சபரிமலை தங்கம் மோசடி வழக்கில் தந்திரி அதிரடி கைது

தந்திரிக்கு உதவியாக உன்னி கிருஷ்ணன் போற்றியை நியமித்தது தந்திரி கண்டரரு ராஜீவரு தான்.தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.
சபரிமலை தங்கம் மோசடி வழக்கில் தந்திரி அதிரடி கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் அதிரடியாக சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

சபரிமலையில் தந்திரிக்கு உதவியாக உன்னி கிருஷ்ணன் போற்றியை நியமித்தது தந்திரி கண்டரரு ராஜீவரு தான் என்பதும், தந்திரியின் சிபாரிசு என்பதால் சபரிமலையில் உன்னி கிருஷ்ணன் போற்றி, தந்திரி குடும்பத்தின் ஒரு முக்கிய அதிகாரமிக்க பிரமுகராக வலம் வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.

தந்திரிக்கு எதிரான ஆதாரங்களைச் சேகரித்த அதிகாரிகள் நேற்று காலை அவரை விசாரணைக்கு அழைத்தனர். ரகசிய இடத்தில் வைத்து ஆதாரத்தைக் காண்பித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தியதை தொடர்ந்து கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டார்.

தங்கம் மோசடி வழக்கில் சபரிமலை தந்திரி கைது செய்யப்பட்டது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com