search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அரைஇறுதியில் சூர்யகுமாரின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்- பென் ஸ்டோக்ஸ்
    X

    அரைஇறுதியில் சூர்யகுமாரின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்- பென் ஸ்டோக்ஸ்

    • நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள்.
    • ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சூர்ய குமார் யாதவின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடரில் அடிலெய்டில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியை, இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக ஜொலித்து வருகிறார். அவர் சிறப்பு வாய்ந்த வீரர். அவர் அடிக்கும் சில ஷாட்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிரமாதமாக உள்ளது. அவரது அதிரடியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் சில சமயங்களில் பவுலர்கள் விழிபிதுங்குவதை பார்க்க முடிகிறது. தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும் அவரது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்துக்கு எங்களால் அணைபோட முடியும் என்று நம்புகிறோம்.

    விராட்கோலியை பொறுத்தவரை எல்லா வடிவிலான போட்டிகளிலும் அவர் குவித்து இருக்கும் ரன்களே அவரது திறமையை பறைசாற்றும். ஒரு சில சமயங்களில் அவர் சரியாக ஆடாத போது, அவரது கதை முடிந்து விட்டது என்று விமர்சனங்கள் வருவது ஏன்? என்பது தெரியவில்லை. அவருக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். அவரை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம்.

    எங்களிடம் இருந்து இன்னும் மெச்சத்தகுந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆனாலும் சமாளித்து அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டோம். இப்போது இங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறோம். அதனால் போட்டியை உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளோம்.

    நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். இந்திய அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். நாங்கள் எதிரணியை பற்றி அதிகமாக சிந்திக்காமல் எங்களுடைய அணி குறித்து அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம்.

    ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் இந்த வடிவிலான போட்டியில் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பென் ஸ்டோக்ஸ் பதில் அளிக்கையில், 'அப்படி நடந்தால் அது இந்தியா, பாகிஸ்தான் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால் இதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காகவே வந்து இருக்கிறோம். அதனை செய்ய முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.

    Next Story
    ×