என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.
- பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.
வாக்காள பெருமக்களே.. மறந்தும் இருந்து விடாதீர்கள்... என்ற வாகன பிரசாரம் வீடுகளுக்குள் இருந்தாலும் தற்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.
தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுவதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காணப்பட்டனர். மேள தாளங்கள் அடித்தப்படி ஊர்வலமாக சென்றனர்.
பிரசார வாகனங்களில் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, நடனமாடினர்.
பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு ஆட்டோ முன் செல்ல, வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் தொண்டர்கள் கையில் பதாதைகளை ஏந்தி நடனமாடிக் கொண்டே பின்தொடர்ந்து சென்றனர்.
குறிப்பாக மலைக் கிராமங்கள், சாலை வசதியற்ற மற்றும் நீண்ட தொலைவில் உள்ள குக்கிராமங்களுக்கு வேட்பாளர்கள் சென்று குக்கிராமங்களிலும், வேட்பாளர்கள் வராத பகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டனர்.
எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்தனர்.
பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் பேசினர்.
மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தினர்.
தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து ஓட்டு கேட்டனர்.
சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றினர்.
பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.
வேலூரில் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடினர். மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது.
இதை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தனர்.
இறுதிகட்ட பிரசாரத்தில் எங்கு பார்த்தாலும் தாரைதப்பட்டை ஆட்டம் என திருவிழா போல் காட்சி அளித்தது.
- பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர்.
- தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
கேள்வி: ஒரு இடம் கூட கொடுக்காத போதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது ஏன்?
பதில்: இந்த பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர். எங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது வருத்தம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதைவிட மிகப்பெரிய வலி என்னவென்றால் 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்தின் விழுமியங்கள், அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் மீறப்பட்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. தனிப்பட்ட பாதிப்பை விட நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்துக்காக இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
கேள்வி: சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்று கூறும் உங்கள் கூட்டணி கட்சிகள் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லையே?
பதில்: எங்கள் கூட்டணியில் முஸ்லிம் லீக் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். நிச்சயமாக இதைவிட அதிகமாக தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அடுத்த முறை அதை எங்கள் கூட்டணி கட்சிகள் நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கேள்வி: பா.ஜனதாவுடனான உறவை அ.தி.மு.க. துண்டித்துள்ளதால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளதா?
பதில்: நிச்சயமாக பிரியாது. காரணம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது அ.தி.மு.க. அது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்ட போது அன்றைய முதலமைச்சர் மறுத்து விட்டார். ஆட்சி மாறிய பிறகு கூட தி.மு.க. தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த போது வெளிநடப்பு செய்து விட்டது அ.தி.மு.க.
அது மட்டுமல்லாமல் கொரோனா காலக்கட்டத்தில் இங்கு வந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை கொரோனாவை பரப்பினார்கள் என்பதற்காக சிறையில் அடைத்தது அ.தி.மு.க.அரசு. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குகளை போட்டது அ.தி.மு.க.அரசு. இப்படியாக பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே பா.ஜனதாவுடன் உறவு இல்லை என்று அ.தி.மு.க. சொல்வது தேர்தல், அரசியல் தந்திரமாகும். ஆகவே நிச்சயமாக சிறுபான்மையினர் வாக்குகள் பிரியாது. சிறுபான்மை மக்களின் நலனை காக்க கூடிய கூட்டணி இந்தியா கூட்டணியாகும். ஒட்டு மொத்தமாக சிறுபான்மையினர் இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்.

கேள்வி:- பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து அடிக்கடி பிரசாரம் மேற்கொள்வது ஏன்?
பதில்:-தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு பெரிய அலை வீசுகிறது. மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதெல்லாம் மோடி தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்கவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண தொகைகளை தருவதற்கு எல்லாம் அவருக்கு மனம் வரவில்லை.இப்போது தேர்தலில் எப்படியாவது பா.ஜ.க .வை ஒரு இடத்திலாவது வெல்ல வைக்க முடியுமா என்பதற்கு அவர் பலமுறை வருகிறார். ஆனால் நிச்சயமாக தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.
கேள்வி:- இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பெற வாய்ப்பு உள்ளதா?
பதில்:-நிச்சயமாக எழுச்சி பெற வாய்ப்பு இல்லை. காரணம் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த கூட்டணியில் தான் இருக்கின்றன. எனவே தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெல்வது கடினம்.
கேள்வி:- இந்தியா முழுவதிலும் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுவாக இல்லையே?
பதில்:- நிச்சயமாக அது ஒரு தவறான கருத்து. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் வலுவாக இருக்கிறது. இன்றைக்கு வரக் கூடிய பல்வேறு செய்திகள் வட இந்தியாவிலும் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசுகிறது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவான ஒரு அலை வீசுகிறது என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது. எனவே இந்தியா கூட்டணி வட இந்தியாவிலும் சிறப்பான வெற்றியை பெறும்.
கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி உங்கள் கருத்து?
பதில்:-மிக சிறப்பான ஒரு தேர்தல் அறிக்கையாகும். பலதரப்பட்ட மக்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கை. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்சம் தரப்படும், பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்த மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக ரூ. 1 லட்சம் தரப்படும் உள்ளிட்ட மிகவும் அற்புதமான அறிவிப்புகள். இதே போல மோடி அரசு நிறுத்திய கல்வி உதவித் தொகை எல்லாம் வழங்கப்படும். இப்படியான சிறந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உண்மையிலேயே இந்த தேர்தலின் கதாநாயகனாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்து இருக்கிறது.
பா.ஜனதா கடந்த 2 தேர்தல்களில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார்கள். இது பற்றி கேட்ட போது தேர்தல் நேரத்தில் நாங்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? அது தேர்தலுக்காக சொல்லப்பட்டது என்றனர்.
கேள்வி:-ராகுல் காந்தி தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பிரசாரம் செய்துள்ளாரே?
பதில்:-ஒருமுறை தான் வந்தார். ஆனால் அந்த ஒரு முறையில் அவர் நடந்து கொண்ட விதம் குறிப்பாக கோவையில் வாகனத்தில் போகும் போது இறங்கி இனிப்பு கடைக்கு சென்று இனிப்பை வாங்கி அதற்குரிய தொகையை கொடுத்து விட்டு தேர்தல் பரப்புரை மேடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனது மூத்த சகோதரர் என்று சொல்லி அவரிடம் அந்த சுவீட்டை கொடுத்த அந்த காட்சி மூலமாக தமிழக மக்களுடைய உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டு விட்டார் ராகுல்காந்தி. நிச்சயமாக அவருடைய நடத்தை, பேச்சு தமிழ்நாட்டு மக்களை கவர்ந்து இருக்கிறது. ராகுல்காந்தி மிக சிறப்பான தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்.
கேள்வி:-2019 தேர்தலுக்கும், தற்போதைய தேர்தலுக்கும் என்ன மாற்றம் இருக்கிறது?
பதில்:-2019 தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. தற்போது அ.தி.மு.க. தனியாகவும், பா.ஜ.க. தனியாகவும் போட்டியிடுகின்றன. எனவே தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் 3 முனைகளில் பிரிகிறது. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. மிக எளிதாக 40 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் வெற்றி பெறும்.
கேள்வி:- பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள உங்களுக்கு கள நிலவரம் என்ன சொல்கிறது?
பதில்:-நான் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருக்கிறது. எனக்கும் உற்சாகமான வரவேற்பை மக்கள் தருகிறார்கள். மக்களின் ஆதரவு அலை இந்தியா கூட்டணி பக்கம் வீசுகிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த பரப்புரை அமைந்துள்ளது.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
- ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது.
- நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினார்கள். தப்பித் தவறி மோடிக்கு வாக்களித்தால் இனி ரம்ஜான் கொண்டாட முடியாது. அடுத்த தலைமுறையினர் தேர்தலை பார்க்கவே முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கு வாக்களித்து இன்னொரு ஹிட்லரை உருவாக்கிட வேண்டாம்.
சமத்துவம் பெருக சமூக நீதி மண்ணில் இருக்க ஜாதி மதங்களை கடந்து மக்கள் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி நெல்லையில் நடந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவேன் என்றார். ஜெயலலிதாவின் இலக்கு மோடியா, லேடியா என்பதுதான். மோடியை தமிழகத்தில் இருந்து அகற்றுவதுதான் இலக்காக கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜி.எஸ்.டி. என்பது வரி இல்லை. வழிப்பறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வுடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி வைத்துள்ளது. இது உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?
ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது. மக்கள் மீது வரியை சுமத்தும் மத்திய அரசு வங்கி கடன்களில் வராக்கடன் என ரூ.66 லட்சம் கோடியை அறிவித்துள்ளது. இதில் ரூ.14 லட்சம் கோடியை அதானி, அம்பானி மற்றும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.
நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும். மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. அதே நேரம் தனி நபர் வருமானத்தில் 121-வது இடத்தில் உள்ளது. இந்தியா பணக்கார நாடாக இருந்த போதிலும், இந்திய மக்கள் ஏழைகளாக உள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம்.
- மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்.
சென்னை:
தென் சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டார்.
அக்கா 1825 (365x5 years) என்ற தலைப்பில் தேர்தல், தமிழிசை சவுந்தரராஜனின் தென் சென்னை உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம்.
* தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்.
* மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்
* தென் சென்னையில் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த திட்டம்
* பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால் பிரச்சனை.
* பிரச்சனைகளை தீர்த்து மீனவர்களின் அடிப்படை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
* 6 சட்டசபை தொகுதிகளிலும் 6 அலுவலகங்கள் திறக்கப்படும்.
* மீனவர்களுக்கான ஆலோசனைக்குழு போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி, அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் கூறினார்.
- இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
- பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார்.
ஈரோடு:
தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடையில் தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு பதிவு பெட்டியில் 3-வது இடத்தில் நமது உதயசூரியன் சின்னம் உள்ளது. ஆனால் ஜூன் 4-ந்தேதி நாம் முதலிடத்திற்கு வர வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும்.
ஈரோடு பாராளுமன்ற முன்னாள் எம்.பி. கணேசன் மூர்த்தியை கடந்த தேர்தலில் 2.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்தீர்கள். இந்த முறை நமது வேட்பாளர் கே.இ. பிரகாஷை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 2021-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியை நாம் இழந்தோம். இருந்தாலும் நமது முதலமைச்சர் அந்த தொகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி கூறினார்.
இங்கு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சோலாரில் உலகத்தரம் மிக்க விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்னும் எண்ணற்ற பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது. தற்போது எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளனர்.
ஆனால் இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இதேபோல் பெட்ரோல் விலை ரூ.75-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். டீசல் விலையும் 65-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். கண்டிப்பாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
நமது முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். யார் காலையும் பிடிக்கவில்லை. தவழ்ந்து தவழ்ந்து வரவில்லை. அப்படி முதலமைச்சர் ஆனவர் யார் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு பாதம் வாங்கிய பழனிசாமி என்று பெயர் வைத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று தான் முதல்வரானார்.
பா.ஜ.க.வுடன் 4 வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார்.
கலைஞர் இருந்த போது நீட் தமிழகத்திற்கு வரவில்லை. பிறகு ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். இதன் விளைவு இதுவரை 7 ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலைமைகள் இருந்தது. இதற்கு முதல் பலி அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1200-க்கு 1170 மதிப்பெண் எடுத்தார். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒரு டாக்டர்.
திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நான்கு பேர் மட்டுமே பாரளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்கள். தி.மு.க. தலைவர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை ஆகியவை குறைத்தார். பி.எம். மூலம் கொரோனா காலத்தில் பிரதமர் 32 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இதுவரை கணக்கு காட்டவில்லை.
சென்னை, தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது 2500 கோடி ரூபாய் மாநில அரசு நிதி வழங்கியது ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால் பிரதமரை 29 பைசா என்று சொல்லி தான் அழைக்க வேண்டும்
ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யப்படும் மத்திய அரசு முறையாக சரிசமமாக மாநிலத்திற்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. கடந்த முறை தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல இந்த முறை 40/40வெற்றி பெற்று தமிழர்கள் மானமிக்க சுயமரியாதை உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார்.
2019-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டு நான் சென்று பார்த்த போது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது இது வடிவேலு திரைப்பட பாணியில் கிணற்றை காணவில்லை என்பது போல உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால் கோபம் வருகிறது விட்டால் என்னை அடித்து விடுவார் போல இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதை விட்டு மோடியிடம் பல்லை காட்டுகிறார்.
எடப்பாடி பழனிசாமி அடிமை ஆட்சி நடத்திவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் பாஜக- அதிமுக கூட்டணி இல்லை என்று நாடகம் ஆடுகிறார்கள்.
ஆளுநர் பாஜகவின் கைபாவையாக உள்ளார். தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் முக்கியம் என்று சொன்ன தலைவர் நம் தலைவர் ஸ்டாலின். அண்ணா வைத்த தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என சொன்னவர் ஆளுநர்.
மத்திய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்து கொண்டு இவ்வளவு நல்லது செய்யும் நிலையில் தேவையான நிதியை வழங்கும் ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு எப்படியெல்லாம் நலத்திட்டங்களை செய்யலாம் என்று நினைத்து பாருங்கள்.
இந்திய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அடிமை அ.தி.மு.க.வை விரட்டி அடித்தது போல இந்த முறை அ.தி.மு.க. எஜமானர்கள் பா.ஜ.க. விரட்டி அடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம்.
- தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது.
மண்ணச்சநல்லூர்:
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியில் இருந்து மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்செரிதல் நடைபெறும்.
பூச்செரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் மூலஸ்தானத்திலிருந்து அம்மன்(உற்சவர்) புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்கனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மிகுந்த உற்சாகத்துடன் ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று, முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் நிலையை அடைந்தது.
விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்ரனர். இத்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் திருவிழாவையொட்டி 7 மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இதேபோன்று திருச்சியில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துறையூர் வழியாக சென்னை செல்வதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மரக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 48 இடங்களில் மண்டகப்படி பூஜைக்கான அம்பாள் நேற்று இரவு புறப்பட்டார்.
பல்வேறு இடங்களில் பூஜைகளை பெற்றுக் கொண்டு பின்னர் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மன் தேரில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேர் திருவிழாவை கண்டுகளிக்க குவிந்தனர்.
இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை.
- விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையிலான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடிகள் உட்பட மொத்தம் 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் 191 வாக்குச்சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் பாதிக்கப்பட கூடிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 1476 வாக்குச்சாவடிகளும், ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1,112 வாக்குச்சாவடிகளும் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுவதுடன் நுன்பார்வையாளர்கள் மூலமாகவும் நேரடியாக கண்காணிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லவும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்லவும், சிறப்பு நிர்வாக நடுவர் அதிகாரம் பெற்ற மண்டல மற்றும் காவல்துறை அலுவலர்களை கொண்ட 198 குழுக்கள் ஈரோடு மாவட்டம் முழுமைக்கும், 146 குழுக்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 131-ன் படி காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்திய 72 மணி நேரத்தில் (3 நாட்களுக்கு முன்னர்) பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினரின் சோதனை தீவரப்படுத்தப்படும்.

அதேப்போல் 48 மணி நேரத்துக்குள் மேலும் சோதனை தீவிர படுத்தப்படும். ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது. கூட்டம் கூட கூடாது.
மாவட்ட அளவில் இலவச தொலைபேசி எண், சி-விஜில் ஆப் மூலமாக 118 புகார்கள் பெறப்பட்டு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை. 100 மீட்டருக்குள் வாகனங்களை நிறுத்துதல், பிற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணி, கை குழந்தையுடன் வருவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்களித்திட அனுமதிக்கப்படுவார்கள்.
மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரில் 3001 பேரில் தபால் வாக்கு செலுத்த படிவம் 12 டி வழங்கப்பட்டது. அதில் 2,800 பேருக்கும் அதிகமானோர் வாக்கு பதிவு செய்துள்ளனர். முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழற்குடை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் இப்படி அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள மையத்தில் வழி காட்டுவதற்கு ஒருவர் செயல்படுவார்.
தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 970 அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தவிர ஒருங்கிணைப்பு பணியில் சுமார் 2500 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் பணியாற்றுகின்றனர். வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். வாக்குப்பதிவுக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும். அது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில் நடைபெறும். முகவர்கள் வர தாமதமானால் 15 நிமிடம் காத்திருந்து மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும்.
அப்போதும் முகவர்கள் வரவில்லை எனில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரே மாதிரி வாக்குப்பதிவை நடத்துவார். 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்படும். முகவர்கள் இருந்தால் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கு என மாதிரி வாக்கு பதிவு செய்யலாம். மலைப்பகுதி வாக்கு சாவடியில் அங்கு பணியாற்றுபவர்களே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தொலைபேசி இன்டர்நெட் வசதி தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் கிடைக்காத வாக்கு சாவடிகளுக்கு வனத்துறையினர் மைக் மூலமாக தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மலைப்பகுதியில் மட்டும் 120 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கத்திரி மலை, மல்லியம்மன் துர்க்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்ல மண் சாலைகளை உள்ளன இருப்பினும் கூடுதல் வசதி அலுவலர்களுடன் அங்கு வாக்குப்பதிவு நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உடன் இருந்தார்.
- பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார்.
பரமக்குடி:
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை புதுச்சேரியில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை வந்தார். விமான நிலையம் வந்த ஜே.பி.நட்டாவுக்கு பா.ஜ.க. பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்திற்கு காலை 11.00 மணிக்கு வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் கிருஷ்ணா தியேட்டர் பகுதிக்கு சென்றார்.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாகன பிரசாரத்தில் ஜே.பி.நட்டா ஈடுபட்டார். அவரது வருகையை முன்னிட்டு பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பிரசாரத்தை முன்னிட்டு அவரது வாகனம் பேருந்து நிலையம், வெள்ளி விழா தோரணவாயில் வழியாக காந்தி சிலை வரை சுமார் 3 கி.மீ. தூரம் சென்றது. அவர் செல்லும் வழியில் இரு புறங்களிலும் பா.ஜ.க.வினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார்.
பின்னர் காந்தி சிலை அருகே வாகனத்தில் இருந்த படியே ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மிகவும் தகுதி வாய்ந்த, திறமை வாய்ந்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு பிரசாரம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழக மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. அவரது குரல் டெல்லியிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடும் அவரை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும். இதற்காக பலாப்பழம் சின்னத்தில் நீங்கள் வாக்களிப்பீர்களா?
நடைபெறும் இந்த தேர்தல் வெறும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, 2047-ல் பாரதம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதமாக, வலிமை பெற்ற பாரதமாக மாறுவதற்கான ஒரு தேர்தலாகும். எனவே 400 சீட்டுக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மத்திய பா.ஜ.க. ஆட்சியில், ஏழைகள் வளம் பெற அதிகமான திட்டங்களை அளித்துள்ளது. ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், மருத்துவ வசதி போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.
ரேசன் கடைகள் மூலமாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கும் இது தொடர்ந்து வழங்கப்படும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் மூலம் 25 கோடி ஏழைகள் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். 12 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழகத்திற்கும், ஏராளமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தி.மு.க. என்பது, அநீதி, ஊழல், கட்டப்பஞ்சாயத்து தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்துகளை குவித்துள்ளனர். ஜூன் 4-ந்தேதி அன்று அமையும் ஆட்சி இவர்களை சிறைக்கு அனுப்பும் அல்லது ஆட்சியை விட்டு வெளியே அனுப்பும். ஆகவே பா.ஜ.க. வெற்றி பெற பலாப்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார்.
- முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தேனி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
- சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த வாகன சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் நாளை (புதன் கிழமை ) மாலை 6மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், உள்ளிட்ட பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தமிழக முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முற்றுகையிட்டு தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் இறுதி கட்ட விறுவிறுப்பை எட்டி உள்ளது.
இந்நிலையில் தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தேனி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரும் முக்கிய பகுதிகளில் முகாமிட்டு வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்க நகைகள் மற் றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
மதுரையிலும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை உசிலம்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உசிலம்பட்டியில் இருந்து உத்தப்ப நாயக்கனூர் நோக்கி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த தேர்தல் பிறக்கும் படையினர் ஆர்.பி உதய குமார் மற்றும் வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் சென்ற வாகனங்களை வழி மறைத்தனர். இதை தொடர் ந்து சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் மற்றும் வேட்பாளர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகளின் 10 வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பணம் உள்ளிட்ட எவ்வித பொருள்களும் சிக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த வாகன சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேட்பாளருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
- விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சாவூர் அண்ணா நகர் சிவாஜி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பழனிதுரை மகன் கிருபா பொன் பாண்டியன் (வயது 34).
இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். தஞ்சை அடுத்த வல்லம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுத்திட்டு மீது ஏறி எதிர் திசைக்குச் சென்று, எதிரே நாகையிலிருந்து திருச்சி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த கிருபா பொன் பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மினி லாரி டிரைவரான காரைக்கால் திருநகரைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (32), அவருடன் வந்த காரைக்கால் அம்பாச முத்திரம் ஏரி பகுதியைச் சேர்ந்த மேத்யூ (26) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் உயிரிழந்தார். மேத்யூவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தில் சேதமடைந்த கார், லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல்.
நாகர்கோவில்:
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் தினமும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.
குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார். இரணியல், திங்கள் நகர், ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடி முனை, குளச்சல் கடற்கரை, கூத்தவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை திறந்த வாகனத்தில் சென்று சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குருந்தங்கோடு, கண்டன்விளை, பேயன்குழி, வில்லுக்குறி, பள்ளம், பரசேரி, ஆளூர், சுங்கான் கடை, பெருவிளை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல். பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய தேர்தல். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 10 பைசா கூட செலுத்தவில்லை. மாறாக, ஏழை மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர்.
- புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான்.
- அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது.
திருமங்கலம்:
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜல்ஜீவன் திட்டத்தில் உங்களுக்கு பிரதமர் மோடி குடிநீர் கொண்டு வந்தார். புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான். அது டெல்லியில் இருந்து வந்த பணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. வினர் கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எனவே உங்களுக்கு பணம் கொடுத்து உங்களை ஏமாற்ற நினைப்பார்கள்.
இந்தியாவிலேயே பா.ஜ.க. மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சி. தி.மு.க.வில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது. குரல் கொடுப்போம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம்.
தமிழ் மொழி, தமிழ் மண்ணுக்காக கொடுக்கிற பிரதமர் இருக்கிறார். நான் உங்கள் பிரதிநிதியாக, ஆனால் நேரடியாக உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்வேன். இங்கு அதிகமாக மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும் என்பதால் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.






