search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கை நதி"

    • இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கங்கை நதியில் நடுப்பகுதிக்கு ஒருவர் படகை எடுத்து செல்கிறார்.
    • தண்ணீருக்குள் காந்தத்தை வீசி கடலுக்குள் கிடக்கும் நாணயங்களை சேகரிக்கிறார்.

    கங்கை நதியில் புனித நீராடும் பொதுமக்கள் பலரும் தங்கள் பொருட்களை கங்கை நதியில் வீசி செல்கின்றனர். சிலர் நாணயங்களை வீசி சென்று விடுகின்றனர்.

    இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கங்கை நதியில் நடுப்பகுதிக்கு ஒருவர் படகை எடுத்து செல்கிறார். பின்னர் தண்ணீருக்குள் காந்தத்தை வீசி கடலுக்குள் கிடக்கும் நாணயங்களை சேகரிக்கிறார். பின்னர் அந்த நாணயங்களை சந்தையில் விற்று தங்கள் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்வதாக அவர் கூறுகிறார்.

    சில நேரங்களில் இவ்வாறு நாணயங்களை சேகரிக்கும் போது தங்கம், வெள்ளி கூட கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படியெல்லாம் கூட பணம் கிடைக்குமா என பதிவிட்டு வருகின்றனர்.

    • கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
    • இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

    நாட்டின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பலமாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மேலும், ஒருநாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் பாக்டீரியா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கங்கை நதியில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஆலைகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்குவங்க அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

    • பதிவை பார்த்த பயனர்கள் பலரும் ஹிரோஷியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • யோகா உடலுக்கும், மனதுக்கும் அற்புதமானது என கூறியுள்ளார்.

    இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசூகி வாரணாசி, ரிஷிகேஷிக்கு சுற்றுப்பயணம் செய்தார். ரிஷிகேஷியில் பல இடங்களுக்கு சென்று அழகை ரசித்த அவர், அங்கு கங்கை நதியில் குளிர்ந்த நீரில் கால்களை நனைத்தபடியும், கைகளை விரித்து நின்று யோகா பயின்ற புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பயிற்சியாளரிடம் இருந்து யோகா கற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது. பயிற்சியாளரின் அறிவுறுத்தல்படி ஹிரோஷி கைகளை நீட்டுவது, வார்ம் அப் செய்வது மற்றும் யோகா பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளது. மேலும் அவர் தனது பதிவில், நான் தற்போது ரிஷிகேஷியில் இருக்கிறேன்.

    இங்கு யோகா கற்கிறேன் என பதிவிட்டுள்ளார். பதிவை பார்த்த பயனர்கள் பலரும் ஹிரோஷியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், பாரதம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான உங்கள் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் சார். யோகா உடலுக்கும், மனதுக்கும் அற்புதமானது என கூறியுள்ளார்.

    • சிவபெருமான் கங்கையின் வேதனையைக் கேட்டு இரக்கப்பட்டார்.
    • மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம் போல சுழன்று கொண்டேதான் இருக்கும்.

    பாவம் செய்த அத்தனைபேரும் குளித்து எழுவதால் அவர்கள் செய்த பாவத்தை எல்லாம் என் மீது சுமத்தி விடுகிறார்கள். இந்த பாவங்களை நான் எவ்வளவு காலம் தான் சுமந்து கொண்டிருப்பது? இந்த பாவங்கள் என்னை விட்டு அகல எனக்கு ஏதாவது விமோசனம் சொல்லுங்கள் என்று ஒருமுறை சிவனிடம் கங்கை கேட்டாள்.

    சிவபெருமான் கங்கையின் வேதனையைக் கேட்டு இரக்கப்பட்டார். பிறகு அவர் உன் மீது பாவம் படிகிறது என்பது என்னவோ உண்மைதான். அது உன்னிடம் நிலையாக இருப்பதில்லை. நீ இமயமலையில் இருந்து புதிய நீரைக் கொண்டு வருகிறாய் ஒவ்வொரு விநாடியும் பழைய நீரைக் கொண்டு சென்று கடலிடம் சேர்ப்பித்து விடுகிறாய். அந்த நீரை கடல்ராஜா பெற்றுக் கொள்கின்றான்.

    அவற்றையெல்லாம் சூரிய பகவான் ஆவியாகக் கொண்டு சென்று வானத்திலே மழை நீர் மேகமாக்கி விடுகிறான். அதனால் பாவங்கள் உன்னிடத்திலோ அல்லது கடலிலோ தங்குவதில்லை. அதேபோல சூரிய பகவானிடமும் இருப்பதில்லை. மேகங்கள் மழையால் பூமியிலே பொழிந்து விடுகின்றன. ஆக அங்கேயும் பாவங்கள் தங்குவதில்லை.

    பூமியில் இருந்து கங்கை வழியாக மேல்நோக்கிச் சென்ற பாவங்கள், மீண்டும் பூமாதேவியிடமே வந்து உன்னிடத்தில் கலக்கின்றன. ஆக மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம் போல சுழன்று கொண்டேதான் இருக்கும். இந்த நிலையில் உன்னை முழுவதுமாக, பரிசுத்தமாக புனிதப்படுத்திக் கொள்வது என்பது மகான்களிடம் தான் உள்ளது. மகான்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருப்பவர்கள். எந்த நேரமும் இறைச்சிந்தனையிலேயே இருப்பவர்கள்.

    அத்தகைய மகான்கள் உன்னுடைய கங்கையிலே வந்து நீராடினால் உன்மீது படிந்திருக்கும் எவ்வளவு பெரிய பாவங்களும் தீயில் போட்ட சருகுகள் எப்படி அந்த நொடியிலேயே பொசுங்கி சாம்பலாகி விடுகிறதோ, அதுபோல மகான்களின் பாதங்கள் பட்ட மாத்திரத்தில் உன் மீதுள்ள பாவங்கள் நாசமாகி விடுகின்றன. உன்னை அவர்கள் புனிதப்படுத்தி விடுகின்றனர். எனவே நீ பயப்பட வேண்டாம் என்றார் சிவபெருமான்.

    அதன்படி இன்றும் ஜமதக்னி, கபிலர், பராசர் வேதவியாசர் போன்ற மாமுனிவர்கள் எல்லாம் தவம் செய்து கங்கையை புனிதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். கங்கை எப்போதும் ஞானிகளையும், மகான்களையும் தேடிக்கொண்டே இருக்கிறாள். சிலசமயம் அவளே ஞானிகளைத் தேடிப்போய், தன் மீது இருக்கும் பாவத்தை போக்கிக் கொள்கிறாள். பண்டரிநாதன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இப்படியொரு நிகழ்ச்சி நடந்து இருப்பதை அறியலாம்.

    கங்கைக்கரையில் வளர்ந்த நாகரிகம், பூஜாகாரியம், பித்ரு சாந்தம் இன்றுவரை தவறாது நடந்து வருகிறது. இந்த கங்கையை நமக்கு அளித்த பகீரதனுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். முதலில் பகீரதனை வணங்க வேண்டும். பிறகு கங்கையை வணங்குதல் வேண்டும்.

    • ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது.
    • நதி மூலம் புரியாத புதிராகவே உள்ளது.

    கங்கை நதி இந்தியர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. தாயாக, கடவுளாக கங்கை நதியை இந்தியர்கள் போற்றுகிறார்கள். வழிபடுகிறார்கள்.

    உலகில் எந்த நாட்டிலும், எந்த நதிக்கும் இப்படி சிறப்பும், பெருமையும் கிடையாது. வட மாநில மக்கள் கங்கை நதியை வெறுமனே கங்கை என்று சொல்வ தில்லை. `கங்கா மாதா' என்றுதான் சொல்வார்கள்.

    ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இமயமலையில் கங்கை எங்கு தோன்றுகிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த நதி மூலம் புரியாத புதிராகவே உள்ளது.

    இமயமலை சாரலில் உருவாகும் கங்கை நதி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாக பாய்ந்து மக்களை வாழ வைத்து, வளப்படுத்தி விட்டு வங்கக்கடலில் கலக்கிறது. இது புவியியல் ரீதியிலான உண்மை. ஆனால் புராணங்கள் மூலம்தான் கங்கையின் சிறப்பு இந்தியர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

    கங்கை நதி தோற்றத்தின் பின்னணியில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இருப்பதாக இந்தியர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் கங்கையை புனித கங்கையாக கும்பிட வைக்கிறது. எனவே புராணத்தில் கூறப்பட்டுள்ள புனித கங்கை வரலாற்றை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வாருங்கள் புனித கங்கை வரலாற்றை பார்க்கலாம்.

    ஒரு தடவை இமய மலையில் சிவபெருமான், மகா விஷ்ணு, பிரம்மா மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மகாவிஷ்ணு தனது இனிமையான குரலால் ராகம் போட்டு பாடத்தொடங்கினார். கேட்பவர்களை எல்லாம் அந்த பாடல் மதிமயங்கச் செய்யும் வகையில் இருந்தது.

    சிவபெருமானோ விஷ்ணுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்தார். ஒரு கட்டத்தில் உருகிப் போய்விட்டார். அதாவது உண்மையிலேயே கருணை வெள்ளமாக உருகி விட்டார்.

    இதைக்கண்ட பிரம்மா 'சட்டென்று ஒரு காரியம் செய்தார். சிவபெருமான் கருணை வெள்ளமாக மாறி இருந்ததை தடுத்து, அந்த தண்ணீர் முழுவதையும் தனது கமண்டலத்தில் அடைத்துக் கொண்டார்.

    அதாவது சிவனின் அம்சமாக அந்த கருணை வெள்ளம் இருந்தது. இந்த நிகழ்வு நடந்த சில தினங்களில் பூலோகத்தில் மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து அங்கு வந்து மூன்றடி நிலம் வேண்டும் என்று தானம் கேட்டார்.

    குள்ளராக இருந்த வாமனரை புரிந்து கொள்ளாமல் மகாபலி சக்கரவர்த்தியும் மூன்று அடிதானே, எடுத்துக்கொள் என்றார். அடுத்த வினாடி வாமனர் வளர்ந்து விண் உலகையே ஒரு காலால் அளந்து விட்டார். இதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் குள்ள வாமனராக வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.

    அப்போது அங்கு இருந்த பிரம்மா சமயோசிதமாக ஒரு செயலை செய்தார். தனது கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த ஈசனின் கருணை வெள்ளத்தை எடுத்து விஷ்ணுக்கு அபிஷேகம் செய்தார். அந்த கருணை வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.

    தேவர்களும், முனிவர்களும் இதற்காகவே காத்திருந்தது போல மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். மேல் உலகில் ஓடிய அந்த ஆற்றுத் தண்ணீரை தங்கள் தாகம் தீர்க்க வந்த புனித பெண்ணாக கருதினார்கள். எனவே அவர்கள் அதை `மந்தாகினி' என்று அழைத்து போற்றிக் கொண்டாடினார்கள்.

    ஆகாயத்தில் மட்டுமே ஓடியதால் அதை ஆகாய கங்கை என்று மற்றவர்கள் அழைத்தனர். இந்த ஆகாய கங்கை பின்னர் பூமிக்கு வந்தது, கங்கை எப்படி பூமிக்கு வந்தது என்பதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு கூறப்படுகிறது.

    சிவன், விஷ்ணு, பிரம்மா மும்மூர்த்திகளால் உருவான ஆகாய கங்கை விண்ணில் தேவர்களுக்கு தாகம் தீர்த்து வந்த காலத்தில் பூமியில் பகீரதன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். எல்லா செல்வங்களும் இருந்தும் அவனுக்கு குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தது. எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் குழந்தை பாக்கியம் அவனுக்கு தாமதமாகிக் கொண்டே இருந்தது.

    இறுதியில் பித்ரு தோஷம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டு இருப்பதை அறிந்தான். பித்ருக்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் பித்ருக்கள் ஆத்மா சாந்தி அடையும். அதன் பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று முனிவர்கள் கூறினார்கள். உடனே கங்கா தேவியை நோக்கி பகீரதன் தவம் இருக்க தொடங்கி விட்டான்.

    அவன் முன்பு தோன்றிய கங்கை என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள்? அதற்கு பகீரதன், "தாங்கள் வானத்தில் ஓடாமல் பூமியில் தரையில் இறங்கி ஓட வேண்டும். அப்போதுதான் எனது மூதாதையர்களின் அஸ்தியை கரைத்து நான் பலன் பெற முடியும்" என்று கூறினான். இதை கங்கை ஏற்றுக்கொண்டாள்.

    அதே சமயத்தில் அவள் ஒரு நிபந்தனையையும் விதித்தாள். அவள் கூறுகையில், "நான் பூமியில் இறங்கி ஓட தயாராக இருக்கிறேன்.

    ஆனால் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் போது எனது வேகம் வலிமையானதாக இருக்கும். பூமியால் அதை தாங்கி கொள்ள இயலாது. யாராவது ஒருவர் அதை தாங்கி இறக்கி விட்டால் பூமிக்கு வருவதற்கு உதவியாக இருக்கும்" என்றாள்.

    உடனே பகீரதன் கங்கை பூமியில் இறங்கும் போது தாங்கும் சக்தி யாருக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்தான். அப்போது முனிவர்கள் கங்கையை தாங்கும் சக்தி சிவபெருமானுக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிவபெருமானை நோக்கி பகீரதன் தவம் இருந்தான். அவன் முன் சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு பகீரதன் இதுவரை நடந்தவற்றையெல்லாம் விளக்கமாக சொல்லிவிட்டு, "கங்கையை தாங்கும் சக்தி உங்களிடம்தான் உள்ளது. எனவே எனக்காக கங்கை நதி பூலோகம் வருவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்" என்று சொன்னான். அதை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார்.

    அதன்படி கங்கையை தனது தலைமுடியை விரித்து சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் சிவன் தலை முடியில் கங்கை நிரந்தரமாக குடியேறிவிட்டாள். அங்கிருந்து அவள் பூலோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பகீரதனின் திட்டப்படி பாகீரதியாகப் பெருகி, ஏறக்குறைய 1,600 மைல் ஓடி, கங்கா இறுதியில் கடலில் கலக்கிறாள். பாயும் இடங்களுக்கெல்லாம் புனிதம் கூட்டிப் பசுமைப்புரட்சியும் செய்கிறாள்.

    கங்கை எங்கு உற்பத்தியாகிறாள் என்பது தான் இன்னும் புரியாப் புதிராக இருக்கிறது. என்றாலும் பகீரதனின் முயற்சி வியக்க வைக்கிறது.

    இமயமலைச் சாரலிலே ஏறக்குறைய 14 ஆயிரம் அடி உயரத்திலே ஒரு குகை. இதன் வாய் பசுவின் வாய் போல் இருப் பதால் கோமுகி என்று பெயர். இதிலிருந்து கங்கை வெளிப்படு கிறாள். இப்பகுதி கங்கோத்ரி எனப்படுகிறது.

    கங்கோத்ரியில் கங்கை அம்மனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. இதை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். இக்கோவிலில் கங்கையைத் தவிர, புவிக்குக் கங்கையைக் கொண்டு வந்த பகீரதன், பின்னால் கங்கையோடு இணைந்து திரிவேணி என்று புகழ் சேர்க்கப்போகும் யமுனை, சரஸ்வதி, இக்கோவிலுக்குக் காரணபூதரான ஆதிசங்கரர் ஆகியவர்கள் சிலா வடிவம் கொண்டுள்ளனர். கங்கையின் உற்சவ விக்ரகம் பொன்னால் ஆனது. இந்த ஆலயத்துக்கு அருகிலேயே பைரவருக்கும் ஓர் ஆலயம் உண்டு.

    நவம்பர் முதல் மே வரை உறைபனி காலமாக இருக்கும். ஆதலால் கோவிலை மூடி விடுவார்கள். அகண்ட தீபம் ஒன்றில் நெய்யிட்டு ஏற்றிவைத்து விட்டு, உற்சவ விக்ரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி விடுவார்கள். அட்சய திருதியை அன்று மீண்டும் ஆலயம் திறக்கப்படும். அப்போதும் நெய் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். ஒளிமயமான இறைவன் தன்னொளி காட்டும் விந்தை இது.

    இங்கு பல தீர்த்தங்கள் உள்ளன. அவை சூரிய குண்டம், விஷ்ணு குண்டம், கவுரி குண்டம் என்று வழங்குகின்றன. சூரிய குண்டத்தில் ஒரு பாறை தானாகவே சிவலிங்க வடிவம் கொண்டுள்ளது. கங்கையும் அருவியாக விழுந்து அதை நீராட்டுகிறாள்.

    வழியிலே சரஸ்வதியும் அலகநந்தாவும் சங்கமமாகும் இடம் கேசவப் பிரயாகை என்றும், நந்தாவும் அலக நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ணப் பிரயாகை என்றும், அலக நந்தாவும் மந்தா கினியும் சந்திக்கும் இடம் ருத்ரப்பிரயாகை என்றும் பெயர் பூண்டு, புகழ் கூட்டும் தீர்த்தத் தலங்களாக விளங்குகின்றன.

    கங்கை பூமியைத் தொட்டும் தொடாமலும் துள்ளிப்பாய்ந்து வரும் இடம் ரிஷிகேசம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 500 அடி அகலத்துக்குச் சுழித்துக் கொண்டு ஓடும் கங்கையில் நீராட வேண்டும் என்று ஆசைப்பட்டால், படிகளில் உட்கார்ந்து ஜாக்கிரதையாக ஸ்நானம் செய்ய வேண்டும். நீரின் இழுப்புக்குத் தாக்குப் பிடிப்பது அவ்வளவு சிரமம். தண்ணீரின் சில்லிப்புக்கு ஐஸ் தோற்று விடும். கோடையில் குளித்து எழுந்தால், இதமாக இருக்கும்.

    இயற்கைச் சூழலிலே, ஆற்று ஓரத்திலே சிவானந்தர் நிறுவிய சிவானந்த ஆசிரமம், சுவர்க்காசிரமம், ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் நிறுவிய சங்கர மடம், ஸ்ரீ சிதானந்தர் நிறுவிய கீதா பவனம் போன்றவை இருக்கின்றன. எதிரும் புதிருமாக உள்ள சிவானந்த ஆசிரமத்துக்கும் கீதாபவனுக்கும் போக அதாவது இக்கரை - அக்கரை போகப் படகுவசதியும் பாலவசதியும் உண்டு.

    காலார நடந்து இக்கரை-அக்கரை போக வேண்டும் என்றால் ஒரு தொங்கு பாலமும் இருக்கிறது. இதற்கு லட்சுமண ஜூலா என்று அழகான பெயர் வைத்திருக்கிறார்கள்.

    கங்கோத்ரியில் இருந்து 365 மைல் உள்ள ரிஷிகேசம் டெல்லியில் இருந்து 150 மைல்களுக்குள்ளேயே இருக்கிறது. ரிஷிகேசத்தில் இருந்து 14 மைல் இறங்கிவந்தால் ஹரித்துவாரம் நகரை அடையலாம். நடந்து வந்தாலும் வாகனத்தில் வந்தாலும் கங்கையும் நம்மோடு துணை வருவாள்.

    சப்த புரிகளில் ஒன்றான மாயாபுரியே ஹரித்துவாரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு கங்கையின் இருபுறமும் இருக்கும் கட்டிடங்கள் கட்டங்களாகவும் திகழ்கின்றன. என்றாலும் பிரதான ஸ்நான கட்டம் பிரம்ம குண்டம் தான். இதுவே அக்னி குண்டமெனவும் போற்றப்படுகிறது.

    பகீரதனின் பிரார்த்தனைக்கு இரங்கி ஆகாய கங்கையான மந்தாகினி இறங்கி வந்து விழுந்த முதல் தலமாகையால், இதற்குக் கங்காத்வாரம், கங்கா முகம் என்ற பெயர்களும் உண்டு.

    இங்கே கங்கைக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று ஒரு குன்றின் மேல், இன்னொன்று ஸ்கான கட்டத்தில். 'ஹர் கீ பவுடி'யில் விஷ்ணுபாத தரிசனம் விசேஷம். இங்கே மாலை ஆரத்தி சிறப்பாக நடைபெறுகிறது. தீப ஆரத்தியைத் தொடர்ந்து பக்தர்கள் நெய் விளக்கேற்றிக் கங்கையில் மிதக்க விடுவார்கள். இந்த தீப அலங்கரத்தில் கங்கையின் ஜொலிப்பைக் காணக் கண்கோடி பற்றாது.

    கும்பமேளா தலங்களில் ஹரித்துவாரமும் ஒன்று, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த கும்ப மேளாவின் பொழுது, இங்கு நீராடினால், லட்சம் முறை பூமியை பிரதட்சணம் செய்த பலன் கிடைக்குமாம். கங்கை மண்ணுலகுக்கு வந்த நாளை 'கங்கா சப்தமி' என்று இங்கே கொண்டாடுகிறார்கள்.

    அமைதியையும் ஆத்மானந்தத்தையும் நாடி இங்கு வதியும் அறவோர்களும் துறவோர்களும் இம்மண்ணின் புனிதத்துக்கு புனிதமேற்றுகின்றனர். சுருங்கச் சொன்னால், ஹரித்துவாரத்தில் துறைகள் தோறும் கோவில்கள், காடுகள் தோறும் தபோவனங்கள்! என்றாலும் சுங்கை பிரகாசிப்பது காசி நகரில்தான்.

    பகவான் வால்மீகி, மகாகவி காளிதாசர், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் 'கங்காஷ்டகம்' இயற்றிக் கங்கையின் ஒளிக்கு மேலும் ஒளி கூட்டி இருக்கின்றனர்.

    மோட்சபுரிகள் ஏழு என்று கணக்கிட்டிருக்கின்றனர் நம் முன்னோர். அவற்றில் நடு நாயகமாக காசி விளங்குகிறது. மற்ற தலங்களில் நல்வினை செய்தோர்க்கு மட்டுமே மோட்சமாம். காசியில் தீவினை செய்தவர்க்கும் மோட்சம் கிட்டுகிறதாம் - இப்படி சனத்குமார சம்ஹிதை கூறுகிறது.

    மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், பத்ம புராணம் ஆகியவை இன்னும் ஒரு படி மேலே போய் மிருகங்களும் பறவைகளும் கூட காசியில் கடைத்தேறுவதாகக் கூறுகின்றன.

    காசியில் மரித்தாலே முக்தி என்றால், காசியில் தானம், ஜபம், தபம், பூஜை போன்ற நல் வினைகளைத் தினையளவு செய்தாலும் பனையளவு பலனை பெறலாம் என்கிறார்கள்.

    முக்தி தரும் தலங்களிலே முத்தாக இருப்பதால்தான், 'காசி காசி, காசி' என்று ஸ்மரித்துத் கொண்டே இருந்தால் முன் வினைகள் இற்றுப் போகும் என்கிறது பிரம்ம வைவர்த்த புராணம்.

    காசி தன்னை முக்தி சதலமாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளவே, இறப்போரின் செவிகளிலே ராமநாமத்தை ஒதத் திருவுள்ளம் கொண்டார். கைலையங்கிரியில் இருந்து காசிக்குக் குடி பெயர்ந்தார்.

    கங்காநதி தன்னை மகாநதி என்று நிரூபிக்க யமுனை, சோண பத்ரை, கோமதி,கண்டகி, கவுசிகி போன்ற புண்ணிய நதிகளைத்தன்னோடு இணைத்துக் கொண்டு செல்கிறாள் ஒரு புறம்.

    இன்னொருபுறம், தான் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து ஹரித்துவாரம் வரை தெற்கு நோக்கி ஓடி, அங்கிருந்து பிரயாகை வரை தென் கிழக்காகப் பாய்ந்து, பிறகு நேர் கிழக்குக்குத் திரும்புகிறாள். காசிக்கு அருகிலே வடக்கு நோக்கி ஓடி உத்தரவாகினி யாகப் புனிதம் கூட்டுகிறாள்.

    இது இரு துருவங்கள் இணையும் முயற்சியாகத் தோன்றுகிறதல்லவா? ஆத்மா. தான் தோன்றிய இடத்துக்கே திரும்ப முயலும் முனைப்பாகவும் படுகிறதல்லவா? எனவேதான் உத்தரவாகினிக்கு அத்தனை சிறப்பு.

    அதோடு காசி கண்டம் தீர்த்தமாம் நதிகளை நான்கு வகை யாகப் பிரிக்கிறது, தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்ற கணக்கில் தானம், தர்மம் செய்வதற்குரிய தீர்த்தமாக மட்டுமே சில தீர்த்தங்கள் உள்ளன. அவை தர்ம தீர்த்தம் எனப்படுகின்றன.

    சில தீர்த்தங்கள் வர்த்தகத்துக்கு மட்டுமே உகந்தவையாக இருக் கின்றன. அவை அர்த்த தீர்த்தம் எனப்படுகின்றன. வேறு சில தீர்த்தங்கள் வாழ்க்கைக்கு இன்பம் கூட்டுவதாக, உல்லாசப் பயணங்கள் போன்றவற்றுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. அவை காமதீர்த்தம் எனப்படும்.

    சில தீர்த்தங்கள் அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம ஞானத்துக்கும் வீடுபேறுக்கும் வழிகாட்டு பவையாகத் திகழ்கின்றன. அவை மோட்ச தீர்த்தம் எனப்படும். கங்கை நதிக்குள்ள சிறப்பு என்ன வென்றால் இந்த நான்கையும் அது தன்னுள் கொண்டதே ஆகும்.

    பல புராதன மூடப் பழக்க வழக்கங்களும், நவநாகரிக வாழ்க்கை முறைகளும் பலவகையாலும் இன்று கங்கையை அசுத்தப்படுத்த முயல்கின்றன. அவற்றின் முயற்சி பலிக்க வில்லை என்று இன்றைய விஞ்ஞானம் ஏற்கிறது.

    கங்கை நீரில் நச்சுக் கிருமிகள் நீடித்து உயிர் வாழ முடியாமல் நசித்துப் போகின்றன வாம். ஏன், எப்படி என்று புரியாமல் வளர்ந்து வரும் விஞ்ஞானமே திகைக்கிறது; மெய்ஞானம் காட்டும் தெய்வ சக்தி கங்கைக்கு உண்டு என்றும் கூறாமல் கூறுகிறது.

    வாரணாசி வட்டத்துக்குள் பிறைச் சந்திர வடிவத்தில் ஓடும் கங்கைக்கு அறுபத்து நான்கு ஸ்நான கட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தற்பெருமையல்ல; தன் பெருமை பேசுகின்றன. இவை தீவிர 98 பலவகைத் தீர்த்தங்கள் இருப்ப தாக அல்லது இருந்திருப்பதாகத் தெரிகிறது. எல்லாத் துறைகளிலும் நீராடுவது விசேஷம்தான். என்றாலும் முக்கியமாக 5 கட்டங்கள் ஸ்கானாத்துக்கும் பித்ருக்களுக்குப் பிண்டம் போடவும் எடுத்தவை. அவற்றில் வைதிக முறைப்படி புரோகிதர் களின் துணை கொண்டு சிரத்தையோடு கடமைகளைச் செய்ய வேண்டும். அது ஆயுளுக்கும் சிரேயஸ் தரும். அதோடு கங்கையில் படகில் பயணம் செய்தபடி அத்தனை துறைகளையும் தரிசனம் செய்யும் பாக்கியத்தையும் பெறலாம்.

    தென்முனையில் உள்ள அசி கங்கா சங்கமம், தசாச்வமேதம் பஞ்சகங்கை, வரணாசங்கமம் என்னும் ஆதிகேசவ கட்டம், மணி கர்ணிகா கட்டம் ஆகியவையே அவை. வடகிழக்கில் உள்ள வரணாசங்கமமே இறுதிக் கட்டம். ஐந்து கட்டங்களிலும் பிண்டம் போட்டுத் திரும்பும் பொழுது படகிலேயே கங்கைக்கு வழிபாடு செய்வது மரபு. கிருதயுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்ர வடிவத்திலும், துவாபரயுகத்தில், தேர் வடிவத்திலும், கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி க்ஷேத்திரம் இருப்பதாகக் காசி ரகசியம் கூறுகிறது.

    காசி விசுவநாதர் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒருவர். இனிப்புக்குப் பெயர் போனது தீபாவளிப் பண்டிகை என்பதை விசுவநாதர் உணர்த்தும் முறையே தனி. இவரது கருவறைக்கு வெளியே உள்ள முன் மண்டபத்தில், ஒரு சிவலிங்கம் தொட்டியினுள் உள்ளது.

    தீபாவளிக்கு மறுநாள் இந்த லிங்கத்தைச் சுற்றி லட்டுக்களால் தேர் உருவாக்குவார்கள். விசுவநாதரின் முன்னேயும் பல வகை இனிப்புப்பண்டங்களை அடுக்கி வைப்பார்கள். நிவேதனம் ஆனபின் பக்தர்களுக்கு வழங்கு வார்கள். அதனால் தீபாவளிக்கும் மேலாக மிட்டாய்த்திருவிழா என்றே இது புகழ் பெற்று விட்டது.

    தீபாவளிக்குப் பின் மூன்றாவது நாள் காசியின் முக்கிய ஆலயங்கள் அனைத்துமே அன்னக் கூடமாகக் காட்சி அளிக்கும். பலவகைத் தின்பண்டங்களும் அன்னமும் மலைபோல் குவிந்து அன்னபூரணியின் ஆட்சிக்குக் கட்டியம் கூறும்.

    விசுவநாதரோடு காசியில் தீபாவளி கொண்டாடுபவர்கள் பாக்கியசாலிகள். வெந்நீரில் குளித்துக் 'கங்கா நீராடல் ஆச்சா?' என்று கேட்காமல் நிஜமாகவே கங்கையில் நீராடும் வாய்ப்பு கிட்டுகிறதல்லவா?

    காசி கண்டம் கூறும் கணக்குப்படி தாமே உண்டான சுயம்புவ லிங்கங்கள் 11, தேவர்கள் ஸ்தாபித்த லிங்கங்கள் 46, ரிஷி முனிகள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் 47, கிரகங்கள் வணங்கிய லிங்கங்கள் 7, கணங்கள் வழிபட்ட லிங்கங்கள் 40, மற்ற பக்தர்கள் நிறுவிய லிங்கங்கள் 295. ஆகமொத்தம் 511. இவற் றைத் தவிர பாரதத்தின் மற்ற புகழ்பெற்ற ஷேத்திரங்களை நினைவு கூரும் லிங்கங்கள் 65 உள்ளன.

    காசிக்கு பிறகு கயா, பாட்னா, கொல்கத்தா வழியாக கங்கை நதி கடலில் கலக்கிறது.

    • மகிமை வாய்ந்த கங்கை அவதாரத்தை கொண்டாடும் திருவிழாவை கங்கா தசரா என்பார்.
    • கங்கையை பகீரதன் வரவழைத்த நாள் வைகாசி மாத வளர்பிறை 10ஆம் நாளில் தான்.

    கங்கை அவதாரத்திருநாள்

    புண்ணியம் தழைக்க செய்வது கங்கை நதி,

    தேவலோகத்தில் மந்தாகினியாகவும், பாதாள உலகில் பாகீரதியாகவும், பூமியில் கங்கா நதியாகவும் ஓடும் இந்த நதியை திரிபாதக என்று போற்றுவார்கள்.

    மகிமை வாய்ந்த கங்கை அவதாரத்தை கொண்டாடும் திருவிழாவை கங்கா தசரா என்பார்.

    மிகவும் கடினமான வேலையை முயற்சியுடன் செய்து சாதிக்கும் செயலுக்கு பகீரதப் பிரயத்தனம் என்பார்கள்.

    கங்கை பூமிக்கு வரக் காரணமே பகீரதன் தான். முன்னோர் செய்த பாவங்கள் விலகி அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பகீரதன் விரும்பினான்.

    அவன் பாட்டன் முயன்று, அதன்பின் தந்தையும் முயற்சி செய்து முடிவில் பகீரதன் அதை முடித்தான்.

    எனவே தான் கடினமான வேலை செய்வதை பகீரத பிரயத்தனம் என்கிறோம்.

    இப்படி கங்கையை பகீரதன் வரவழைத்த நாள் வைகாசி மாத வளர்பிறை 10ஆம் நாளில் தான்.

    அவன் தன் முன்னோரின் பாவங்களை நீக்கிய இந்நாள்பாஹர தசமியாகும்.

    இதையொட்டி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் எல்லாம் கங்கையின் அவதாரத் திருவிழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

    காசி, அகமதாபாத்தில் மக்கள் மேலும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பத்துநாட்கள் நடைபெறும்.

    இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நாளில் புனித கங்கையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கினால் செய்த பாவங்கள் நீங்கும், பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பக்தர்கள் கங்கை நதிக்கரைக்குச் சென்று, "கங்கைத் தாயே" என குரலெழுப்பி மனமார வணங்குகின்றனர்.

    பிரவகிக்கும் கங்கை நீரை கண்ணார தரிசிக்கின்றனர். தொட்டு வணங்கி தலையில் தெளித்துக் கொண்டு கங்கையை போற்றிப் புகழ்ந்தபடி மூழ்கிக் குளிக்கின்றனர்.

    நதியிலேயே நின்று பூஜிக்கின்றனர். நீரில் அர்க்கியம் விடுகின்றனர். அதன்பின் நீரில் அடியில் உள்ள மண்ணை எடுத்து வணங்குகின்றனர்.

    மாலையில் நதி ஓரம் முழுவதும் ஆலய அர்ச்சகர்கள் அடுக்கு தீபத்தை கங்கைக்கு காட்டி பூஜிப்பார்கள்.

    நதி ஓர கடைகளில் இலையால் செய்த சிறுபடகில் விளக்கு வைத்து பூ வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி பக்தர்கள் ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.

    நதி நீரில் முதலை முதுகில் வெண்தாமரை அம்மலர் மீது வெண்ணிற ஆடையுடுத்திய கங்காதேவி கையில் தாமரை நீர்க்குடம் ஏந்தி இருகைகள் அபயவரத ஹஸ்தமாக புன்னகையுடன் அமர்ந்து காட்சி தருகின்றாள்.

    தலைகிரீடத்தில் பிறை சந்திரனைக் காணலாம். கங்கை நதிக்கரைக்குச் செல்ல இயலாதவர்கள் மேற்சொன்ன கங்கையின் திருவுருவைமனதில் உருவகப்படுத்தி, கங்கையின் திருநாமம் கூறிக்கொண்டு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதை "கங்கை ஜமாக" என்று பூஜித்து வணங்கினால் கங்கை நதிக்கரையில் பூஜித்த பலன் கிடைக்கும்.

    • ஒரு முதலை அங்கித்தை கடித்து இழுத்து சென்று கொன்றது.
    • சிறிது நேரத்திற்கு பிறகு அங்கித்தின் உடலை வெளியே எடுத்தோம்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தியாரா பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர் அங்கித்குமார்.

    இவரது குடும்பத்தினர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளுக்கு கங்கா நதிநீர் மூலம் பூஜை செய்வதற்காகவும், கங்கை நதியில் நீராடவும் அவர்கள் ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது முதலை ஒன்று மாணவர் அங்கித் மீது பாய்ந்து அவரை தாக்கி கடலுக்குள் இழுத்து சென்று கடித்து உயிரோடு சாப்பிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கடற்கரையையொட்டி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மாணவர் அங்கித்தின் உடல் கரை ஒதுங்கியது.

    உடலை பார்த்து அங்கித்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் முதலை மீது ஆத்திரம் கொண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கடலில் சுற்றிய முதலையை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அதனை கம்பு மற்றும் குச்சிகளால் சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் முதலை இறந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சம்பவம் குறித்து அங்கித்தின் தாத்தா சகல்தீப்தாஸ் கூறுகையில், நாங்கள் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி அதற்கு பூஜை செய்வதற்காக கங்கை நதிக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு முதலை அங்கித்தை கடித்து இழுத்து சென்று கொன்றது. சிறிது நேரத்திற்கு பிறகு அங்கித்தின் உடலை வெளியே எடுத்தோம். ஒரு மணி நேரம் கழித்து முதலையையும் வெளியே இழுத்து அடித்து கொன்றோம் என்றார்.

    • பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
    • தடையை மீறி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள். அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர்.

    அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் இன்று மாலையில் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் வந்து சேர்ந்தனர். சாக்சி மாலிக், வினேக் போகத், பஜ்ரங் புனியா மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் அங்கு வந்து சேர்ந்தனர். ஆற்றங்கரையில் மனமுடைந்து தரையில் அமர்ந்தனர். அப்போது சிலர் வேதனை தாங்காமல் அழுதுவிட்டனர். அவர்களை சக வீரர், வீராங்கனைகள் தேற்றினர். உள்ளூர் மக்களும் அங்கு வந்து ஆறுதல் கூறினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

    கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியுள்ளது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித், இன்று பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறி உள்ளார். அத்துடன் பதக்கங்களை வாங்கிச்சென்றார். இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.

    மேலும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர். 5 நாட்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இன்று பிற்பகல் முதல் மாலை வரை நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.
    • அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    இதனையடுத்து பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவெடுத்துள்ளனர்.

    மேலும் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும்.
    • ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கெட்டு நாறாமல் இருக்கிறது கங்கை!

    கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீருக்கு கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க முடியவில்லை - சில விஷயங்கள் நிரூபிக்க முடியாதவைதாம். கங்கையில் ஓர் ரசவாதம் ஏற்படுகிறது. நான் சொல்லி வருவதில் பல விஷயங்களை நிரூபிப்பது கடினம்.

    கங்கை சாதாரண நதி அன்று. அந்த நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. அதனால்தான் கங்கைக் கரையில் அத்தனை புண்ணியத் தலங்கள். கங்கை நதி நீர் முற்றிலும் வேறுபட்டது என்பதை ரசவாதிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    மற்ற நதி நீரைச் சேமித்து வைத்தால் கெட்டுவிடும்; கங்கை நீர் கெடாது! பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால், மற்ற ஆற்று நீர் சில வாரங்களிலேயே நாறிவிடும்.

    ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும். ஆனால் ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கெட்டு நாறாமல் இருக்கிறது கங்கை! இன்னொரு வியப்பான அம்சம். சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. மிச்சம் மீதியே இருப்பதில்லை! தனக்குள் போடப்படும் எல்லாவற்றையும் கரைத்து, அதன் ஆதிமூல, மூலக நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. சவங்கள் எந்த முறையிலும் பூரணமாக அழிய பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், கங்கையில் விரைவில் கரைந்து விடுகின்றன. அப்படியொரு ரசவாதம். கங்கை இதற்காகவே படைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

    மற்ற ஆறுகள் பாய்வது போல், கங்கை மலையிலிருந்து பாய்வதில்லை. அது பாயும்படியாகச் செய்யப்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல.

    கங்கையின் பிறப்பிடம் 'கங்கோத்ரி' என்ற மிகச் சிறிய சுனை. ஆனால், உண்மையான பிறப்பிடம் அதுவன்று! அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது! இப்போதுள்ள இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. மக்கள் இதைத்தான் சென்று கண்டு வழிபட்டுத் திரும்புகிறார்கள். உண்மையான கங்கைப் பிறப்பிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது!

    சாதாரண முறையில் அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை. சூட்சும சரீரம் கொண்டே அங்கே செல்ல முடியும். நமது பருவுடல் கொண்டு பயணம் செய்ய முடியாது.

    கங்கையில் நீராடியவுடனே உடலில் உள்ள நீர் மாற்றம் அடைகிறது. ஆனால், அந்த மாற்றம் சற்று நேரம்தான் நீடிக்கும். சரியான முறைப்படி சோதனை செய்தால் ஆன்ம பயணம் ஆரம்பமாகிவிடும். கங்கையில் நீராடிய பின், கோவிலுக்குச் சென்று, வந்தனை வழிபாடுகள் செய்வதெல்லாம், அகத்தின் ஆன்மப் பயணத்திற்குப் புறத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான்.

    -ஓஷோ

    ×