search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள்.. மல்யுத்த போட்டிகளை நிறுத்தக்கூடாது: பிரிஜ் பூஷன் வேண்டுகோள்
    X

    என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள்.. மல்யுத்த போட்டிகளை நிறுத்தக்கூடாது: பிரிஜ் பூஷன் வேண்டுகோள்

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 9வது நாளாக நீடிக்கிறது.
    • பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கோண்டா:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி., இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது. பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

    போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    போராட்டம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அனைத்து மல்யுத்த நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் மல்யுத்த செயல்பாடுகளை நிறுத்தக்கூடாது என சொல்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, திரிபுரா என யார் ஏற்பாடு செய்தாலும், போட்டிகளை நடத்த அனுமதிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரும் 7ம் தேதி மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அந்த தேர்தலை விளையாட்டு அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கும், மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிப்பதற்கும் ஒரு தற்காலிக குழுவை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சுமா ஷிரூர், இந்திய வுஷூ சங்க தலைவர் பூபேந்திர சிங் பஜ்வா ஆகியோர் கொண்ட தற்காலிக குழுவை ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

    போட்டிகளை யார் நடத்தினாலும் மல்யுத்த கூட்டமைப்புக்கு பிரச்சனையில்லை, வழக்கம்போல் போட்டிகளை நடத்தவேண்டும் என்று மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக் சங்கம் மற்றும் அரசாங்கத்தை பிரிஜ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில் மல்யுத்த கூட்டமைப்பு அதற்கான ஏற்பாட்டை செய்யமுடியும் என்றார்.

    Next Story
    ×