search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prabhakaran"

    • விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
    • வெயில் காரணமாக பள்ளிகளை ஒருவாரம் தள்ளி திறக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    3 நாட்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டெல்லி செல்ல உள்ளோம்.

    வெயில் காரணமாக பள்ளிகளை ஒருவாரம் தள்ளி திறக்க வேண்டும்.

    விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் ஒரு மாதம் தங்கியிருந்து எல்லா கிராமங்களுக்கு நேரடியாக சென்ற வேட்பாளர். எல்லா ஊர்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார்.

    கேப்டனுடைய மகன் இங்கே போட்டியிடுகிறார். இந்த மண்ணின் மைந்தர் அவருக்கு கண்டிப்பாக வெற்றி வாய்ப்பை தருவோம் என்று பெண்கள், இளைஞர்கள், புது வாக்காளர்கள் அனைவரும் விஜயபிரபாகரனுக்கு வாக்களித்ததாக கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.

    • நாங்கள் தப்பி வந்திருக்கும் சூழலில் பிரபாகரனின் குடும்பமும் தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளது தானே?
    • துவாரகா தப்பி வந்திருந்தால் அவரது பெரியம்மா விடமாவது தொடர்பு கொண்டு பேசி இருப்பார் தானே.

    சென்னை:

    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவது போல கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாகவும், இறுதிக் கட்ட போரின் போது என்ன நடந்தது? என்பது பற்றியும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடக இணைப்பாளர் சங்கீதன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    எங்கள் தேசத்தின் மகள் துவாரகா. அவரது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் பொட்டு அம்மனை பார்த்து அண்ணன் (பிரபாகரன்) சொல்கிறார். நானோ பொட்டோ குடும்பத்தை வெளியேற்றும் முடிவுக்கு போக முடியாது என்று கூறினார். அதுவே அவரது இறுதி முடிவாகவும் இருந்தது.

    அப்போது எங்களை போன்றவர்கள் எல்லாம் அங்கு இருந்தோம். நாங்கள் தப்பி வந்திருக்கும் சூழலில் பிரபாகரனின் குடும்பமும் தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளது தானே? என்கிற கேள்வியும் இந்த நேரத்தில் எழலாம்.

    ராணுவ பிடிக்கு வெளியில் இருந்த முக்கிய தளபதிகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பலரும் மக்களோடு மக்களாக வெளியேறியுள்ளனர். ஆனால் மக்களோடு மக்களாக அண்ணியோ, துவாரகாவோ வர இயலாது.

    இலங்கையில் நடைபெற்ற சண்டையின் போதே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால் யார்-யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? என்கிற விவரங்கள் முன் கூட்டியே எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதற்காக சிறப்பு போன்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

    வெளிநாடுகளுக்கு சென்று சேர்ந்த பின்னரே பலர் அந்த போனை கைவிட்டு உள்ளனர். இன்றைக்கும் சில தொடர்புகளுக்காக சில போன்கள் காத்திருக்கின்றன. போன் நம்பர்களும் அப்படியே உள்ளன. துவாரகா வெளியில் வந்திருந்தால் நிச்சயமாக அது போன்ற தொடர்பு மூலமாக சென்றிருப்பார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

    துவாரகா தப்பி வந்திருந்தால் அவரது பெரியம்மா விடமாவது தொடர்பு கொண்டு பேசி இருப்பார் தானே. மூத்த பெண் போராளிகளிடமாவது தொடர்பு கொண்டு ஹாய் ஆண்டி.. நாங்கள் இங்கு இருக்கிறோம் என்று பேசி இருப்பார் தானே. இலங்கை ராணுவத்திடம் பிடிபட்ட போராளி ஒருவர் எதையும் பேசி விடக்கூடாது என்பதற்காக தனது நாக்கையே கடித்து துண்டாக்கினார். இதுதான் போராளிகளின் வரலாறு. துவாரகா வெளியில் வந்திருந்தால் அவர் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வெளி நாட்டு கட்டமைப்பும் உறுதியாக இருந்தது. அவர்களிடமாவது துவாரகா பேசி இருப்பார்.

    தேசிய தலைவர் மீண்டும் வந்து விடக் கூடாது என்று எங்களைப் போன்றவர்கள் நினைப்பதாக தவறான பிம்பம் வடிவமைக்கப்படுகிறது. இதுமிகுந்த வேதனையை அளிக்கிறது. தேசிய தலைவர் வந்துவிட்டால் அடுத்தகணமே அவரது பின்னால் அணிவகுத்து நிற்போம்.

    2008-ம் ஆண்டுக்கு பிறகு தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை வரவில்லை. இனி தமிழர்கள் வாழும் காலம் வரை அதுதான் மாவீரர் நாள் உரையாகும்.

    இனி எங்கள் இனத்துக்கான தேசிய தலைவர் என்று யாரும் இல்லை. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இனி வருபவர்கள் இணைப்பாளராக இருக்கலாம்.

    ஒருவேளை துவாரகா இருந்திருந்தால் இயக்கத்தில் உள்ள மூத்த போராளிகளை தொடர்பு கொண்டு பேசி இருப்பார். எனவே அவரை பற்றி வெளியாகும் தகவல்கள் போலியானவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன.
    • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.

    சென்னை:

    இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது.

    90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள் விடுதலைப்புலிகளின் இயக்ககத்தை பயங்கரவாத அமைப்பு போல கருதி தடைகள் விதித்தன. அது மட்டுமின்றி கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடந்த போது அந்த நாடுகள் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்தன.

    சர்வதேச நாடுகளிடம் பெற்ற ஆயுதங்களை கொண்டு 2009-ம் ஆண்டு மே மாதம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இறுதியாக முல்லி வாய்க்கால் பகுதியில் நடந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அவரது மனைவி, மகள், மகன்களும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.

    ஆனால் பிரபாகரனும், மனைவி, மகள் ஆகியோரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியானது. அன்று முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிரபாகரனின் மனைவி, மகள் உயிரோடு இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு சாரார் மறுத்தனர்.

    பிரபாகரன் மனைவி, மகள் பெயரில் சிலர் நிதி வசூல் செய்து முறைகேடு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் நேற்று மாலை புதிய வீடியோ வெளியானது. அதில் துவாரகா போன்ற உருவ அமைப்புடைய ஒரு பெண் தோன்றி பேசினார்.

    துவாரகா பேசியது என வெளியான வீடியோவில் அந்த பெண் பேசுகையில், "சிங்களத்துக்கு எதிரான தமிழ்ஈழ அரசியல் போராட்டம் இன்னும் அப்படியேதான் உள்ளது. அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம் முற்று பெறவில்லை" என்று கூறியிருந்தார். அதே சமயத்தில் சிங்களர்கள் தங்களுக்கு எதிரி அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் இந்த வீடியோவை பார்த்தனர்.

    பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 27-ந்தேதியை எப்போதும் ஈழ தமிழர்கள் மாவீரர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த தினத்தில் இந்த வீடியோ வெளியானதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    14 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட துவாரகா சமூக வலைதளங்களில் தோன்றியதை ஈழ தமிழர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். ஆனால் இந்த வீடியோ குறித்து உடனடியாக சர்ச்சை கருத்துக்களும் வெளியானது.

    செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி துவாரகா பெயரில் போலி வீடியோ தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரது உடல் அமைப்புடன் மற்றொருவர் உடல் அமைப்பை மிக எளிதாக பொருத்தி மோசடி செய்வது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

    நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைப், கஜோல், ஆலியாபட் ஆகியோரது படங்களும் ஏஐ தொழில் நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று துவாரகா பெயரிலும் போலி வீடியோ வெளியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    துவாரகா பெயரில் வெளியான வீடியோ குறித்து இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாட்டு உளவு அமைப்புகள் தீவிர ஆய்வு செய்து வருகின்றன. அந்த வீடியோ போலியானதாக இருக்கலாம் என்று சில உளவு அமைப்புகள் சந்தேகத்தை எழுப்பி உள்ளன.

    விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவினரும் அதை போலி வீடியோ என்று கூறியுள்ளனர்.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • உலகளவில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
    • இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புது சர்ச்சை.

    உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் இன்று (நவம்பர் 27) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி வெளியாகி இருக்கும் வீடியோவால் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த வீடியோவில் பேசிய அவர், "எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகளுக்கு பின் உங்களை நான் சந்திக்கிறேன். தமிழீழ மக்களுக்காக பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன். உலகில் தனித்து நின்று தேச விடுதலைக்காக நாம் போராடினோம். தமிழீழ தாயகத்தை சிங்கள அரசு முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது."

    "ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என எந்த நாடும் இதுவரை உதவவில்லை. ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என கூறிய எந்த நாடும் இதுவரை உதவவில்லை. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது."

    "தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை. தேசிய தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது," என்று பேசியுள்ளார்.

    உண்மையில் வீடியோவில் தோன்றி பேசியது பிரபாகரனின் மகள் துவாரகா தானா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப உதவியால் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • ‘பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.

    சென்னை:

    தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது.

    ஆனால் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில் மதிவதனியும், பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    'பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த தகவலை இலங்கை நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

    இந்த நிலையில் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் 'வீடியோ' காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அந்த நாட்டில் சர்வ மக்கள் கட்சியை நடத்தி வரும் உதயகலா என்ற பெண்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

    துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இலங்கை தமிழர்கள் மத்தியில் விவாத பொருளாகவும் இருக்கிறது.

    இதன் பின்னணி வருமாறு:-

    இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்த தயாபாராஜ், அவரது மனைவி உதயகலா ஆகியோர் ராமேசுவரம் மண்டபம் சிறப்பு முகாமில் தங்களது உறவினர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் மண்டபம் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர்கள் இருந்து வந்தனர். இதில் தயாபாராஜ் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டவர் ஆவார்.

    தற்போது வெளியாகி உள்ள உதயகலா 'வீடியோ' காட்சி மூலம்தான் அவர் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சென்றிருக்கும் தகவல் தமிழக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. உதயகலா, அவரது கணவர் மற்றும் 3 குழந்தைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை நாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    போருக்கு பின்னர் இலங்கை நாட்டில் அமைதி திரும்பியதால் இவர்களை அந்நாடு ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    • விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.
    • நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது.

    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்தின் வருகையும் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியும் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நடந்தது நேர்மாறாக அமைந்துவிட்டது.

    திரை உலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்த விஜயகாந்த் அரசியலிலும் கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அறிமுகத்தோடு வந்தார்.

    2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை அவர் தொடங்கியதும் அவர் அறிவித்த திட்டங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மாற்று அரசியலுக்கான துவக்கமாகவே மக்கள் எதிர்பார்த்தார்கள்.

    2006-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார்கள். விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

    அதேநேரம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உருவானது. 2009 பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதியிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

    அரசியல் களத்தை உணர்ந்த விஜயகாந்த் 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் அ.தி.மு.க.வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி நீடிக்கவில்லை.

    அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வென்றது.

    அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவானது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனாலும் அந்த கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்கள். அதுவும் கைகொடுக்கவில்லை.

    இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. சரியாக பேச முடியவில்லை. எழுந்து நிற்கவும் சிரமப்பட்டார். வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எதிர்பார்த்த பலன் இல்லாமல் போனது.

    அதைதொடர்ந்து கட்சியில் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தினார். அவரது மகன் விஜயபிரபாகரனும் கட்சி பணியில் இறங்கினார்.

    நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது. சுமார் ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.

    மீண்டும் கட்சியை வலிமைப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

    பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராகவும், விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கியும் கட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள். விரைவில் கூட்டப்பட இருக்கும் பொதுக்குழுவில் இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

    தே.மு.தி.க. பா.ஜனதா கூட்டணியில் இருந்து இதுவரை வெளியேறவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியா? தி.மு.க. கூட்டணியா? என்று யோசித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • நான் எல்லோருக்கும் சொல்லும் கசப்பான உண்மை என்னவெனில் அண்ணன் உயிருடன் இல்லை என்பது தான்.
    • அண்ணன் என்றால் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    சென்னை:

    விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சமீபத்தில் அறிவித்தார். இது உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

    பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இறுதிக்கட்ட போரை நடத்திய இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன் சேகாவும் இதை மறுத்துள்ளார்.

    தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.

    இந்நிலையில் 2009 மே 17 வரை இறுதிக்கட்ட போரில் பங்கேற்று சண்டையிட்ட வவுனியாவை சேர்ந்த போராளி அரவிந்தன் என்பவர் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    உண்மை அறிவிப்பு என்ற பெயரில் பழ.நெடுமாறன் அவர்கள் கையெழுத்திட்டு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய எனது கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

    அண்ணன் அவர்கள் (பிரபாகரன்) இருக்கிறாரா? இல்லையா? என்று தொடர்ந்து பேசி 14-வது ஆண்டுக்கு வந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நான் எல்லோருக்கும் சொல்லும் கசப்பான உண்மை என்னவெனில் அண்ணன் உயிருடன் இல்லை என்பது தான். மேலதிகமான சில விசயங்களை எங்களால் பேச முடியாது.

    இது பற்றி பேசக்கூடியவர்கள் இறுதிக்கட்ட போர் களத்தில் நின்றவர்களாகவோ அல்லது அண்ணனின் பாதுகாப்பு அணியில் இருந்தவர்களாகவோ இருந்து பதிலளிப்பதுதான் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

    போராளிகள் நாங்கள் இதை ஒரு சந்தேக கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறோம். ஏனெனில் தற்போது இலங்கையில், போலீசுக்கு தனி அதிகாரம், 13-வது சட்ட திருத்தம் என்று தீர்வு திட்டத்தை தரப்போகும் நிலையில் அதை குழப்பி விடுவதற்கான ஒரு சிலரின் செயலாகத்தான் இதை பார்க்கிறோம்.

    அதே நேரம் புலம்பெயர் தமிழர்களிடம் அண்ணன் விரைவில் வரப்போகிறார் என்று சொல்லி நிதி சேகரித்து வருவதாகவும் அறிகிறோம்.

    இது தமிழர்களுக்கு மீண்டும் ஒரு தலைவர் வரக் கூடாது என்பதற்காக திட்ட மிடப்பட்ட இந்தியாவின் 'ரா'வின் (உளவு அமைப்பு) நிகழ்ச்சி திட்டமாகத்தான் பார்க்கிறோம். காரணம் அண்ணன் என்றால் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    நான் சண்டை களத்தில் அண்ணன் அருகில் இல்லை. ஆனால் மிக நெருங்கிய அளவில் நின்றே போரிட்டோம். எங்களோடு 800 போராளிகள் இருந்தார்கள்.

    சண்டை களத்தில் இருந்து வீடு திரும்பியவர்களையும் அழைத்துதான் நாங்கள் சண்டையிட நேர்ந்தது. இதில் இருந்து எத்தனை பேர் தப்பினார்கள். இறந்து போனவர்களில் எத்தனை பேரின் வெற்றுடல்களை ராணுவத்தினர் எங்களிடம் அடையாளம் காட்டினார்கள்? எத்தனை உடல்களை எங்களிடம் காட்டி அடையாளம் காட்டும்படி கூறினார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும்.

    ஆகவே இதில் இருந்து தப்பி வெளிநாடு சென்றவர்களின் கருத்துக்கள்தான் முக்கியத்துவம் பெற வேண்டும். ஆனால் வெளிநாட்டு ராணுவமோ, அல்லது இந்தியாவில் இருந்து போலியாக வைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி கருத்துக்களோ தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் ஒரு தீர்வையோ தரப் போவது இல்லை.

    இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கிறோம். அண்ணனுடைய பாதுகாப்பில் நின்றவர்கள் எல்லோரும் வெடித்து சிதறி இறந்து போனார்கள். அவர்களது உடல் பாகங்களையும், அங்கங்களையும் கொண்டு வந்து அடையாளம் காட்டியிருந்தார்கள்.

    அந்த சந்தர்ப்பத்தில் அண்ணன் அவர்கள் அவரது முடிவை அவரே தேடிக் கொண்டார் என்பதே என் கருத்து.

    நான் நேரடியாக பார்க்காத சந்தர்ப்பத்தில் அதுபற்றி கருத்து கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். அதுபற்றிய கருத்து சொல்லக் கூடியவர்களாக போராளிகள் நாங்கள் இருக்கிறோம்.

    காலத்துக்கு காலம் அண்ணன் வருவார் என்று சொல்வதும், அதை தொடர்ந்து நடைபெறும் விஷயங்களையும் பார்க்கும் போது தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் செயலாகத்தான் பார்க்கிறோம்.

    அதே நேரம் தமிழினத்துக்கு மீண்டும் ஒரு தலைவர் வரக்கூடாது என்பதற்கான நிகழ்ச்சி திட்டமாக யாருக்கும் அது தேவையோ! அதற்காக இவர்கள் வேலை செய்கிறார்களோ என்று தான் இதை பார்க்கிறோம்.

    அதே நேரம் ஈழ கனவுகளுக்காக போராடியவர்கள்-அவர்களுக்கு துணை நின்றவர்கள் தான் இந்தியாவில் இருந்து பேசினார்களா என்ற சந்தேகத்தை இன்று ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களது கடந்த கால நடவடிக்கைகள் அண்ணன் இல்லை என்பதை மட்டும் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் பிரபாகரனின் ரத்தத்துடன், அவருடைய அப்பா, அம்மா அல்லது குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு சோதனை செய்ய வேண்டும்.
    • பிரபாகரனின் பெற்றோர்களிடம் சோதனை செய்ததாக தெரியவில்லை.

    உலக தமிழர் பேரியக்க தலைவர் பழநெடுமாறன் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறுவது இது முதல் தடவை அல்ல. ஏராளமான தடவை சிங்கள அரசும், சிங்கள ராணுவமும் அறிவித்திருக்கிறது. 1984, 1989, 2004, 2007-ம் ஆண்டுகளிலும் இவ்வாறு அறிவித்தது.

    உலகம் பூராவும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையை குலைக்க வேண்டும். அவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    2009-ல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்ததில் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் குழப்பம் உள்ளது. 2009-மே மாதம் 17-ந்தேதி அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தில் பிரபாகரனும், முக்கிய தலைவர்களும் இறந்துவிட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

    அவருடைய உடல் போன்று ஒரு உடல் கிடைத்திருக்கிறது. அந்த உடலை நாங்கள் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். பரிசோதனை முடிவில் முடிவு அறிவிக்கப்படும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் உடனடியாக இலங்கை அரசின் பாதுகாப்பு துறையின் செய்தித்தொடர்பாளர் அதை மறுத்துவிட்டார். முதல் நாளில் மறுத்த அவரே மறுநாள் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

    மே 18 முள்ளிவாய்க்காலுக்கு சென்றபோது ஒரு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அதை நாங்கள் சூழ்ந்துகொண்டு சுட்டோம். அவர்களும் பதிலுக்கு சுட்டார்கள். சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் இருந்து குண்டுகள் பாயவில்லை அமைதியாயிற்று அதற்கு பிறகு சோதனை போட்டபோது அதில் பிரபாகரனின் உடலும், பொட்டு அம்மனின் உடலும் கிடைத்தது என்று அறிவித்தார்கள்.

    அந்த 2 உடலும் மரபணு சோதனைக்காக அனுப்பி இருக்கிறோம் என்று சொன்னார்கள். இப்படி காலை 11 மணிக்கு அறிவித்தார்கள். 12.15 மணிக்கு அது பிரபாகரனின் உடல் தான் என்பது மரபணு சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ராணுவத்தின் தளபதியான பொன்சேகா அறிவித்தார். பிரபாகரனின் உடல் போன்ற ஒரு உடலின் படத்தையும், உடனே பத்திரிகை துறைகளுக்கும், தொலைக்காட்சிக்கும் வழங்கினார்கள்.

    அப்போது சென்னையில் அரசாங்கத்தின் தடயவியல் துறையில் இருந்த டாக்டர் சந்திரசேகரன் என்பவர் பத்திரிகைகளுக்கு ஒரு தகவலை தெரிவித்தார். அவர் தான் ராஜீவ் குண்டு வெடிப்பில் இறந்தபோது சோதனை செய்து அறிவித்தவர். அவர் கூறும்போது, 'பிரபாகரனின் மரபணு மாதிரிகள் ஏற்கனவே சிங்கள ராணுவத்திடம் இருந்தாலும் உடனடியாக ஒரு மணி நேரத்தில் சோதனை செய்து அறிக்கை கொடுக்க முடியாது.

    மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 4 நாட்கள் தேவைப்படும். ஒரு மணிநேரத்தில் அறிவித்தது சந்தேகத்தை அளிக்கிறது. மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் பிரபாகரனின் ரத்தத்துடன், அவருடைய அப்பா, அம்மா அல்லது குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு சோதனை செய்ய வேண்டும். ஆனால் பிரபாகரனின் பெற்றோர்களிடம் சோதனை செய்ததாக தெரியவில்லை.

    பிரபாகரனுக்கு அப்போது 54 வயது. அவரது முகத்தில் சுருக்கங்கள் உண்டு. ஆனால் அவர்கள் காட்டிய முகத்தில் சுருக்கங்கள் இல்லை. இதுவே சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடல் கிடைத்தால் 1¼ மணிநேரத்தில் மரபணு சோதனை செய்ததாக சொல்வது அறிவியலை கொச்சைப்படுத்துவது என்றும் கூறினார்.

    விடுதலை புலிகள் மரபுப்படி அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டால் உடனடியாக சயனைடு குப்பியை கடித்துவிடுவார்கள். கழுத்தில் சயனைடு குப்பி எப்போதும் இருக்கும். பிரபாகரன் சயனைடு குப்பியை கடித்தாரா என்பதற்கான குடல் சோதனை எதுவுமே நடத்தப்படவில்லை. அவர் கழுத்திலும் சயனைடு குப்பி எதுவும் இல்லை.

    பிரபாகரனின் உடல் தான் என்று அவர்களுக்கு தெரிய வந்தவுடன் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும், அந்த உடலை உடனடியாக கொழும்புவுக்கு கொண்டுபோய் சிங்கள மக்கள் பார்வைக்கு மட்டுமல்ல அங்குள்ள வெளிநாட்டு தூதர்கள் எல்லோரையும் அழைத்து, சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் காட்டி இருக்க வேண்டும்.

    ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அது. சிங்கள மக்களுக்கு வெற்றிக்களிப்பையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய வெற்றி. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? பிரபாகரனின் உடல் கிடைத்தது. நாங்கள் உடனடியாக கடலில் வீசிவிட்டோம் என்று கூறினார்கள்.

    வெற்றிபெற்றால் அவருடைய உடலை கொண்டு வந்து காண்பித்து மக்கள் நம்பும் படியாக அந்த செய்தி இருந்திருக்க வேண்டும். இப்போது அவர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் என்ன என்கிறார்கள்.

    நான் அவர் இருக்கிறார் என்பதை மட்டும் தான் உறுதிப்படுத்தி இருக்கிறேன். அவர் எப்போது வருவார்? எப்போது அவர் தன்னுடையை மக்களுக்கு ஏதாவது அறிவிப்பார்.

    அவருடைய முக்கிய தளபதிகள் பேசியதை வைத்து தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் கூறினேன். இப்போது அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து அதை உறுதி செய்திருக்கிறேன். என்னுடன் அவர் தொடர்பில் இல்லை. அவரது குடும்பத்தினர் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த உண்மையை கண்டறிவதற்காகத்தான் சிங்கள அரசும், இந்திய அரசின் உளவுத்துறையும் படாதபாடு படுகிறது.

    அவர் நிச்சயம் வருவார். ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை தருவார். அப்போது பல்வேறு குழுக்களாக இருப்பவர்கள் ஒன்றுபடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் ஒற்றுமை உணர்வோடு அணி திரள்வார்கள்.

    விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை எந்த நாடும் இலங்கையில் கால்பதிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து பிரபாகரனும் எந்த உதவியையும் பெறுவதை தவிர்த்துவிட்டார். அவர்கள் இந்தியாவை நட்பு நாடாகத்தான் கருதினார்கள்.

    ஈழத்தமிழர் பிரச்சினையும் இந்தியாவுக்கு சீனாவால் வரும் அபாயமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது. ஒன்றை தவிர்த்து இன்னொன்றை தீர்த்துவிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது.
    • எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

    ஈரோடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது. அதனால் எனக்கு கிடைத்த தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை. அரசியலில் நாகரிகமான விமர்சனம் செய்ய வேண்டும்.

    எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஆளும் கட்சியாக இருந்தாலும், ஒரு சில குறைபாடு இருக்கத்தான் செய்யும். குறைபாடுகளே இல்லாத ஆளுங்கட்சி என்று எதையும் கூற முடியாது. தமிழகத்தில், திமுக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தொகுதி மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமகன் விட்டுச் சென்ற பணிகளை இளங்கோவன் தொடர்வார். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரபாகரன் மரணம் தொடர்பாக சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகிறது.
    • பழ.நெடுமாறன் அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியலை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் இதற்கு முன்பு பல தடவை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் அதை யாரும் கண்டு கொண்டதில்லை.

    நேற்று அவர் தஞ்சையில் பிரபாகரன் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையும், அவரது பேட்டியும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ. நெடுமாறன் அறிவித்த போதிலும் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

    இதன் காரணமாக உலக தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் மரணம் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்தபடியே உள்ளது. பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு கருத்து தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்கள், 'பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி' என்று மட்டுமே பதில் அளித்து இருக்கிறார்கள். அவர்களது இந்த பதில் மூலம் 99 சதவீத தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    பழ.நெடுமாறன் அளவுக்கு இல்லாவிட்டாலும் விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் இடையே வைகோவுக்கும் நல்ல தொடர்பு உண்டு. ஆனால் அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை இதுவரை ஏற்கவில்லை.

    பிரபாகரனுக்கு நிழலாக இருந்தவர்கள் மூலம் தனக்கு கிடைத்த தகவல்களின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே வைகோ பல தடவை உணர்த்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் இதே நிலைப்பாட்டில்தான் காணப்படுகிறார்.

    இந்த நிலையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் மீண்டும் சொல்லி இருப்பதற்கு வேறு ஏதேனும் பின்னணி காரணம் இருக்கும் என்று உளவு அமைப்புகள் கருதுகின்றன. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்று கொடுக்கும் முயற்சிகளில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் 13-வது சட்ட திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சிங்களத் தலைவர்களும் 13-வது சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

    இலங்கையில் சீனா பல்வேறு வகைகளிலும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அங்கு ஈழத் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கினால்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகின்றது. இதன் காரணமாக பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்க தொடங்கியுள்ளன.

    குறிப்பாக ஈழத் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பலனை பெற தொடங்கி இருக்கிறார்கள். இது உலக தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளது. இது பிடிக்காமல் தான் பழ.நெடுமாறன் திடீரென இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை பரபரப்பாக மாற்ற விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளி நாடுகளில் வாழும் அவர்கள் இதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை அணுகியது உண்டு.

    ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தினால் மட்டுமே தன்னால் பொது வெளியில் அப்படி அறிவிக்க முடியும் என்று சீமான் ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டார். இதையடுத்து பழ.நெடுமாறன் மூலம் இந்த அறிவிப்பை விடுதலை புலிகளின் மூத்த தலைவர்கள் அறிவிக்க வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே பிரபாகரன் மரணம் தொடர்பாக சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் 18-ந் தேதி கொல்லப்பட்டாரா? அல்லது 19-ந் தேதி கொல்லப்பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அதுபோல அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதா? அல்லது நீர் நிலையில் இருந்து மீட்கப்பட்டதா? என்பதிலும் உரிய பதில் இல்லை.

    என்றாலும் சர்வதேச அளவில் ராணுவ நிபுணர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். டி.என்.ஏ. பரிசோதனை உள்பட பல்வேறு தகவல்களை அவர்கள் இதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள். இலங்கை ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இந்திய உளவு அமைப்புகளும் பிரபாகரன் உயிரோடு இல்லை என்றே சொல்லி வருகின்றன.

    பழ.நெடுமாறன் அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியலை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கத்தில் பழ.நெடுமாறன் அறிவிப்பு காரணமாக இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

    இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ராணுவ நடவடிக்கைகளை இலங்கை அதிபர் ரனில் விக்கிரம சிங்கே குறைத்துள்ளார். இந்த நிலையில் பழ.நெடுமாறன் அறிவிப்பு காரணமாக ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மீண்டும் கெடுபிடி ஏற்படலாம் என்ற தவிப்பு உலக தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.

    சர்ச்சைக்கு மத்தியில் ஈழத்தமிழர்கள் சங்கடங்களை அனுபவிக்க இந்த அறிவிப்பு காரணமாகி விடலாம் என்று அரசியல் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

    • விடுதலைப்புலிகள் யாரும் தங்கள் சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களிடம் இல்லை.
    • இலங்கை ராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நந்தி கடலில் மரணம் அடைந்து இரவு முழுவதும் சடலமாக பிரபாகரன் மிதந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. அப்படி மிதந்திருந்தால் அந்த சடலத்தின் கண்கள் மீன்களால் சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த சடலத்தின் கண்கள் திறந்த நிலையில் தெளிவாக இருந்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    விடுதலைப்புலிகள் யாரும் தங்கள் சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களிடம் இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது. அதனால் அது பிரபாகரனே இல்லை. அந்த ஏற்பாட்டை செய்தவர்கள் ஏதோ நோக்கத்துக்காக செய்துள்ளனர்.

    பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் உயிரோடு ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    ×