search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்த வீரர்கள் போராட்டம்"

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள் என்னை மல்யுத்தத்தின் கடவுள் என்றனர்.
    • இரவும் பகலும் மல்யுத்தமே வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நான்.

    லக்னோ :

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கூறி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி நகரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரிஜ் பூஷன் பேசியதாவது:-

    'எனக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்கூட, நானே தூக்கில் தொங்குவேன் என்று மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். கடந்த 4 மாதங்களாக, என்னை தூக்கிலிட வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு என்னை தூக்கிலிடவில்லை. எனவே அவர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசச் சென்றார்கள். கங்கையில் பதக்கங்களை வீசுவதால் பிரிஜ் பூஷன் தூக்கிலிடப்பட மாட்டார். உங்களிடம் சான்று இருந்தால் அதை கோர்ட்டிடம் கொடுங்கள். கோர்ட்டு என்னை தூக்கில் போட்டால், அதை ஏற்றுக்கொள்கிறேன்.

    அனைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் எனது குழந்தைகள் போன்றவர்கள். நான் அவர்களை குறைசொல்ல மாட்டேன். அவர்களின் வெற்றியில் எனது ரத்தமும், வியர்வையும்கூட இருக்கிறது.

    சிறிதுகாலம் முன்புவரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் என்னை மல்யுத்தத்தின் கடவுள் என்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றபோது இந்தியா உலகளவில் 20-வது இடத்தில் இருந்தது. இன்று எனது கடின உழைப்பின் காரணமாக, உலகின் 5 சிறந்த மல்யுத்த அணிகளில் ஒன்றாக இந்தியா உருவாகியுள்ளது.

    இரவும் பகலும் மல்யுத்தமே வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நான். மல்யுத்தத்தில் இந்தியா வென்ற 7 ஒலிம்பிக் பதக்கங்களில் 5 பதக்கங்கள் எனது பதவி காலத்தில் வந்தவை. எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.

    அயோத்தியில் வரும் 5-ந்தேதி நான் நடத்தும் 'ஜன் சேத்னா மகா பேரணி'யில் எல்லோரும் திரளாக பங்கேற்க வேண்டும்.'

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திர அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
    • டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

    மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விளையாட்டு மற்றும் ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நாங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

    டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.
    • மல்யுத்த போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர்.

    மல்யுத்த வீரர், விராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்- மல்யுத்த வீரர்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

    "டெல்லி காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். இன்று தங்களது பதக்கங்களை கங்கையில் வீச அவர்கள் ஹரித்வார் சென்றனர். ஆனால், பதக்கங்களை அவர்கள் டிகைட்-இடம் ஒப்படைத்தனர். அது அவர்களது முடிவு, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்தார்.

    மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் பிரிஜ் பூஷன் சிங் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு பிரிஜ் பூஷன் சிங் வருவதை அறிந்த, மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.

    பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தான் மல்யுத்த போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசி போராட்டம் நடத்துவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று அறிவித்தனர். அதன்படி ஹரித்வார் வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் விவசாயிகள் சங்க தலைவர் நரேஷ் டிகைட் பேச்சுவார்த்தை நடத்தி, பதக்கங்களை வீச வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

    இவரது கோரிக்கைக்கு இணங்க, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வீசும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, பதக்கங்களை டிகைட்-இடம் ஒப்படைத்தனர். மேலும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஐந்து நாட்கள் கெடு வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். 

    • பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
    • தடையை மீறி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள். அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர்.

    அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் இன்று மாலையில் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் வந்து சேர்ந்தனர். சாக்சி மாலிக், வினேக் போகத், பஜ்ரங் புனியா மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் அங்கு வந்து சேர்ந்தனர். ஆற்றங்கரையில் மனமுடைந்து தரையில் அமர்ந்தனர். அப்போது சிலர் வேதனை தாங்காமல் அழுதுவிட்டனர். அவர்களை சக வீரர், வீராங்கனைகள் தேற்றினர். உள்ளூர் மக்களும் அங்கு வந்து ஆறுதல் கூறினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

    கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியுள்ளது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித், இன்று பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறி உள்ளார். அத்துடன் பதக்கங்களை வாங்கிச்சென்றார். இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.

    மேலும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர். 5 நாட்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இன்று பிற்பகல் முதல் மாலை வரை நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறை நேற்று கைது செய்தது. கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று மார்ஃபிங் செய்யப்பட்டு மல்யுத்த வீராங்கனைகள் சிரிப்பது போன்று மாற்றப்பட்டு இருப்பதை காட்டுகிறது. புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு இருப்பதை அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் தீவிரம் காட்டவில்லை என்பதை உணர்த்துகிறது.

    வைரல் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "இந்த புகைப்படங்களை ஐடி செல் தான் பரப்பி வருகிறது. இதனை பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும்," என்று டுவிட் செய்து இருக்கிறார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

    மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • பிரிஜ் பூஷன் சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர்.
    • பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அவர் தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கும் அதே சோதனை தனது சோதனையுடன் நடத்தப்பட்டால் உண்மையை கண்டறியும் சோதனைக்கு நானும் தயார்.

    என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரிஜ் பூஷன் சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர். அவர் 2 பேரை மட்டும்தான் சோதனைக்கு அழைக்கிறார். ஆனால் நாங்கள் ஏழு பேரும் இந்த சோதனைக்கு தயாராக இருக்கிறோம் என வினேஷ் போகட் கூறியுள்ளார்.


    • இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் 19-வது நாளாக நீடித்து வருகிறது.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மத்திய விளையாட்டுத்துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் சாக்ஷி மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்தது.

    இந்த நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில்,

    'இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதேபோல் புகார் கூறிய 7 வீராங்கனைகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம். அப்போது தான் யார் குற்றவாளி, யார் குற்றவாளியில்லை என்பது தெரியவரும். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை தூக்கில் போடுங்கள். பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு அனைத்து பெண்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.

    'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நாளை (இன்று) கருப்பு பட்டை அணிந்து போராட்டம் செய்ய இருக்கிறோம்' என்று ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான வினேஷ் போகத் கூறினார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா கூறுகையில், 'மல்யுத்த போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் எந்தவகையிலும் எதிர்ப்பு காட்டவில்லை. எல்லா மல்யுத்த போட்டிகளையும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்டு இருக்கும் இடைக்கால கமிட்டி நடத்த வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாகும். போட்டிகளை நடத்தும் விஷயத்தில் பிரிஜ் பூஷனின் தலையீடு எந்த வகையில் இருந்தாலும் அதனை நாங்கள் எதிர்ப்போம்' என்றார்.

    • மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நாட்டில் உள்ள மகளிர் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியான 66 வயது பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், விராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

     

    "இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு ஆதரவாக இருந்து கொண்டு நாங்கள் பொய் கூறுகிறோம் என்று சொல்பவர்களிடம், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.

    "யார் தப்பு செய்திருந்தாலும், அவர்களை தூக்கிலிடுங்கள். நிர்பயா வழக்கின் போது வழங்கியதை போன்றே நாட்டில் உள்ள மகளிர் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாங்களும் பெண்களுக்காகவே போராடி வருகிறோம். இதில் நாம் வெற்றி பெற்றால், மிகவும் உறுதியான தகவலை உலகிற்கு தெரிவிக்க முடியும். ஆனால் தோல்வியுற்றால் நாம் 50 ஆண்டுகள் பின்செல்ல வேண்டி இருக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இன்றைய போராட்டத்தின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கருப்பு நிற பேண்ட்களை அணிந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    • நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
    • வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தருக்கு வந்தனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மனரீதியில் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர் போராட்டத்தை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்து வருகின்றனர். 

     

    மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க பாரதிய கிசான் யூனியனை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தருக்கு வந்தனர். விவசாயிகள் வருவதை அறிந்து போலீசார் பேரிகார்டுகளை வைத்திருந்தனர்.

    விவசாயிகளை பார்த்ததும், போலீசார் அவர்களிடம் நுழைவு வாயில் வழியே செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும், அதிக எண்ணிக்கையில் வந்திருந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் போராட்டக்களத்திற்கு செல்ல முயற்சித்தனர். இதன் காரணமாக சிவ விவசாயிகள் பேரிகார்டுகளை தகர்த்தும், மேலும் சிலர் அதன் மீது ஏறியும் போராட்டக்களத்துக்கு சென்றனர்.

    இதன் காரணமாக ஜந்தர் மந்தர் பகுதியில் திடீர் சலசலப்பு நிலவியது. இறுதியில் பேரிகார்டுகளை கடந்து போராட்டக்களம் சென்ற விவசாயிகள் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நீதி கிடைக்கும் வரை இதே இடத்தில் தான் சாப்பிடுவோம். தூங்குவோம்.
    • பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று பஜ்ரங் பூனியா ஆவேசமாக கூறினார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.

    3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷனை ஒதுங்கி இருக்கவும் உத்தரவிட்டார்.

    தனது மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்த பிரிஜ் பூஷன் தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறினார். அதே சமயம் அடுத்த மாதம் நடைபெறும் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்தார்.

    இதற்கிடையே, பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளிடம் விசாரணை நடத்திய 6 பேர் கமிட்டி விசாரணை அறிக்கையை சமீபத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் நாட்டின் முன்னணி மல்யுத்த பிரபலங்களான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    விசாரணை கமிட்டியின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும், பிரிஜ் பூஷன் மீது அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    சாக்ஷி மாலிக் நிருபர்களிடம் கூறுகையில், 'பிரிஜ் பூஷன் மீது டெல்லியில் உள்ள சி.பி. போலீஸ் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் அளித்தோம். ஆனால் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. புகார் அளித்த 7 மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர் சிறுமி. இது போக்சோ வழக்கு. ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றார். நீதி கிடைக்கும் வரை... வினேஷ் போகத் கூறுகையில், 'ஏற்கனவே போராட்டம் நடத்தி 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதனால் தான் மீண்டும் அதே இடத்திற்கு வந்திருக்கிறோம்.நீதி கிடைக்கும் வரை இதே இடத்தில் தான் சாப்பிடுவோம். தூங்குவோம்.

    விசாரணை அறிக்கையை வெளியிட இன்னும் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு கேட்டு சோர்ந்து போய் விட்டோம்' என்றார். பேசும்போது, ஒரு கட்டத்தில் சாக்ஷியும், வினேஷ் போகத்தும் வேதனையில் கண்ணீர் விட்டு அழுதனர். பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று பஜ்ரங் பூனியா ஆவேசமாக கூறினார். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் மீண்டும் இந்திய விளையாட்டு அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    ×