search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tai Amavasi"

    • சவுபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது சூல விரதம்.
    • தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

    "சகல விதமான சவுபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும் போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

    அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று, சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்கி ரகத்தை வைத்துக் கொண்டு, அபிஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும்.

    பிறகு மத்தியான வேளையில் திருநீறு, ருத்திராட்ச மாலைகளைத் தரித்த சிவபக்தர்களுக்குத் தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறுதானதர்மங்கள் செய்ய வேண்டும்.

    அதன்பின் சிவாலயத்திற்குச் சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து, கோயிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கையும் செலுத்தி இறைவனை வணங்க வேண்டும். பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரே ஒருமுறை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும்.

    இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று, தீராத கொடிய நோய்களில் இருந்தும் விடுபட்டு தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல சவுபாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். முடிவில் சிவபாக்கியத்தையும் அடைவார்கள்.

    மகாவிஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து, தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலியை நீங்கப் பெற்றார். மேலும் கொடிய அசுரனான காலநேமியைச் சம்ஹாரம் செய்தார்.

    ஜமதக்னி முனிவரின் புதல்வனும், மிக பலசாலியுமான பரசுராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும் ராவணனையும் மிஞ்சும் பராக்கிரமசாலியான கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்றார். பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்றுவலி நீங்கப்பெற்றான்.

    சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால் மரணத் தையே வென்றான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடைபிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பௌத்திரர்களைப் பெற்றெடுத்து, அளவற்ற போகங்களையும் அனு பவித்து இறுதியில சிவலோகத்தை அடைந்தான்.

    இவர்களைப் போலவே இன்னும் பலர் இவ்விரதத்தை அனுஷ்டித்து தாங்கள் விரும்பியவற்றை அடையப்பெற்று இறுதியில் கயிலாயத்தையும் அடைந்தார்கள். ஆகையினால் மேலான சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் தம் பகைவர்களை வென்றும், கொடிய நோய்களில் இருந்து நீங்கியும் மேலான நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம. தோஷ நிவர்த்திப் பெறுவார்கள் இன்னும் ஏனைய பாவங்களில் இருந்தும் விடுபட்டு, பரமேஸ்வரரின் திருவருளால் சகல செல்வங்களையும் பெறுவார்கள்.

    • ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் தோஷங்கள் விலகி விடும்.
    • பாவ, புண்ணியங்கள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகள்.

    நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன.

    ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்க கூடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.

    ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    திருதராஷ்டிரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார்.

    பாண்டவர்களின் வெற்றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான். அதனால் இரு குலத்தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டார்.

    அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.

    இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம்பாக மாறி பரீஷத் மகாராஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.

    ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. `என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மா வை எப்படிக் கரையேற்றுவது? என்று தவித்தான்.

    அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது. சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தாள்.

    உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்திருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    • பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
    • மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.

    ஒருவர் மரணம் அடைந்த பிறகு, அவர் ஆத்மா என்ன ஆகிறது? எங்கு போகிறது? எப்போது மறுபிறப்பு எடுக்கிறது? இந்த கேள்விகளுக்கு உலகம் முழுவதும் மாறுபட்ட, முரண்பட்ட தகவல்களே பதில்களாக உள்ளன. ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை.

    ஆன்மா மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று அழைத்து உரிய மரியாதை, பூஜை செய்து வழிபடுகிறார்கள். உலகில் பெரும்பாலான மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.

    சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பித்ரு வழிபாட்டை ஆதி தமிழர்கள் இறை வழிபாட்டுக்கு நிகராக கடை பிடித்தனர்.

    ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம் (15 நாட்கள்), வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என பல விதமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டு, மிக, மிக துல்லியமாக பித்ரு வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் நாள், ராசி, திதி ஆகியவை ஒன்று சேருவதை கணக்கிட்டு பூஜைகள், விரதங்களை மேற்கொண்டனர்.

    அவர்களது இத்தகைய துல்லியமான கணக்கீடுதான் அவர்களுக்கு 100 சதவீதம் முழுமையான பலன்களைப் பெற்றுக் கொடுத்தது. அந்த வரிசையில்தான் தை அமாவாசை தர்ப்பண வழிபாட்டை ஏற்படுத்தி இருந்தனர்.

    மகாளய பட்சத்தின் 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இன்று பூலோகத்துக்கு வருவதை கணக்கிட்டு பித்ருக்கள் பசியாற தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்கள்.

    • அன்னதானம் செய்வதுடன், ஆடை தானமும் செய்கிறார்கள்.
    • முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள்.

     திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தை அமாவாசை அன்று புதிய வட்டமான மூங்கில் தட்டில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச்சரங்கள், வாழைக்காய், பூசனிக்காய் வைத்து, அதனை கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

    பிறகு, பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒருவரிடம் தட்சினை (பணம்) கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலியிடம் கொடுத்து, அவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்று அன்னதானம் செய்வதுடன், ஆடை தானமும் செய்கிறார்கள். இதேபோல் சில கோவில்களில் இந்த பிதுர் பூஜை நடைபெறுகிறது.

     தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில், கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி. இந்த தலமும் அமாவாசை தினத்தன்று பித்ருபூஜை செய்ய ஏற்ற தலம் என்பார். இத்தலத்தில் கவுசிக முனிவரின் வேண்டுகோளுக்கேற்ப, காசி கங்கை உள்பட பதின் மூன்று கங்கைகளும் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தனவாம்.

    மேலும் அமாவாசையன்று இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்த நாளில் இங்கு வழிபாடு செய்தால் பிதுர்தோஷம் நீங்கும். முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

     இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தற்போது சதுரகிரி மலையிலுள்ள சுந்தர மகாலிங்கர் ஆலய அமாவாசை விழா விளங்குகிறது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என ஈசன் இரண்டு சிவலிங்க மூர்த்தங்களாக கோவில் கொண்டுள்ள இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசையும் பவுர்ணமியும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தை அமாவாசை மிகவும் போற்றப்படுகிறது.

    அந்த நாளில் இந்த மலை உச்சியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள அமாவாசைக்கு ஒரு நாள் முன்னதாகவே பக்தர்கள் தகுந்த உணவு, தேவையான மருந்து, மாத்திரையுடன் வந்து விடுகிறார்கள்.

    அடிவாரத்தில் இருந்து சுமார் நான்கு மணி நேரம் மலையில் நடந்து சென்று மகாலிங்க சுவாமியைத் தரிசித்த பிறகு தங்கள் துன்பங்களும் பாவங்களும் நீங்கியதாக உணர்கிறார்கள். தை அமாவாசையன்று நடைபெறும் பிதுர் பூஜைக்குரிய பொருட்களை மலையடிவாரத்தில் இருந்தே வாங்கிச் சென்று இறைவனின் சந்நிதியில் சமர்ப்பித்து தங்கள் முன்னோர்களையும் மறைந்த பெற்றோர்களையும் நினைவு கூர்ந்து வழிபடுகிறார்கள். இதனால் அவர்களின் ஆசி கிட்டும் என்பதுடன் பிதுர்தோஷமும் விலகிவிடும்.

    • தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர்.
    • வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார்.

    தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர் என்று மகாபாரதம் கூறுகிறது. இதை -நாராயணர், நாரதருக்குச் சொல்வதாக வருகிறது.

    வராக அவதாரத்தில் பூமியைக் கடலில் இருந்து வெளியே கொண்டு வந்த போது, மத்தியானம் வந்து விட்டது. மத்தியா நிஹம் செய்ய வேண்டி வராகர் ஆயத்தம் செய்த போது, தெற்றுப்பல்லில் கொஞ்சம் மண் ஓட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். தலையை ஆட்டி அவர் உதறின போது அவை மூன்று உருண்டையாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன. அவையே மூன்று தலைமுறை பித்ருக்களாக ஆகினர்.

    அவர்களுக்கு வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார். பித்ரு காரியத்தை ஸ்தாபித்தவரும் அவர்தான். அதை நடத்தி உலகக்கு வழி காட்டியரும் அவர்தான். சரீரம் இல்லாதவர்களுக்குப் பிண்டம் தர வேண்டும் என்றும், பித்ருக்களுக்குத் தருவது தன்னையே அடைகிறது என்றும் வராகர் எடுத்துரைத்தார்.

    பூமி எங்கிலும் நீர் நிறைந்திருந்த போது, நிலப்பகுதிகளை வெளியே கொண்டு வந்த அந்த இறை சக்தி, வராகம் எனப்பட்டது. குகை போன்ற பூமிக்குள் நுழைந்து, அதை வெளியே கொண்டு வந்ததால் அந்த தெய்வம் கோவிந்தன் எனப்பட்டது.

    கோ என்றால் பூமி, அவிந்தம் என்றால் அதை அடைந்து வெளிக்கொணருதல் என்று பொருள். கோவிந்தா என்றால் இருளாகிய குகையில் இருந்து, நம்மை வெளிக் கொண்டு வருபவன் என்று பொருள். பூமியை வெளியே கொண்டு வந்தவுடன் உலகத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தர்மத்தை உபதேசிக்கவே அவர் வ்ரிஷாகபி எனப்படுகிறார். அவர் சொன்ன முக்கிய போதனை தர்மம் பித்ருகாரியம் செய்ய வேண்டும் என்பதே.

    • பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம்.
    • அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

    தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன். சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாதையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

    சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சந்திரன் மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்றை எல்லாம் தரவல்லவர்.

    சூரியனைப் `பிதுர் காரகன்' என்றும், சந்திரனை `மாதுர் காரகன்' என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் பிதா-மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.

    இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் வழிபட வேண்டும். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பவுர்ணமி தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

    அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

    இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

    பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

    இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர். இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும் என்பது ஐதீகம்.

    யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் "வீட்டுக்குப் படைத்தல்" என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையில் யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.

    சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.

    இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

    இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விஷயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

    சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.

    மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

    ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பவுர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வணங்குதல் மானிடராக பிறந்த ஒவ்வொருவரது ஆன்மீகக் கடமையாகும். இந்த கடமையை தவறவிடாதீர்கள்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தை, ஆடி மாத அமாவாசை, சிவராத்திரி தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகிற 9-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று (7-ந் தேதி) அதிகாலையிலேயே மலையேற அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    காலை 6.40 மணிக்கு வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்றனர்.

    மலைப்பாதையில் உள்ள சங்கிலி ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடி காணிக்கை செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்தக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள்.
    • சிரார்த்தம் செய்யும் முன்பாக மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

    2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

    3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

    5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

    6. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீர் தரப்பட வில்லை என்றால் அவர்கள் ஏமாற்ற மடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    7. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

    9. பெற்றோர்களின் வருட சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருட சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

    10. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

    11. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.

    12. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    13. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அது தான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

    14. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

    15. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திரு வண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

    16. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    அமாவாசையன்று எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால், அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துன்பங்களில் இருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலச் சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் முன்னோர்களான பித்ருக்கள் தங்களது உறவுகளைப் பார்ப்பதற்காக இந்த பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.

    அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பது போலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். அன்றும் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ரு லோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    தை அமாவாசை, இந்த வருடம் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் காலபுருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகர ராசியில், கர்ம காரகன் சனியின் வீட்டில் சந்திரனு டன் சூரியன் சேரும் நாள் மிகவும் விசேஷமான தை அமாவாசையாகும். அதிலும் உத்திராண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பாகும்.

    தற்போதைய கோட்சாரத்தில் மகர ராசியில் கர்மகாரகன் சனி பகவான் ஆட்சிபலம் பெற்று, தர்மாதிபதி குருவுடன் இணைந்து, தர்ம கர்மாதிபதி யோகத்தை உலகிற்கு குருவும் சனியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் சூரியனும், சந்திரனும் இணையும் போது உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தில் உரு வாகும் தை அமாவாசை மிகமிக சிறப்பான- உன்னதமான பலன்களை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

    சூரியோதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.

    • தர்ப்பணம் என்பது முன்னோர்களை திருப்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி.
    • முன்னோர்களை நினைத்து கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள். தர்ப்பணம் என்பது அவர்களை திருப்தி செய்வதற்காக செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். பித்ருக்கள் என்பவர்கள் இறந்துபோன நமது அப்பா மற்றும் அம்மாவைச் சேர்ந்தவர்களையும் குறிக்கும். நம் குலம் நன்றாக விளங்கவும் வம்ச விருத்திக்காகவும், தோஷங்கள் இல்லாமல் இருக்கவும் நம் முன்னோர்களை நினைத்து இந்த கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம், பித்ருக்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் (எஜமானர்கள்) ஆவார்கள். பித்ருக்கள் தர்ப்பணம், தகப்பனார் வழியில் ஆறு பேர், தாய் வழி பாட்டனார் (மாதா மகர்) வழியில் ஆறு பேர் ஆக 12 பேருக்கு செய்ய வேண்டும். மாதா மகர் (தாய் வழி பாட்டனார்) உயிருடன் இருந்தால், அந்த வர்க்கத்திற்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. அவருக்கு பதிலாக முன்னோர் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம்.

    பித்ரு வர்க்கம் அப்பா வழி (வர்க்கம்):-

    1) பிதா- தகப்பனார்,

    2) பிதா மகர் - பாட்டனார் (தகப்பனாரின் அப்பா),

    3) பிரபிதா மகர் - பாட்டனாருக்கு அப்பா,

    4) மாதா - அம்மா,

    5) பிதா மகி - பாட்டி (தகப்பனாருக்கு அம்மா),

    6) பிரபிதா மகி - தாத்தாவுக்கு அம்மா.

    அம்மா வழி (வர்க்கம்):-

    1) மாதா மகர் - அம்மாவின் அப்பா (தாத்தா),

    2) மாது: பிதாமஹர் - தாய் பாட்டனாருக்கு அப்பா,

    3) மாது: பிரபிதாமஹர் - தாய் பாட்டனாருக்கு பாட்டனார்,

    4) மாதா மகி - பாட்டி (அம்மாவின் அம்மா),

    5) மாது: பிதாமகி - தாய் பாட்டனாருக்கு தாயார்,

    6) மாது: பிரபிதா மகி - அம்மாவின் பாட்டனாருக்கு பாட்டி.

    இந்த 12 பேரும் இல்லாமல் இருந்தால், அந்த 12 பேருக்கும் எள்ளு - தண்ணீர் கொடுக்க வேண்டும். இவர்கள் யாராவது ஒருவர் உயிருடன் இருந்தால், அவர்களுக்கு பதிலாக முன்னோர் ஒருவர் பெயரைச் சேர்த்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    ஏழு தலைமுறை

    தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் போன்றவற்றை அந்தந்த பிறவிகளிலேயே நாம் கட்டாயம் தீர்க்க வேண்டும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள். கட்டாயம் ஒவ்வொருவரும் பித்ரு கடன் தீர்ப்பதற்காக, சிரத்தையாக சிரார்த்தம் (திதி) செய்வது நன்மை தரும். அமாவாசை மற்றும் மாதப் பிறப்புகளில் கட்டாயம் தில தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்கான கடமைகளை நாம் மறந்தால் பிதுர் சாபங்கள் வந்துசேரும். வம்சவிருத்தி உண்டாகாது. நாம் நம் ஏழு தலைமுறைகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.

    நாம் - முதல் தலைமுறை

    தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

    பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

    பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

    ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

    சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

    பரன் + பரை - ஏழாம் தலைமுறை.

    • மகாவிஷ்ணு, பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார்.
    • பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம்.

    முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு, இந்த பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார். அப்பொழுது அவர் உடலில் இருந்து சிந்திய வியர்வைத் துளிகளே, கருப்பு எள்ளாக மாறியது. அதனால் கருப்பு எள் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக மிக புண்ணியமாக கருதப்படுகிறது.

    பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம். என்றாலும், நதிக்கரை, குளக்கரை, கடற்கரைகளில் செய்வது இன்னும் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். குளக்கரை அல்லது நதிக்கரையில் செய்யும்பொழுது, அங்குள்ள நீரை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். கடற்கரையில் செய்யும் பொழுது மட்டும் கடலில் உள்ள உப்புநீரை எடுத்து பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் கடலில் குளிக்கக்கூடாது. (ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஆலங்களுக்கு இந்த விதி பொருந்தாது). கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், முதலிலேயே தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் தான் நல்ல பலன்களைத் தரும்.

    பொதுவாக குழந்தை பிறந்த தீட்டு அல்லது நம் உறவினர் யாராவது இறந்த தீட்டு இருக்கும் நேரத்தில், அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆனால் இந்த விதி சூரிய - சந்திர கிரகங்களுக்கு பொருந்தாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது சுத்தமான இடத்தில் தரையில் தர்ப்பம் வைத்து செய்வது விசேஷம்.

    இது நதிக்கைரயில், குளக்கரையில் சாத்தியம். வீடுகளில் செய்யும் பொழுது ஒரு பித்தளை அல்லது செப்பு தட்டு வைத்து, அதில் கூர்ச்சம் (தர்ப்பம்) வைத்து தர்ப்பணம் செய்வது நன்மை தரும். எவர்சில்வர் தட்டுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு நாம் பித்ருக்களுக்கான கடன்களைச் செய்யும் போது, நமக்கு புகழும், நீண்ட ஆயுளும், பொருளாதார வளர்ச்சியும், சொர்க்கமும் உண்டாகும்.

    சத்துருக்களை வெல்வதற்கான சக்தி கிடைக்கும், நம்முடைய குலம் விருத்தி அடையும். தகப்பனார் மற்றும் தாத்தா ஆகியோர் நம்பிக்கை இல்லாமலோ, அலட்சியத்தாலோ தர்ப்பணம் செய்யாமல் இருந்தால், அவர்களின் வாரிசு (மகன்கள்), அமாவாசை தர்ப்பணத்தை செய்வதில் எந்த பலனும் இல்லை. அதே நேரத்தில் ஆரோக்கிய குறைவு காரணமாக மற்றும் வேறு அசவுகரியத்தின் காரணமாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்டிருந்தால், அவர்களிடம் இருந்து தர்ப்பையை கொடுத்து - வாங்கி சங்கல்பம் செய்து மகன்கள் தர்ப்பணத்தைச் செய்யலாம்.

    • பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள்.
    • பித்ருக்களை நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.

    அச்சோதை என்னும் தேவலோகப் பெண், நதிக்கரை ஓரத்தில் ஆயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் மரீசி மகரிஷியின் மகன்களான பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள். பித்ரு தேவதைகள் அவளுக்கு காட்சி கொடுத்து `உனக்கு என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்டனர்.

    அப்பொழுது அந்த தேவ மங்கை, பித்ரு தேவதைகள் இடையே இருந்த மாவசு என்பவரைப் பார்த்து `இவர் என்ன கம்பீர வடிவம் கொண்டவராக இருக்கிறார். இதுபோன்று ஒரு கணவன் தனக்கு அமையக்கூடாதா?' என ஒரு கணம் சிந்தித்தாள். அவளது எண்ணத்தைத் தெரிந்து கொண்ட மாவசு, `நீ தேவலோக மங்கை. ஆனால் சாதாரணமான மனிதப் பிறவிபோல் நடந்து கொண்டாய். எனவே நீ பூலோகத்திற்குச் சென்று பெண்ணாய் பிறப்பாய்' என்று சாபம் கொடுத்தார்.

    தன் தவறை எண்ணி வருந்திய அந்த தேவலோகப் பெண், `இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் இல்லையா?' எனக் கேட்க, `நீ தொடர்ந்து தவம் செய். அந்தரிட்சத்தில் (ஆகாயமும் இல்லாமல் பூமியில் இல்லாமல் இடையில் அமைந்த பகுதி) நீ செய்யும் தவத்தால் உன்னுடைய சாபம் விலகும்' என்று கூறினார், மாவசு.

     இதையடுத்து மீண்டும் சில வருடங்கள், அந்த தேவலோகப் பெண் தவம் செய்தார். அதன்பின்னர் அவளுக்கு மீண்டும் பித்ரு தேவர்கள் காட்சி கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்து, `உன் பாவங்களும், சாபங்களும் விலகியது. இதன் பயனாக நீ துவாபர யுகத்தில் மச்சகந்தி என்னும் பெயரோடு, ஒரு மீனின் வயிற்றில் பிறப்பாய். பராசுரர் என்னும் மகா முனிவரால் நீ, வியாசர் என்ற சிறப்புமிக்க மகனை பெற்றெடுப்பாய்.

    பின்னர் சந்தனு என்ற மகாராஜாவின் மகாராணியாக மாறி, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கடைசி காலத்தில் நீ புண்ணிய நதியாக உருவெடுப்பாய். அச்சோதை என்ற உன் பெயரிலேயே அந்த நதியை அனைவரும் அழைப்பார்கள். உனக்கு நாங்கள் காட்சி கொடுத்த இந்த அமாவாசை தினத்தில் பித்ரு தேவதைகளையும் (இறந்த முன்னோர்கள்), பித்ருக்களையும் நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.

    அமாவாசை திதியில் `நம் வம்சத்தில் பிறந்த யாராவது எள்ளும், தண்ணியும் கொடுப்பார்களா?' என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளில் யார் எள்ளும், தண்ணியும் கொடுக்கிறார்களோ, அவர்களது முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுப்போம். அப்படி பித்ரு தர்ப்பணம் செய்பவர்களின் வம்சமும் தழைக்கும். அதோடு பித்ரு தோஷமும் விலகும்' என்று வரம் அளித்தனர்.

    ×