என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம் - தன்பாத் மற்றும் ஈரோடு - தன்பாத் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாரந்திர சிறப்பு ரெயில் (06065) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06066) மறுநாள் இரவு 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதேபோல, ஈரோட்டில் இருந்து வரும் 26, மே 3, 10, 17, 24, 31 மற்றும் ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06063) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06064) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 2 மணிக்கு ஈரோடு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் (06097) வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, பார்மரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06098) மே 3 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22663) மே 4, 11, 18 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் ஆகிய வழித்தடத்திற்கு பதிலாக, ரேணிகுண்டா, சுலேஹள்ளி, செகந்திராபாத், காசிபேட், பல்ஹர்ஷா ஆகிய வழித்தடத்தில் செல்லும்.
அதே போல, ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22664) வருகிற 30-ந் தேதி மற்றும் மே 7, 21 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மேற்குறிப்பிட்ட வழித்தடத்திலேயே செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- குடும்ப பிரச்சனை காரணமாக தனது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- குடிபோதையில் மகன், பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானதீபம். இவரது மனைவி குலோடில்டா (வயது 67). குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதில் மூன்றாவது மகன் ஜெயனுக்கு(38) திருமணமாகி மனைவி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெயன் அப்பகுதியில் உள்ள பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் குடிபோதையில் தாய் குலோடில்டாவிடம் அவர் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த ஜெயன் பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியால் மார்பு மற்றும் வயிற்று பகுதி ஆகிய 3 இடங்களில் கொடூரமாக குத்தினார். இதில் குலோடில்டா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தூத்துக்குடி நகர போலீஸ் உதவி கமிஷனர் கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா, வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குலோடில்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தாயை கொலை செய்த ஜெயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு செய்த தந்தையை 14 வயது மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நேற்று குடிபோதையில் மகன், பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது.
- குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.
ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
- பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.
மதுரை:
தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும் ஐகோர்ட்டு பிறப்பித்தது.
கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கினாலும், மாணவர்கள், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை. அவர்களை பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.
எனவே இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பஸ்களிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்துவது அவசியம் என அறிவுறுத்தினர்.
பின்னர், தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.
- விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் கடத்தல் மீண்டும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் தனது காலணியின் அடிப்பகுதியில் ரூ.28.86 லட்சம் மதிப்பிலான 401.5 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செக் போஸ்ட்டில் நிலை கண்காணிப்புக்குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- பறக்கும் படையினர் அவர் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர்.
அந்தியூர்:
கர்நாடகா மாநில எல்லையை ஒட்டியுள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில், கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இங்கு வரட்டுப்பள்ளம் அணை, செக் போஸ்ட் மற்றும் பர்கூர் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாகன சோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் செக் போஸ்ட்டில் நிலை கண்காணிப்புக்குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் வட்டம் ஹனூர் தொடவாத்தூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்த பாபு மகன் மாதேவன் (வயது 32) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் அவர் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை மண்டல துணை வட்டாட்சியர் ராஜ சேகரிடம் ஒப்படைத்தனர்.
- தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாகும்.
சென்னை:
தமிழ்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தை தி.மு.க. தலைமை பாராட்டி உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்தான் அவரை தனித்தன்மை வாய்ந்த பிரசார நாயகனாக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. கருணாநிதி எந்த ஊரில் பேசினாலும் அந்த ஊரில் தி.மு.க.வை வளர்த்த தலைவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் சிறப்பை, தியாகத்தை எடுத்துக் கூறுவார். அந்த ஊரிலிருந்த சிறந்த தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைப்பார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சும் அதே பாணியில் அமைந்திருந்ததை இந்த பிரசாரத்தில் காண முடிந்தது. தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார். கருணாநிதியை போலவே, தொண்டர்களுடன் நம் உதயா (உதயநிதி ஸ்டாலின்) கலந்துரையாடி மகிழ்கிறார் என்று பெருமையுடன் பேசிக்கொண்டார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று கடந்த 24 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகளில் 8 ஆயிரத்து 465 கிலோ மீட்டர் பயணம் செய்து, 122 பிரசார முனைகளில் 3 ஆயிரத்து 726 நிமிடங்கள் பேசியுள்ளார்.
ஒவ்வொரு பிரசார இடங்களிலும் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்து நேரடி பிரசாரம் செய்துள்ளார். இந்த பிரசார கூட்டங்களில் மட்டும் சுமார் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும், தி.மு.க. தொண்டர்களையும் சந்தித்துள்ளார். இதில் அதிகமான பெண்கள் திரண்டு வந்து அவருடைய பேச்சினை ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, மத்திய அரசு 'எய்ம்ஸ்' மருத்துவமனையை மதுரையில் கட்டாததை அனைவரும் அறியும் வகையில் பொதுமக்களிடம் ஒற்றைச் செங்கல் காண்பித்து, பிரசாரம் செய்த விதம் மையமாக அமைந்தது. அந்த ஒற்றைச் செங்கல் பிரசாரம் அந்த தேர்தலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.
சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகனத்தில் திறந்த வெளியில் நின்று கொண்டும் எந்தவித தடுப்புமின்றி பிரசாரம் மேற்கொண்டார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி மக்கள் சந்திப்பும், பொதுமக்களிடம் யதார்த்தமாக பழகிய விதமும், அவர்களிடமே கேள்விகள் கேட்டு பதில்கள் தந்த விதமும் இந்த தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய புகழையும், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவையும் பெருக்கியது என்பது உண்மை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாகும். தமிழ்நாட்டின் இந்த தேர்தல் வெற்றி வருங்காலத்தில் பிரசார பணிகளை மேற்கொள்வோர்க்கு ஒரு சிறந்த வழிகாட்டும் மாடலாக திகழும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர்.
- தேர்தலில் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.
விழுப்புரம்:
தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த பரபரப்பான தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குலசேகரன் (வயது 40). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவருடைய குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்தவரும், தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்தவருமான நக்கீரன் (48) குடும்பத்திற்கும் அரசு புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
மேலும் கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சேகருக்கு ஆதரவாக குலசேகரன் தரப்பினர் செயல்பட்டனர். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்திலும் இரு தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குலசேகரன் தரப்பினர் மீது நக்கீரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
அரசு புறம்போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு தடையாக இருப்பதோடு, தேர்தலிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.
கடந்த 4.11.2005 அன்று காலை 6 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் குலசேகரன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வீச்சரிவாள், கொடுவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்த நக்கீரன் தரப்பினர், குலசேகரனை சரமாரியாக வெட்டினர்.
இதை தடுக்க வந்த குலசேகரனின் நண்பர் காத்தவராயன் (50) என்பவரையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் குலசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பலத்த காயம் அடைந்த காத்தவராயன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே நக்கீரன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காத்தவராயனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார்.
இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து குலசேகரனின் அண்ணன் திருநாவுக்கரசு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நக்கீரன், கோவிந்தராஜ் (70), தமிழ்மணி (27), அ.தி.மு.க. முன்னாள் கிளை பிரதிநிதி சிவபூஷணம் (64), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி (77), மணவாளன் (74), ராஜேந்திரன் (64), குமரவேல் (52), மார்க்கண்டேயன் (64), சுதாகர் (45), பழனிவேல் (38), முரளி (43), தமிழ்செல்வன் (35), அருள் (24), அ.தி.மு.க. முன்னாள் கிளை மேலவை பிரதிநிதி கனகராஜ் (74), மோகன் (46), சிவநாதன் (44), பிரபு (44), காளிபசுபதி (72), அர்ஜூனன் (76), மணி (76), பாரி (49), பார்த்திபன் (44), சபரிநாதன் (49), கண்ணன் (64), மாதவன் (49) ஆகிய 26 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.
பின்னர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் தமிழ்மணி, பழனிவேல், தமிழ்செல்வன், அருள், அர்ஜூனன், கண்ணன் ஆகிய 6 பேரும் உடல்நலக்குறைவால் இறந்தனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரிழந்த 6 பேரை தவிர மற்ற அனைவருமே குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நக்கீரன், கோவிந்தராஜ், சிவபூஷணம், புகழேந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கண்டேயன், சுதாகர், முரளி, கனகராஜ், மோகன், சிவநாதன், பிரபு, காளிபசுபதி, மணி, பாரி, பார்த்திபன், சபரிநாதன், மாதவன் ஆகிய 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜசிம்மவர்மன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும், விழுப்புரம் கோர்ட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு, கடலூரில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்புராயலு ஆஜரானார்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் கோவிந்தராஜ் தற்போது வக்கீலாகவும், மோகன் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகவும், சபரிநாதன் பொதுப்பணித்துறையில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
- கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
திருச்சி:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் முன்பாகவே மேலும் தாக்கம் கடுமையாக உள்ளது.
அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.
ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.
இதுபற்றி திருச்சி மண்டல டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 மாதங்களில், பீர் விற்பனை 8 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 18 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளது.
வருகிற மே மாதத்தில் விற்பனை 18 முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 8 டிப்போக்களிலும் தேவைக்கு ஏற்ப பீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.
பாராளுமன்றத் தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது விற்பனை சூடு பிடித்துள்ளது என தெரிவித்தார்.
திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளர் கூறும் போது, சமீபத்தில் சாதாரண பீர் பாட்டில்களின் விலை ரூ.170லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் அது விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பகலில் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது என்றார்.
- அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முன்னதாக 13-ந் தேதி மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் நடப்பட்டது.
தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி நேற்று பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியை வலம்வந்தனர்.

தீர்த்தவாரி
பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 11 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூா்:
திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.
இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது தஞ்சாவூர் அருகே மானாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.
தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சை கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
- வழக்கு விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
தாம்பரம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.
அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






