என் மலர்
இந்தியா
- வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.
- இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.
நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பாராளுமன்றத்தின் சிறப்பு விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் சிறப்பு விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* புனித பாடல் குறித்த விவாதத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.
* இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்.
* வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.
* தலைமுறைகளைக் கடந்து உத்வேகம் அளித்து வருகிறது வந்தே மாதரம் பாடல்.
* வந்தே மாதரம் பாடலில் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலையின்போது தற்செயலாக அமைந்து விட்டது.
* வந்தே மாதரம் பாடலால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.
* இந்த விவாதத்தின் மூலம், எதிர்கால சந்ததியினர் வந்தே மாதரம் குறித்து கற்பிக்கப்படுவர்.
* இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.
* God Save the Queen பாடலை இந்தியர்கள் பாட வேண்டும் என பிரிட்டிஷார் விரும்பினர்.
* பிரிட்டிஷாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்தது.
* இந்தியர்களின் உறுதியை பறைசாற்றும் பாடலாக வந்தே மாதரம் விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 6 தொகுதிகளுக்கு 3 மண்டல துணை செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 39 பாராளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் மண்டல செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளர் வீதம் இருந்தனர். அந்த கட்டமைப்பை மாற்றி தற்போது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளரும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மண்டல துணை செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில் 6 தொகுதிகளுக்கு 3 மண்டல துணை செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கட்சி தலைவர் தொல். திருமாவளவன் புதிய மண்டல செயலாளர்கள், துணை செயலாளர்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மண்டல செயலாளர் தளபதி சுந்தர், மண்டல துணை செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி-ஏகாம்பரம், மாதவரம், ஆவடி-ராமதாஸ், பூந்தமல்லி, திருவள்ளூர் தொகுதிகள்-செஞ்சி செல்வம்.
வட சென்னை
மண்டல செயலாளர்-அம்பேத் வளவன், துணை செயலாளர்களாக திருவொற்றியூர், ராயபுரம் தொகுதி நீல மேகவண்ணன், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு எஸ்.எம். மணி, திரு.வி.க. நகர், கொளத்தூர் தொகுதிகளுக்கு புரசை அன்பு.
தென் சென்னை மண்டல செயலாளர் ஸ்ரீதர் கார்த்திக், துணை செயலாளர்கள் கதிர் ராவணன், அசோக், வீரமணி. மைய சென்னை மண்டல செயலாளராக இரா.செல்வம், துணை செயலாளர்களாக தலித் நூர் செல்வம், அர்ஜன், ராவண சங்கு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் அசோகன், துணை செலயாளர்கள் ஜிம் மோகன், தங்க தியாகு, மாயவன், தர்மபுரி மண்டல செயலாளர்-தமிழண்பன், துணை செலயாளர்கள் செந்தில்குமார், மின்னல் சக்தி ஜானகிராமன்.
திருவண்ணாமலை மண்டல செயலாளர் அம்பேத் வளவன், துணை செயலாளர்கள்-சின்ன பையன், ஜெயமூர்த்தி, முருகேசன், திண்டுக்கல் மண்டல செயலாளர்-ஜான்சன்கிறிஸ்டோபர், துணை செயலாளர்கள் சந்திரன், ஜனா முகமது, அன்பரசு, கரூர் மண்டல செயலாளர்கள்-வேலுசாமி, துணை செயலாளர்கள் கதிரேசன், ஜெயராமன், செல்வராஜ்.
மண்டல செயலாளர்-தமிழாதன், துணை செயலாளர்கள்-பொன் முருகேசன், பிரபாகரன், திருமறவன், பெரம்பலூர் மண்டல செயலாளர்கள் ஸ்டாலின், துணை செயலாளர்கள் நீலவாணன், பெரியசாமி, லெனின்.
கடலூர் மண்டல செயலாளர்-பரச. முருகையன், துணை செயலாளர்கள் இரா.செம்மல், அதியமான், ஆலப்பாக்கம் ஜெயகுமார், சிதம்பரம் மண்டல செயலாளர்-செல்லப்பன், துணை செலயாளர்களாக தடா கதிரவன், செல்வராஜ், கருப்பசாமி,
மயிலாடுதுறை மண்டல செயலாளர்-அறிவழகன், துணை செயலாளர்கள் காமராஜ், முருகதாஸ், ராஜ்குமார், நாகப்பட்டினம் மண்டல செயலாளர் எம்.டி. இளவரசு துணை செய லாளர்கள் ஜாகீர் சாதிக் விதா செல்வம், சீமா மகேந்திரன், தஞ்சாவூர் மண்டல செயலாளர்-சிவக்குமார். துணை செயலாளர்கள்-மன்னை ரமணி, சொக்கா ரவி, ஆத்மா ஆனந்தகுமார்.
ஆரணி மண்டல செயலாளர்கள்-நன்மாறன், துணை செயலாளர்கள் ஜெய்சங்கர், குப்பன், தனஞ்செழியன், விழுப்புரம் மண்டல செயலாளர்- திலீபன். துணை செயலாளர்கள்-இரணியன், ஆதித் தமிழன், ஓவியர் இளங்கோவன், கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர்-சீதா துணை செயலாளர்கள்-பொன்னி வளவன், ராமமூர்த்தி, நாராயணன்.
ஸ்ரீபெரும்புதூர் மண்டல செயலாளர்-கதிர்நிலவன், துணை செயலாளர்கள்-ரூபஸ், கண்ணன், தேவ அருண்பிரகாசம், காஞ்சீ புரம் மண்டல செயலாளர்-இரா.தமிழரசன், துணை செலயாளர்கள், மதி. ஆதவன், பொன்னி வளவன், இளைய வளவன்.
அரக்கோணம் மண்டல செயலாளர் தமிழ்மாறன். துணை செயலாளர்கள்-பிரபா இளையநிலா, வெற்றி வளவன், தமிழ். வேலூர் மண்டல செயலாளர்-சந்திரன், துணை செயலாளர் சஜின் குமார், செல்வன், கோவேந்தர்.
சேலம் மண்டல செயலாளர்-நாவரசு, துணை செயலாளர்கள்-ஓமலூர் ஆறுமுகம், ஜெயச்சந்திரன், வேணுநாயகன், நாமக்கல் மண்டல செயலாளர் பழனிமாறன், துணை செயலாளர்கள்-அரசன், காமராஜ் பெருமாவளவன், ஈரோடு மண்டல செயலாளர்-ஜாபர் அலி. துணை செயலாளர்கள்-சவுமியா, செம்மணி, பிரீத் ஜான் நாட், திருப்பூர் மண்டல செயலாளர்-சிறுத்தை வள்ளுவன், துணை செயலாளர்கள்-திருமாவளவன், அம்பேத்கர், துறைவளவன்.
ராமநாதபுரம் மண்டல செயலாளர்-விடுதலைசேகரன், துணை செயலாளர்கள்-ஜெயபாண்டி, பழனிகுமார், பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மண்டல செயலாளர்கள்-திருள்ளூவன், அர்ஜூன் கதிரேசன்.
தென்காசி மண்டல செயலாளர்-இசக்கி பாண்டியன், துணை செயலாளர்கள்-லிங்கவளவன், சித்திக், தாமஸ், திருநெல்வேலி மண்டல செயலாளர்கள்-களக்காடு சுந்தர், துணை செயலாளர் கள்-கரிசல் சுரேஷ், வெற்றி மாறன், ராஜ்குமார், கன்னியாகுமரி மண்டல செயலாளர்-பகலவன், துணை செயலாளர்கள், திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன், டேவிட் மேரி.
சிவகங்கை மண்டல செயலாளர்-பெரியசாமி, துணை செயலாளர்கள்-சின்னுபழகு, சங்கு உதய குமார், முத்துராஜ், மதுரை மண்டல செயலாளர்-இன்குலாப், துணை செயலாளர்-மூர்த்தி மோகனா, கதிரவன்.
தேனி மண்டல செயலாளர்-ரபீக் முகமது, துணை செயலாளர்கள்-முருகன், நாகரத்தினம், சுருளி.
விருதுநகர் மண்டல செயலாளர்-முருகன், துணை செயலாளர்கள் கலைச் செல்வன், போத்தி ராஜன், சதுரகிரி, நீலகிரி மண்டல செயலாளர்-ராஜேந்திர பிரபு, துணை செயலாளர்கள் மன்னரசன், சகாதேவன், ஜெகன் மோகன்.
கோவை மண்டல செயலாளர்-கலையரசன், துணை செயலாளர்கள்-தங்கவளவன், துறை செயலாளர்கள்-இளங்கோ, குமணன். பொள்ளாச்சி மண்டல செயலாளர்-கேசவ் முருகன், துணை செயலாளர்கள்-நிலா மணிமாறன், பிரபு, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அடுத்த கட்டமாக ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகிறது.
- கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
- 7-வது நாளாக கோவையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவை:
நாடு முழுவதும் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளடக்கிய கேபின் க்ரு ஓய்வு நேரத்தை 36-ல் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் உள்நாட்டில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவை திரும்ப பெற்ற நிலையிலும் விமானங்கள் சேவை ரத்து செய்யப்படுவது தொடர்ந்தது. நேற்று கோவையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று 7-வது நாளாக கோவையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் 2 விமானம் உள்பட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மாற்று பயணம் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இங்களுக்கு சென்றனர்.
இதற்கிடையே இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து வந்த விமான பயணிகள் வெளியில் செல்லும் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவரின் சூட்கேட்ஸ் அறை கண்ணாடி கதவில் பட்டு கண்ணாடி கதவு உடைந்தது.
இதுகுறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பயணி அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக சூட்கேஸ் பட்டதால் கண்ணாடி கதவு உடைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது.
- எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி.
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது. 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது.
எர்ணாகுளம் கோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து, நடிகர் திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,
இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார்.
இந்த வழக்கில் சுமார் 80 நாட்கள் திலீப் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- முருகனுக்கு சொந்தமான இடத்தில் தீபத்தை ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும்.
- வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினை தான் இருக்கும்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. நீதிபதி சாமிநாதன் நேரடியாக சென்று பார்வையிட்டு வந்துள்ளார். இந்த அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.
முருகனுக்கு சொந்தமான இடத்தில் தீபத்தை ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி நான் வந்து கொண்டிருந்தேன். அப்போது டி.எஸ்.பி செல்வராஜ் என்பவர் வாகன விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்துக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினை தான் இருக்கும். இதன் மூலம் தி.மு.க அரசை தூக்கி அடிப்போம். தமிழகத்தில் தி.மு.க அரசை துடைத்தெறிய வேண்டும்.
வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைவராக உள்ளார். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும். கடந்த 55 மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 6,700 கொலைகள் நடந்துள்ளது. வன்கொடுமைகளும் அதிகமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெண்டர் மோசடிகள் மூலம் குறைந்தது ரூ.1,020 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.
- நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 'கட்சி நிதியாக' லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. டெண்டர் மோசடிகள் மூலம் குறைந்தது ரூ.1,020 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளின்போது பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை மேற்கோள் காட்டி உள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2) இன் கீழ், ஊழல் குறித்து விசாரிக்க காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரி, டிசம்பர் 3-ந்தேதி மாநில தலைமைச் செயலாளர், காவல் படைத் தலைவர் (HoPF) மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) ஆகியவற்றிற்கு அமலாக்கத்துறை 258 பக்க ஆவணத்தை அனுப்பியுள்ளது.
தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் நடந்த ஒரு பெரிய ஊழலைக் குறிப்பிட்டு, தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை எழுதிய இரண்டாவது கடிதம் இதுவாகும்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 27 அன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் நடந்த வேலைக்கான பண மோசடி குறித்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரி டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
இத்துறையில் உதவி பொறியாளர்கள், ஜூனியர் பொறியாளர்கள் மற்றும் நகர திட்டமிடல் அதிகாரிகள் போன்ற பதவிகளைப் பெற பல வேட்பாளர்கள் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கத்துறை அப்போது குற்றம் சாட்டி இருந்தது.
ஒரு விசாரணை நிறுவனம் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். இல்லாமல், பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறையால் தன்னிச்சையாக நடத்த முடியாது. இருப்பினும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2) ஆனது, அமலாக்கத்துறை பிற முகமைகளுடன் ஆதாரங்களைப் பகிரவும், திட்டமிடப்பட்ட குற்றங்களின் கீழ் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வலியுறுத்தவும் அதிகாரம் வழங்குகிறது, இதன் மூலம் பணமோசடி விசாரணையைத் தொடங்க முடியும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையின் பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் கே.என். நேருவின் கூட்டாளிகளுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10% வரை செலுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. முறைகேடாகவோ அல்லது முன்பே தீர்மானிக்கப்பட்டோ ஒதுக்கப்பட்ட டெண்டர்களின் மூலம் இந்த ஒப்பந்தக்காரர்கள் பயனடைந்தார்கள் என்றும், நேருவின் கூட்டாளிகளின் தொலைபேசிகளிலிருந்து மீட்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை கூறியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 'கட்சி நிதியாக' லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. கூடுதலாக, துறையில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் கூட ஒப்பந்தக்காரர்களிடமிருந்து லஞ்சம் வசூலித்து அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மாற்றுமாறு கேட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் கூட்டாளிகளின் தொலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட செய்திகள், உரையாடல்கள் அல்லது கணக்கீட்டுத் தாள்களின் அடிப்படையில், மொத்தம் ரூ.1,020 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான நேரடி ஆதாரம் என்று அமலாக்கத்துறை பல குறிப்பிட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
கழிப்பறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், நபாட் திட்டங்கள், துப்புரவாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீர்/ஏரி வேலைகள் என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சங்கள் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை மேலும் குற்றம் சாட்டியுள்ளது. பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளால் திட்ட அனுமதி மற்றும் பில்களை நிறைவேற்றும் போது ஒப்பந்த மதிப்பில் 20-25% லஞ்சமாகப் பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.
- ஒரு ரூபாய் காசு கொடுக்காமல், குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவ கூட்டம் நாம் தமிழர் கூட்டம்.
- தேவேந்திர குல வேளாளர் மக்கள் நீண்ட காலமாக தங்களை பட்டியல் இனத்திலிருந்து விடுவியுங்கள் என போராடுகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சமூக நீதியும் பஞ்சமர் நில மீட்பும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம். குடும்ப ஆட்சியை அகற்றுவோம். மிகப்பெரிய இரு பதவிகளை குடும்பமே வகித்து வருகிறது. பெரும்பான்மையான சமூகத்தினர் குறைவான அமைச்சர் பதவி வகித்து வருகிறார்கள். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டும் இருந்தால் தாழ்த்தப்பட்டவர்களாக பட்டியலின மக்கள் இருந்திருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் 10 லட்சம் ஏக்கர் நிலமாவது மீட்போம்.
எதிர்த்து கேள்வி கேட்க வேண்டியவர்கள் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்ததால்தான் பஞ்சமி நிலங்களை மீட்க முடியவில்லை. தேவேந்திர குல வேளாளர் மக்கள் நீண்ட காலமாக தங்களை பட்டியல் இனத்திலிருந்து விடுவியுங்கள் என போராடுகிறார்கள். ஒரு ரூபாய் காசு கொடுக்காமல், குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவ கூட்டம் நாம் தமிழர் கூட்டம். இது தற்குறி கூட்டம் அல்ல. எங்களுக்கு வேண்டியது சலுகைகள் அல்ல. எங்களது உரிமை.
நீண்ட காலமாக சாதி வாரி கணக்கு எடுப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தவர் டாக்டர் ராமதாஸ். ஆணை முத்து இல்லை என்றால் இந்த உரிமை கிடைத்திருக்காது..சாதிவாரி கணக்கெடுப்பு தான் சரியான சமூக நீதி .10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டாம். அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுப்பது தான் உண்மையாக சமூகநீதி.
10 நாட்களில் எஸ்.ஐ.ஆர். கொண்டு வரும் போது 10 மாதங்களில் சாதிவாரி கணக்கு எடுப்பை நடத்த முடியாதா? இந்திய துணை கண்டத்தில் சமூக நீதி என்ற வார்த்தையை அதிகம் உச்சரிப்பது திராவிட ஆட்சி தான். இவர்கள் கூட்டனி வைத்துள்ள கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிம் மட்டு மல்ல பிற மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த நாட்டின் முதல் குடிமகள் திரவுபதி முர்முவால் கூட கோவிலுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள் என்றால் சாதி, மத வேறுபாடுகள்தான்.
சமச்சீர் பாடதிட்டம் இருக்கிறது. ஆனால் சமச்சீரான கல்வி மிகவும்பின் தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு கிடைக்க வில்லை. திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில்.இங்கு ராமராஜ்யம் அமைக்க முயற்சி நடைபெறுகிறது .
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி உளுந்தூர்பேட்டைக்கு லோகேஸ்வரி, கள்ளக்குறிச்சிக்கு நாகம்மாள், சங்கராபுரத்துக்கு ரமேஷ், விழுப்புரத்துக்கு அபிநயா பொன்னிவளவன், திண்டி வனத்துக்கு பேச்சுமுத்து, மயிலத்திற்கு விஜய்விக் ரமன், செஞ்சிக்கு கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
- யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து யார் அந்த சார்?' என்ற கேள்வி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார்.
இதற்கு பதில் அளித்த தி.மு.க. அமைச்சர்கள், அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் சட்டசபையின் முதல் கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யார் அந்த சார்? என அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'யார் அந்த சார்?' என்று கேள்வி எழுப்பி, அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றப் பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.

'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)? #SaveOurDaughters என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை.
- காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது 'புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நம் வெற்றித் தலைவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.
1. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
3. காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
5. வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.
6. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
7. எளிதில் அடையாளம் காணும் வகையில் கழக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
8. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
9. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
10. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
11. தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும்.
நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தவெகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
அப்போது பலரும் கேட் ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு தவெகவினரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட விவகாரத்தில் தவெகவினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
- லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியானது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த காவல்துறை ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய ஊழல் அம்பலப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தத் துடிக்கும் திமுக அரசு, அந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த முன்வராதது கண்டிக்கத்தக்கது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான அரசாணை 14.11.2023-ஆம் நாளும், ஆள்தேர்வு அறிவிக்கை 02.02.2024-ஆம் நாளும் வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வில் ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதையும், அப்பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் சோதனைகளின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 232 பக்க ஆவணங்களுடன் அக்டோபர் 27-ஆம் நாள் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்டோபர் 29-ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது; சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்விலும், மதுரைக் கிளையிலும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிடக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் ஒன்றின் விசாரணையின்போது, அமலாக்கத்துறையின் அறிக்கை எவ்வாறு வெளியானது? என்று நீதிபதிகள் வினா எழுப்பியிருந்தனர்.
அதையே காரணம் காட்டி, ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை எவ்வாறு வெளியானது? என்பது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கை வெளியானது அதிசயம் அல்ல. ஊடகத் தொடர்புகள் கடந்த காலங்களில் இல்லாத அளவில் அதிகரித்திருப்பதுடன், சமூக ஊடகங்கள் பெருகியுள்ள நிலையில், இத்தகைய அறிக்கைகள் வெளிவருவது இயல்பானது தான். கடந்த காலங்களிலும் இதே போன்ற பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இருக்கும் போது இந்த அறிக்கை வெளியானது குறித்து விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கும் தமிழக அரசு, தமிழகத்தையே உலுக்கிய வேலைவாய்ப்பு ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?
தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பட்டப்படிப்பை முடித்து விட்டு, அரசு வேலைக்கு சென்று விட முடியாதா? என போட்டித் தேர்வு பயிற்சி மையங்களிலும், நூலகங்களிலும் தவம் கிடக்கின்றனர். அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுத்துறை வேலைகளை திமுக அரசு விலை வைத்து விற்பனை செய்திருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்துவதாக நாடகமாடும் திமுகவினர், ஊழல்கள் செய்வதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் ஊழல்கள் நடக்காதத் துறையே கிடையாது என்பது தான் அனைத்துத் தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதில் தொடங்கி, ஆற்று மணல் கொள்ளை, கனிமவளங்கள் கொள்ளை, இராம்சார் தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குவதில் ஊழல், மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல், மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில் ஊழல், சரக்குந்து போக்குவரத்து ஒப்பந்த ஊழல் என திமுக அரசில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டால், நீதியரசர் சர்க்காரியா ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊழல்களின் பட்டியலை விட மிகவும் அதிகமாக நீண்டு கொண்டே செல்லும். திமுக என்றால் ஊழல் என்று தான் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஆனால், எந்த ஊழலும் செய்யவில்லை; உலகின் உத்தமமான நிர்வாகத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உலகமகா பொய்யை திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக ஆட்சியாளர்கள் எந்த ஊழலும் செய்ய வில்லை என்றால், குறிப்பாக நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிகாரிகளை நியமித்ததில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என்றால், அது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த திமுக அரசு அஞ்சுவது ஏன்?
இதற்கு முன் தமிழ்நாட்டில் ரூ.4730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்த அமலாக்கத் துறை, அது குறித்த ஆதாரங்களை தமிழக அரசுக்கு அனுப்பி, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியது. ஆனால், அதன் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் தான் வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அறிக்கை மீது ஒன்றரை மாதமாக நடவடிக்கை இல்லை.
ஆட்சி அதிகாரத்தை தீமைகளில் இருந்து மக்களைக் காக்கும் கவசமாக பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஊழல் செய்த தீயசக்திகளை காப்பாற்றுவதற்கான கவசமாக ஆட்சி அதிகாரத்தை திமுகவினர் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவினரால் தவறாக பயன்படுத்தப்படும் அந்தக் கவசம் இன்னும் 3 மாதங்களில் காணாமல் போய்விடும். அடுத்து அமையவிருக்கும் அரசில் திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். மக்களைச் சுரண்டி ஊழல் செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாரத்தின் இறுதிநாளில் தங்கம் விலை சற்று உயர்ந்தது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த வாரத்தில் ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வந்தது.
இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.96,560-க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,070-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்த நிலையில், வாரத்தின் இறுதிநாளில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.12,040-க்கும், ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.198-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160
03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
06-12-2025- ஒரு கிராம் ரூ.199
05-12-2025- ஒரு கிராம் ரூ.196
04-12-2025- ஒரு கிராம் ரூ.200
03-12-2025- ஒரு கிராம் ரூ.201






