என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்.
- ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு விஜய் வருவது என்பது நடக்காத காரியம். தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை சி.பி.ஜ விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக போலீஸ்துறை மீது உள்ள நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.க ஆட்சி மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு செய்திருப்பார்கள். இந்த கருத்தை சொல்வதால் நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என நீங்கள் கருத வேண்டாம். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை.
இதுபோன்ற கொடூர எண்ணம் செந்தில் பாலாஜிக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பயனாளிகள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்கு செல்லாமல் ஊர், ஊராக சென்று பேசுவது ஏன்? ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
- அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல, வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனமும் கூடவே எழுந்தது.
நெரிசல் சாவு பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கும்பமேளா, கர்நாடகாவில் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு, ஆந்திராவில் அல்லு அர்ஜுன் திரைப்படம் பார்க்க சென்றபோது அவரை பார்க்க வந்து உயிரிழப்பு சம்பவம் போன்ற பல்வேறு இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன. எதற்காக அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை..
கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பா.ஜ.க.வின் வாடிக்கையாக உள்ளது. கற்பனையாகவும், யூகத்தின் அடிப்படையிலும் பல செய்திகளை நயினார் நாகேந்திரன் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமித்த பிறகும் அண்ணாமலை தான் தலைவர் போன்று மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார்.
அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த சூழலும் இல்லை. அதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்..
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம் படிப்பினை கிடைத்திருக்கிறது. அதனால் அவர் பின்னால் யாரும் வர வேண்டாம். தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது தவறில்லை. கரூர் சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது குறித்து நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.
அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு த.வெ.க.வோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறார்களா?. அவ்வாறு அமைந்தால் அ.தி.மு.கவின் நம்பகத்தன்மை போய்விடும்.
அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தன்தானியா கிரிஷி யோஜனா திட்டம்.
- ரூ. 11,440 கோடி மதிப்பீட்டில் ஆத்ம நிர்பார்தா திட்டம்.
விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் விரைவான வளர்ச்சி அடையும் வகையில் மத்திய அரசு மொத்தம் ரூ.35,440 கோடி மதிப்பீட்டில் தன் தான்யா கிரிஷி யோஜனா, மற்றும் ஆத்ம நிர்பார்தா ஆகிய 2 புதிய முக்கிய திட்டங்களை கொண்டு வந்து உள்ளது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நவீன வேளாண்மை திட்டங்களை பிரதமர் மோடி இன்று டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
தன்தானியா கிரிஷி யோஜனா திட்டம் ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும், ஆத்ம நிர்பார்தா திட்டம் ரூ. 11,440 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டங்களின் நோக்கம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கொள்முதல், சேமிப்பு பயிர் பல்வகைப் படுத்துதல் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்றவை ஆகும்.
பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பது, சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்துதல், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல், முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் நீண்டகால குறுகிய கால கடனை எளி தாக்குதல் உள்ளிட்டவைகள் இந்த புதிய திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்த விழாவில் பிரதமர் மோடி விவசாய துறையை மேம்படுத்தும் வகையில் ரூ. 815 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம், உணவு பதப்படுத்து தல் துறைகளில் ரூ.5,450 கோடிக்கும் அதிகமான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
- டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.
- ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.
கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.
எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து சீனாவுக்கும் இடையே நேரடி விமானங்களை நவம்பர் 10 முதல் இயக்க உள்ளதாக இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) அறிவித்துள்ளது.
அதன் அறிவிப்பின்படி, புதிய நேரடி தினசரி விமானங்கள் டெல்லி மற்றும் சீனாவின் குவாங்சோ நகருக்கு இடையே நவம்பர் 10 முதல் தொடங்கவுள்ளன.
ஏற்கனவே அக்டோபர் 26 முதல் கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையே தினசரி விமானப் சேவையை தொடங்குவதாக இண்டிகோ அறிவித்திருந்த நிலையில் தற்போது டெல்லியில் இருந்தும் நேரடி விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தினசரி, இண்டிகோ விமானம், டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.
பின்னர் குவாங்சோவில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு காலை 10:10 மணிக்கு டெல்லி வந்துசேரும்.
அதேபோல் டெல்லி மற்றும் வியட்நாமின் ஹனோய் நகருக்கு இடையே புதிய நேரடி தினசரி விமானச் சேவை டிசம்பர் 20 முதல் தொடங்கவுள்ளதாகவும் இண்டிகோ இன்று அறிவித்துள்ளது.
இந்த இரண்டு வழித்தடங்களிலும் இண்டிகோவின் ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.
"உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா இடையேயான சேவைகள் மீண்டும் தொடங்குவது, கலாச்சார பரிமாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு அபரிமிதமான ஆற்றலை வழங்குகிறது" என்று இண்டிகோவின் விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
- 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்தார்.
- எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.
உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி உள்ளது. இதன் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் உடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. நேற்று மாலை முதல் அவரது பேஸ்புக் செயல்பாடு துண்டிக்கபட்டது. இதில் அவருக்கு 85 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்த நிலையில் இந்த முடக்கம் எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அகிலேஷ் வெளியிட்ட பதிவு காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவைடிக்கையை எடுத்ததாகவும் மத்திய ரெயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே தற்போது அகிலேஷின் பேஸ்புக் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்தியா கூட்டணியில் இடம் பெற AIMIM விரும்பியது.
- ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் பதில் ஏதும் அளிக்காத நிலையில், 3ஆவது கூட்டணிக்கு முயற்சி.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஐதராபாத் மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக AIMIM களம் இறங்கப்போகிறது. நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்தருல் இமான் கூறுகையில் "100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன.
2020 தேர்தலின்போது, நாங்கள் வாக்குகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம்சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.
தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 3ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும்" என்றார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, அசாதுதீன் ஒவைசி கட்சி, தனியாக போட்டியிட்டு மைனாரிட்டி வாக்குகளை பிரித்து, பாஜக கூட்டணி வெற்றிக்கு வழிவகுப்பதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
- டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளின் பொதுமக்களுக்கு சிறப்புரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
வணக்கம். எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது, கிராமங்கள்தான். உங்கள் ஆதரவோடு முதலமைச்சரான பிறகு, இப்போது 3-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.
உங்களில் நிறைய பேர் சுய உதவிக்குழுக்களால் பயனடைந்திருப்பார்கள். துணை முதலமைச்சராக இருந்தபோது, நானே பல மணிநேரம் மேடைகளில் நின்று சுழல்நிதி வழங்கியிருக்கிறேன்.
இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகதான், மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறோம். நீங்கள் எல்லோரும் கட்டணமில்லாமல் பஸ்சில் செல்கிறீர்களே, அந்த விடியல் பயணத் திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு பெரிய பங்களிப்பை செலுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள்…
நீங்கள் காலையில், சீக்கிரம் வேலைக்கு போக வேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்புவீர்கள்.. அதற்கு நடுவில் சமையல் செய்யவேண்டும்.. ஆனால், அந்த சுமையை குறைக்க – அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற நம்முடைய குழந்தைகளுக்கு சத்தாகவும் – சுவையாகவும் காலை உணவு வழங்குகிறோம்.
நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் காலேஜ் முடித்துவிட்டு வேலைக்குப் செல்வதற்கு தயாராக இருக்கின்ற அளவுக்கு – நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறோம்.
நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு துறையிலும், பல திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
இவையெல்லாம் முத்திரைத் திட்டங்கள். இதே போல, கிராம வளர்ச்சிக்கு என்று பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சிப் பாதையில், கிராம ஊராட்சியை கொண்டு செல்லவும், உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம்.
அதற்காக, ஆண்டுதோறும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தக் கிராம சபைக் கூட்டங்கள்தான், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்ற முக்கிய தருணம்.
நம்முடைய கிராமங்களின் தற்போதைய தேவைகள், வளர்ச்சி இலக்குகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடியாக விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.
நம்முடைய திராவிட மாடல் அரசு - சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்ட, சுயமரியாதை அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் இழிவான தன்மையோடு சாதிப் பெயர்கள் இருந்தால், அதை மாற்றி பொதுப் பெயர்களை சூட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், 'நம்ம ஊர், நம்ம அரசு' என்ற பெயரில், கிராம சபையில் மக்கள் கலந்தாலோசித்து, 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அப்படி கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.
குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிவிடும் வகையில், 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற புரட்சிகரத் திட்டம் துவங்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முடிவெடுத்து, 2024-25-ல் இதுவரை, 99 ஆயிரத்து 453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
2025-26-ல், இன்றைய நிலையில், 78 ஆயிரத்து 312 வீடுகள் கூரை மட்டம் நிலைக்கு மேல் முன்னேற்றத்தில் இருக்கிறது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின்கீழ், கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள், நூலக வசதிகள் போன்ற சேவைகள் விரிவாக்கப்படுகிறது.
தாயுமானவர் திட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
நம்முடைய வீடு குப்பைக் கூளமாக இருந்தால், சும்மாவா இருப்போம்? நம் எல்லோருடைய வீடும் சேர்ந்ததுதான் நம்முடைய கிராமம்… அதை சுத்தமாக வைத்துக் கொள்கின்ற பொறுப்பு நமக்குதான் இருக்கிறது. முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்… குப்பைகள் – ஊராட்சிகளில் வரு கின்ற பேட்டரி வண்டிகளில், மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துப் போடவேண்டும். கண்ட இடத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்.
ஊராட்சி நிர்வாகங்களை சேர்ந்தவர்கள் குப்பைகளை பிரிப்பது, கழிவுநீர் மேலாண்மை பற்றியெல் லாம், மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
என்னடா, இதையெல்லாம் சிறிய சிறிய விஷயம் தானே, இதையெல்லாம் முதலமைச்சர் சொல்ல வேண்டுமா என்று நினைக்கிறீர்களா? சிறிய சிறிய விஷயங்களை நாம் கரெக்டாக செய்தாலே, பெரிய பெரிய நன்மைகள் நிச்சயம் உண்டாகும். நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என்று எல்லோருக்குமே தெரியும். இந்த நோயற்ற வாழ்வுக்கு சுகாதாரம்தான் அடிப்படை.
அடுத்து, மக்களுடைய முக்கிய பிரச்சனையாக இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை. "பணத்தைத் தண்ணியாக செலவழிக்கிறார்கள்" என்று சில பேர் சொல்லுவார்கள்… உண்மையில், "தண்ணியைத் தான் பணம் போல பார்த்து, பார்த்து செலவழிக்க வேண்டும்".
தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருப்பதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானது. இதனால் தான், நிலத்தடி நீர்வளம் மேம்பட்டு, கிராமங்களுக்கு நீண்டகால நீர்ப் பாதுகாப்பு ஏற்படும். இதற்கான பொறுப்பு, நம்முடைய எல்லோரிடமும் தான் இருக்கிறது.
எனவே, இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வீதிகள், குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம்.
அடுத்து, நான் முக்கியமாக சொல்ல விரும்புவது - கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு – செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியும் எப்போது, எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் தகவல்கள் பகிரப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறை வேற்றப்படும்.
நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதி செய்கின்ற அரசு இது.
"கிராமத்தின் வலிமை தான் மாநிலத்தின் வலிமை" என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
- கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன.
பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தி உள்ளது.
பட்டாசு கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறை இயக்குநரும், டி.ஜி.பி.யுமான சீமா அகர்வால் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடிப்பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இதில் 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2,499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் வைக்க தடையில்லா சான்றிதழ் கேட்டு சுமார் 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன.
அதில் தகுதியான சுமார் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டன. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
- சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
- தமிழகத்தில் ஏ.பிளஸ், ஏ.பி.சி. என 4 வகைகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதுபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரவுடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வழிப்பறி திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுப்பதற்கு போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. வெங்கட்ராமன், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
சென்னை உள்பட அனைத்து மாநகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏ.பிளஸ், ஏ.பி.சி. என 4 வகைகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்களில் ஏ.பிளஸ் ரவுடிகள் தங்களுக்கு கீழே அடியாட்களை வைத்துக்கொண்டு தாதாக்கள் போல செயல்பட்டு வருபவர்கள் ஆவர். இவர்கள்தான் இருந்த இடத்தில் இருந்த படியே போனில் பேசி மிரட்டி மாமூல் வசூலிப்பது உள்பட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பெரு நகரங்களில் இதுபோன்ற ஏ.பிளஸ் ரவுடிகளும், ஏ.வகை ரவுடிகளும் தீபாவளி நேரத்தில் வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் யார்- யார் என்பதை கண்டறிந்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறையில் இருந்து விடுதலையாகி சுற்றி திரியும் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ரவுடிகளோடு கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளையும், பிக்பாக்கெட் திருடர்களையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சுமார் 6 ஆயிரம் ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். 4 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் சென்னை மாநகர் முழுவதும் தங்களது பகுதியில் உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளனர்.
இப்படி குற்ற செயல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, 'தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அமைதியான முறையில் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இது போன்ற பண்டிகை காலங்களில் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மூலமாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
இதன்படி சென்னை முதல் குமரி வரையில் தலைமறைவு ரவுடிகள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டு உள்ளனர்.
- ஜூரல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- சுப்மன் கில் 129 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புதுடெல்லி:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த நிதிஷ் குமார், கில்லுடன் ஜோடி சேர்ந்தார். நிதிஷ் குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவ்வபோது பவுண்டரியும் சிகருமாக பறக்க விட்டார். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கில் அரை சதம் அடித்து அசத்தினார்.
அதிரடியாக விளையாடி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் 43 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஜூரல் களமிறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்திருந்தது. சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10-வது சதம் ஆகும். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜூரல் 44 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
- அதிமுக கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை.
- அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அதிமுக காரங்க எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டாங்க.. இதுல அடுத்த கட்சிக் கொடியைப் பிடித்து ஆட்டுவோமா? அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி கொடியை பிடித்ததாக வரலாறே கிடையாது. தவெக கொடியை தூக்கி பிடிக்கும் அளவிற்கு அதிமுகவினர் இழிபிறவிகள் அல்ல" என்று தெரிவித்தார்.






