search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Narasimha"

    • சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்.
    • கார்த்திகை மாத கடைசி ஞாயிறு பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

    திருமலை:

    திருமலை-திருப்பதி முதலாவது மலைப்பாதையில் 7-வது மைல் அருகில் அலிபிரி நடைபாதை ஓரம் லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை சுவாதி நட்சத்திரத்தில் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

    அதேபோல் திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பேடி ஆஞ்சநேயர் கோவிலில் மூலமூர்த்திக்கு காலை மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபராதனை காண்பிக்கப்பட்டது.

    அதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லஷ்மி நரசிம்ம பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.
    • கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே பூவரங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. தென் அகோபிலம் என்று போற்றப்படும் இக்கோயில், கி.பி. 7-ம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னரால் கட்டப்ப ட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய 8 நரசிம்மர் கோயிலில், இந்த பூவரசங்குப்பம் கோயில், நடுவில் இருக்கிறது. இக்கோயிலில், மூலவர் லட்சுமி நரசிம்மர், 4 கரங்க ளுடன் காணப்படுகிறார். இந்த கோவிலில், 150 ஆண்டுகளுக்குப் பின், பிரமோற்சவ விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 32 அடி உயரத்தில் புதியத் தேர் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவ விழா, கடந்த 30-ம் தேதி தொடங்கியது. இவ்விழா, தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம், கடந்த 6 ஆம் தேதி நடை பெற்றது. பிரம்மோற்சவ விழாவின் 9-ம் நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லஷ்மி நரசிம்ம பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.

    அதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு தேர் புறப்பாடானது. விழுப்புரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் தலைமை தாங்கி இத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முன்னால் எம்.எல்.ஏ புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானநந்தம், கண்டமங்கலம் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் முன்பிருந்து தேர் புறப்பட்டு, சிவன் கோயில் தெரு உள்ளிட்ட 4 மாடவீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தைக் காண பூவரசங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.
    • ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது, நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.

    பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து கோவில் பிரவேசம் தொடங்குகிறது. அந்த இடத்தின் வெளிப்பகுதியில், தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற சிற்பம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம், சிமெண்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பு வயிற்றுப்பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பாம்பின் வடித்திற்குள் நுழைந்ததும், பக்த பிரகலாதனின் வாழ்க்கை வரலாறு அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும் அழகைக் காணலாம்.

    பக்த பிரகலாதன் பிறந்தது முதல், விஷ்ணு பக்தன் என்பதால் இரண்யகசிபு அவனை கொல்வதற்கு எடுக்கும் முயற்சிகள், மற்றும் இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்வது வரை சிற்பமாக அழகுற வடித்து வைக்கப்பட்டுள்ளது. நாகர் வடிவ சிலையில் சுரங்கப்பாதை முடிவுறும் இடத்தில் நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. இங்கே நாக தேவதைகளின் பழமையான சிலைகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பாம்பின் உடலுக்குள் செல்வது போல் அமைந்த சுரங்கத்தில் சூரிய வெளிச்சமும், காற்றும் வரும் வகையில் ஆங்காங்கே வட்ட வடிவ ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாகர் வடிவ கோவிலை விட்டு வெளியே வந்ததும் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் பாதை தொடங்குகிறது. இது சில நூறு செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது. மலையின் மீது சிறிய கோவிலாக லட்சுமி நரசிம்மர் ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் முன்பாக கொடிமரம் உள்ளது. அதன் அருகில் இடது புறம் சுமார் 20 அடி உயரத்தில் ஒரு சிறிய கற்தூண் நிற்கிறது.

    அந்த தூணின் உச்சியில் சிறிய தட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், கீழே நின்றபடி அந்த தூணின் உச்சியை நோக்கி, சில்லறை காசுகளை தூக்கி வீசுகின்றனர். அப்படி வீசும் காசுகள், தூணின் உச்சியில் இருக்கும் தட்டில் விழுந்துவிட்டால், பக்தர்கள் நினைக்கும் காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவில் கருவறைக்குள், தனது இடது பக்க மடியில் லட்சுமிதேவியை வைத்தபடி, நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கிறார்.

    நாம்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், வெமுலவாடா பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலும், கரீம்நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நாம்பள்ளி குட்டா என்ற இடத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது.

    • 28-ந்தேதி (செவ்வாய் கிழமை) தேர்திருவிழா நடக்கிறது
    • 30-ந்தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். நரசிம்மரின் 9 வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின் வடிவத்தில் இங்கு வீற்றிருக்கிறார்.

    திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளில் ஒன்றான அஸ்தாபன பிரதிஷ்டை அதாவது அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபமாக ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். அவர் தாயார் லட்சுமி தேவியை தொடை மீது அமர்த்தி ஒருவருக்கொருவர் அணைத்தபடி கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இங்கு சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களை பார்ப்பதாக இருப்பது தனி சிறப்பு. இந்த கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலைகொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், சூரிய பிரபை, அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, யாளி வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான 24-ந்தேதி இன்று (வெள்ளிக்கிழமை) கருட சேவையும், 28-ந்தேதி (செவ்வாய் கிழமை) தேர்திருவிழாவும், 29-ந்தேதி (புதன்கிழமை) திருமஞ்சனமும், 30-ந்தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் விரதம் இருந்து வழிபடலாம். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.
    ஸ்ரீநரசிம்மரை பிரதோஷத்தன்று விரதம் இருந்து வழிபடுவது சிறப்பாகும். அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் விரதம் இருந்து வழிபடலாம். நரசிம்மர் துதியை தினமும் சொல்லி தியானித்துவர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம்.

    திருமண தடை உள்ளவர்கள் பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.
    குடவரை ஸ்ரீநரசிம்மர் திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநரசிம்மர் கோவில் ஊருக்கு நடுநாயகமாக விளங்கும் குன்றின் மேல்புரத்தில் அமைந்திருக்கும் குடவரையில் அமைந்துள்ளது. ஸ்ரீநரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருக்கிறார். அருகில் பூஜிக முனிவர்களான சனக சனந்தர்களும், கவரி வீசும் சூர்ய சந்திரர்களும், அடுத்து வலது புறம் ஈஸ்வரரும், இடது புறம் நான்முகனும் (பிரம்மா) பகவான் இரணியனை வதைத்த உக்ரம் தணிவதற்கு வழிபடுகிறார்கள்.

    ஸ்ரீமகாலட்சுமியின் தவத்தினால் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்மர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்ற பெயருடன் விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் மூவரும் ஒரே ஆலயத்தில் பூஜிக்கப்படுவதால் திருமூர்த்தித் தலம் எனும் புகழுடையது. இவ்வூரில் தனிப்பட்ட சிவ ஆலயம் என்று ஏதொன்றும் கிடையாது.
    பகவான் ஸ்ரீநரசிம்மமூர்த்தியின் அபயமளிக்கும் வலது கையில் இரணிய சம்ஹாரம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் காணலாம் என்பர்.

    கர்ப்பக்கிரகம் (கருவறை, அர்த்தமண்டபம் இவை குடவரையில் அமைந்துள்ளது) இத்திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநரசிம்மரின் பெருமை கூறவொண்ணாதது.

    இந்த கோவிலின் கருவறை குடவரையில் பக்கங்களில் ஸ்ரீவைகுண்ட நாதர், ஹிரண்யசம்ஹார நரசிம்மர் (உக்ரநரசிம்மர்), மறுபுறம் வாமனமூர்த்தி, உலகளந்தப் பெருமாள், வராஹமூர்த்தி முதலிய மூர்த்திகள் வெகு அழகாக சிற்பவடிவில் காட்சி கொடுக்கின்றனர். குடவரை வெகு அழகாகவும், நல்ல வேலைப்பாடுகளும், ஆறுகம்பங்களும், மேலே கொடுங்கை முதலியனவைகளுடன் அமையப் பெற்றிருக்கிறது. இக்குடவரையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்கு முக்காலங்களிலும் பூஜை நடந்து வருகிறது.

    இக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
    யோக நிலையில் இருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் அந்த யோகத்தை கைவிட்டு, பக்தர்களை கண் திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார்.


    மிக்கானை மறையாய் விரிந்த விளக்க என்னுள்
    புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
    தக்கானைக் கடிகைத்தடங் குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து ய்ந்து போனேனே!

    -- திருமங்கையாழ்வார்

    கார்த்திகை பிறந்து விட்டாலே அய்யப்ப சரண கோஷமும், தீப திருவிழா கோலாகலமும் நிறைந்து இருக்கும். இத்தகைய சிறப்பான கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் அற்புதமும் நிகழ்கிறது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மட்டுமே இந்த “கண் திறப்பு” நடக்கிறது.

    நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் அற்புதத்தை நேரில் கண்டு, பலன் பெற விரும்பும் பக்தர்கள் செல்ல வேண்டிய இடம் சோளிங்கர். இங்கு யோக நிலையில் இருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் அந்த யோகத்தை கைவிட்டு, பக்தர்களை கண் திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார்.

    எனவே சோளிங்கர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை கார்த்திகை மாதத்தில் என்றாவது ஒருநாள் சென்று வழிபட்டால் அரிய பலன்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதலில் சோளிங்கர் திருத்தலம் பற்றிய சிறப்புகளை காணலாம்....

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும்.  எந்த நூற்றாண்டில் இந்த தலமும், கோவிலும் ஏற்பட்டது என வரையறுக்க முடியவில்லை என்றாலும் 6-வது நூற்றாண்டில் ஏற்பட்டதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் கருதப்படுகிறது.

    சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் நரசிம்மரும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் நமக்குக் காட்சி அளித்து, அருளை வாரி வழங்குகிறார்கள். சோளிங்கர் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. சென்றால் பெரியமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீயோக நரசிம்மர் வீற்றிருக்கும் மலை அடிவாரத்தை நாம் அடையலாம். இங்குள்ள நரசிம்ம சுவாமி கோவிலுக்கு ‘கடிகாசலம்‘ என்னும் பெயரும் உண்டு. அதாவது ‘கடிகா+அசலம்‘ என்று பொருள்படும்.

    ‘கடிகா’ என்றால் ஒரு கால அளவு அல்லது நாழிகை என்று அர்த்தம். ‘அசலம்’ என்றால் மலை என்று பொருள். வாமதேவர், பிரகலாதன், சப்தரிஷிகள் ஆகியோர் நினைத்தவுடன் யோக நரசிம்மர் இம்மலையில் நாழிகைப் பொழுதில் காட்சி அளித்து அவர்களை ஆட்கொண்டார். மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, பய பக்தியுடன் நமஸ்காரம் செய்து எங்களை நல்லபடி ஏற்றி விட வேண்டும் என வேண்டிக் கொண்டு முதலில் பெரிய மலையில் ஏறத் தொடங்க வேண்டும். பெரிய மலை திரும்பிய திசையெல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது.

    நாம் பெரிய மலையில் ஏறி சன்னிதானத்தை அடையும் வரை வழியில் ஸ்ரீராமபிரானுக்கு உதவி செய்த குரங்கு கூட்டங்கள் நம்மை முன்னும் பின்னும் தொடர்ந்து வரும். கையில் பை, கேரி பேக் எடுத்துச் செல்ல முடியாது. பழ வகைகள் போன்றவை இருக்கும் என்று நினைத்து குரங்குகள் அவற்றை பிடுங்கிக் கொள்ளும். எனவே கவனமாக செல்ல வேண்டும்.

    1305 படிகளைக் கடந்து மலை மீதுள்ள கோவிலை அடைந்ததும் அங்குள்ள குழாயில் கை, கால்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பக்தர்கள் வரிசையாக நிற்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். மலைக்குன்றில் உட்புறம் சிறிய குகை போன்ற அமைப்பில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மர் சதுர் புஜங்களுடன் இருப்பதை காணலாம். அதில் இரண்டு கைகளை திருவடி முட்டில் வைத்த வண்ணம் யோகபட்டத்தை கட்டிக் கொண்டு ‘யோக நரசிம்மனாய்’, ‘சாந்த சொரூபியாய்’ லட்சுமி நரசிம்மன் நமக்கு தரிசனம் அளிக்கிறார்.

    அவரது தரிசனம் நமக்குப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகும். அதனால்தான் ஸ்ரீயோக நரசிம்மரை ஆழ்வார்களுள் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் தம் தீந்தமிழ்ப் பாடல்களால் போற்றிப் பாடி, மனம் உருகி மங்களா சாசனம் செய்துள்ளனர். மூலவருக்கு மலைமேல் ஒவ்வொரு சுவாமி நட்சத்திரத்தன்றும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமையன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    பெரிய மலையில் கார்த்திகை மாதத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை உள்ள நாட்கள் மிகவும் பிரசித்தம். இந்த மாதத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் யோகத்தை கலைத்து, கண் திறந்து பார்ப்பதால் கார்த்திகை சோளிங்கர் பயணமும் நரசிம்மர் தரிசனமும் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தீராத நோயுள்ளவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் மலை அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் குளித்து விட்டு 1305 படி ஏறி நரசிம்ம சாமியை தினம் 108 முறை பிரதட்சணம் செய்தால் ஸ்ரீயோக நரசிம்மனே அவர்கள் கனவில் வந்து குறை தீர்ப்பதாகத் தல புராணம் கூறுகிறது.



    108 பிரதட்சணம் செய்பவர்கள் வசதிக்காக கோவிலின் மூன்றாவது பிரகாரம் மட்டும் அதிகாலையே திறப்பது வழக்கம். எந்த நிலையிலும், எவருக்குமே இரவில் மலை மேல் தங்க அனுமதி இல்லை. இங்கு தாயாருக்கு ‘அமிர்தவல்லி’ என்று பெயர். வலது திருக்கரத்தால் அமிர்தம் போன்ற அனுகிரகத்தை அளித்துக் கொண்டு நான்கு புஜங்களுடன், இரண்டு திருவடிகளையும் மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளாள். அப்போதுதான் மலர்ந்த செந்தாமரை போன்ற மந்தகாச முகச்சிரிப்புடன் தாயாரின் தரிசனம் இருக்கிறது.

    பெரிய மலையில் தரிசனம் செய்து முடித்த பிறகு கீழ்இறங்கி 2 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயர் எழுந்தருளி இருக்கும் சின்ன மலைக்குச் செல்ல வேண்டும். இந்த இடம் ‘கொண்டபாளையம்‘ என அழைக்கப்படுகிறது. ஸ்ரீஆஞ்சநேயரை தியானம் செய்து கொண்டே சிறிய மலையில் உள்ள 405 படிகள் ஏறிக் கோவிலை அடைலாம். என்ன ஆச்சரியம். தெய்வீகமான சூழ்நிலையில் அமைதியான கோவிலாக ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. தெப்ப உற்சவம் நடக்கும் வற்றாத ‘சக்கரைக்குளம்’ என்றும் அனுமத்புஷ்கரணி என்றும் அழைக்கப்படும் திருக்குளத்தில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு மேற்கு நோக்கி அமர்ந்துள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

    மற்ற இடங்களில் நாம் தரிசிக்கும் ஆஞ்சநேயர் போலில்லாமல் ‘சிறிய திருவடி’ என அழைக்கப்படுபவர் தனது இரு திருவடிகளையும் மடக்கி யோக பட்டத்தில் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு, அந்த இரு கைகளும் நம்மைக் கை காட்டி ‘வாருங்கள்’ என்று அழைக்கும் திருக்கோலத்தில் அமர்ந்துள்ளார். இங்கு ஆஞ்சநேயருக்கும் எம்பெருமானுக்கே உரித்தான சதுர்புஜம் (நான்கு கைகள்) உள்ளன. இரு கைகளில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்குமாக அருள் பாலிக்கிறார்.

    அந்த சங்கும், சக்கரமும் பக்தர்களை பாதுகாப்பதற்காக ஸ்ரீயோக நரசிம்மரால் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டதாம். அதனாலேயே இங்கு அனுமனை ‘திருவடி’ என அழைப்பதில்லை. மகாவிஷ்ணு சொரூபமாகவே நினைக்கிறார்கள். மேலும் இதுபோன்ற சங்கு, சக்ர ரூபியாக ஸ்ரீயோக ஆஞ்சநேயன் தரிசனம் நமது தேசத்தில் எங்குமே இல்லை.

    ஸ்ரீஅனுமனை வழிபட்ட பிறகு வெளியே வந்து புஷ்கரணிக் கரையில் தரிசனம் தரும் ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீசங்கநாதரையும் வணங்க வேண்டும். எல்லா கோவில்களிலேயும் ஸ்ரீராமனை உத்தேசித்து அனுமன் சன்னதி இருக்கும். இங்கு ஸ்ரீயோக ஆஞ்சநேயரை உத்தேசித்து ஸ்ரீராமபிரான் வந்து தரிசனம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆஞ்சநேயருக்குத் தனியாகவே பிரசாதங்கள், நிவேதனம் செய்யப்படுகிறது.
    கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சின்ன திருப்பதி என அழைக்கப்படும் தான்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி திருக்கோவிலின் மிக அருகாமையில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் முன்பு ஜல நரசிம்மர் ஆலயமும் இருக்கிறது. வெங்கடரமண சுவாமி கோவில் உருவான அதே கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் ஜல நரசிம்மர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

    லட்சுமி நரசிம்மர் பாறையில் சுயம்புவாக காட்சி அளிக்கிறார். வாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணிக்குள் 5 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்த நேரம் குரு மற்றும் ராகுவுக்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீடு, வாசல் போன்ற அனைத்து தேவைகளையும் லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி தருகிறார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஒருவர் ரூ.17 லட்சம் பணத்தை மற்றொருவர் ஏமாற்றி விட்டதாக கூறி நெய் விளக்கேற்றி மனமுருகி வேண்டினார். அடுத்த சில நாட்களில் ஏமாற்றியவர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். இவ்வாறு எத்தனையோ அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    மேலும் நின்ற நிலையில் இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதியையும், உட்கார்ந்த நிலையில் இருக்கும் நாமக்கல் நரசிம்மரையும், ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் இருக்கும் பெருமாளையும் ஒரே நாளில் தரிசித்தால் சிறப்பு என்று சொல்வார்கள். இது சாத்தியமில்லை. ஆனால் இங்கு சின்னதிருப்பதி என அழைக்கப்படும் தான் தோன்றி வெங்கடரமண சுவாமி கோவிலில் பெருமாளை நின்ற நிலையிலும், அருகில் உள்ள பாதாள லட்சுமி நரசிம்மரை உட்கார்ந்த நிலையிலும், ஜல நாரசிம்மரை படுத்த நிலையிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வழிபடும் பாக்கியம் கிடைக்கிறது.

    லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    இறைவனின் ஒவ்வொரு அவதாரமும் நமது வாழ்க்கைக்கு தேவையான ஒரு விஷயத்தை உணர்த்துவதாகவும், கற்றுத்தருவதாகவும் அமைந்துள்ளன. அதுபோல இறை வடிவங்களிலும் நமது வாழ்க்கைக்கு தேவையான சூட்சமங்கள் நிறைந்துள்ளன.

    உதாரணத்துக்கு தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வடிவ அமைப்பை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை தத்துவங்கள் மறைந்து இருப்பதை உணரமுடியும். முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மற்றும் பொருட்கள் ஒவ்வொரு தத்துவத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

    அதுபோலத்தான் லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. பொதுவாக கடவுள் உருவங்கள் தனித்தனியாக தான் இருக்கும். ஆனால் லட்சுமி நரசிம்மர் இருக்கும் ஆலயங்களில் லட்சுமியும் நரசிம்மரும் ஒரே அம்சமாக ஒருங்கிணைந்து காணப்படுவார்கள்.

    அதாவது நரசிம்மர் மடிமீது லட்சுமி அமர்ந்திருப்பார். லட்சுமியை அன்போடு அணைத்தபடி நரசிம்மர் இருப்பார். நரசிம்மர் அவதாரம் எடுத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்டார். அவரது கோபத்தை தணித்தது லட்சுமிதான். கோபம் தணிந்த பிறகே சாந்தமான நரசிம்மர் லட்சுமியை தனது மடிமீது அமர்த்தி மகிழ்ந்தார். அந்த வகையில் லட்சுமி வந்த பிறகே நரசிம்மர் தம் வாழ்வில் பரிபூரணம் பெற்றார்.

    எனவே இறைவடிவங்களில் லட்சுமி நரசிம்மர் வடிவம் நிகரற்றது. மிகவும் தனித்துவம் கொண்டது. மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மனைவியை கவுரவப் படுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை லட்சுமி நரசிம்மர் வடிவம் நமக்கு காட்டுகிறது. ஆக்ரோஷமாக இருக்கும் நரசிம்மரையும் பாருங்கள், அவரை சாந்தப் படுத்திய பிறகு அவர் மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமி நரசிம்மரையும் பாருங்கள்... லட்சுமி நரசிம்மரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

    கோபத்தில் இருப்பவரிடம் போய் ஏதாவது கேட்டால் கிடைக்காது. ஆனால் மகிழ்ச்சியோடு இருப்பவரிடம் போய் கேட்டால் நிச்சயம் பலன் உண்டு. இந்த தத்துவத்தையும் லட்சுமி நரசிம்மரின் வடிவம் நமக்கு காட்டுகின்றது. அதுமட்டுமின்றி ஆணுக்கு பெண் சமம் என்ற உயர்ந்த கோட்பாட்டையும் லட்சுமி நரசிம்மர் வடிவத்தில் காணமுடியும்.

    பொதுவாக வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பும் கணவனை மனைவி சாந்தப்படுத்தி உபசரிக்க வேண்டும். கணவன் எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், மனைவி முகத்தைப் பார்த்ததும் சாந்தமாக மாற வேண்டும். அதுதான் உண்மையான தாம்பத்தியம். ஒவ்வொரு விஷயத்திலும் பெண்ணை முன்னிலைப்படுத்த வேண்டும். எந்த வீட்டில் பெண் சுதந்திரமாக முன்நிறுத்தப்படுகிறாளோ, அந்த வீட்டில் லட்சுமி குடியிருப்பாள் என்பார்கள். 

    வீட்டில் இருக்கும் பெண்கள் கண்ணீர் விடக்கூடாது என்பது ஐதீகம் ஆகும். அதற்கேற்ப ஆண்கள் நடந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கணவனும் தனது சம்பாத்தியம் முழுவதையும் மனைவி கையில் கொடுத்துவிட்டே வாங்க வேண்டும். ஐந்து ரூபாயாக இருந்தாலும் சரி, ஐந்து லட்சமாக இருந்தாலும் சரி மனைவி கையில் கொடுத்துவிட்டு பெற்றால் அந்த வீடு லட்சுமிகரமாக மாறும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    இதைத்தான் மறைமுகமாக லட்சுமி நரசிம்மர் கோலம் நமக்கு சொல்கிறது. இதை உணர்ந்துவிட்டால் போதும் கணவன் மனைவிக்கு இடையில் எந்த சிறு மனஸ்தாபமும் வராது. எனவே கணவனுக்கோ, மனைவிக்கோ சிறு வருத்தம் ஏற்பட்டாலும் லட்சுமி நரசிம்மர் இருக்கும் திசை நோக்கி, நரசிம்மா எனது குடும்பத்தை வாழையடி வாழையாக வாழவை என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும் லட்சுமி நரசிம்மர் ஓடோடி வந்து உதவி செய்வார். 
    அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார்.
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. தனி கோவிலாக அமைந்துள்ள இங்கு லட்சுமி நரசிம்மர் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு, அதில் 9-ம் நாளன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறும். இக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை நரசிம்மருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
     
    அன்று லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை, அலரிப்பூ, வெள்ளெருக்கு மாலைகள் சூட்டியும், சுண்டல், பொரி, பழம் வைத்து வழிபட்டால் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு பக்தர்கள் மனம் குளிர அருள்பாலிக்கிறார் லட்சுமி நரசிம்மர்.

    குறிப்பாக சேவிப்போர் வேண்டும் வரம் அருளுகிறார். இதில் முக்கியமாக பணிகளில் பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
     
    இந்தியாவிலேயே சிங்கிரியில் மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தமிழக எல்லையான ஊத்துகோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் அடுத்த நாரயணவரம் ஸ்ரீதிருமலை கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அருகே சிங்கிரி என்ற இடத்தில் நான்கு திசைகளுக்கு மலைகளின் நடுவே அடர்ந்த மூலிகைகள் வாசம் நிறைந்த காட்டுபகுதியில் 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராய பல்லவ பேரசால் கட்டபட்ட இந்த கோயில் நரசிம்மர் சுயம்பாக அதாவது இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார்.

    பாலக பக்தன் பிரகலா தன் தன்மேல் கொண்ட தூய அன்பிற்காகவும், தீயவன் இரண்ய கசிபுவை அழிப்பதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த திருவடிவம்தான் நரசிம்ம அவதாரம் அந்நேரத்தில் அசுரனை அழித்துவிட்டு இந்த சிங்கிரி மலை காட்டுபகுதிக்கு உக்கிர நரசிம்மராக வந்தபோது சிவபெருமான் நாரத ரிஷியிடம் ஸ்ரீவிஷ்ணு உக்கர அவதாரமான நரசிம்மரை சாந்தபடுத்த என்ன செய்வதேன்று யேசித்த போது ஸ்ரீமகாலஷ்மியால் மட்டுமே சாந்தபடுத்த முடியும் என்று கூறிய நாரத ரிஷி உடனே மகாலட்சிமியிடம் முறையிடவே உடனே அதனை ஏற்று லஷ்மி தேவி சிங்கிரி மலை காட்டு பகுதிக்கு சென்று வனதேவதையாக உருமாறி நரசிம்மரை சாந்தபடுத்தியதால் இத்தலத்தில் நரசிம்மர் மற்றும் மகாலட்சுமி இருவருமே பக்தர்களுக்கு வரம்கொடுக்கவே நின்றபடியே காட்சியளிகிறார்கள்.

    வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில், சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லபடுகிறது. அவ்வேளையில் இங்கு வரும் பக்தர்களுக்கு உள்ள அனைத்து குறைகளும் நீங்கும். நரசிம்ம அவதாரம் அந்த வேளையில் நிகழ்ந்ததால் நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக பிரதோஷம் கருதப்படுகிறது. எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

    இந்த சிங்கிரி லஷ்மி நரசிம்மரை அந்த நேரத்தில் வணங்க நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், திருமண தடை நீங்கும், குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும்,தீராத நோயும் தீரும், கடன்கள் தீரும்,மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்தால் பூரண குணம் கிடைக்கும், மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம்.

    இந்த திருத்தலத்தில் நரசிம்மரின் அவதாரத் திருநாளான நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை. அபிசார தோஷம் எனப்படும் பில்லி சூனிய பிரச்னை, கடன் தொல்லை, வீட்டில் எப்போதும் சண்ட சச்சரவு, எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேரவே இல்லை என்ற ஏக்கம் போன்ற பிரச்னைகள் கதிரவனைக் கண்ட பனி போல விலகிவிடும்.
    பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். எதிரிகள் தொல்லை தீரும்.
    பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள்.

    கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அனைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.

    இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், “நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்” என்றார். அதற்கு லட்சுமி, “கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக் கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள். பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
    ×