search icon
என் மலர்tooltip icon
    • கார் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார்
    • இதில் காரை ஓட்டி வந்த முத்துசாமி பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கரூர்,

    கரூர் அடுத்த அரவக்குறிச்சி தாலுகா வேலப்பட்டி பீட்டர் தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68). இவர் தனது காரில் சொந்த வேலையாக திருச்சி சென்று விட்டு, வீட்டுக்கு வெல்லமடை பஸ் ஸ்டாப் அருகே வநது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டேங்கர் லாரி, கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முத்துசாமி பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்தார். இது குறித்து அவரது மகள் பிரமிளா கொடுத்த புகார்படி டேங்கர் லாரி டிரைவர் சின்ன ரெட்டிபட்டியை சேர்ந்த மகேந்திரன் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தொடங்கபட உள்ளது
    • இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகிற 20-ந் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளாகிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), ெரயில்வே தேர்வு குழுமம் (ஆர்.பி.ஐ), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (ஐ.பி.பி.எஸ்) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற வசதியாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகிற 20-ந் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ம்தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் இளைஞர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குளித்தலை அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யபட்டார்
    • வாக்குவாதம் முற்றவே மரியதாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வின்சென்ட் வயிற்றில் குத்தியுள்ளார்

    கரூர்,

    குளித்தலை அடுத்த உடையாபட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 30). லாரி டிரைவர். இந்நிலையில் கடந்த 15 -ந் தேதி இரவு வின்சென்ட், இவரது தந்தை மரியதாஸ் (73), தங்கை டைசி ராணி (29) ஆகியோர் நிலபிரச்சனை காரணமாக தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே மரியதாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வின்சென்ட் வயிற்றில் குத்தியுள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் வின்சென்ட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வின்சென்ட் மனைவி யோகம்மேரி தோகைமலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மரியதாஸை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள டைசி ராணியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.71.55 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது
    • இந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    கரூர்,

    கரூர் அருகே சாலைப்புதூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாரந்தோறும் கரூர் ஒன்றியம் க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.19-க்கும் சராசரியாக ரூ.23.51 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனையானது.தேங்காய் பருப்பு முதல் தரம் கிலோ அதிகபட்சமாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்சமாக ரூ.74.30-க்கும், சராசரியாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.

    2ம் தரம் தேங்காய் பருப்பு அதிக பட்சமாக கிலோ ரூ.77.86-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.39-க்கும், சராசரியாக ரூ.73.16 என மொத்தம் 13 லட்சத்து 57 ஆயிரத்து 532 ரூபாய்க்கு விற்பனையானது.தொடர்ந்து 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ அதிகபட்சமாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.139.99-க்கும், சராசரியாக ரூ.155-க்கு விற்பனையானது. வெள்ளை எள் கிலோ அதிகபட்சமாக ரூ.158.99-க்கும் குறைந்தபட்சமாக ரூ.158.99-க்கும், சராசரியாக ரூ.158.99 என மொத்தம் 56 லட்சத்து 42 ஆயிரத்து, 684 ரூபாய்க்கு விற்பனையானது. வேளாண் பொருட்கள் மொத்தம் 71 லட்சத்து 55 ஆயிரத்து 181 ரூபாய்க்கு விற்பனையானது.

    • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்,

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி சிலைக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திலகர் திடலில், விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை கைவிட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட செயலாளர்கள் ராமையன், சோமையா ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர், மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி, நிர்வாகிகள் செல்வராஜ், பாலசுந்தரமூர்த்தி, ராசு, அன்பழகன், நாராயணசாமி, சுந்தர்ராஜன், அம்பலராஜ், மாரக்கண்டேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது
    • நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. மாலையில், நந்திகேஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீறு உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது. நந்திகேஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு மன்ற, திருக்கோவில் நிர்வாகிகள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.இதேபோல், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் கோவில், திருவேங்கைவாசல், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் கோவில்களிலும், பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர், இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர், ராப்பூசல் தாயுமானவர், தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் உள்ள நந்தியம் பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

    • புதுக்கோட்டைக்கு வருகிற 25-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் கலெக்டர் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
    • வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது.

    அனைத்து த்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், செய்தி மக்கள் தொடர் பு அலுவலர் மதியழகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அடிப்படை வசதிக்கோரி கறம்பக்குடி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்
    • இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தை சேர்ந்த கரு கீழத்தெரு ஊராட்சியில் குரும்பி வயல், கருக்காக்குறிச்சி ஆதி திராவிடர் காலனி, மஞ்சு காடு, அருங்குளம் மஞ்சள் வயல், திருமுருகப்பட்டினம், நல்லாண்டார் கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களுக்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

    மேலும் பழுதான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் கட்டாமல் வேறொரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனுமதி வழங்கியதை கண்டித்தும், கிராம பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, ஆணையர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்
    • நியாய விலை கடைகளில் தற்போது புதிதாக செரிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அம்மா உணவகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. நியாய விலை கடைகளில் தற்போது புதிதாக செரிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த அரிசியால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அறந்தாங்கியில் கண்டன ஆர்பாட்டம் ஒன்றியச் செயலாளர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் சி.பி.ஐ. மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், தேசியக்குழு உறுப்பினர் மாதவன், ஒன்றியத் தலைவர் குமார், இராதாகிருஷ்ணன், பெரியசாமி, அஜய்குமார்கோஷ், காமாட்சி, கணேசன், அழகுமன்னன், சுப்பிரமணியன், செல்வராஜ், முருகன், கருப்பையா, ராஜேந்திரன், பழனிவேலு, சேவுக பெருமாள், காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பெரியம்மாபாளையத்தில் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது
    • இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரியம்மாபாளையம கிராமத்தில் அமைந்துள்ள 0.88 சென்ட் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் செல்வராஜூக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெரியம்மாபாளையம் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • பெரம்பலூரில் ஒரே கட்டிடத்தில் 2 கடைகளில் ரூ.1¾ லட்சம் திருட்டு போனது
    • கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது வெளியே தெரிந்துவிடாமல் இருப்பதற்காக டி.வி.ஆர். கருவியையும் எடுத்துச்சென்றனர்.

    பெரம்பலூர்

    திருச்சி லால்குடியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ரேவதி (வயது 37). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே சூப்பர் மார்க்கெட் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பியை மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே நுழைந்து ரூ.1¾ லட்சத்தை திருடி சென்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது வெளியே தெரிந்துவிடாமல் இருப்பதற்காக டி.வி.ஆர். கருவியையும் எடுத்துச்சென்றனர்.

    இதேபோல் பெரம்பலூர் ரோஸ் நகரில் வசித்துவரும் சவுந்தர்ராஜன் என்பவர் இதே கட்டிடத்தில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் கல்லாபெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.பெரம்பலூர் நகரில் தினமும் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து ஒரு கும்பல் போலீசாருக்கு சவால்விடும் வகையில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.

    எனவே பெரம்பலூரில் சிறப்பு போலீசாரை நியமித்து திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் துப்புதுலக்கி, தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் மர்ம கும்பலை கைது செய்து திருட்டுப்போன பொருட்களையும் மீட்க வேண்டும் என்று வியாபாரிகள் மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×