என் மலர்tooltip icon

    இந்தியா

    • செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.
    • இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    புனே:

    இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகிறது.

    லிங்கை தொட்டால் பரிசு, அரசின் உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யு.பி.ஐ. ஐ.டி. கேட்டு பணம் பறிப்பது, டிஜிட்டல் கைது என பல்வேறு வகைகளில் மோசடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆனாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு என்ற ஆன்லைன் விளம்பரத்தை நம்பிய ஒருவர் ரூ.11 லட்சம் இழந்த சம்பவம் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்துள்ளது.

    புனேயை சேர்ந்த 44 வயதான ஒருவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் பேசிய ஒரு பெண், நான் தாயாவதற்கு ஒரு ஆண் தேவை. என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒரு ஆணை தேடுகிறேன். என்னை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு தருகிறேன். அந்த நபரின் கல்வி, சாதி, அழகு ஒரு பொருட்டல்ல என கூறி இருந்தார்.

    இதைப்பார்த்த ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது, சில விபரங்களை கேட்டுள்ளனர். மேலும் பரிசு பெறுவதற்காக சில சரிபார்ப்பு விதிமுறைகள் உள்ளன என கூறியுள்ளனர். பின்னர் பதிவு, சரிபார்ப்பு, ஜி.எஸ்.டி. என பல காரணங்களை கூறி பல்வேறு வகைகளில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.

    பின்னர் அவர் கர்ப்பமாக்கும் வேலை தொடர்பாக தனது கேள்விகளை கேட்டபோது, மறுமுனையில் பேசியவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் அழைத்தபோது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணத்தை இழந்த ஒப்பந்ததாரர் அளித்த தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை முடக்கி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம். என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார்
    • காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.

    பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோவில் பகுதியில் வசித்து வந்த 36 வயது பெண்ணுக்கு 17 வயதில் மகள் இருக்கிறாள். இவர், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு அவர் படிப்பை நிறுத்தி விட்டார். கணவரை பிரிந்து வாழ்ந்த 36 வயது பெண், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26-ந்தேதி அந்த பெண் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அப்பெண்ணின் தங்கையின் தகவலின் பேரில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். ராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது தனது காதலன், நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்ததாக அந்த சிறுமி கூறினார். அதைத்தொடர்ந்து, காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.

    அவர்கள் 4 பேருக்கும் 18 வயதாகவில்லை என்பதும், அவர்களும் சிறுவர்கள் என்பதும், இதில் ஒரு சிறுவனுக்கு 13 வயது தான் ஆவதும் தெரிந்தது. இதையடுத்து 17 வயது சிறுமி, காதலன் உள்பட 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னுடன் படித்த வாலிபரை தான் காதலித்துள்ளார். தனது மகள், அந்த வாலிபரை காதலிப்பது நேத்ராவதிக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதன் காரணமாக ஆத்திரமடைந்த மகள், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை படுக்கை அறைக்கு இழுத்து சென்று, கழுத்தில் சேலையால் கட்டி உடலை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுமி உள்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

    • தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.
    • தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, ​​குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.

    குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா கிராமத்தைச் சேர்ந்த சவ்ஜி படேல், டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணியாற்றினார்.

    சவ்ஜி படேலின் தந்தைக்கு அவரது சொந்த கிராமத்தில் ஒரு வீடு இருந்தது. வயதான காலத்தில் தனது சொந்த கிராமத்திற்குச் சென்ற சவ்ஜி படேல், தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.

    இறப்பதற்கு முன்பு தனது பேரன் தனது சொத்திற்கு வாரிசாக இருப்பார் என்று ஒரு உயில் எழுதியிருந்தார்.

    சவ்ஜி படேலின் மகனும் டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிகிறார். இந்த சூழலில், சவ்ஜி படேலின் பேரன் சமீபத்தில் உனா கிராமத்திற்குச் சென்றார்.

    தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆன்லைனில் சரிபார்த்தபோது, அவற்றின் மதிப்பு ரூ. 2.5 கோடி என தெரியவரவே உற்சாகத்தில் மூழ்கினார்.

    ஆனால் இதை அறிந்த இளைஞனின் தந்தையும் தனது தந்தையின் பங்கில் தனக்கு தான் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

    தனது தாத்தா முழு சொத்தையும் தனக்கு உயில் எழுதிக் கொடுத்ததால், இந்தப் பங்குகளும் தன்னுடையவை என்று பேரன் வாதிட்டார்.

    பங்குகளின் உரிமைக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 

    • பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.
    • பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது.

    அரவிந்த் கேஜிரிவால் தனது அரசு பங்களாவை புதுப்பிக்கப் பொதுப் பணத்தில் இருந்து ரூ.45 கோடி செலவு செய்து சொகுசு பங்களாவாக மாற்றியதாகவும், அந்த பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.

    இந்நிலையில் பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள நிலையில் அதன் தலைநகர் சண்டிகரில் அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த பயன்பாட்டுக்கு 7 நட்சத்திர சொகுசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளதாக  பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

    பாஜக தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் அரசின் பொது நிதியை தனது தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்காக கெஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்துவதாகவும், சண்டிகரில் அவரின் சொந்த பயன்பாட்டுக்கு 2 ஏக்கரில் அமைந்துள்ள அரசின் 7 நட்சத்திர சொகுசு பங்களாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பங்களா என்று கூறப்படும் கட்டிடத்தின் படங்களை பாஜக வெளியிட்டுள்ளது.

    பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.  

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் கிரேனில் மேலே சென்றார்.
    • கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

    அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் கிரேனில் மேலே சென்றார்.

    நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், கணேஷ் சிங் மேலே சென்ற சில வினாடிகளிலேயே கிரேன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சிறிது நேரம் செயலிழந்து நின்றது.

    இதனால் கோபமடைந்த கணேஷ் சிங் கிரேன் கேபினுக்குள் இருந்தபடியே உதவ வந்த ஆப்ரேட்டரைத் தாக்கினார்.  இதன் வீடியோ வைரலாகி வருகிறது.

    கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  

    • தேஜ்பால் சிங் (26) தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி வந்தார்.
    • இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் இளம்கபடி வீரர் நேற்று பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நேற்று லூதியாணாவில் உள்ள ஜக்ரான் நகரில், தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வந்த கபடி வீரரான தேஜ்பால் சிங் (26) சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் கூறினர்.

    இந்த சம்பவம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனையை அடைவதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பழைய பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

    • 5 மாத பெண் குழந்தை ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்தது.
    • மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது.

    மத்தியப் பிரதேசத்தில் போலி இருமல் மருந்துகளால் அண்மையில் 24 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    இந்த சர்ச்சை தொடரும் நிலையில் தற்போது ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 5 மாத குழந்தையின் உயிரிழந்தது அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது.

    சிந்துவா மாவட்டத்தில் உள்ள பிச்வா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் மினோட்டின் 5 மாத பெண் குழந்தை ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்தது.

    இதன் காரணமாக, அக்டோபர் 27 அன்று உள்ளூர் மருத்துவக் கடையில் கடைக்காரரின் ஆலோசனையின் பேரில் ஆயுர்வேத இருமல் சிரப்பை வாங்கி குழந்தையை அருந்த செய்துள்ளனர்.

    மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. குழந்தை உடனடியாக உள்ளூர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருமல் மருந்து விற்கப்பட்ட மருத்துவக் கடை சீல் வைக்கப்பட்டு, மீதமுள்ள இருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

    மருந்து மாதிரிகள் அரசு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் பிச்வா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.
    • காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்பட்டுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி டெல்லியில் அவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, சர்தார் வல்லபாய் படேல், இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி ஆகிய இருவரும்தான் நாட்டின் ஒற்றுமைக்காக மிகக் கடுமையாக உழைத்தார்கள்.

    அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் மரியாதை கொடுத்திருக்கிறது. பாஜகவும் அதன் தலைவர்களும் நேருவுக்கும் படேலுக்கும் இடையில் மோதல் நிலவியதுபோன்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக நல்ல உறவில் இருந்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.

    இன்று நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதற்குபாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸுமே காரணமாக இருக்கின்றன. நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் இவர்களே மூல காரணமாக உள்ளனர்

    சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்ஸை ஏன் தடை செய்தார் என்பதற்கான காரணங்களை அவர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

    சர்தார் படேல், ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காந்தியின் மரணத்தைக் கொண்டாடி, இனிப்புகளை விநியோகித்தனர்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் பேச்சுகள் விஷம் நிறைந்தவை" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இதற்கு பதிலடியாக கார்கே பேசியுள்ளார்.   

    1948 மகாத்மா காந்தி படுகொலைக்கு பின் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு பின்பு 1949 இல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
    • பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.

    அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.

    ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.

    பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.

    இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.

    இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.  

    • அரசியல் காரணங்களால் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
    • இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த சர்வதேச ஆர்ய மகா சம்மேளனம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், ஆர்ய சமாஜத்தின் சமூக சேவையின் 150 ஆண்டுகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், சமூகத்திற்கு ஆர்ய சமாஜம் ஆற்றிய 150 ஆண்டுகால சேவையையும் குறிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் வணங்கி அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரது 200-வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கி வைக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.

    இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று நாம் பெருமையுடன் கூறலாம்.

    துரதிர்ஷ்டவசமாக அரசியல் காரணங்களால் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஆர்ய சமாஜம் தேசபக்தர்களின் அமைப்பாக இருந்து வருகிறது.

    இந்தியா முன்னேற வேண்டுமானால் நமது சமூகங்கள் இடையே உள்ள அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும் என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி அறிந்திருந்தார். எனவே, அவர் ஜாதி, தீண்டாமை மற்றும் பாகுபாட்டைக் கண்டித்தார் என தெரிவித்தார்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் 2009ம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்தார்.
    • தெலுங்கானா முதல் மந்திரியாக காங்கிரசின் ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.

    ஐதராபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவர் 2009ம் ஆண்டில் காங்கிரsil சேர்ந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் மாநில மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா மந்திரி சபையில் முகமது அசாருதீனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. நியமன மந்திரியாக முகமது அசாருதீன் இடம்பெற்றுள்ளார். தெலுங்கானா மந்திரியாக அசாருதீன் இன்று பதவியேற்றார்.

    கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வி அடைந்தார். தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
    • பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட சட்ட சபைக்கு இரு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், மகாகட்பந்தன் கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. முதல் மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:

    ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

    பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.

    பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.

    பீகாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

    இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும் அமைக்கப்படும்.

    பீகாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.

    பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ×