search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னோர் வழிபாடு"

    • குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும்.
    • இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள்.

    மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள். ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை.

    இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம்.

    ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள். இதன்மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா? உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும்.

    நீங்கள் எந்த அளவுக்கு பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும். பித்ரு வழிபட்டு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது.நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.

    சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குலதெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபட்டுதான் என்பதை மறந்து விடக்கூடாது. பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும். இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும்.

    இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும். எனவே முன்னோர் வழிபட்டு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக் காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.

    • அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.
    • அமாவாசை விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள்.

    அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது.

    அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த கதை வருமாறு:-

    அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.

    மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான்.

    ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்ததும் இளவரசன் ஒருநாள் இறந்து போனான்.

    மன்னன் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தவித்தாள்...

    தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு மனம் இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள்.

    இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் அமாவாசை நாளாகும். தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெற செய்தது போலவே அமாவாசை நாட்களில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

    மகிழ்ந்த அம்பிகை, அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

    அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் மறைந்த முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

    • முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.
    • தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.

    அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது வாரிசுகளான நாம் தொடங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

    இந்த நிகழ்வு இந்த ஆண்டு வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நிகழ உள்ளது. அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? பித்ருக்கள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். அன்று அவர்களை வழிபட்டு அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை தொடங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும். அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது.

    முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

    அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும். அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போட்டுக்கொள்வார்கள். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

    அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

    சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

    வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

    அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குலதெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

    அமாவாசை அன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணிய தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசை அன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

    உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசை அன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச்சாப்பிடும். அதனால் அமாவாசை அன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

    ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி. ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி. நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

    நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசை அன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்கு சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை. முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதை செய்ய வேண்டும்.

    • கயா சென்று பிண்டம் போட்டு வந்தால்தான் ஆத்மா சொர்க்கம் செல்லும்.
    • அவர்களுக்கு சொர்க்கத்தில் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

    சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர் களுக்கு சிரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று பிண்டம் போட்டுவிட்டு வந்தால்தான் அவர்கள் ஆத்மா சொர்க்கம் செல்லும். அங்கு அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் அங்குதான் பிரம்மாவும் விஷ்ணுவும், பிற தேவர்களும் வந்து அசுரனின் உடல் மீது அமர்ந்து கொண்டு பித்ரு யாகம் ஒன்றை செய்ததாக ஒரு கதை கூறப்படுகின்றது .

    அந்தக் கதை என்ன?

    முன்னொரு காலத்தில் கயாவில் கயாசுரன் என்ற பெரிய அசுரன் இருந்தான். அவன் ஒருமுறை தனக்கு மேலும் அதிக சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டு தவத்தில் அமர்ந்தான். அவன் செய்த கடுமையான தவத்தின் வலிமையினால் அவனுடைய சக்தியும் பெருகிக்கொண்டே போயிற்று. அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவனுடைய தொல்லையும் தாங்க முடியாமல் போயிற்று.

    அவன் தேவர்களைவிட அதிக சக்தி வாய்ந்தவனாக ஆகிக்கொண்டே இருந்ததினால் தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் விஷ்ணுவிடம் சென்று தமது அச்சத்தை தெரிவிக்க அவர் பிரம்மாவை அழைத்து அவரை கயாசுரனிடம் சென்று தேவலோகத்தின் கீழுள்ள பித்ருக்கள் மோட்ஷம் அடைய ஒரு யாகம் செய்ய உள்ளதாகவும் அதை ஆகாயத்தில் செய்யக்கூடாது, பூமியில்தான் செய்ய வேண்டும் என்பதினால் பூமியில் உள்ள கயாசுரன் உடல் மீது தம்மை யாகம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுமாறும் அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

    அதன்படி பிரம்மாவும் கயாசுரனிடம் சென்று அப்படியே வேண்டிக்கொள்ள அவன் கயாவில் சென்று பூமியில் படுத்துக் கொண்டான். அவன் தலை மீது பிரம்மா பித்ரு யாகத்தை துவங்கினார். ஆனாலும் அவன் அடிக்கடி அசைந்து கொண்டே இருந்ததினால் மிரிச்சி என்ற முனிவரை அழைத்து அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து அந்த கயாசுரன் உடல் மீது ஒரு கல்லை வைத்துவிட்டு அமருமாறு விஷ்ணு கூறினார். அவர்களும் பித்ரு யாகத்தில் கலந்து கொள்வது போல வந்து அவன் மீது அமர்ந்தனர்.

    பித்ரு யாகம் நடக்க நடக்க அவனுடைய சக்தி அதில் கரைந்து கொண்டே போயிற்று. முடிவில் விஷ்ணு அந்த கல்லின் மீது ஏறி அமர அனைவரது சக்திகளும் ஒன்று சேர்ந்தது. யாக சக்தியும் அவர்களது சக்தியுடன் ஒன்று சேர அந்த கயாசுரன் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே மடிந்தான்.

    ஆனாலும் அவன் மீதே பித்ருக்களின் யாகம் நடந்ததினாலும், திருப்தியடைந்த ஆத்மாக்கள் அவனை ஆசிர்வதித்ததினாலும் அவனுக்கு நல்ல பலன் கிடைத்து பித்ருக்கள் வசிக்கும் மோட்ஷம் சென்றான். ஆகவே காயா பித்ரு லோகம் எனப் பெயர் பெற்றது. ஆகவேதான் விஷ்ணுவே மோட்ஷம் தந்த அந்த இடத்தில் சென்று பித்ருக்களுக்கு சிரார்தம் செய்தால் அவர்களுடைய ஆத்மாவுக்கு வைகுண்டம் செல்லும் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    இதற்கு ஒரு முன் உதாரணமாக ஒரு கதை உண்டு. கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது? என்று இந்திரனிடம் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை.

    அவனுடைய பித்ருக்களுக்குக்கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால் தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு சிரார்தம் செய்து பிண்டம் போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.

    • மகாளயபட்ச காலத்தில் வரும் அஷ்டமி ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.
    • மறக்காமல் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

    மகாளயபட்ச காலத்தில் வரும் அஷ்டமி, ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தநாளில், மறக்காமல் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். முன்னுக்கு வரச்செய்வார்கள் முன்னோர்கள்.

    பட்சம் என்பது பதினைந்து நாட்கள். மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான பதினைந்துநாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியமான நாள், அது முன்னோர்களுக்கான நாள்.

    ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். இந்த நன்னாளில் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோரை வணங்க வேண்டும் என்றும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு அர்க்யம் செய்து, ஆராதிக்கவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

    ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன. மாத அமாவாசை, தமிழ் மாத பிறப்பு, திவசம், கிரகண காலம் என்று உள்ளன. அதேபோல், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை என்பது மிக முக்கியமான அமாவாசைகள்.

    இந்த நாட்களில், முன்னோர் தர்ப்பணம் உள்ளிட்ட பித்ரு ஆராதனைகளை செய்யாவிட்டால், பித்ரு தோஷத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் பித்ரு தோஷத்துக்கு ஆளாவோம் என்கிறார்கள் ஆச்சாரியார்கள்.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில், புரட்டாசி அமாவாசை என்பது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள், அதாவது பவுர்ணமியில் இருந்து வருகிற அடுத்த 15 நாட்கள், முன்னோர்களுக்கான நாட்கள். இந்த பதினைந்து நாட்களும் பித்ரு லோகத்தில் இருந்து, பூலோகத்துக்கு, நம் வீட்டுக்கு முன்னோர்கள் வருகிறார்கள். நம் ஆராதனைகளை பார்த்து மகிழ்கிறார்கள். மகிழ்ந்து ஆசி வழங்குகிறார்கள் என்பதாக ஐதீகம்.

    மகாளயபட்ச காலம் என்பது கடந்த செப்டம்பர் 2-ந் தேதியில் இருந்து தொடங்கியது. இது வருகிற அமாவாசை வரை இருக்கிறது. மகாளயபட்ச காலத்தில் பரணி நட்சத்திரம் இணைவது ரொம்பவே விசேஷம். இந்த நாளில், முன்னோர் ஆராதனை செய்வதும் அவர்களை நினைத்து தான தருமங்கள் செய்வதும் மிகுந்த புண்ணியம்.

    அதேபோல், பெளர்ணமியில் இருந்து அமாவாசை உள்ள காலத்துக்கு நடுவே, மகாளயபட்ச காலத்தில், அஷ்டமி திதி வரும். மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி, மத்யாஷ்டமி என்று போற்றப்படுகிறது.

    ஒரு ஊரின் மையப்பகுதி என்பது எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ, ஒரு கோவிலின் மையப்பகுதியில் முக்கியமான இறைவன் எப்படி குடிகொண்டிருக்கிறாரோ, மனித உடலின் மையப்பகுதியாக வயிறு எப்படி இருக்கிறதோ அதேபோல், மகாளயபட்ச காலத்தின் மையப்பகுதியாக, நடுநாளாக இருப்பது அஷ்டமி. அதனால்தான் மத்யாஷ்டமி என்று மகாளயபட்ச அஷ்டமியை போற்றுகிறது சாஸ்திரம்.

    மகாளயபட்சம் தொடங்கி தினமும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள், மறக்காமல் மத்தியாஷ்டமி அன்று முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அரிசி, வாழைக்காய், வெற்றிலை பாக்கு, தட்சணை கொடுக்கவேண்டும். ஒரேயொரு நபருக்காவது தயிர்சாதமோ, எலுமிச்சை சாதமோ, சாம்பார் சாதமோ வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் ஆச்சாரியார்கள்.

    வீட்டில் முதலில் விளக்கேற்றுங்கள், முன்னோர் படத்துக்கு பூக்கள் போடுங்கள், ஏதேனும் உணவிட்டு நைவேத்தியம் செய்யுங்கள், காகத்துக்கு உணவிடுங்கள், குடையோ செருப்போ போர்வையோ வஸ்திரமோ ஏதேனும் ஒன்று வழங்குவது உங்கள் வாழ்வையே மலரச்செய்யும். இந்த வழிபாடு செய்வதால் இதுவரை உள்ள தடைகள் அனைத்தையும் தகர்த்து முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். முன்னோர்களின் பரிபூரண ஆசியையும் பெறுவீர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை.
    • பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது.

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இதில் மத்யாஷ்டமி முக்கியமான தினம்.

    பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மகாளய பட்சம் என்பது ஆவணிமாத பவுர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாள்களைக் குறிக்கும். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். பதினைந்து நாள்கள் நம் முன்னோர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக பூலோகம் வந்து தங்கும் காலமே மகாளய பட்சம் எனப்படுகிறது.

    ஒவ்வோரு அமாவாசை அன்றும் நாம் வழங்கும் தர்ப்பணங்களை எமதர்மராஜன் ஏற்று நம் முன்னோர்களுக்கு வழங்குவாராம். ஆனால் மகாளயபட்சத்தின் போது 'பித்ரு லோகத்தில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு சென்று வாருங்கள்' என்று அவர்களை அனுமதிப்பாராம்.

    நம் முன்னோர்களுக்கு பிரியமான இடம் நம் வீடுதானே! எனவே அன்று நம் பித்ருக்கள் கூட்டமாக நம் வீட்டுக்கு வருவார்கள் என்கின்றன சாஸ்திரங்கள்.

    மகாளயபட்சத்தின் முக்கியமான நாள்கள்

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்தப் பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் முன்னோர்கள்.

    கட்டாயம் மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அது தவிர மீதமுள்ள நாள்களில் ஏதேனும் ஒருநாள் நாம் தர்ப்பணம் முதலிய வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய நாள்களாக, மகாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, மஹாவியதீபாதம், சந்நியஸ்தமாளயம், கஜச்சக்ஷமாளயம், மகாளய அமாவாசை ஆகிய நாட்களை வகுத்து தந்திருக்கிறார்கள்.

    பொதுவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யும்போது மூன்று தலைமுறை தாய், தந்தையருக்கு மட்டுமே தர்ப்பணம் வழங்குவோம். ஆனால் மகாளயபட்சத்தில் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் அறியாதவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தர்ப்பணம் செய்யமுடியும்.

    இந்த நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. மகாபரணி தந்தை, தாய் இறந்த திதி எதுவென்று அறியாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய நாள். முறையாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், வழிபாடு செய்ய உகந்த நாள் மத்யாஷ்டமி.

    குடும்ப சுமங்கலிகளை வழிபட உகந்த தினம் அவிதவாநவமி. 27 யோகங்களில் ஒன்றான வியதீபாத யோகம் மகாளய பட்சத்தின்போது ஏற்பட்டால் அது மகாவியதீபாத யோகம் என்று அழைக்கப்படும். இந்த நாளில் செய்யப்படும் பித்ருவழிபாடு சகல நன்மைகளையும் பெற்றுத்தரும்.

    இந்த ஆண்டு மத்யாஷ்டமி இன்று. மகாளய பட்சத்தின் 15 நாள்களில் நடுநாயகமாகத் திகழ்வது இந்த மத்யாஷ்டமி. எனவே இந்த நாள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மத்யாஷ்டமி அன்று தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளை செய்தால் மகாளய பட்சம் முழுவதும் முன்னோர்வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் அறிவாற்றல் பெருகி காரியங்களில் வெற்றி கிடைக்கும். எனவே காரியத்தடைகள் விலக கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மத்யாஷ்டமி வழிபாடு.

    குடும்பங்களில் சுமங்கலிகளாக வாழ்ந்து மறைந்த பெண்கள் குடும்பத்தினைக் காக்கும் தெய்வங்களாகத் திகழ்வர் என்பது நம்பிக்கை. முறையாக சுமங்கலி வழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்யாதவர்கள் குடும்பங்களில் சுபகாரியத் தடைகள் நிகழும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு முன்பாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உள்ளன. மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி சுமங்கலி வழிபாட்டுக்கானது. இந்த நாளில் வீட்டின் மூத்த பெண்களை நினைத்து வழிபடுவதோடு, புடவை முதலிய மங்கலப்பொருள்களை தானம் செய்வதன் மூலம் சுமங்கலிகளின் ஆசி நமக்குக் கிடைக்கும்.

    பித்ரு தோஷம்?

    இதேபோன்று சந்நியாசிகளுக்கு உரிய திதி சந்நியஸ்தமாளயம், கணவரை இழந்த விதவைகள் செய்வதற்க்கான கஜச்சக்ஷமாளயம் மற்றும் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய சஸ்த்ரஹதமாளயம் ஆகிய நாள்கள் முக்கியமானவை. இந்த நாள்களில் முன்னோர் வழிபாடு செய்வது வாழ்வில் இருக்கும் துன்பங்களை நீக்கி நன்மைகள் சேர்ப்பவை.

    ஜாதகத்தில் பித்ரு தோஷம்

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும்.

    ராகு - கேது

    இத்தகைய பித்ரு தோஷம் உடைய ஜாதகக் காரர்களுக்கு அருமருந்தாகத் திகழ்வது இந்த மகாளயபட்சம். மகாளயபட்ச நாள்களில் தினமும் குளித்து பித்ருக்களை வழிபடுவதன் மூலம் அனைத்து தோஷங்களையும் நீக்கலாம். குறிப்பாக இந்த நாள்களில் வறியவர்களுக்கு உணவு, உடை ஆகியன வற்றை தானம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம். முன்னோர்களின் ஆசி நமக்கு அனைத்து நலன்களையும் பெற்றுத்தரும்.

    • பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது.
    • ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.

    ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.

    பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.

    • மானாமதுரை அருகே முன்னோர் வழிபாடு நடைபெறும் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம்.
    • காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேபரமக்குடி சாலையில் உள்ள குறிச்சியில் வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் 10 ஆண்டு களுக்கு முன்பு காசியில் இருந்து பூஜித்து காசி விஸ்வநாதர், அன்னபூரணி, தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, அனுமன், நந்தி மற்றும் சீரடி சாய் பாபா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம். கோவிலில் உள்ள வில்வம், வன்னி, மாமர இலைகளை வைத்தும் பூஜை செய்யலாம்.

    இக்கோவிலை கட்ட ஏற்பாடு செய்த இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி ஆண்டுக்கு 5 முறை காசி சென்று தங்கி தாய், தந்தை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்.

    பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நம் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் காசியில் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்களோ அதுபோல தமது சொந்த ஊரில் அனைவரும் காசி விஸ்வநாதர் அருளால் முன்னோர்கள் ஆசியை பெற வேண்டும் என காசி விஸ்வநாதர் கோவிலை உருவாக்கி உள்ளார்.

    இங்கு தை, ஆடி, மாஹாளயம் (புரட்டாசி) ஆகிய அமாவாசை தினங்களில் காலை 7 மணி முதல் 11 மணிவரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இது தவிர பிரதோஷம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா 10 நாட்கள் மற் றும் குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, நவகிரக யாகங் களும் நடைபெறுகிறது.

    முன்னோர்கள் ஆசி கிடைக்க பக்தர்களுக்கு தர்ப்பண பொருட்கள் எள், அகத்தி கீரை, பூ ஆகியவைகளை கோவில் நிர்வாகிகள் இலவசமாக வழங்கி வரு கின்றனர். காசி செல்ல முடியாத பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட காசி விஸ்வநாதரை கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்யலாம்.

    ×