என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து சாதனை.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் 900 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றிருந்தனர்.

    இந்திய டி20 அணியின் அதிரடி வீரராக இளம் வீரர் அபிஷேக் சர்மா திகழ்ந்து வருகிறார். தொடக்க வீரராக விளையாடி வரும் அவர், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து வருகிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். மேலும் தரவரிசைக்கான புள்ளிகளில் 900-த்தை தாண்டியுள்ளார். தற்போது 907 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு 909 மற்றும் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டு 912 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் 900 புள்ளிகளை கடந்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

    • கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
    • விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.

    தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருது பிரிவில் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா அறிக்கை வெளியியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும். என் அன்பும் ஆருயிருமான எ ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!! நன்றி!!! கோடான கோடி நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
    • விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் சாத்தூரில் நேற்று பேசுகிறார், நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்கிறார்? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின். ஊழல், கலக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக, டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடல் திமுக, குடும்ப ஆட்சி வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் திமுக.

    2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். இதுதான் ரோல் மாடல். அதேபோல் போட்டோ ஷூட், ஸ்டிக்கர் ஒட்டித் திறப்பதிலே ரோல் மாடல் திமுக.

    கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒரு கருத்தை சொன்னார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொன்னார், சாற்றைக் குடித்துவிட்டு சக்கையை வழங்குவதாகச் சொன்னார், அதில் ரோல் மாடல் திமுக.

    திமுகவில் தொடர்ந்து நிலையான கூட்டணி இருக்கிறது, அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாகச் சொல்கிறார்கள். அதிமுக-வைப் பொறுத்தவை கூட்டணியை நம்பியில்லை மக்களை நம்பியிருக்கிறது. திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது.

    மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறது என்று உதயநிதி சொல்கிறார். ஆக கூட்டணியைத்தான் நம்புகிறார். அதிமுக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும், அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக அலுவலகம் அமித் ஷாவிடம் உள்ளதாம். அப்படியா இருக்குது? முன்பு திமுகவு-க்குள் குழப்பம் ஏற்பட்டது, இரண்டாகப் பிரிந்தது, உடைந்தது, அம்மா இருக்கும்போது வைகோ வெளியில் போனார், அப்போது வைகோ அறிவாலயத்தை கைப்பற்றும் நிலை உருவானபோது, அதை காப்பாற்றிக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசு.

    அதிமுக பாஜகவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக பாஜக-வோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா..? இது எந்த விதத்தில் நியாயம்?

    அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. எதிர்த்து நிற்க தெம்பு, திராணி இல்லாமல் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சியில் குற்றம் கண்டுபிடித்து சொல்லுங்கள், பதில் சொல்லத்தயார். எங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி. திட்டமிட்டு கூட்டணி அமைத்தபிறகு விமர்சித்தால் தோல்விதான் உங்களுக்குப் பரிசாக கிடைக்கும்.

    கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.

    இன்று 158-வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 158 தொகுதியிலும் மக்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன், எழுச்சி உரையாற்றினேன், உணர்வுகளைப் பார்த்தேன், அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • அக்டோபர் 2-ம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2-ம் தேதி தசராவும், அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போனஸ் தொகையானது, ரெயில்வே ஊழியர்களில் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரெயில்வே கார்டுகள், ரெயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.

    ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    • 'டேஸ்ட் அட்லஸ்' என்பது உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் ஆகும்.
    • உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டது.

    'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.

    இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெத்திலி 65 உணவு 81வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளன.

    மேலும், கேரளாவின் கறிமீன் பொளிச்சது 11வது இடத்தையும், மேற்கு வங்கத்தின் சிங்கிரி மலாய் கறி 30வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.

    • லடாக்கில் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
    • போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    லடாக்:

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது.

    இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.

    கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என ஜாய் கிரிசில்டா புகார்
    • சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.

    மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.

    காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. துணை ஆணையர் வனிதா ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

    இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    • விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும்.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், சீமான் மன்னிப்பு கூறி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த மன்னிப்பு தோரணை சரியானதாக இல்லை" என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து இருதரப்பும் மன்னிப்பு கோரி பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இருதரப்பும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக்கூடாது, குறிப்பாக இந்த வழக்கு குறித்து இருவரும் எந்த ஊடகங்களில் பேச கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

    • போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.
    • கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

    ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்திற்கு பிறகு, ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன், ஆஃப்லைன் வர்த்தக தளங்களில் சலுகை விலையுடன் விற்பனையாகும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

    ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் ஸ்மார்ட்போன், பானாசோனிக் பி110 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ரூ.4,999 முதல் விற்பனைக்கு கிடைக்கின்றன. குறைந்தபட்ச பயன்பாடு கொண்டவர்கள், தொலைபேசி அழைப்பிற்கு மட்டும் பயன்படுத்துபவர்கள், இந்த டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

    சோலோ 1எக்ஸ், லாவா இசட் 1எஸ், ரெட்மி 5ஏ போன்ற மாடல்கள் ரூ.5,299 விலையிலும், போகோ சி71 ரூ.5,599 விலையிலும், ரெட்மி ஏ2 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஆகியவை ரூ.5,900 விலையிலும் விற்பனையாகின்றன. இவையனைத்தும் 1 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.

    ரெட்மி ஏ3எக்ஸ், ரெட்மி ஏ5, ரெட்மி 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியுடன் ரூ.5,999 விலையில் கிடைக்கின்றன. போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.

    ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் மாடலின் 6 ஜிபி ரேம் மாடல் 128 ஜிபி மெமரியுடன், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் ரூ.6,499 விலையிலேயே கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போனிற்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேலாக சலுகை வழங்கி அதன் விலையை ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாக குறைத்திருக்கிறார்கள். அதேபோல கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது. அதுவும், ரூ.1.10 லட்சத்தில் விற்பனையாகிறது.

    • 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    • இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வருகிற நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்டேவியா சீரிசில் இது 4ஆம் தலைமுறை கார் மாடல் ஆகும். இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கும். இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 265 எச்.பி. பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும், இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொறுத்தவரை, கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெறும்.

    காரின் உள்புறத்தில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம்பெறும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    • அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.
    • கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள்.

    பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் சிறந்த தருணம் என்பது கர்ப்ப காலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை ஆகும். இந்த காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள். அவற்றில் எது நல்லது, எது கெட்டது என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படுகிற சந்தேகங்கள்:

    மேலும் கர்ப்ப காலத்தின்போது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்களும் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது.

    வயதில் மூத்த பெண்கள் பலரும் அறிவியல் அடிப்படை இல்லாமல் தங்களின் அனுபவத்தில் ஏற்பட்ட ஏராளமான விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் சொல்வதால்தான், கர்ப்ப காலத்தின்போது கர்ப்பிணி பெண்கள் பல விஷயங்களையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைகிறது. இதைப்பற்றி இன்னும் சில சுவையான விஷயங்களை பார்க்கலாம். ஏனென்றால் இதெல்லாம் கர்ப்பிணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.

    பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனதில் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தையை தான் கவனிப்பதற்கு கடைபிடிக்கும் விஷயங்கள் சரியா? தவறா? கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி பாதுகாப்பாக பார்க்க வேண்டும்? அதற்காக என்ன சாப்பிட வேண்டும் என்று பலவிதமான சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கும்.

    பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்களால் கர்ப்பிணி பெண்களின் மனதில் பெரிய அளவிலான அழுத்தங்களும் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தின்போது அவ்வப்போது எதிர்கொள்ளும் அல்லது உணரும் விஷயங்களால் ஒவ்வொரு நாளுமே கர்ப்பிணிகளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆனால் இதை யாரிடம் போய் கேட்பது என்று தான் அவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நிறைய பேர் சொல்வதையெல்லாம் அவர்கள் சரி என்று நினைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அதில் அறிவியல் அடிப்படை என்பது இருக்காது. இதனால் அவர்கள் சொல்வது சில நேரங்களில் தவறாக அமையும். இந்த வகையில் கர்ப்ப காலத்தை பற்றி பலவிதமான தவறான தகவல்கள் இன்றைக்கு உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

    இதில் உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் நிறைய பேருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் முதலில் என்னிடம் கேட்பது, 'டாக்டர்... கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா? பப்பாளி சாப்பிடக்கூடாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அது தெரியாமல் பப்பாளி சாப்பிட்டு விட்டேன், எனக்கு கருச்சிதைவு ஏற்படுமா?' என்று கேட்பார்கள்.

    அவர்களுக்கு நான் சொல்லும் பதில், கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை. பப்பாளி பழத்தில் உள்ள போலிக் அமிலம் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்.

    ஆனால் அதில் ஒரே ஒரு விஷயம், பப்பாளி காயாக இருக்கும்போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. அதேபோல் பாதி பழுத்த பப்பாளியையும் அவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் பப்பாளி காயாக இருக்கும்போது அதில் உள்ள லேடெக்ஸ் எனப்படும் பொருள் பல நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கலாம்.

    அது மென்மையான தசைகளை சுருங்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இதனால் கர்ப்பப்பையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் வயிற்றுவலி ஏற்படலாம். மேலும் கருப்பையை சுருங்க வைத்து சில நேரங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்தலாம். இதுவே நன்றாக பழுத்த பப்பாளியில் இந்த பொருள் எதுவுமே இருப்பதில்லை. எனவே பப்பாளி பழமாக இருக்கும்போது கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

    இதேபோல் சிலர் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் அன்னாசிப்பழம் எந்த வகையிலும் கருச்சிதைவை உருவாக்குவதில்லை. இதெல்லாம் தவறான கருத்துக்கள். ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசிப்பழத்தை மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.

    பல நேரங்களில் 'பேரிச்சம்பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக இருக்கும் என்று சொல்கிறார்களே டாக்டர்' என்பார்கள். அதுவும் தவறுதான். பேரிச்சம்பழத்தில் இரும்பு சத்து இருக்கிறது, புரோட்டீன் இருக்கிறது, நிறைய நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை. இதெல்லாம் அவர்கள் உட்கொள்கின்ற உணவுப் பழக்க வழக்க முறைகளில் தவறான கருத்துக்களாக சொல்லப்படுகின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் இதில் தெளிவு பெற வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கர்ப்பிணிகளுக்கு வாந்தி அதிகம் ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்குமா?

    மேலும் பெண்கள் கர்ப்பகாலத்தில் எதிர்நோக்குகின்ற பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா என்பதை பார்க்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் பலரும் வாந்தி எடுப்பது வழக்கம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அதிகாலையில், அதிக அளவில் வாந்தி எடுத்தால் அது பெண் குழந்தை என்று பலரும் கர்ப்பிணிகளிடம் சொல்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தான் நிறைய வாந்தி வரும். அதிகமாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தால் அது பெண் குழந்தைகள் தான் என்று பலரும் சொல்லி விடுவார்கள். இது சரியா தவறா என்று பார்த்தால், இதுபற்றி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் கருவில் பெண் குழந்தையை சுமக்கின்ற பெண்களுக்கு, சற்று அதிகமாக வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

    அதற்காக ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு வாந்தி வராது என்பது அர்த்தமல்ல. பொதுவாக பெண் குழந்தையை சுமந்தால் அதிகமாக வாந்தி வருகிறது என்பதை இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்களிடம் ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    மேலும் கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள். 'டாக்டர்... சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பலரும் பரிசோதனைக்கு வருவதில்லை. சூரிய கிரகணத்தின்போது பிரசவத்துக்கு கூட கர்ப்பிணிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லையே ஏன்?' என்பார்கள்.

    கர்ப்பமாக இருப்பதற்கும், சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்திற்கும் ஏதாவது அறிவியல் ரீதியான அடிப்படை இருக்கிறதா என்பதை பார்த்தால், இன்றும் பலவிதமான விஞ்ஞான முறைகளில் ஆய்வு செய்த வரைக்கும், சூரிய கிரகணத்தினாலோ அல்லது சந்திர கிரகணத்தினாலோ எந்த விதமான பாதிப்பும் கர்ப்பத்துக்கு ஏற்பட்டது இல்லை, கர்ப்பிணிகளுக்கும் ஏற்பட்டது கிடையாது.

    கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவது, அதனால் கர்ப்பம் பாதிக்கப்படுவது என்பது தவறான கண்ணோட்டம் தான். இதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை. இதை நினைத்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

    என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு கர்ப்பிணி பெண், 'டாக்டர்... கிரகணத்தை கவனிக்காமல் நான் சிகிச்சைக்கு வந்து விட்டேன். எனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?' என்று கேட்டார். கிரகணம் பற்றிய அவர்களின் பய உணர்வு தான் பிரச்சினைகளை உருவாக்கும். சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் கர்ப்பத்துக்கு கண்டிப்பாக எந்தவித பாதிப்பையும் உருவாக்காது.

     

    கர்ப்பிணி பெண்கள் 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?

    தற்காலத்தில் பெண்கள் கேட்கிற ஒரு முக்கியமான விஷயம், 'டாக்டர்... நான் கர்ப்பமாக இருக்கும்போது 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?' என்பார்கள். குறிப்பாக வயது அதிகமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமான பிறகு எங்களிடம் பரிசோதனைக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்ப காலத்தின்போது 'ஹேர் டை' போடுவதில்லை, ஆனால் ஹேர் டை போடலாமா என்று கேட்கிறார்கள்.

    அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், அந்த கர்ப்பிணிகளிடம், 'நீ ஹேர் டை போடக்கூடாது, ஹேர் டை போட்டால் குழந்தைக்கு பிரச்சினை வரும், குழந்தை வயிற்றிலே இறந்துவிடும் அல்லது குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும்' என்று பயமுறுத்துகிறார்கள். இது சரியா, தவறா என்று பார்த்தால், பல ஹேர் டைகளில் இருக்கிற சில ரசாயனங்கள் சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களின் உடலில் சேரலாம். அவை ரத்தத்தில் கலந்தால் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    அந்த வகையில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் முதல் 3 மாதங்களுக்கு 'ஹேர் டை' பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதன்பிறகு அவர்கள் 'ஹேர் டை' போடுவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் 'ஹேர் டை' பயன்படுத்துவது என்பது தவறு என்கிற கருத்து கிடையாது. கர்ப்பிணிகள் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக 'ஹேர் டை' போடலாம்.

    கர்ப்பிணிகளுக்கு இதுபோல இன்னும் பல விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. அதாவது, உடற்பயிற்சி செய்யலாமா? 2 மடங்கு சாப்பிட வேண்டுமா? அடிக்கடி வரும் வயிற்றுவலி, எப்படி படுத்து தூங்க வேண்டும்? தாம்பத்திய உறவு கொள்ளலாமா? காபி குடிக்கலாமா என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுகிறது. அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    ×