என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்
    • 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாத யாத்திரை திருவட்டார் பேருந்து நிலையம் முன்பு தொடங்கியது.

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மகாத்மா காந்தி திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாதயாத்திரையை துவக்கி வைத்து பேசினார்.

    அவர் பேசியதாவது,

    இங்கு வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் அன்பான வணக்கம், இந்த கொட்டும் மழையிலும் நமது பேரியக்கத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்று கூடி இந்த பாத யாத்திரையில் கலந்து கொளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் வேலை நாட்களை குறைவாக கொடுத்தனர்.பின்னர் ஊதியத்தை நிறுத்தினார்.

    தற்போது பெயரை மாற்றி திட்டத்திற்கு வேறு பெயரை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நூறு சதவீதம் நிதியை வழங்கி வந்தது. தற்போது பாஜக அரசு 60% நிதியையும் மாநில அரசு 40% நிதியையும் வழங்க வேண்டுமென கூறுகிறது.

    இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம், இது மட்டுமல்ல பல திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது போலவும், அந்தத் திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தது போன்றும், அல்லது அவர்கள் புதுப்பித்தது போன்றும் செய்கின்றனர்.

    இதனை நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கிறார். நாம் எல்லோரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். மத்தியில் இருக்கும் பாஜக அரசை தூக்கி எறிவோம், 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, முன்னாள் வட்டார தலைவர் தங்க நாடார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . நடைபயணம் திருவட்டார், ஆற்றூர், வீயன்னூர் வழி வேர்கிளம்பி-யை சென்றடைந்தது. 

    • காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.

    விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் 100 ரூபாய் கட்டணம் தரிசனம், பொது தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் இன்று மாசி மாத வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோவில் முன்புள்ள சண்முக விலாஸ் மண்டபத்தில் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    • முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

    மதுரை:

    மார்ச் 1-ம் தேதி மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில் பொது கூட்டத்தன்று அரசு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

    இதனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே இடத்தில் அமைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-

    அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும்.

    திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதை நிறைவேற்றும் விதமாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதியரசர் சுவாமிநாதன் மீதும் தீர்ப்பு வழங்கியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தி.மு.க. ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி 23-ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    பிரதமருடைய வருகை தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விடும் என்றார். பொது கூட்டத்துக்கு முன்பாக மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது.

    எங்களுடைய கூட்டணியின் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.
    • ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.

    சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.

    இந்நிலையில் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    * 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்படும்.

    * ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.

    * 234 தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெறுவார்.

    * தமிழ்நாட்டை த.வெ.க. தலைவர் விஜய்தான் ஆள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று தெரிவித்தார்.
    • எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்தார்.

    சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்த நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.
    • தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.

    தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பல தொகுதிகளில் நேரடியாக மோத உள்ளது. இது தவிர நடிகர் விஜயின் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

    இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளது.

    இந்த நிலையில் இன்று தி.மு.க. தனது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தி.மு.க. குழுவினருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் முகம்மது அபு பக்கர், பொருளாளர் ஷாஜ கான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

    * இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் இல்லை என்றாலும் 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.

    * தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.

    * இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.
    • தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, பயங்கரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.

    ஏற்கனவே 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, தமிழ்நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல், "சிலிண்டர் வெடிப்பு" என சமாளிக்கவே முயன்றது இந்த விடியா திமுக அரசு.

    தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் NIA போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதனைத் தடுக்க என்ன செய்தது?

    டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ATS (Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டு இருந்தது?

    இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது.

    எனவே, தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.

    #மக்களைக்_காப்போம்

    #தமிழகத்தை_மீட்போம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்களிடம் இருந்து எடுத்தால் அது மத்திய பா.ஜ.க. அரசு.
    • திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்!

    மதுரையில் நடைபெற்ற தி.மு.க. வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டு உரையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க. அரசு. மக்களிடம் இருந்து எடுத்தால் அது மத்திய பா.ஜ.க. அரசு.

    திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்!

    #வெல்வோம்_ஒன்றாக

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும்.
    • தமிழக மக்கள் ஜெயலலிதா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறியதாவது:

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மன் கி பாத் உரையில் ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெண்களின் நலனுக்காக அவர் பாடுபட்டார் என்று புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது உரையில் கூறி இருப்பதாவது:-

    பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

    சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட தமிழகத்துக்கு செல்லும்போது மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். அம்மா ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    • 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சி தங்களுக்கே சொந்தம் என இருவரும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து உள்ளது. டாக்டர் ராமதாஸ் தி.மு.க. பக்கம் செல்வதா அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்களுடன் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை ராமதாஸ் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
    • கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.

    கோவை:

    தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டல அளவில், மாநாடு நடத்தி வருகிறது.

    முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அடுத்த கட்டமாக இளைஞரணியின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ம் தேதி நடந்தது. இதிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடானது இன்று மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் பகுதியில் நடக்க உள்ளது.

    இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இதற்காக அவர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    பின்னர் அவர் கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்று நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சி.டி.சி மேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு சென்றார். அங்கு கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மாலை 5 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் பகுதிக்கு வருகிறார்.

    அங்கு நடக்கும் தி.மு.க இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கும் அவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

    துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றுகிறார்.

    அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட மாநகர செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் முடிவில் இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக மாநாட்டிற்கு வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    கோவையில் நடக்கும் மேற்கு மண்டல தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்கள், 39 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை, வாக்குச்சாவடி அளவிலான இளைரணி நிர்வாகிகள் அனைவரும் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.

    மாநாட்டையொட்டி கணியூர் டோல்கேட் பகுதியில் பிரமாண்டமான மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு, குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.

    மாநாட்டு பந்தலில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    • அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும்.
    • , வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.

    இந்த காற்றழுத்த பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடக்கத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும்.

    இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×