விஷயத்தை மூடிமறைக்க முயன்றார்.. விளையாட்டு துறை மந்திரி மீது வினேஷ் போகத் குற்றச்சாட்டு

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக போராடுவது என்பது கடினமான விஷயம்.ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்
விஷயத்தை மூடிமறைக்க முயன்றார்.. விளையாட்டு துறை மந்திரி மீது வினேஷ் போகத் குற்றச்சாட்டு
Published on

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி உள்ள மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என கூறி உள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீண்ட காலமாக அதிகாரத்தையும் பதவியையும் தவறாக பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நபருக்கு எதிராக போராடுவது என்பது கடினமான விஷயம் என்றார்.

வினேஷ் போகத் மேலும் கூறியதாவது:-

நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு, ஒரு அதிகாரியை சந்தித்தோம். அப்போது, விளையாட்டு வீராங்கனைகள் எப்படி பாலியல் ரீதியாகயும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை எல்லாம் அவரிடம் கூறினோம். நடவடிக்கை எடுக்காத நிலையில், தர்ணாவில் அமர்ந்தோம்.

மத்திய விளையாட்டுத் துறை மந்திரியுடன் (அனுராக் தாக்கூர்) பேசியபிறகு போராட்டத்தை முடித்துக் கொண்டோம். அப்போது பாலியல் துன்புறுத்தல் பற்றி அவரிடம் அனைத்து விளையாட்டு வீரர்களும் கூறியிருந்தனர். ஆனால் அவரோ ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றார். அந்த சமயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com