என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கஞ்சா கருப்பு.
- மருத்துவர்கள் இல்லாததால், நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் கஞ்சா கருப்பு. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற கஞ்சா கருப்பு சமீப காலங்களில் அதிக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில், சென்னையில் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடிகர் கஞ்சா கருப்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இன்று காலை சென்னை போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு நடிகர் கஞ்சா கருப்பு சென்றுள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் நீண்ட காலமாக காக்க வைத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு குற்றம்சாட்டினார்.
காலை 7 மணியில் இருந்தே மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைக்கப்பட்டதாக கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திடீர் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாள்.
- தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா தைப்பூசம் ஆகும். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டு களிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடும் திருநாள் இதுவாகும். தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலாப் பருவமும் ஒன்றாக வரும் நாளில் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என தமிழர்கள் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது.
இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
- ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
சென்னை:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மங்களகரமான நாளான நேற்று (திங்கட்கிழமை) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவுவில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
2024-25 ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட முன்பதிவு வில்லைகளை பொதுமக்கள் பயன்படுத்தியதன் மூலம் நேற்று (10-ந்தேதி) அன்று 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதி ஆண்டில் 2-வது முறையாக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.
- இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மேலும் அதற்கான வியூகங்கள் வகுக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்க உள்ள விஜய், தேர்தலை சந்திப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
அதன்படி, நேற்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயை நேற்று சந்தித்து பேசிய பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றிரவு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.விற்காக பணி செய்ய சென்னை வந்துள்ள IPAC அணியினரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
- நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது.
- பக்தர்கள் பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.
இக்கோவிலில் பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் வருட தேவதைகளும் இங்கு திருப்படிகளாக அமையப்பெற்று குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.
முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.
இன்னும் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.
முன்னதாக காலை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டார். பின்னர் காவிரி ஆற்றில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று புனிதநீர் ஊற்றி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி கும்பகோணம், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களும் கோவிலுக்கு இயக்கப்பட்டன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 10-ந்தேதி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்மாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத்திரு விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தை தெப்பத்திரு விழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வந்த வடமாநில பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
- பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
- நேற்றைய சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதையடுத்து கட்சி பணிகளில் தீவிர காட்டிவந்த விஜய் தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பணிகளை விஜய் தீவிரப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் 2-ம் நாளாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே திமுகவுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து திமுகவின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். மேலும் தேசிய அளவில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமணம் வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி நடக்கிறது.
- கட்சி பாகுபாடு பாராமல் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி நடக்கிறது.
கோவை ஈச்சனாரி செல்வம் மகாலில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவுக்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், அவரது குடும்பத்தினரும் நேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை எஸ்.பி.வேலுமணி வழங்கி வருகிறார்.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். எஸ்.பி.வேலுமணியுடன் அவரது அண்ணன் அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர். அவர்களுடன் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் பேசினார்.
இதேபோல கட்சி பாகுபாடு பாராமல் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு தரப்பினருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமானோர் திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்ல திருமண விழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
- எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.
சென்னை:
மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் 'ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு; முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிப்பு' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் 2023-24 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நான் பாராளுமன்றத்தில் கேள்வி (922/10.02.2025) எழுப்பி இருந்தேன். அதற்கான பதிலை கல்வி இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் பாராளுமன்றத்தில் தந்துள்ளார்.
நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 2484 பேர் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் என்று தெரிவித்திருக்கிறார். பதிலிலுள்ள மற்ற வரிகள் எல்லாம் எவ்வாறு ஒன்றிய அரசு ஐஐடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி இருக்கிறது, அதை ஐஐடி நிறுவனங்கள் எவ்வாறு அமலாக்குகின்றன என்பதை பற்றிய வெற்று விளக்கங்களாகவே உள்ளன. நான் கேள்வியில் எழுப்பி உள்ளது போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக துறைவாரியாக நிறுவனவாரியாக அமைச்சர் தரவில்லை. இது தற்செயலானதாக கருதப்படவில்லை. முழு விவரங்களை தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படாததை அம்பலத்திற்கு கொண்டு வர வந்துள்ளது.
6210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2484 இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40% மட்டுமே வருகிறது. ஓ.பி.சி 27 %, எஸ்.சி 15%, எஸ் டி 7.5% என்றால் மொத்தம் 49.5 % இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும். இதன்படியே 590 இடங்களை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
பொதுப் பட்டியல் இடங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்களா? அல்லது அந்த இடங்கள் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.
பாராளுமன்றத்தில் முழுமையான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடுமாறும் கேட்டு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
- சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
- தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் நடிகர் விஜய்தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய் வருகிற சட்ட மன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்றும் நம்மோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்போம் என்றும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது விஜய் கட்சியின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களை பிரசாந்த் கிஷோர் கேட்டு தெரிந்து கொண்டார்.
தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான வியூகங்கள் என்னென்ன என்பது பற்றி அப்போது கலந்த ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்கிற கருத்து பரவலாகவே பேசப்பட்டு வரும் நிலையில் அது பற்றி நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது எந்தவித ஆலோசனையும் நடைபெற வில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனை மையப் படுத்தியே நேற்றைய ஆலோசனையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
எனவே தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காக களத்தில் உள்ள கட்சிகளோடு கைகோர்த்து தேர்தலை சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக ஆதவ் அர்ஜுனா மூலமாக காய் நகர்த்தி புதிய கூட்டணி அழைப்பதற்கு விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன்மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய் அதிரடியாக களமிறங்க திட்ட மிட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால் இன்னும் போகப்போக விஜய்யின் அரசியல் வேகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது.
- தாய் மைதிலியின் அறிவுரையை ரித்திகா காதில் வாங்கி கொள்ளாமல் காதலன் ஷியாமுடன் வெளியில் சுற்றுவதை தொடர்ந்துள்ளார்.
- தாயின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தால் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அம்பத்தூர்:
சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மைதிலி. 60 வயதான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவரது மகள் ரித்திகா. 26 வயது இளம்பெண்ணான இவர் போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ரித்திகா ஷியாம் (28) என்ற வாலிபரை காதலித்து வந்து உள்ளார். இருவரும் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இது போன்ற நேரங்களில் ரித்திகா இரவில் தாமதமாகவே வீட்டுக்கு வந்துள்ளார்.
இது தாய் மைதிலிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளை கண்டித்து வந்துள்ளார். இப்படி வெளியில் சுற்றி விட்டு இரவில் நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வருவது சரி இல்லை.
இந்த வழக்கத்தை மாற்றிக் கொள் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் தாய் மைதிலிக்கும், ரித்திகாவுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.
ஆனால் தாய் மைதிலியின் அறிவுரையை ரித்திகா காதில் வாங்கி கொள்ளாமல் காதலன் ஷியாமுடன் வெளியில் சுற்றுவதை தொடர்ந்துள்ளார்.
நேற்றும் ரித்திகா, ஷியாமுடன் வெளியில் சென்று உள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் இரவு 9 மணி அளவிலேயே ரித்திகா வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மைதிலி மகளை கண்டித்துள்ளார். நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா? இது போன்று வீட்டுக்கு தாமதமாக வருவது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியும் ஏன் கேட்க மறுக்கிறாய் என்று கூறி சத்தம் போட்டு உள்ளார். இதனால் தாய்-மகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக முற்றியது.
இதனால் கோபம் அடைந்த ரித்திகா தனது காதலன் ஷியாமுக்கு போன் செய்து தாய் திட்டுவது பற்றி கூறியுள்ளார். மேலும் உடனே நீ வீட்டுக்கு வா என்றும் அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷியாம் முகப்பேர் கிழக்கில் உள்ள காதலியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
காதலியின் தாய் மைதிலியிடம், "நீங்கள் எப்படி அவளை திட்டலாம்" என்று கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ஷியாம், மைதிலியை கீழே தள்ளி விட்டு காதலியின் கண்முன்னே கழுத்தை நெரித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மைதிலி, ஷியாமின் பிடியில் இருந்து தப்புவதற்கு முயன்றார். ஆனால் ஷியாம் விடாமல் கழுத்தை நெறித்ததால் மைதிலி துடிதுடித்து பலியானார். பின்னர் ஷியாம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெ.ஜெ.நகர் போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய ஷியாமை கைது செய்தனர். இது தொடர்பாக கொலையுண்ட மைதிலியின் மகள் ரித்திகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தாயின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தால் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கைதான வாலிபர் ஷியாம் அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றில் தங்கி இருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார். அப்போதுதான் ரித்திகாவுடன் காதல் ஏற்பட்டு ஷியாம் கொலை வழக்கில் சிக்கி உள்ளார். இந்த கொலை சம்பவம் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஷியாமுடன் படித்து வந்த மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
- செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தொடர் கதையாகிவிட்டன.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சாராரிடம் ஏற்பட்டுள்ளது.
இதில் முதன்மையாக இருப்பவர் செங்கோட்டையன். அவருடன் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம் உள்பட 6 மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அப்படியானால்தான் கட்சி பலமாக இருக்கும்.
தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரில் வற்புறுத்தினார்கள். அவர்களது கருத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கட்சி நிழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அவர்களுடைய செயல்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி கண்காணித்து வருகிறார்.
செங்கோட்டையனை ஓரம் கட்டுவதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையேயான விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது. எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைப்பதும் இல்லை.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் கோவை அருகே எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்க வில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பொறாததால் கலந்து கொள்ளவில்லை என்று பூசி மொழுகினார்.
ஆனால் அது கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். இதன்மூலம் செங்கோட்டையன் புறக்கணித்தது உறுதியானது.
அது மட்டுமல்ல நேற்று சென்னை தலைமை கழகத்தில் காணொலி மூலம் டெல்லி அலுவலகம் திறக்கப்பட்ட நிகழ்ச்சியிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
இதுபற்றி அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது அழைப்பிதழ் வழங்கப்பட வில்லை என்றார்கள். இருவரும் சமரசம் ஆவார்களா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் கூறியதாவது:-
செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர். மூத்த நிர்வாகி. அவருக்கு உரிய மரியாதையை கட்சி மேலிடம் வழங்கவில்லை. அதற்கு மாறாக அவரை மட்டம் தட்டும் வேலைகளையே செய்கிறார்கள்.
செங்கோட்டையனின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதுபற்றி அவரிடம் கலந்து பேசவில்லை.
அது மட்டுமல்ல. அவர்களில் 2 பேர் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டவர்கள்.
கட்சி நல்லா இருக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். அவர் எந்த முடிவெடுத்தாலும் கட்சி நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்றார்கள்.
தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் இப்படி கட்சிக்குள் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த கருத்து வேறுபாடுகளை களைந்து இருவரும் சமரசம் ஆகி கட்சியை பலப்படுத்தவும், கட்சியை வழி நடத்தவும் முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறும்போது, 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் தயாராகி கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் கட்சிகளுக்குள் ஏற்படும் குழப்பங்களுக்கு திரை மறைவு காரணங்கள் பல இருக்கும் என்றார்கள்.






