search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medals"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    • அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
    • சாதனை படைத்த வீரர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    புதுச்சேரி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ரான்ஜி மாவட்டத்தில் உள்ள தானா சர்வதேச உள்விளையாட்டரங்கத்தில் தேசிய அளவிலான சிறுவர் சிறுமிகள் மற்றும் கேடட் ஆகிய எடை பிரிவிகளில் கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இதில் புதுவை மாநில கிக் பாக்ஸிங் சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் இளங்கோவன் தலைமையில் வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

    இதில் புதுவையை சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த வீரர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இவர்களுடன் புதுவை மாநில அனைத்து விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சேர்மன் திருவேங்கடம், இந்தியா விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர், முத்து கேசவலு, பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், மாநில அனைத்து விளையாட்டு வீரர்களின் நல சங்கத்தின் கவுரத் தலைவர் ஆளவந்தான், தேசிய பயிற்சியாளர்கள் அமிர்தராஜ், மோகன், பிரவீன் குமார், அய்யனார், விநாயகம், ராஜ்குமார், செபஸ்தியன், ராகுல், அபிலாஷ், முகேஷ்லிங்கம், மோகன சந்துரு, அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.
    • அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    இதனையடுத்து பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவெடுத்துள்ளனர்.

    மேலும் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

    • நாகை மாவட்டத்தில் பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நடை பெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நிறுவனர் முத்துக்குமரன் தலைமையில் நடந்தது.

    இதில், வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க தலைவர் அருள்ராஜ், பொதுச்செயலாளர் மதன்குமார் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

    திருவாரூர் மாவட்ட வில்வித்தை பயிற்சியாளர்கள் கார்த்தி மற்றும் வெற்றிவேல், நாகை மாவட்ட வில்வித்தை சங்க துணைத்தலைவர் குமரகுருபரன், பொரு ளாளர் ஸ்ரீராம், பயிற்சியாளர்கள் வீர ராகுல், லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    முடிவில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

    • இந்தியா 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
    • இதன்மூலம் பதக்க பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

    இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

    ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    • 29 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் ஜூடோ சங்கம் சார்பில் காரியாபட்டி தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மினி சப் ஜூனியர் சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் மினி ஜூனியர் பிரிவில் மேலூர் ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ருகினா, லத்யஸ்ரீ, சந்தோஷ், ரஞ்சன், தயாநிதி ஆகியோர் தங்கப்பதக்கமும், ரோஹித், நிஷா, சோபியா ஆகியோர் வெள்ளி பதக்கமும் பெற்றனர். யோசினி ஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    சப் ஜூனியர் பிரிவில் கோபிகாஸ்ரீ, ஜனனி, நிஷா, நகுல், கஜேஸ்வரன், ஹரிஷ், மதுரேஸ், நிதிஷ்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர். கேடட் பிரிவில் அர்ச்சனாதேவி, பவித்ரன் ஆகியோர் தங்கம் வென்றனர்.

    ஜூனியர் பிரிவில் முரளி கிருஷ்ணன் தங்கப் பதக்கமும், சந்துரு வெள்ளி பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்றனர்.சீனியர் பிரிவில் தமிழ் தேவா தங்கப்பதக்கமும்,

    மினி சப் ஜூனியர் பிரிவில் மேலூர் சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவர் போதிஸ்வரன் தங்கம் பெற்றார். கேடட் பிரிவில் மதுரை சேதுபதி பள்ளி மாணவன் சுதேசன் தங்கம் வென்றான். கேடட் பிரிவில் தனியாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் வெண்கல பதக்கமும், கேடட் பிரிவில் மேலூர் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவன் அகிலா வெள்ளி பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மதுரை மாவட்ட ஜூடோ சங்கத் தலைவர் சாலுமான், செயலாளர் புஷ்பநாதன், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    2019-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட விளாத்திகுளத்தில் 22 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் உட்கோட்டத்தில்  டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியில், கடந்த 2019-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

    இந்த வாராந்திர கவாத்து பயிற்சியில் விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தத்தாண்டவம், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, விளா த்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 160 பேர் கலந்துகொண்டனர்.

    மேலும் இதில் டி.எஸ்.பி பிரகாஷ் காவலர்களுக்கு பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட துறைசார்ந்த அறிவு ரைகளை வழங்கினார்.
    இந்தோனேஷிய ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. #AsianGames #India
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று டிரையத்லானில் (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகள் அடங்கியது) கலப்பு பிரிவு போட்டி மட்டும் நடக்கிறது. இதில் இந்திய தரப்பில் யாரும் இல்லாததால் நமக்குரிய பதக்க வாய்ப்புகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.



    இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இந்தியா எதிர்பார்க்கப்பட்ட கபடி, ஆக்கியில் ஜொலிக்கவில்லை.



    இருப்பினும் இதுவே இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. சீனாவில் 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்கள் வென்றதே ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அதை விட இப்போது கூடுதலாக 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அத்துடன் 1951-ம் ஆண்டு நடந்த முதலாவது ஆசிய விளையாட்டில் 15 தங்கம் வென்றதே, ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச தங்கவேட்டையாக இருந்தது. அது தற்போது சமன் செய்யப்பட்டு இருக்கிறது.

    வழக்கம் போல் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தை (132 தங்கம் உள்பட 289 பதக்கம்) ஆக்கிரமித்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள்பட 98 பதக்கங்களை அள்ளியுள்ளது. போட்டியையும் வெற்றிகரமாக நடத்தியிருப்பதால் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு உரிமம் கோரப்போவதாக இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாகமாக அறிவித்து இருக்கிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டியின் கோலாகலமான நிறைவு விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறுகிறது. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை, பாடல் உள்ளிட்டவையுடன் பிரமிக்கத்தக்க வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் நிறைவு விழாவை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதையடுத்து இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. #asiangames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நேற்று ஒரேநாளில் 7 பதக்கத்தை பெற்றது. தடகளத்தில் 3 வெள்ளியும், குதிரையேற்றத்தில் 2 வெள்ளியும் கிடைத்தது.

    ‘பிரிட்ஜ்’ ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றது.

    8-வது நாள் முடிவில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 36 பதக்கம் பெற்றுள்ளது.

    மேலும் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியாகி உள்ளது.

    வில்வித்தை பந்தயத்தில் காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் 2 வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.



    இறுதிப்போட்டியில் இந்திய அணிகள் கொரியாவை சந்திக்கிறது. நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. பெண்கள் போட்டி காலை 11.15 மணிக்கும், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டி மதியம் 12.05 மணிக்கும் தொடங்குகிறது.

    பெண்கள் வில்வித்தை அணி கால்இறுதியில் 229-224 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், அரை இறுதியில் 225- 222 என்ற கணக்கில் சீனதைபேயையும் தோற்கடித்தது.

    ஆண்கள் வில்வித்தை அணி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 227-213 என்ற கணக்கில் கத்தாரையும், கால்இறுதியில் 227-226 என்ற கணக்கில் பிலிப்பைன்சையும், அரை இறுதியில் 231-227 என்ற கணக்கில் சீனதைபேயும் வீழ்த்தியது. #asiangames2018
    ×