search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கஞ்சா முதல் கொக்கைன் வரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் போலீசார்.
    • சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதை அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தொழில் விஷயமாக வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இதுபோன்று வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் பல நாட்கள் வரையில் தங்கி இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இரவு நேர மதுபான விடுதிகளை நாடிச் செல்வார்கள்.

    சென்னையில் போதை பொருட்களை பயன்படுத்துவதற்காகவே இரவு நேர நடன விடுதிகள் பல செயல்படுகின்றன. இந்த விடுதியில் இளம் வாலிபர்களுக்கு இணையாக இளம் பெண்கள் பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு போதையில் மிதப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    கஞ்சா முதல் கொக்கைன் வரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் போலீசார்.

    வெளிநாடுகளில் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விமானம் மூலமாக கடத்தி வரப்பட்டு சத்தமில்லாமல் சப்ளை செய்யப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான கொக்கைன் பிடிபட்டது.

    தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். 'பப்' என்று அழைக்கப்படும் இரவு நேர விடுதிகளில் 'கொக்கைன்' பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக இளம் பெண்களிடம் கொக்கைன் பயன் படுத்தும் பழக்கம் அவர்களது ஆண் நண்பர்களிடமிருந்தே தொற்றிக் கொண்டுள்ளது. இது போன்று போதை பழக்கத்துக்கு அடிமையாகும் பெண்களால் அதில் இருந்து எளிதாக மீண்டு வர முடிவது இல்லை.

    சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பொட்டலங்கள் சென்னை மாநகர் முழுவதும் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களையும், இளம் வயதுடையவர்களையும் சென்றடைந்து விடுகிறது. உணவு டெலிவரி செய்பவர்களில் சிலர் கஞ்சா பொட்டலங்களை கடத்தி விற்பனை செய்தும் வருகிறார்கள். செல்போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலர் விற்பனை செய்கிறார்கள். சென்னை மாநகரில் குட்கா போன்ற பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கடைகளில் அது தாராளமாக கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி சென்னையில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் அதிகாரிகள் தவிக்கும் நிலையே நீடித்து வருகிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல்முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    26.04.2024 முதல் 30.04.2024 வரை தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

    ஈர்ப்பதம்:

    26.04.2024 முதல் 30.04.2024 : காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

    வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

    26.04.2024 முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் தேர்தலையொட்டி பூட்டப்பட்டிருந்தது.
    • தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் தேர்தலையொட்டி பூட்டப்பட்டிருந்தது.

    தேர்தல் அட்டவணை வெளியான மார்ச் 16-ந்தேதி முதல் மாவட்ட கலெக்ர்கள் இவற்றை பூட்ட உத்தரவிட்டனர். அதன்படி இன்னும் இந்த அலுவலகங்கள் பூட்டப்பட்டு கிடக்கிறது. நகராட்சித் தலைவர் அலுவலகம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனி அலுவலகங்களும் பூட்டியே கிடக்கிறது.

    தற்போது தேர்தல் முடிந்து 1 வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்றுவதற்காக எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறந்து விட வேண்டும் என்று 234 தொகுதியிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஓரிரு நாளில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாட்டுசாணம் தானா என உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்து விசாரித்து வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் அதே புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சியில் குருவண்டான் தெருவில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.

    இங்கிருந்து ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திடீரென வயிறு வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இப்படி அடுத்தடுத்து பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தண்ணீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ எனக் கருதிய அப்பகுதி இளைஞர்கள், தண்ணீர் தொட்டிக்கு மேலே ஏறிப் பார்த்துள்ளனர்.

    அப்போது தொட்டிக்குள் மாட்டுசாணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மாட்டுசாணம் தானா என உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்து விசாரித்து வருகின்றனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி கார்த்திகேயன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராகவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    • சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிராக அளித்த புகார் மனுவை பரிசீலிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சத்திய பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், "சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை காண நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது இமாலய இலக்காக உள்ளது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.

    குறைந்த கட்டண டிக்கெட்கள் கூட, 14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதன் பின்னணியில், மாபியா கும்பல் இயங்கி வருகிறது.

    சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்களும், 31 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், இந்த மாபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விதிகளை மீறி செயல்படும் சேப்பாக்கம் மைதான அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விளையாட்டு போட்டிகள் முடியும் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    • பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
    • 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.

    தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 26ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது

    மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.

    வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ்) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

    பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

    தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.

    சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.

    தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்

    வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 48). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கமாடத்தெரு பகுதியில் உள்ளது. அதில் வீடு கட்ட அவர் முடிவு செய்தார்.

    இதையடுத்து நகராட்சியில் கட்டிட பிளான் அலுவலகத்தில் கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதி மணி (56) என்பவரிடம் முறையாக அனுமதி கோரி மனு செய்துள்ளார். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் முறைப்படி செலுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக நேற்று கட்டிட அமைப்பு வரைபட ஆய்வாளர் ஜோதி மணியை அணுகியபோது, அவர் கட்டிட வரைபட அனுமதி கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன் லஞ்சம் கொடுக்க விருப்பமின்றி விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சால்வன் துரை ஆகியோரிடம் புகார் அளித்தார்.

    அந்த புகார் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் அறிவுரைப்படி ரசாயணம் தடவிய பணத்தை வாசுதேவனிடம் கொடுத்து அனுப்பினர். இந்தநிலையில் இன்று காலை வாசுதேவன் லஞ்ச பணத்துடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஜோதிமணி, நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரூ.10 ஆயிரம் பணத்தை ஜோதிமணி பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் தனி அறையில் வைத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பெண் அதிகாரி ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
    • சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சிறுத்தை ஒன்று அரியலூர் மாவட்டத்தில் சுற்றி திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை நீர் வழி பாதை வழியாக அரியலூர் மாவட்டம் சென்று இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்து 2 நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பிறகு தனது தேடுதல் வேட்டையை மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறுத்தியது.

    இந்நிலையில் ஏற்கனவே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை தென்பட்டதாகவும் அது தன்னை விரட்டி வந்த நாய்களில், ஒரு நாயை தூக்கி செல்லும் பொழுது நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும் நேற்று முன்தினம் இரவு கட்டுமான தொழிலாளி ஒருவர் வனத்துறையினரிடம் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சற்று பெரிதான காலடி தடம் ஒன்றை கண்டுபிடித்து அதனை சுற்றி அடையாளம் காண, சுன்னாம் பால் வட்டம் வரைந்து மூடி, பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    இதனால் சிறுத்தை அரியலூரில் இருந்து மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்ததா? என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறுத்தை வந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இருந்தாலும் சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    • ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.
    • ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் கடந்த 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.

    அதன்படி நெல்லூர் அருகில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.

    அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.

    ஆனால் கடந்த ஆண்டு ஜூன் முதல் மே வரை 2½ டி.எம்.சி.கிருஷ்ணா தண்ணீர்தான் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. அதன் பிறகு சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு இருந்தது. இதனால் கிருஷ்ணா தண்ணீரை உடனே தருமாறு வலியுறுத்தவில்லை.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டதின் காரணமாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதனால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்தியது.

    இப்போது கோடை காலமாக இருப்பதால் இரு மாநிலத்திற்கும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் கண்டலேறு அணையில் இப்போது 6 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. (கொள்ளளவு 68 டி.எம்.சி.) இதனால் கிருஷ்ணா தண்ணீரை இப்போது திறந்துவிட இயலாது என்று தமிழக அரசு கூறி உள்ளது.

    4 மாதமாக அணை திறக்கப்படாத நிலையில் மழை பெய்யும் பட்சத்தில் ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையை சுற்றி உள்ள ஏரிகளில் இப்போது 6.980 டி.எம்.சி. (கொள்ளளவு 13.213 டி.எம்.சி.)தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் கிடைத்து வருவதாலும் குடிநீரை கட்டுப்பாடின்றி வினியோகித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தவிர குன்றத்தூர் திரிசூலம் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளிலும் தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் அதை வைத்து குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், வனபத்ர காளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்ட பாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து கோர்ட்டு அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 3-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் தொட ர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் 4 பூசாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 32), துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து கோட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோட்டார் போலீசார் பால்ராஜ் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    கோட்டார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று பால்ராஜிக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது அந்த வாலிபர் பால்ராஜை தாக்கியதும் தெரியவந்துள்ளது.

    மேலும் நள்ளிரவு மீண்டும் பால்ராஜை அவர் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பால்ராஜ் பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அந்த வாலிபரின் முகம் பதிவாகியுள்ளது.

    ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கொலையாளியின் புகைப்படத்தை கோட்டார் போலீசார் வெளியிட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டார் போலீசார் மற்றும் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே 4 வழக்குகள் தற்கொலை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் டிரைவர் ஒருவர் பிணமாக கிடந்ததை வடசேரி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. இதேபோல் கோட்டார் பகுதியில் கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.

    இதுபோல் மாவட்டத்தில் வேறு 2 வழக்குகளும் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து இருந்தார். மேலும் அதற்கான கட்டணம் ரூ.42 ஆயிரத்து 900-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி விட்டு தேவிபட்டினம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு என்பவரை சந்தித்து கடந்த ஒரு மாதமாகவே முறையிட்டு வந்துள்ளார்.

    இது சம்பந்தமாக நேற்று வணிக ஆய்வாளரை சந்தித்து மனு சம்பந்தமாக கேட்டபோது உங்க வேலை சீக்கிரம் நடக்க வேண்டுமானால் உதவி பொறியாளருக்கு ரூ.3 ஆயிரமும், ஊழியர்களுக்கு கொடுக்க ரூ.6 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முகமது பிலால் இன்று காலை மீண்டும் வணிக ஆய்வாளரை சந்தித்தபோது ரூ.9 ஆயிரம் பணத்தை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கறாராக கூறியுள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுத்தலின்பேரில் ரசாயணம் தடவிய ரூ.9 ஆயிரத்தை வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் இன்று காலை முகமது பிலால் கொடுத்தார். அப்போது அதில் ரூ.3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மீதி பணம் ரூ.6 ஆயிரத்தை அங்கு பணிபுரியும் வயர் மேன் கந்தசாமி என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.

    அதன்படி இருவரும் ரசாயணம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அலுவலக உதவி மின் பொறியாளர் செல்வி என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×