search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்த வீரர்கள்"

    • பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
    • தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை அவர் பிரதமருக்கு திருப்பி அளித்தார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்கமுடியாது. எனவே மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதேபோல், 2019-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா திருப்பி அளித்தார்.


    இந்நிலையில், அரியானாவில் உள்ள மல்யுத்த வீரரான வீரேந்தர் ஆர்யா அகாரா வீட்டுக்கு ராகுல் காந்தி இன்று சென்றார்.

    அங்கிருந்த மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்திக்கு மல்யுத்தம் செய்வது குறித்து பஜ்ரங் புனியா பயிற்சி அளித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • டெல்லி ஜந்தர் மந்தரில் ஜன 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்தனர்.

    2023 ஜனவரியில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI)தலைவராக இருந்த போது, பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டி இது தொடர்பாக விசாரினை நடத்த வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர்.

    மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜன 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், அன்ஷு மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும்,பெண் மல்யுத்த வீரர்களிடையே ஒரு பயம் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல ஆண்டுகளாக வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேற்பார்வைக் குழுவை ஒன்றை அமைப்பதாக அரசு உறுதியளித்தது. அரசு நியமித்த குழுவில் விசாரணைக்கு ஆஜரான பூஷன் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

     


    ஜன 21, 2023 அன்று மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்ததுடன் சட்டப்பூர்வ வழிகளில் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்கள். பூஷன் பா.ஜ.க.-வைச் சேர்ந்தவர், ஆளும் கட்சியைச் சேர்ந்த பூஷனை பாதுகாக்க அரசு முயற்சிப்பதாக பல அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. பூஷனுக்கு எதிரான குற்ற சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு அரசு அழுத்தம் கொடுப்பதாக எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்ததாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டனர்.

    அதன்பின், மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்த பிறகு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அதன் தேர்தல் தேதியை மே 7 என்று அறிவித்தது. எனினும் அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. மல்யுத்த வீரர்கள், அதிகாரிகளின் செயலற்ற தன்மையைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2023 இல் தங்கள் எதிர்ப்பைத் மீண்டும் தொடர்ந்தனர்.

     


    டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பூஷண் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய இந்திய சட்டம் கட்டாயப்படுத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பூஷண் மீது POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பூஷன் நார்கோ தேர்வை மேற்கொள்ள வேண்டும் என்று வீரர்கள் விலியுறுத்தினர்.

    பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களும் மற்ற போராட்டக்காரர்களும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அனைத்து மல்யுத்த வீரர்களும் அந்நாளின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மற்றும் யுனைடெட் வேர்ல்டு மல்யுத்தம் (UWW) மல்யுத்த வீரர்களை காவல்துறை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தன. அதன்பின் பூஷனுக்கு எதிராக போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாததால் யுனைடெட் வேர்ல்டு மல்யுத்தம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது. அதனால் தேர்தலை டிசம்பர் 21 அன்று நடத்த திட்டமிடப்படது.

    இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பூஷனின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் போட்டியிடக் கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருக்கமான நண்பரான சஞ்சய் சிங் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்தார்.

     


    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரனுடன் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரரான சாக்ஷி மாலிக் மல்யுத்ததை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். நாட்டுக்காக பதக்கத்தை வென்று கொடுத்து பெருமைப்படுத்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், சாதாரணப் பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்"என்று வருத்ததுடன் கூறினார்.

    புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்தெடுக்கப்பட்டதால் பெண் வீராங்கனைக்கு தொடர்ந்து இந்த மாதிரியான அநியாயங்கள் நடக்கும், மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளில் இருக்கிறது. நாங்கள் இன்னும் போராடுவோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார் மற்றொரு வீராங்கனையான வினேஷ் போகத்.

    • ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    • பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ஹிட் ஆகி ஆஸ்கர் விருதையும் வென்றது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்த இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என பலரும் 'ரீல்ஸ்' நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் முதல் முறையாக நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற 'டபிள்யூ.டபிள்யூ.ஈ.' போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் ட்ரூ மிக்கின்டைர், ஜிண்டர்மகால், சாமிஜெயின், கெவின் ஓவன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி நடந்த மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இதைப்பார்த்த பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

    • நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும்.
    • செல்வி போகட் மற்றும் திருமதி மாலிக் ஆகியோர் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

    இந்நிலையில், "இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும், ஆனால் அது (போராட்டம்) நீதிமன்றத்தில் இருக்கும், சாலையில் அல்ல.

    மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சீர்திருத்தம் குறித்து, வாக்குறுதி அளித்தபடி, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் காத்திருப்போம்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த பதிவு வெளியிட்ட சில நிமிடங்களில், செல்வி போகட் மற்றும் மாலிக் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக டுவீட் செய்துள்ளனர்.

    • பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் இருக்கிறார். பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    இவர்கள் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 28ம் தேதி புதிய பாராளுமன்றம் நோக்கி பேணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

    இதனால் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அவர்கள் அறிவித்தனர். விவசாயிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.

    பல்வேறு தரப்பில் இருந்து மல்யுத்த நட்சத்திரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

    • பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு
    • வீரர்- வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் இருக்கிறார். பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படாததால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கொதித்தனர்.

    கடந்த 28-ந் தேதி புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அத்து மீறியதாக கூறி போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.

    இதனால் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். விவசாயிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். பல்வேறு தரப்பில் இருந்து மல்யுத்த நட்சத்திரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் ஷாக்ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு 11 மணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.

    பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

    இந்த சந்திப்புக்கு பிறகு பஜ்ரங் புனியா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    "பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரினோம். அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அமித்ஷா எங்களிடம் உறுதியளித்தார். சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் எங்களிடம் தெரிவித்தார்" என்றார்.

    • மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
    • மல்யுத்த வீரர்களின் பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளதால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் அறிவித்தனர்.

    பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால் ஜூன் 9-ந்தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    அரியானாவில் குருஷேத்திரத்தில் விவசாய சங்கங்களின் மகாபஞ்சாயத்து நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது:-

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களது குறைகளை தீர்க்க வேண்டும். இந்த விஷயத்தை தீர்க்க அரசாங்கத்திற்கு ஜூன் 9-ந்தேதி வரை அவகாசம் அளிக்கிறோம்.

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் அல்லது ஜூன் 9-ந்தேதி முதல் போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால் மல்யுத்த வீரர்களுடன் 9-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்று போராட்டத்தை தொடங்குவோம். நாடு முழுவதும் மகா பஞ்சாயத்துக்கள் நடத்தப்படும்.

    மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மல்யுத்த வீரர்களின் பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளதால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
    • "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி பானர்ஜி பங்கேற்றார்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார். கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹஸ்ரா சாலையில் இருந்து ரவீந்திர சதன் வரை நடைபெற்ற பேரணியில் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி, பானர்ஜி பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் மல்யுத்த வீரர்களால் நாங்கள் பெருமைக்கொள்கிறோம். மல்யுத்த வீரர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இது உலகளவில் நாட்டின் நற்பெயரைக் கெடுத்துவிட்டது. எனது ஒற்றுமை அவர்களுடன் உள்ளது. அவர்களின் போராட்டத்தை தொடரச் சொன்னேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
    • தடையை மீறி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள். அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர்.

    அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் இன்று மாலையில் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் வந்து சேர்ந்தனர். சாக்சி மாலிக், வினேக் போகத், பஜ்ரங் புனியா மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் அங்கு வந்து சேர்ந்தனர். ஆற்றங்கரையில் மனமுடைந்து தரையில் அமர்ந்தனர். அப்போது சிலர் வேதனை தாங்காமல் அழுதுவிட்டனர். அவர்களை சக வீரர், வீராங்கனைகள் தேற்றினர். உள்ளூர் மக்களும் அங்கு வந்து ஆறுதல் கூறினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

    கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியுள்ளது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித், இன்று பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறி உள்ளார். அத்துடன் பதக்கங்களை வாங்கிச்சென்றார். இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.

    மேலும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர். 5 நாட்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இன்று பிற்பகல் முதல் மாலை வரை நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.
    • அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    இதனையடுத்து பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவெடுத்துள்ளனர்.

    மேலும் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கலவரத்தை ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 109 போராட்டக்காரர்கள் உள்பட 700 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூசன் சரண்சிங் உள்ளார்.

    இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர் மீது போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போதிலும் அவரை கைது செய்யக் கோரி போராட்டம் தொடர்கிறது.

    இந்த நிலையில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று பாராளுமன்ற கட்டிடம் முன்பு போராட்டம் நடத்த ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர்.

    தடுப்புகளை அகற்றி விட்டு வீரர், வீராங்கனைகள் செல்ல முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வீராங்கனைகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பஜ்ரங்புனியா, வினேஷ் போகட், அவரது சகோதரி சங்கீதா போகட், சாக்ஷி மாலிக் ஆகிய பிரபல மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதில் வினேஷ் போகட்டை மற்றும் விடுவித்தனர்.

    மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகளும் போராட்டத்தில் குதித்தனர். புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு எதிரே போராட்டத்துக்காக புறப்பட்ட அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 109 போராட்டக்காரர்கள் உள்பட 700 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.


    இந்த நிலையில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், சங்கீதா போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கலவரத்தை ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் ஆவார்கள்.

    பஜ்ரங் புனியா 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், ஒரு வெண்கல பதக்கங்களும் பெற்றுள்ளார். மேலும் ஆசி விளையாட்டு, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று முத்திரை பதித்துள்ளார்.

    30 வயதான சாக்ஷி மாலிக் 2016 பிரேசில் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றார். காமன் வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று இருந்தார். 28 வயதான வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு மற்றும் காமன் வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முத்திரை பதித்துள்ளார். சங்கீதா போகத் தேசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

    இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பிறகு ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கி இருந்த கூடாரத்தை டெல்லி போலீசார் முற்றிலும் அகற்றினர். கட்டில், மெத்தை, மின் விசிறி, ஏர்கூலர், தார்பாய்களை ஆகியவற்றை அங்கிருந்து அகற்றினர்.

    சில மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தருக்கு திரும்பினார்கள். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மல்யுத்த வீரர், வீராங்களைகள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினரும், விளை யாட்டு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மல்யுத்த வீரர்கள் சட்டம் ஒழுங்கை மீறியதாக போலீசார் கைது செய்தனர்.

    மும்பை :

    இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் முன்னாள் தலைவர் பிரிஷ் பூஷன் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை போலீசார் சட்டம் ஒழுங்கை மீறியதாக கைது செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகம் தான் வீரர்கள் மீது இந்த அத்துமீறலை மேற்கொள்ள அனுமதி வழங்கியதா?. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்படி இழிவாக நடத்தப்படுவதை கண்டு நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். விளையாட்டுகளின் மூலம் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் நீதிக்காக இதுபோன்ற போராட்டங்களை நடத்த நிர்ப்பந்திக்கப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. அனைவராலும் பாராட்டப்பட்ட வெற்றியாளர்கள் திடீரென தங்களுக்கு நீதி கேட்கும்போது வில்லன்களாகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறுகையில், "மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அவர்களே, எங்கள் பெண் மல்யுத்த வீரர்கள், அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பாருங்கள். நீங்கள் இந்தியாவின் பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி, இவர்களை பாதுகாப்பதும், அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதும் உங்களின் கடமையல்லவா. இதை விட்டுவிட்டு ராகுல் காந்தி தொடர்பான பிரச்சினைகளில் மட்டுமே நீங்கள் பேசுவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×