என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
    • தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    அவ்வாறு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 39-ல் இருந்து 31-ஆக குறைந்து விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். தென் மாநிலங்களில் இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் எனவே, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த சனிக்கிழமை (22-ந்தேதி) நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பின்போது பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிட தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் இன்று கடிதம் அனுப்பப்படுகிறது.

    பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரம் வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்னதாகவே இவர்களை சந்திப்பதற்கு அனுமதி கொடுப்பார்களா? என்பது குறித்து இன்று அல்லது நாளை தெரிந்து விடும்.

    • திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது.

    நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.*

    அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.

    ஆம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நந்திகேஸ்வரரின் தெய்வீக திருமணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரக்கூடிய புனர்பூச நட்சத்திரத்தன்று இந்த சிறப்பு வாய்ந்த திருமணம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற பங்குனி மாதம் 23-ந்தேதி புனர்பூசம் நட்சத்திரம் 06-04-2025 ஞாயிறு அன்று நந்தி கல்யாணம் நடக்கிறது. அரியலூர் மாவட்டம் திருமழபாடி திருசுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் இந்த தெய்வீக திருமணம் வருடாவருடம் நடைபெறுகிறது.

    மணமகன்: பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான்

    மணமகள்: வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை.

    இந்த ஸ்தலமானது திருமால் இந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பாடியும் வழிபாடு செய்யப்பட்ட ஸ்தலமாகும்.

    தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து 28 கி.மீ. தூரத்திலும் மற்றும் திருவையாறில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புள்ளம்பாடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

    கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. தலவிருட்சமாக பனை மரம் உள்ளது. நடராஜர் மண்டபம் அருகில் *திரு நந்திகேஸ்வரர் தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார்.

    திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது. அன்று மாலை திருவையாறு கோவிலில் அவருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.

    திருமணம் நடைபெறும் நாளன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும் நந்தியம்பெருமான் பட்டுச் சட்டை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி வெள்ளியில் ஆன தலைப்பாகை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வானவேடிக்கை இன்னிசை கச்சேரி உடன் புறப்படுகின்றனர்.

    அன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வந்தடைகின்றனர். அங்கு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அவர்களை வரவேற்று கோவில் முன் உள்ள திருமண மேடைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

    திருமண மேடையில் சுயசாம்பிகை தேவிக்கும் நந்தியம் பெருமானுக்கும் அனைத்து விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றது.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாரப்பர் முன்னிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையிலும் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுகிறார்.

    திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இறைவனே முன்நின்று திருமணத்தை நடத்தி வைப்பதால் நந்தியம்பெருமான் திருமணத்தை காணும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடைகள் நீங்கி காலத்தே திருமணம் கைகூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இத்திருமணத்தில் கலந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்.

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
    • சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.

    பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அம்மாநில உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் இது குறித்து கூறும் போது, "உச்சநீதிமன்றம், இந்திய பிரதமர், இந்து கடவுள்களை அவமதிப்பாய் எனில், நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். நீ செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மகாராஷ்டிரா அல்லது இந்தியாவில் இதுபோல் நடந்து கொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ஏற்றுக் கொள்வோம், ஆனால் இத்தகைய நகைச்சுவை மகாராஷ்டிராவில் ஏற்றுக் கொள்ளப்படாது," என தெரிவித்தார்.

    இதேபோல் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் இதுகுறித்து கூறும்போது, "அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விட்டுவிடாது.. இந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் வெளியில் வந்து எங்கு மறைந்து கொள்ள முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.

    முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கார் காவல் துறை சார்பில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விசாரணை அதிகாரியிடம் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • காலை 6 மணி முதல் 7 மணி வரை நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
    • நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்தது.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாரானபோது அவர்கள் 2 பேரையும் சுற்று வளைத்த போலீசார் கைது செய்தனர்.

    கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • சோலார் பேனல் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் பேசினார்.
    • சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.

    தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் "தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய அமைத்து வருகிறார்கள். அதில் EB கொள்திறன் 100 கிலோவால்ட் தான் அனுமதி வழங்குகிறார்கள். வெயில் காலங்களில் 100 கிலோவால்ட் போதுமானதாக இல்லை ஆகவே 120 கிலோவால்ட் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். இது மாப்பிள்ளைக்கு (செந்தில் பாலாஜி) தெரியும்" என்று பேசவே அவையில் சிரிப்பலை எழுந்தது.

    இதனையடுத்து, சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.

    • கர்ப்ப கால புகைப்படங்களை அடிக்கடி எமியும், எட்வெஸ்ட்விக்கும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.
    • மகன் பிறந்ததை பெயருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எமிஜாக்சன்-எட்வெர்ட் வெஸ்ட் விக் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    'மதராச பட்டினம்', 'ஐ' உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் எமிஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமிஜாக்சன் காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டனர்.

    இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தொடர்ந்து எமிஜாக்சன் பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட்விக்கை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் எமிஜாக்சன் கர்ப்பம் அடைந்தார். கர்ப்ப கால புகைப்படங்களை அடிக்கடி எமியும், எட்வெஸ்ட்விக்கும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் எமிஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எட்வெஸ்ட்விக் சமூக வலைதளம் வாயிலாக அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் உன்னை இந்த உலகத்துக்கு வரவேற்கிறேன் என பதிவிட்டு உள்ளார். மகன் பிறந்ததை பெயருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எமிஜாக்சன்-எட்வெர்ட் வெஸ்ட் விக் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
    • இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.

    ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் (west bank) சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

    நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த ததகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால், இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

    இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.

    இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொன்றிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

    பயங்கரவாதிகள்(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

    • வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை
    • வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?

    இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை 3 மொழிகள் கற்றுக் கொள்ள சொல்கிறார்கள் என்று திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.

    இது தொடர்பாக மக்களவையில் பேசிய கலாநிதி வீராசாமி, "நாடு முழுவதும் உள்ள வறுமையின் நிலையை நீங்கள் கணக்கிட்டு பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களின் வறுமை குறியீடு 0.5 முதல் 2% வரை தான் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் பல ஆண்டுகால முயற்சியினால் வறுமை ஒழிக்கப்ட்டுள்ளது.

    வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வறுமை குறியீடு 9 -10% ஆகவும் பீகாரில் 20% ஆகவும் உத்தரபிரதேசத்தில் 15 -20% ஆகவும் உள்ளது.

    தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டுகளை எடுத்து பாருங்கள். 1967 பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியும் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் செயல்பட்டு வருகிறது.

    நாங்கள் வறுமை என்று பேசுவது நீங்கள் சொல்வது போல வருடத்திற்கு ரூ.27,000 சம்பாதிப்பவர்கள் பற்றி அல்ல. வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாதா மாதம் ரூ.1,000 வழங்குகிறோம்.

    அரசுப்பள்ளியில் இருந்து கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குகிறோம். இதனால் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் (GER) 25%. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய GER விகிதம் 52%.

    10 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது தமிழ்நாடு, ஆனால் எங்களுக்கு திரும்ப கிடைத்தது ரூ. 2.4 லட்சம் கோடிதான்.

    தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது கூட மத்திய அரசு பேரிடர் நிதி வழங்குவதில்லை.

    மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் ரூ.2,157 கோடி கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மிரட்டுகிறது.

    எங்களுக்கு அந்த ரூ.2,157 கோடி வேண்டாம் என்றும் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எங்களது முதல்வர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா முழுவதும் 3 மொழி கொள்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி இருக்க வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை. வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?

    அவர்கள் 3 மொழியை கற்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் 3 மொழிகளை கற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

    இருமொழி கொள்கை தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது. சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஏழ்மையான 3 ஆவது மாநிலத்தில் இருந்து தற்போது 2 ஆவது பணக்கார மாநிலமாக உயர்ந்துள்ளோம்" என்று தெரிவித்தார். 

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
    • டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.

    இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். 

    • டெல்லி அணியில் முதலில் ஸ்டப்சும், அசுதோசும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
    • கடைசி ஓவரில் டெல்லியின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது.

    நிக்கோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்னும் (6 பவுண்டரி, 7 சிக்சர்), மிச்சேல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். ஸ்டார்க் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 210 ரன் இலக்கை 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன் எடுத்து (5 பவுண்டரி, 5 சிக்சர்) வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். விப்ராஜ் 15 பந்தில் 39 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டப்ஸ் 22 பந்தில் 34 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாக்கூர், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    201 ரன் குவித்தும் தோற்றதால் லக்னோ அணி கேப்டன் ரிஷப்பண்ட் ஏமாற்றம் அடைந்தார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. போதுமான ரன்களை குவித்தோம். நடுவில் நாங்கள் எங்கள் ரன் வேகத்தை இழந்து இருக்கலாம். ஆனாலும் இந்த ஆடுகளத்தில் 209 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். இந்த தோல்வி மூலம் நாங்கள் அடிப்படைகளை சரி செய்ய வேண்டும். இதில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

    டெல்லி அணியில் முதலில் ஸ்டப்சும், அசுதோசும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் விப்ராஜ்- அசுதோஷ் ஜோடி தங்கள் பணியை சிறப்பாக செய்தது. இந்த ஜோடி எங்கள் வெற்றியை பறித்து விட்டது. கடைசி ஓவரில் டெல்லியின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. பேடில் பட்டதால் ஸ்டம்பிங் செய்ய வாய்ப்பு தவறியது.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்ட ரிஷப்பண்ட் நேற்று டக் அவுட் ஆனார். 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை.

    லக்னோ அணி 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 27-ந்தேதி எதிர்கொள்கிறது. டெல்லி அணி அடுத்த போட்டியில் ஐதராபாத்தை 30-ந்தேதி சந்திக்கிறது.

    • பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
    • கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.

    பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.

    கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் தொடர்பான செய்திகள் அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
    • சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.

    நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15-ம் நாள் அதாவது வருகிற 29-ந்தேதி இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாப்படி சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3-ம் பாதத்தில் இருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

    இதனால் 12 ராசிகளுக்குமான பொதுப்பலன், சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் தொடர்பான செய்திகள் அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.

    இந்த நிலையில், வருகிற 29-ந்தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், வாக்கிய பஞ்சாக முறைப்படி அடுத்த ஆண்டு அதாவது 2026-ல் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் கவலையில் ஆழ்ந்த ராசிக்காரர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

    ×