என் மலர்
தலைப்புச்செய்திகள்
- உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன்
- 77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் பட்ஜெட் குறித்து திருவானந்தபுர காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தில் அவையில் பேசிய அவர், நிதியமைச்சரின் பட்ஜெட் உரை, 'உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன் ' என்று கூறும் கேரேஜ் மெக்கானிக்கை நினைவூட்டியது. மேலும், நிதி மசோதா வரி செலுத்துவோரிடம் கூரையை சரிசெய்ய முடியவில்லை, ஆனால் நான் உங்களுக்கு ஒரு குடையை கொண்டு வந்தேன் என்று சொல்வது போல் இருந்தது.
இந்த நிதி மசோதா ஒட்டுவேலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டிற்கு தெளிவு, உறுதிப்பாடு மற்றும் தீர்க்கமான தலைமை தேவைப்படும் நேரத்தில், அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை கட்டமைப்பு சவால்களால் பாதிக்கப்பட்டுள்ளது
உலகிலேயே மிகவும் குழப்பமான மற்றும் சிக்கலான ஜிஎஸ்டி கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்று தரூர் கூறினார்.
நாம் அனைவரும் கோரி வரும் எளிமையான வரிக்கு பதிலாக, இந்தியாவில் குழப்பமான ஜிஎஸ்டி விகிதங்கள் உள்ளன. இதில் உலகிலேயே மிக உயர்ந்த 28 சதவீத வரி அடங்கும். இருப்பினும், வரி வருவாய் இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதமே உள்ளது.
77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன. நமது நாட்டில் இந்த பல-விகித அமைப்பு வணிகங்களுக்கான சுமையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
- பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
- இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரை சந்தித்தாலும் இருமொழிக்கொள்கையை வலியுறுத்த வேண்டும்.
* பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
* இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விஜய் உத்தரவுபடி இரவு பகல் பாராமல் செய்து வருகிறார்.
பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். மாவட்டத்திற்கு 15 பேர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும் 10 பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைவருக்கும் நேற்று கியூ.ஆர். கோர்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கினார். இதற்கான பணிகள் நேற்று நள்ளிரவு வரை நடந்தது.
கூட்ட அரங்குக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டை கொடுக்கப்பட்டவர்கள் அதில் உள்ள கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அரங்கிற்குள் செல்ல முடியும்.
கூட்ட அரங்கம் முற்றிலும் துபாய் பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
பெண்களுக்கு என தனி இடவசதி மற்றும் அடிப்படை வசதி அரங்கத்தில் செய்யப்படுகிறது. கூட்டத்திற்கு வருவதற்கும், செல்வதற்கும் தனித்தனி நுழைவு வாயில்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக மக்கள் பிரச்சனை பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
பொதுக்குழு நடைபெறுவதை தொடர்ந்து கூட்டம் நடைபெறும் திருவான்மியூர் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இப்போதே களை கட்ட தொடங்கி இருக்கிறது. சுவர் விளம் பரங்கள், பேனர்கள், ராட்சத வரவேற்பு பலூன்கள் என பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்தில் விஜய்யின் அரசியல் அதிரடி பேச்சு பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டத்திற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த உற்சாகம் எழுந்து உள்ளது.
- முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக சென்றார்.
- பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 6 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து பயணமானார்.
தற்போது லண்டனில் உள்ள மம்தா பானர்ஜி காலையில் தனது பாதுகாலவர்களுடன் ஜாகிங் மற்றும் பேக் வாக் செய்து உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது. இந்த வீடியோக்களை பகிர்ந்த திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம், 'நடைப்பயிற்சி அல்ல, வெறும் வார்ம்-அப் என்று கேப்ஷன் இட்டுள்ளது.
மேலும் அவர் பின்னோக்கி நடக்கும் பேக் வாக் எனப்படும் பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே லண்டன் இந்தியா ஹவுசில் நடந்த தேநீர் விருந்திலும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
- சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
- டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளை அனைத்தும் தீர்ந்து விட்டது.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்கியது.
www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளை அனைத்தும் தீர்ந்து விட்டது. ஆன்லைன் முன்பதிவு ஓபன் ஆன சில நொடிகளில் காத்திருப்பு வரிசை 3 லட்சத்தை கடந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காத்திருப்பு வரிசை 3000 வரை சென்று கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது என மெசெஜ் ரசிகர்கள் வேதனையடைந்தனர்.
- தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
- இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* இருமொழிக்கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தங்களது உணர்வை வெளிப்படுத்தின.
* தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
* தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல.
* இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை.
* இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம்.
* இந்தி மொழியால் தான் பணம் வரும் என்று கூறினால் அந்த பணமே வேண்டாம் என தீர்மானிப்போம்.
* திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள்.
* யார் எந்த மொழியை கற்கவும் நாம் தடையாக இருந்ததில்லை. எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல நாம்.
* இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்றுவிடும் என்பதை நாம் அறிவோம்.
* இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.
* மாநிலங்களை தங்கள் கொத்தடிமைகளாக நினைப்பதாலேயே மொழியை திணிக்கிறது.
* மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.
* மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும் என்றார்.
- கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
தற்போது கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை பிறந்துள்ளதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
- டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் பார் உரிமம் வழங்கியது, மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்து வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.
அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.
எனவே இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.
- சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமான 'வீர தீர சூரன்' வெளியாகிறது.
- இரண்டு படங்களிலும் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

அதேநாளில் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமான 'வீர தீர சூரன்' வெளியாகிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த இரண்டு படங்களிலும் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய அவர், இரண்டு படங்களுமே சிறந்த படங்கள். ஹிட் அடிக்கும். எம்புரான் ஹிட்டகும்போது அது மோகன்லாலுக்கு ஒரு வெற்றி. வீரதீர சூரன் ஹிட்டாகும் அது விக்ரமூக்கு ஒரு வெற்றி. ஆனால் இரண்டு படங்களிலுமே உள்ளதால் எனக்கு ஒரே நாளில் இரண்டு ஹிட் படங்கள் என்று தெரிவித்துள்ளார்.
- 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
- தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார்.
சென்னை:
பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 39-ல் இருந்து 31-ஆக குறைந்து விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். தென் மாநிலங்களில் இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் எனவே, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த சனிக்கிழமை (22-ந்தேதி) நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பின்போது பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிட தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் இன்று கடிதம் அனுப்பப்படுகிறது.
பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரம் வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்னதாகவே இவர்களை சந்திப்பதற்கு அனுமதி கொடுப்பார்களா? என்பது குறித்து இன்று அல்லது நாளை தெரிந்து விடும்.
- திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது.
நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.*
அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.
ஆம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நந்திகேஸ்வரரின் தெய்வீக திருமணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரக்கூடிய புனர்பூச நட்சத்திரத்தன்று இந்த சிறப்பு வாய்ந்த திருமணம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற பங்குனி மாதம் 23-ந்தேதி புனர்பூசம் நட்சத்திரம் 06-04-2025 ஞாயிறு அன்று நந்தி கல்யாணம் நடக்கிறது. அரியலூர் மாவட்டம் திருமழபாடி திருசுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் இந்த தெய்வீக திருமணம் வருடாவருடம் நடைபெறுகிறது.
மணமகன்: பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான்
மணமகள்: வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை.
இந்த ஸ்தலமானது திருமால் இந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பாடியும் வழிபாடு செய்யப்பட்ட ஸ்தலமாகும்.
தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து 28 கி.மீ. தூரத்திலும் மற்றும் திருவையாறில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புள்ளம்பாடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. தலவிருட்சமாக பனை மரம் உள்ளது. நடராஜர் மண்டபம் அருகில் *திரு நந்திகேஸ்வரர் தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார்.
திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது. அன்று மாலை திருவையாறு கோவிலில் அவருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
திருமணம் நடைபெறும் நாளன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும் நந்தியம்பெருமான் பட்டுச் சட்டை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி வெள்ளியில் ஆன தலைப்பாகை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வானவேடிக்கை இன்னிசை கச்சேரி உடன் புறப்படுகின்றனர்.
அன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வந்தடைகின்றனர். அங்கு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அவர்களை வரவேற்று கோவில் முன் உள்ள திருமண மேடைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
திருமண மேடையில் சுயசாம்பிகை தேவிக்கும் நந்தியம் பெருமானுக்கும் அனைத்து விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாரப்பர் முன்னிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையிலும் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுகிறார்.
திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இறைவனே முன்நின்று திருமணத்தை நடத்தி வைப்பதால் நந்தியம்பெருமான் திருமணத்தை காணும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடைகள் நீங்கி காலத்தே திருமணம் கைகூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இத்திருமணத்தில் கலந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்.
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அம்மாநில உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் இது குறித்து கூறும் போது, "உச்சநீதிமன்றம், இந்திய பிரதமர், இந்து கடவுள்களை அவமதிப்பாய் எனில், நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். நீ செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மகாராஷ்டிரா அல்லது இந்தியாவில் இதுபோல் நடந்து கொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ஏற்றுக் கொள்வோம், ஆனால் இத்தகைய நகைச்சுவை மகாராஷ்டிராவில் ஏற்றுக் கொள்ளப்படாது," என தெரிவித்தார்.
இதேபோல் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் இதுகுறித்து கூறும்போது, "அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விட்டுவிடாது.. இந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் வெளியில் வந்து எங்கு மறைந்து கொள்ள முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கார் காவல் துறை சார்பில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விசாரணை அதிகாரியிடம் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






