்களது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வியாழன் அன்று விக்கெட் எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

    அடிலெய்டு நாங்கள் விளையாடிய மைதானங்களில் இருந்து வேறுபட்டது, நாங்கள் பெரிய சதுர எல்லைகள் கொண்ட மைதானங்களில் விளையாடியுள்ளோம், ஆனால் இங்கே நாங்கள் எங்கள் திட்டங்களை கொஞ்சம் மாற்ற வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, அழுத்தத்தைக் குறைக்க நான் ஸ்கோர்போர்டைப் பார்த்து, விளையாட்டை எளிதாக்க முயற்சிக்கிறேன்.

    வலுவான வீரர்கள் இடம் பெற்ற இந்திய அணியை எந்த அணியும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எதிர் அணியை பற்றி அதிகம் சிந்திக்காமல், எங்கள் மீது கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம். செய்ய வேண்டியதை மட்டும் செய்வோம்.

    இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுமா என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்புகிறேன், அப்படி இருந்தால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு சிறந்த போட்டியாக அமையும். நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை விளையாடி வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் இனிமேல் இங்கிலாந்து பயப்படப்போவதில்லை.
    • இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக மரியாதை கொடுக்கும்.

    அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஏப்ரல் மாத தொடக்கத்தில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை மீண்டும் வெல்லும் என்று சொல்லி இருந்தால் நாங்கள் அவர்களால் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாது என கூறியிருப்போம். ஆனால், கோடைக்கால டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்த முடிவு தெளிவானது.

    அடுத்த கோடைக்கால ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படும் என்றார். இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக மரியாதை கொடுக்கும். இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதையும், அவர்களால் எந்த இடத்திலும் அபாயகரமானவர்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு தெரியும். தோல்வி பயம் இல்லாமல் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவது தற்போதைய இங்கிலாந்து அணியை மிகவும் உற்சாகமான அணியாக மாற்றி உள்ளது.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் இனிமேல் இங்கிலாந்து பயப்படப்போவதில்லை. மெக்கல்லம் - ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி அழுத்தமில்லாமல் அதிரடியாக விளையாடும் போக்கினை அணியில் பழக்கப்படுத்தி இருக்கின்றனர்.


    எல்லா அணிகளும் இந்த மாதிரி அதிரடியாக விளையாட வேண்டுமென நினைக்கிறேன். கடைசி கோடைக் காலத்தில் இங்கிலாந்து எப்படி டெஸ்ட் போடியை விளையாட வேண்டுமென உலகத்திற்கே தெரிவித்தது. அடுத்த ஆஷஸ் கோப்பையை நிச்சயமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி வெல்லும் என்றார்.

    இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் 34-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 2017-18 ஆஷஸ் தொடரை வென்று, 2019 தொடரை சமன் செய்ததுள்ளது . அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் 4-0 என ஆஸ்திரேலிய அணி வென்று ஆஷஸ் கோப்பையை தங்கள்வசம் வைத்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னிலும், 2வது இன்னிங்சில் 179 ரன்னிலும் சுருண்டது.
    • 2வது டெஸ்டில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பென் போக்ஸ் 113 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் 103 ரன்னில் அவுட்டானார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், மகாராஜ், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 264 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களிடம் சிக்கிய தென் ஆப்பிரிக்கா திணறியது. அந்த அணியில் பீட்டர்சன் 42 ரன்னும், வான் டெர் டுசன் 41 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து 179 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு அளிக்கப்பட்டது.

    • நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லண்டன்:

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் இவர் இந்த ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார்.

    2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் இன்று அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

    தனது ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில்:-

    நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். ஒரு நம்பமுடியாத பயணத்தை நாங்கள் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எங்களது வெவ்வேறு விதமான திட்டமிடல் எல்லாம் 5 வாரத்துக்கு முன்பு இருந்து தொடங்கியது.
    • இது போன்று விளையாடும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன்.

    பர்மிங்காம்:

    டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை விரட்டி பிடித்த பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'வீரர்கள் இது போன்று விளையாடும் போது எனது பணி எளிதாகி விடுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருந்து விட்டால் இத்தகைய இலக்கை அடைவது எளிது.

    5 வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது அச்சத்தை அளித்திருக்கும். ஆனால் இப்போது எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லா பெருமையும் பேர்ஸ்டோ, ஜோ ரூட்டையே சாரும். இங்கிலாந்து மண்ணில் எப்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். எங்களது வெவ்வேறு விதமான திட்டமிடல் எல்லாம் 5 வாரத்துக்கு முன்பு இருந்து தொடங்கியது.

    டெஸ்ட் கிரிக்கெட் எப்படி விளையாடப்படுகிறது என்பதை மாற்றி எழுத முயற்சிக்கிறோம். இது போன்று விளையாடும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன் ' என்றார். மேலும் அவர், 'எங்களது அதிரடியான அணுகுமுறையை கண்டு இனி 3-வது இன்னிங்சில் எதிரணியினர் பயப்படுவார்கள். அதாவது எவ்வளவு இலக்கு நிர்ணயித்தால் போதுமானதாக இருக்கும், நாங்கள் 4-வது இன்னிங்சில் எந்த மாதிரி ஆடுவோம் என்பதில் தெளிவு கிடைக்காமல் குழம்புவார்கள்' என்றும் குறிப்பிட்டார்.

    • இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும்.
    • கேஎல் ராகுல்-ரோகித் சர்மா உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.

    இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தொடரை இழந்தது. 2 போட்டிகளில் டிரா ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியில் வெற்றி பெற்றது. இதே மன நிலையில் தான் இந்தியாவுடனான 5-வது டெஸ்ட்டில் விளையாடுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் என இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்திய அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    5-வது டெஸ்ட் போட்டியை கடந்த ஆண்டே முடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் என உணர்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இழப்பதற்கு ஏதும் இல்லை என்று தெரிந்தபிறகு பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவராக மாறி விடுவார்.

    இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும். இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய போது புது பந்தில் கேஎல் ராகுல் - ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். தற்போது கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.

    இங்கிலாந்து அணி இதற்கு முன்பு ஜோரூட் தலைமையில் 17 டெஸ்ட்டில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் தொடரில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

    பென் ஸ்டோக்ஸின் சிறந்த விஷயம் என்னவென்றால் வீரர்கள் இங்கிலாந்துக்காக சிரித்த முகத்துடன் விளையாட வேண்டும் என்று அவர் விரும்புவார். பயப்பட ஒன்றுமில்லை. உங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுங்கள். இந்த வேலை செய்தால் அது அணிக்கு சிறந்ததாகும். ஆனால் எப்படி விளையாட வேண்டும் என்பதை எண்ணி பயப்பட வேண்டாம். கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு உங்களுக்கு இருந்தால் அது பெரிய விஷயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது.
    • இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 டெஸ்டுகளிலும் 250 ரன்களுக்கு மேலான இலக்கை தடாலடியாக ரன்மழை பொழிந்து எட்டிப்பிடித்தது. கொரோனா பிரச்சினையால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இதே போல் அதிரடி காட்டுவோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், 'உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. அடுத்து நாங்கள் மற்றொரு அணியை எதிர்கொண்டாலும் கூட அதே மனநிலையில் (ஆக்ரோஷமான ஆட்டம்) தான் விளையாடுவோம். அதில் மாற்றம் இருக்காது.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டுகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதை இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தற்போது இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் தீவிரமாக உள்ளனர். கடந்த ஆண்டு மனஅழுத்தம் காரணமாக இந்த தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஒதுங்கி இருந்தது நினைவு கூரத்தக்கது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பேர்ஸ்டோவ்-ஓவர்டேன் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒரு சிக்சர்கள் அடங்கும். இந்த சிக்சர்கள் மூலம் அவர் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் 3-வது இடத்தில் (100 சிக்சர்கள்) உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்கள்) சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் 176 போட்டிகளில் விளையாடி 107 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கில்கிறிஸ்ட் 100 சிக்சர்கள்களுடன் 2-வது இடத்திலும் பென் ஸ்டோக்ஸ் 100 சிக்சர்கள்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 8 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைப்பார்.

    ×