search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wrestlers Protest"

    • டெல்லி ஜந்தர் மந்தரில் ஜன 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்தனர்.

    2023 ஜனவரியில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI)தலைவராக இருந்த போது, பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டி இது தொடர்பாக விசாரினை நடத்த வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர்.

    மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜன 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், அன்ஷு மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும்,பெண் மல்யுத்த வீரர்களிடையே ஒரு பயம் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல ஆண்டுகளாக வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேற்பார்வைக் குழுவை ஒன்றை அமைப்பதாக அரசு உறுதியளித்தது. அரசு நியமித்த குழுவில் விசாரணைக்கு ஆஜரான பூஷன் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

     


    ஜன 21, 2023 அன்று மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்ததுடன் சட்டப்பூர்வ வழிகளில் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்கள். பூஷன் பா.ஜ.க.-வைச் சேர்ந்தவர், ஆளும் கட்சியைச் சேர்ந்த பூஷனை பாதுகாக்க அரசு முயற்சிப்பதாக பல அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. பூஷனுக்கு எதிரான குற்ற சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு அரசு அழுத்தம் கொடுப்பதாக எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்ததாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டனர்.

    அதன்பின், மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்த பிறகு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அதன் தேர்தல் தேதியை மே 7 என்று அறிவித்தது. எனினும் அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. மல்யுத்த வீரர்கள், அதிகாரிகளின் செயலற்ற தன்மையைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2023 இல் தங்கள் எதிர்ப்பைத் மீண்டும் தொடர்ந்தனர்.

     


    டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பூஷண் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய இந்திய சட்டம் கட்டாயப்படுத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பூஷண் மீது POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பூஷன் நார்கோ தேர்வை மேற்கொள்ள வேண்டும் என்று வீரர்கள் விலியுறுத்தினர்.

    பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களும் மற்ற போராட்டக்காரர்களும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அனைத்து மல்யுத்த வீரர்களும் அந்நாளின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மற்றும் யுனைடெட் வேர்ல்டு மல்யுத்தம் (UWW) மல்யுத்த வீரர்களை காவல்துறை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தன. அதன்பின் பூஷனுக்கு எதிராக போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாததால் யுனைடெட் வேர்ல்டு மல்யுத்தம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது. அதனால் தேர்தலை டிசம்பர் 21 அன்று நடத்த திட்டமிடப்படது.

    இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பூஷனின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் போட்டியிடக் கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருக்கமான நண்பரான சஞ்சய் சிங் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்தார்.

     


    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரனுடன் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரரான சாக்ஷி மாலிக் மல்யுத்ததை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். நாட்டுக்காக பதக்கத்தை வென்று கொடுத்து பெருமைப்படுத்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், சாதாரணப் பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்"என்று வருத்ததுடன் கூறினார்.

    புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்தெடுக்கப்பட்டதால் பெண் வீராங்கனைக்கு தொடர்ந்து இந்த மாதிரியான அநியாயங்கள் நடக்கும், மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளில் இருக்கிறது. நாங்கள் இன்னும் போராடுவோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார் மற்றொரு வீராங்கனையான வினேஷ் போகத்.

    • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வுக்கான போட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி நடத்துகிறது. ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணி வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பி வைக்க ஜூலை 15-ந் தேதி கடைசி நாளாகும்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து இருப்பதுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியை தங்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சத்யவார்த் காடியன், ஜிதேந்தர் கின்ஹா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளது. அவர்கள் தங்கள் எடைப்பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுடன் ஆகஸ்டு 5 முதல் 15-ந் தேதிக்குள் நடைபெறும் தகுதி போட்டியில் ஒரு முறை மோதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரிஜ் பூஷன் சிங் மீது சிறுமி அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
    • முழு அரசு எந்திரமும் பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முடுக்கி விடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

    டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராடி வந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், 18 வயதுக்குட்பட்ட சிறுமி, பிரிஜ் பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

    இன்று இந்திய விளையாட்டுத்துறைக்கு ஒரு, "கருப்பு தினம்". இந்த நாட்டின் சட்ட அமைப்பு பா.ஜ.க.வின் அரசியல் புல்டோசரின் கீழ் நசுக்கப்பட்டு, இந்திய மகள்களின் நீதிக்கான கூக்குரல் குப்பைதொட்டியில் போடப்பட்டு புதைக்கப்பட்டு விட்டது. முழு அரசு எந்திரமும் ஒரு சர்வாதிகாரிக்கு வேண்டிய பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சட்டத்தால் தொட முடியாதவர்கள் என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதிமன்றம் அந்த மகள்களுக்கு தகுந்த நீதியை வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா சிரினாடே கூறியிருப்பதாவது:

    ஒரு சிறுமி, மிகப் பெரிய பதவியில் உள்ள இந்திய மல்யுத்த பயிற்சியாளரான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் புகார் அளித்திருக்கிறார். இதற்காக டெல்லியில் ஒரு நீண்ட போராட்டம் நடைபெற்று, மோடி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருந்ததால் போராட்டத்தையும் கைவிட்டனர்.

    இந்நிலையில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் சிறுமி அளித்த புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்து அவர் மீது போக்சோ சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.

    புகார் அளித்த உடனேயே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதற்கு மாறாக அவர் 45 நாட்கள் சுதந்திரமாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். காவல்துறை, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள என அனைவரும் அந்த சிறுமிக்கு எதிராகவும், பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு அவரை பாதுகாத்திருக்கின்றனர். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இது குறித்து வாயே திறக்கவில்லை. பா.ஜ.க. வின் தற்போதைய முழக்கம், "பெண் குழந்தையை தொந்தரவு செய்வோம், பூஷனை காப்பாற்றுவோம்" என்பதாக மாறியிருக்கிறது.

    45 நாட்களாக ஏன் பூஷன் விசாரிக்கப்படவில்லை என்றும், குற்றவியல் நடுவர் முன்பு வாக்குமூலம் எந்த சூழ்நிலையில் மாறியது என்றும் நீதிமன்றங்கள் விசாரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போதெல்லாம் குற்றவாளிக்கு ஆதரவாகத்தான் பா.ஜ.க. செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தினர்.
    • சாக்சி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

    புதுடெல்லி:

    மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள 7 மல்யுத்த வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னணி மல்யுத்த வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் சாக்சி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது பிரிஜ் பூஷன் சிங் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மல்யுத்த வீரர்களுக்கு அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும், சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில் சாக்சி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்த செய்தியுடன், போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்சி மாலிக், போராட்டத்தில் இருந்து விலகியதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவலை சாக்சி மாலிக் மறுத்துள்ளார்.

    "நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை. போராட்டத்துடன், ரெயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன், நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்பவேண்டாம்" என சாக்சி கூறியிருக்கிறார்.

    • பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம்.
    • தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கவும் தயார் என பிரிஜ் பூஷன் சிங் அறிவிப்பு.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியால் குற்றச்சாட்டு தெரிவித்து, நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று பாஜக எம்பி மேனகா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக எம்பி-யான மேனகா காந்தி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இறுதியில் அவர்களுக்கு நிச்சம் நீதி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்று பதில் அளித்தார்.

    பிரிஜ் பூஷன் சிங் தங்களிடம் பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் அங்கமாக, வீராங்கனைகள் வென்று குவித்த பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்து, மல்யுத்த வீராங்கனைகள் ஹரித்வார் சென்றனர்.

    அங்கு விரைந்த விவசாய அமைப்பினர், மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதக்கங்களை வீச வேண்டாம் என்று வலியுறுத்தினர். விவசாய அமைப்பின் கோரிக்கை ஏற்று பதக்கங்களை வீசும் போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஐந்து நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி காவல் துறையினர் பதிவு செய்தனர். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் பிரிஜ் பூஷன் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கவும் தயார் என்று தெரிவித்து இருக்கிறார்.

    • குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் சிங் கூறினார்.
    • போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கைகளை மாற்றி வருகிறார்கள்.

    கோண்டா:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இப்போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக அறிவித்து ஹரித்வார் சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் மனதை மாற்றிய அவர்கள், பதக்கங்களை கங்கையில் வீசாமல் திரும்பினர். தங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

    இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து மறுத்துவருகிறார். அத்துடன், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை முடிக்கட்டும். முடிவு எப்படி இருந்தாலும் அதன்படி நடப்பேன். எனவே, தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

    ஜனவரி 18ம் தேதி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, சில கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் சில நாட்களில் கோரிக்கைகளை மாற்றினர். அதன்பிறகும் கோரிக்கைகளை மாற்றுகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்? எப்போது செய்தேன்? என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் கேட்டேன். ஆனால், அவர்களிடம் இருந்து இதுகுறித்து உறுதியான அறிக்கை எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விசாரணை நிறைவடைந்ததும் அரசு நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
    • தடையை மீறி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள். அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர்.

    அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் இன்று மாலையில் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் வந்து சேர்ந்தனர். சாக்சி மாலிக், வினேக் போகத், பஜ்ரங் புனியா மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் அங்கு வந்து சேர்ந்தனர். ஆற்றங்கரையில் மனமுடைந்து தரையில் அமர்ந்தனர். அப்போது சிலர் வேதனை தாங்காமல் அழுதுவிட்டனர். அவர்களை சக வீரர், வீராங்கனைகள் தேற்றினர். உள்ளூர் மக்களும் அங்கு வந்து ஆறுதல் கூறினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

    கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியுள்ளது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித், இன்று பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறி உள்ளார். அத்துடன் பதக்கங்களை வாங்கிச்சென்றார். இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.

    மேலும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர். 5 நாட்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இன்று பிற்பகல் முதல் மாலை வரை நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறை நேற்று கைது செய்தது. கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று மார்ஃபிங் செய்யப்பட்டு மல்யுத்த வீராங்கனைகள் சிரிப்பது போன்று மாற்றப்பட்டு இருப்பதை காட்டுகிறது. புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு இருப்பதை அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் தீவிரம் காட்டவில்லை என்பதை உணர்த்துகிறது.

    வைரல் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "இந்த புகைப்படங்களை ஐடி செல் தான் பரப்பி வருகிறது. இதனை பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும்," என்று டுவிட் செய்து இருக்கிறார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

    மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • போராட்டத்தில் விவசாயிகளும் இணையப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • பஞ்சாப் விவசாய சங்கத்தினர் அம்பாலா எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் புதிய பாராளுமன்ற திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பாராளுமன்ற கட்டிட கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்ததுடன், மக்களவையில் செங்கோலை நிறுவினார். இன்று பிற்பகல் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கக்கூடாது, சாவர்க்கரின் பிறந்தநாளில் திறப்பது சரியல்ல.. என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடக்கிறது.

    இது ஒருபுறமிருக்க, போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப்போவதாக கூறி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே டெல்லயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைப்பகுதியான திக்ரி எல்லை, சிங்கு எல்லை பகுதி அருகே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் விவசாய சங்கத்தினர் அம்பாலா எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    பாராளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னச்சரிக்கை நடவடிக்கையாக பாராளுமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராட்டம்
    • பாராளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கக்கூடாது, சாவர்க்கரின் பிறந்தநாளில் திறப்பது சரியல்ல.. என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும், திட்டமிட்டபடி திறப்பு விழா ஏற்பாடுகள் நடக்கின்றன.

    இது ஒருபுறமிருக்க, போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப்போவதாக கூறி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே டெல்லயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைப்பகுதியான திக்ரி எல்லை, சிங்கு எல்லை பகுதி அருகே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாராளுமன்றம் அருகே போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரிஜ் பூஷன் சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர்.
    • பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அவர் தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கும் அதே சோதனை தனது சோதனையுடன் நடத்தப்பட்டால் உண்மையை கண்டறியும் சோதனைக்கு நானும் தயார்.

    என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரிஜ் பூஷன் சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர். அவர் 2 பேரை மட்டும்தான் சோதனைக்கு அழைக்கிறார். ஆனால் நாங்கள் ஏழு பேரும் இந்த சோதனைக்கு தயாராக இருக்கிறோம் என வினேஷ் போகட் கூறியுள்ளார்.


    • பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் சாக்ஷி மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்தது.

    இந்த நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில்,

    'இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதேபோல் புகார் கூறிய 7 வீராங்கனைகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம். அப்போது தான் யார் குற்றவாளி, யார் குற்றவாளியில்லை என்பது தெரியவரும். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை தூக்கில் போடுங்கள். பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு அனைத்து பெண்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.

    'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நாளை (இன்று) கருப்பு பட்டை அணிந்து போராட்டம் செய்ய இருக்கிறோம்' என்று ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான வினேஷ் போகத் கூறினார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா கூறுகையில், 'மல்யுத்த போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் எந்தவகையிலும் எதிர்ப்பு காட்டவில்லை. எல்லா மல்யுத்த போட்டிகளையும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்டு இருக்கும் இடைக்கால கமிட்டி நடத்த வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாகும். போட்டிகளை நடத்தும் விஷயத்தில் பிரிஜ் பூஷனின் தலையீடு எந்த வகையில் இருந்தாலும் அதனை நாங்கள் எதிர்ப்போம்' என்றார்.

    ×