search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Care"

    • இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன.
    • தொடுகை கல்வியை சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. எந்த வயது குழந்தைகளையும் பலாத்காரம் செய்து, அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்க, பலர் சமூகத்தில் சுற்றித் திரிகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. எனவே, இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, பாலியல் கல்வியை குறிப்பாக, தொடுகை கல்வியை நாம் சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பாலர் வகுப்பு என்கிற போது, சுமார் ஏழு, எட்டு வயதில் இருந்தே நாம் இவற்றை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம். தெளிவாக சொல்வதானால், ஒரு பிள்ளைக்கு எப்போது சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்போது இருந்தே பாலியல் கல்வியை சொல்லிக்கொடுக்கலாம்.

    பாலியல் கல்வி என்பது அறுவறுக்க தக்கதல்ல... உடல் உறுப்புகளை இனங்காட்டுவது, உறுப்புகளின் முக்கியத்துவங்களை பற்றி எடுத்துரைப்பது, தொடுகை பற்றி கற்பிப்பது முதலிய அம்சங்கள் இதில் உள்ளன.

    நாம் கற்பிக்கும் பாலியல் கல்வியை குழந்தைகளால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியுமா, அதற்கு அவர்களின் மனநிலை பக்குவப்பட்டிருக்குமா என்கிற சந்தேகங்கள் பலர் மத்தியில் காணப்படுகின்றன.

    தொடுகை பற்றி அறியாத, கேள்விப்படாத ஒரு குழந்தையை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனில், தனக்கு நேர்வது தவறு என்பதை அந்த குழந்தையால் உணர முடியாது. எனவே குழந்தைகளுக்கு புரியும் அளவுக்கு நாம் தொடுகை குறித்து கற்பிக்க வேண்டும்.

    சில குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி காணப்பட்டாலும், மனதளவில், குழந்தைத்தனம் மிக்கவர்களாகவே இருப்பர். அந்த குழந்தைகள் நாம் சொல்லும் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாகவே கருதுவார்கள். அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

    ஆகவே, பெற்றோர் அல்லது ஆசிரியர் சொல்வதை கேட்டு, புரிந்துகொள்ளும் இயல்புநிலைக்கு குழந்தைகள் வரவேண்டும். அப்போது தான், நாம் சொல்லும் எதையும் குழந்தைகளால் சிந்தித்து செயல்பட முடியும்.

    மேலும், இன்றைய புள்ளிவிவரப்படி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிறுவர்களில் அதிகமானோர் மனநலம் குன்றியவர்களும், மாற்றுத் திறனாளிகளுமே என்பது தெரியவந்துள்ளது. புத்தி சுவாதீனம் உள்ள குழந்தைகளுக்கே பாலியல் கல்வியை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கிறதென்றால், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அதை எப்படி நம்மால் சொல்லிக்கொடுக்க முடியும்? இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.

    ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி முக்கியம்

    பாலியல் கல்வி, குறிப்பாக தொடுகை என்பது அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒன்றாகும். பொதுவாக, அனைவருமே பாலியல் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகின்றபோது பெண் பிள்ளைகளின் மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    சிறுவர் உலகத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கும் பாலியல் கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கும் தொடுகை பற்றி கற்பிக்கவேண்டியது அவசியமாகின்றது. ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு, தொடுகை பற்றி கற்பிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு முறையான தொடுதல் எது?, முறையற்ற தொடுதல் எது...? என்பது பற்றி சொல்லிக்கொடுத்தால் தான் அவர்களுக்கு நேரும் ஆபத்துக்களை தடுக்க முடியும்.

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
    • தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

    இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

     மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

     1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.

    2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.

    3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.

    4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.

    5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

     6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.

    7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.

    8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

     இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.

    பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.

    • படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
    • குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும்.

    இது தேர்வுக்கான காலகட்டம். மற்ற சமயங்களை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருசில பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு வாழ்நாள் மூலம் கற்றல் மீதான நாட்டத்தை மெருகூட்ட செய்யலாம். அதற்கான வழிமுறைகள்...

    தேர்வு சமயங்களை தவிர்த்து தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. `இது படிப்புக்கான நேரம்' என்பது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து படிப்பதன் மூலம் கற்றலை வலுப்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

     அமைதியான இடம்

    கவனச்சிதறல்கள் மாணவர்களை தடம் புரளச் செய்யும். எனவே இடையூறு ஏதும் இல்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய அமைதியான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அமைதியான சூழல் கவனத்தை ஒன்றிணைக்கும் திறனை வலுப்படுத்தும். புரிதலை மேம்படுத்தும்.

    கற்றல் நுட்பங்கள்

    எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. ஒரு பாடத்தை படிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை குறிப்பெடுக்க பழக வேண்டும். பின்பு அந்த குறிப்புகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கி எழுத வேண்டும்.

    அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடமோ, சக மாணவர்களிடமோ கேள்வி எழுப்பி தெளிவு பெற வேண்டும். இத்தகைய செயல்முறை கற்றல் நுட்பங்களை பின்பற்றுவது பாடம் மீது ஆழமான புரிதலை ஏற்படுத்தும். சிந்தனை திறனை வளர்க்கும். திறம்பட தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.

    சிறிது நேர ஓய்வு

    தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கி, தொடர்ந்து படிக்கும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். படிப்புக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மீண்டும் படிப்பை தொடர்வது மன ரீதியாக புத்துணர்ச்சி பெற உதவும். படிப்பின் மீது முழு கவனத்தையும் திருப்புவதற்கு வித்திடும்.

    ஊட்டச்சத்து உணவு

    நாள் முழுவதும் இடை இடையே போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும். படிப்புக்கு இடையே சத்தான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அவை மூளைக்கு ஊட்டமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும். அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும்.

    போதுமான தூக்கம்

    நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. மாணவர்கள் தினமும் போதுமான நேரம் தூங்கி எழ வேண்டும். நன்கு ஓய்வு எடுக்கும் மனம் கற்றல் விஷயங்களை மறக்காமல் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும்.

    பாராட்டு

    நேர்மறை எண்ணங்கள் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் உருவாக்கும். எனவே பிள்ளைகளின் முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுங்கள். அவர்கள் படிப்பில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை சாதனையாக கருதி பாராட்டுங்கள்.

    யாரும் நிர்பந்திக்காமலேயே சுயமாக படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தெடுக்க அது உதவும். அவர்களாகவே குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்கு ஒதுக்கி விடுவார்கள். நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

     பாடங்களை பிரித்தல்

    முழு ஆண்டுத்தேர்வுக்கு பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதிகளாக படித்து முடிப்பதை பெரிய பணியாக உணரலாம். அதில் கடினமான பகுதிகளை படிப்பது சிரமமானதாக, சவாலானதாக சில மாணவர்களுக்கு அமையலாம். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் எளிமையான பகுதிகளை முதலில் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    கடினமான பகுதிகளை அதிகாலை வேளையில் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி தரம் பிரிப்பதன் மூலம் விருப்பமான பாடங்களை விரைவாக படித்து முடித்துவிட முடியும். அதனால் படிப்பது பெரும் சுமையாக தோன்றாது. இந்த அணுகுமுறை மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். தினமும் படிக்க தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே படித்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை வாசிப்பது நினைவில் ஆழமாக பதிய உதவும். தேர்வை எளிமையாக எழுதுவதற்கு வழிவகுக்கும்.

    • பெற்றோர்கள் குழந்தைக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள்.
    • குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள்.

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள். அதை தவறானது என கருதி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள். குழந்தைகளை வலுக்கட்டாயமாக இடதுகை பழக்கத்தில் இருந்து வலதுகை பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பது நல்லது அல்ல. இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல், உணர்ச்சி சமநிலை மற்றும் நடத்தை சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்பட நேரிடும். இதை பற்றிய மேலும் சில தகவல்கள் இதோ...

    உலக அளவில் 85 சதவீதம் பேர் வலதுகை பழக்கம் கொண்டவர்களாகவும், 15 சதவீதம் பேர் இடதுகை பழக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

    இடதுகை பழக்கம் என்பது ஒரு சாதாரண மாறுபாடாகும். இடதுகை பழக்கம் உள்ள குழந்தைகளை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றும்போது கைகளை பயன்படுத்தி செய்யும் செயல்களில் அவர்களின் திறன் குறையும். குழந்தைகள் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ, அதே கையால் குறிப்பிட்ட வேலைகளை செய்யும்போது விரைவாகவும். திறமையாகவும் செய்து முடிப்பார்கள்.

     இடதுகை பழக்கம் உள்ளவர்கள் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திக்கவும், தங்களுடைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கவும் விரைவாக கற்றுக்கொள்கிறார்கள். படைப்பாற்றல், புத்திக்கூர்மை ஆகியவை இடதுகை பழக்கம் கொண்டவர்களிடையே இருக்கும் பொதுவான பண்புகளாகும்.

    பெரும்பாலான இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் ஏற்படுவது இல்லை. மரபியல் மூலமாகவே இடதுகை பழக்கம் உண்டாகிறது. இது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியதாகும். இதை அடிப்படையாகக் கொண்டே மூளையின் வளர்ச்சி வேறுபாடு அடைகிறது.

    வலது பக்க மூளையானது இடதுபக்க உடல் இயக்கத்தையும், இடதுபக்க மூளையானது வலதுபக்க உடல் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன் அடிப்படையில் இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு அல்சர், மூட்டு வலி மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் அல்லது விரைவாக குணமடையலாம்.

    எழுதுவதைத் தவிர மற்ற வேலைகளுக்கு நாம் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம்முடைய பழக்கம் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் மற்ற வேலைகளை இரண்டு கைகளையும் சரிசமமாக பயன்படுத்தி செய்கிறீர்கள் எனில் நீங்கள் கலப்பு கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம்.

    கட்டாயப்படுத்தி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றும்போது சமநிலையற்ற உணர்ச்சிகள், மோசமான கையெழுத்து, படுக்கையில் சிறுநீர் கழித்தல், நகங்களைக் கடித்தல், கூச்சம், எதிர்மறையான நடத்தைகள், வாசிப்பதில் சிரமம், கற்றல் திறன் குறைபாடு, சுயக்கட்டுப்பாடு மற்றும் நினை வாற்றல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

    அதுமட்டுமல்லாமல் நரம்பியல் கோளாறுகள், மூளையின் அசாதாரண செயல்பாட்டுக்கும் வழி வகுக்கலாம். ஆகையால், சிறுவயதில் குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றுவதைவிட இரண்டு கைகளிலும் சமமாக அனைத்து வேலைகளையும் செய்யும்படி பழக்கலாம். கலப்பு கை பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். இது அவர்களின் ஆரோக்கியத்துக்கும். எதிர் காலத்துக்கும் நல்லது.

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
    • நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?

    ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.

    குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?

    புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.

    தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.

    தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

     பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.

    தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

     இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.

    • குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறை.
    • மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது.

    மாண்டிசோரி கல்வி முறை என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறையாகும், இது 1900-களின் முற்பகுதியில் மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது. மாண்டிசோரி முறையானது கற்றல், தனிப்பட்ட கவனம் மற்றும் குழந்தையின் இயல்பான வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    இது குழந்தைகளுக்கு கற்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம், மேலும் அவர்கள் சுயமாகச் செயல்படுதல், ஆய்வு செய்தல் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழலைக் கையாளுதல் மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

    மாண்டிசோரி வகுப்பறைகளில், குழந்தைகள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்களைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட கல்விப் பொருட்களுடன் வேலை செய்கிறார்கள், மேலும் அவர்கள் அறையைச் சுற்றிச் செல்லவும் தங்கள் சொந்த வேகத்தில் வேலை செய்யவும் சுதந்திரமாக உள்ளனர்.

     சுதந்திரம், பொறுப்பு, கற்றல் மீதான காதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக பணியாற்றுகிறார்கள், ஒவ்வொரு குழந்தையையும் கவனித்து, தேவைப்படும்போது ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.

    மாண்டிசோரி அணுகுமுறையானது கலப்பு-வயது வகுப்பறைகள், சிறப்புக் கல்விப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியின் வேகத்திற்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

    மாண்டிசோரி கல்வியின் குறிக்கோள், குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் அன்பையும், அத்துடன் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான சமூக, உணர்ச்சி மற்றும் அறிவுசார் திறன்களையும் வளர்ப்பதற்கு உதவுவதாகும்.

    மாண்டிசோரி கல்வி முறையானது முறையான கற்பித்தல் முறைகளைக் காட்டிலும் குழந்தைகளின் இயல்பான ஆர்வங்கள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது. ஒரு மாண்டிசோரி வகுப்பறை நடைமுறையில் கற்றல் மற்றும் நிஜ-உலகத் திறன்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

     மாண்டிசோரி கல்வி முறை:

    * இதன் கல்வி முறை முழுமையாக செய்முறை தொடர்பானது.

    * குழந்தைகள் தாமாகவே செயல்முறை மூலம் கல்வி கற்பர்.

    * குழந்தைகள் தனித்தனியாகவோ / குழுவாகவோ இணைந்து தாமாக கல்வி கற்பர்.

    நன்மைகள்

    * மாணவர் படைப்பாக்கத் திறன் கூடும்.

    * தாமாகவே புதிது புதிதாக குழந்தைகள் கற்பர்.

    பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:

    * மொழி

    * கணிதம்

    * நடைமுறை வாழ்க்கை பயிற்சி

    * சமூகத்துடனான அணுகுமுறை

    * கலை

    * இசை-பலப்பல

    வயது முறை:

    * 0–18 வயது வரை

    * 0–3 வீட்டிலேயே இம்முறையில் கற்பிக்கலாம்.

    வகுப்பறைகள்:

    * பொதுவாக சாதாரண பள்ளிகளில் 16 வயது என்றால் 10 வது, 18 வயது என்றால் 12-வது என்ற அடிப்படையில் கற்பிக்கப்படும்.

    * மாண்டிசோரி பள்ளிக்கல்வி முறையில் ஒரே வகுப்பறையில் 3–6 வயதுடையவர்கள், மற்றொரு வகுப்பில் 6–9 வயதுடையோர், மற்றொரு வகுப்பில் 9–12 என்பது போல் வயதுக்கேற்ப பிரித்து கல்வி கற்பிப்பர்.

     பாடங்கள் தேர்வு

    இக்குழந்தை இப்பாடங்களைத்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தமக்கு பிடித்த பாடம் எதுவென்றாலும் அது கணிதமோ, அறிவியலோ, மொழியோ இன்ன பிற அவர்களுக்குப் பிடித்த வகுப்பில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்கலாம். ஆசிரியர்கள்

    * ஆசிரியர்கள் குழந்தைகளை கண்காணிப்பர்.

    * மாணவர் தாமாக கற்க அவர்களை வழிபடுத்துவர். அதுவும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதுபோல் அன்றி, எதுவாயினும் அதை குழந்தைகள் சுதந்திரமாக செய்ய அவர்களை அனுமதிப்பர். அதாவது கற்பிக்க மாட்டார்கள் ஆனால் அவர்களை செயல்படுத்தவிட்டு அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென நல்வழிப்படுத்துவர்.

    பிற பயிற்சிகள்

    நம் வீட்டில் நாம் ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் அதே இடத்தில் தான் வைக்க வேண்டும் என்பதை அறிவோம். இம்முறையை அவர்களுக்கு பயிற்சியாக வழங்குவர். அதாவது, ஒரு பொருள் என்றால் அதை இங்குதான் வைக்க வேண்டும், சோப்பு என்றால் குளியலறை, புத்தகம் என்றால் கற்கும் அறை என எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்குதான் வைக்க, அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவர்.

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    • தாய் என்பவள் இறைவனுக்கும் மேலாக மதிக்கப்படுகிறார்.
    • குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே'' என்ற பாடலுக்கு ஏற்ப குழந்தைகளை பெற்று அதன் ஒவ்வொரு வளர்ச்சிப்படி நிலையிலும் உரியவகையில் வளர்த்தெடுக்கும் பெரும் பொறுப்பு தாய்க்கே உள்ளது என்றால் அதை மறுப்பதற்கில்லை. ஒரு தாயின் செயற்பாடுகள், பழக்க வழங்கங்களை வைத்தே அவளின் பிள்ளைகளை மதிப்பிடுகிறார்கள் இதுவே யதார்த்தமாகும்.

    தாய் என்பவள் இறைவனுக்கும் மேலாக மதிக்கப்படுகின்றார். காராணம் பத்துமாதங்கள் ஒரு குழந்தையை கருவிலே சுமப்பது என்பது லேசான காரியமல்ல அவ்வாறு சுமந்து பிரசவ வலியைத் தாங்கி ஒரு குழந்தையை இந்த உலகிற்கு கொண்டுவருகிறாள். அதோடு அவளுடைய பங்களிப்பு நிறைவுபெறுவதில்லை.

    தாய் என்ற நிலையை அடைந்த பெண் பல பொறுப்புக்களை சுமந்துகொண்டு செயல்பட வேண்டியுள்ளது. இந்த சமுதாயத்துக்கு நல்லதொரு பிரஜையை உருவாக்கவேண்டிய பெரும்பொறுப்பும் தாய்க்கே உண்டு.

    இன்று உலகில் பலவகையான சிக்கல்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றார்கள், போதைப்பொருள் பாவனை, தவறான நபர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு என பல பிரச்சினைகள் இன்று தலைவிரித்தாடுகின்றது. அவற்றில் இருந்தெல்லாம் தன்னுடைய பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள ஒரு தாய் பல தியாகங்களை செய்யவேண்டியுள்ளது.

    குழந்தைகளை அளவுக்கு அதிகமாக கண்காணித்தாலும் அவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொண்டு தவறுகளை செய்ய முற்படுகிறார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் அன்பு செலுத்தும் பழக்கத்தை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் பிறரை நேசிக்கும் பழக்கத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்வார்கள். அதுவே ஒரு நல்ல சமுதாயம் உருவாக வழிவகுக்கம். அத்தோடு பிள்ளைகளை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

    ஏனெனில் ஒவ்வொரு பிள்ளைக்கும் வெவ்வேறு விதமான திறமைகள் உண்டு. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர ஒப்பிட்டு குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் பன்முக வளர்ச்சியில் தாயின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது.

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் அநேகமான குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு குறைவாகவே கிடைக்கின்றது. காரணம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தாய்மார்கள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

    அதனால் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியாமல் இருக்கின்றது. இது குழந்தைகளின் முன்னேற்றப்பாதைக்கு சில நேரங்களில் நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். எவ்வளவு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்களின் குழந்தைகளுக்காகவும் நேரத்தை ஒதுக்கி ஒருமுகப்படுத்தும் மனநிலையுடன் குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

    பிள்ளைகள் ஏதேனும் ஒரு பொருளை கேட்டுக்கும் போது அது தேவைக்காக கேட்கின்றதா? அல்லது ஆசைக்காக கேட்கின்றதா என்பதை புரிந்து கொண்டு தேவைக்காக கேட்கும் எதையும் தாமதிக்காமல் பெற்றுக்கொடுங்கள். குறித்த காலத்தில் காட்டாத அன்பும், காலம் அறிந்து கண்டிக்காத செயலும் பிள்ளை வளர்ப்பில் தாய் நிச்சயமாக பின்பற்றவேண்டிய விஷயங்களாகும்.

    எனவே ஒரு தாய் குழந்தைகளிடம் காட்டும் அக்கறையும் அன்பும் பரிவும், நல்லொழுக்கமுமே அக்குழந்தைக்கு கிடைக்கின்ற மூலதனமாக அமைந்து எதிர்காலத்தில் அந்தக் குழந்தை நல்ல குழந்தையாக திகழ வழி வகுக்கும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு தாய்மாரும் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகாமல் இருப்பதே கட்டாயமாகும்.

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வருகிறது.
    • புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும்.

    வீட்டிற்கு ஒரு நூலகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வரும் இந்த சூழலில் வீட்டில் ஒரு சிறிய நூலகம் அமைக்க முயற்சிக்கலாம். அதில் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தையும் ஒதுக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தை நிரப்ப அவர்களாகவே ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குவார்கள்.

    அங்கு குடும்பமாய் அனைவரும் அமர்ந்து புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் தினமும் பத்து நிமிடமாவது புத்தகம் வாசிக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். வார விடுமுறை நாளில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து, வாரம் முழுமையும் வாசித்ததையும், வாசிக்கும் போது தங்களுக்குள் எழுந்த உணர்வுகளையும், வாசித்து முடித்த பின்பு தங்களுக்குள் எழுந்த மாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

    இந்த முயற்சியை பெற்றோர் முன்னெடுக்கும்போது குழந்தைகளும் தானாகவே முன் வந்து பின்பற்ற தொடங்குவார்கள். இந்த பழக்கத்தை குடும்பத்தின் அன்றாட வழக்கமாக்கி விட்டால் இது குடும்பத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைகளும் பின்பற்றும் குடும்ப பாரம்பரியமாகவே மாறிவிடும்.

    குடும்பமாக பல இடங்களுக்கு சென்று பொருட்களையும், உடைகளையும் பார்த்து பார்த்து வாங்கும் நாம், குடும்பமாய் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை பார்த்து பார்த்து வாங்கலாம். இந்த ஆண்டில் வாங்க வேண்டிய பொருட்களுக்கு பட்ஜெட் போடும்போது புத்தகங்கள் வாங்கவும் பட்ஜெட் போடலாம்.

     புதிய வீடு கட்டும் போது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான எல்லா அறைகளையும் கட்டும்போது புத்தகங்களுக்கு என்று தனி அறை கட்டி அதை மினி நூலகமாக மாற்றலாம். இட வசதி இல்லாதவர்கள் அறையாக கட்ட முடியாவிட்டாலும், தங்கள் வீட்டில் இருக்கும் இடத்தில் புத்தகங்களை வைப்பதற்கு ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாம். அந்த இடம் அனைவரின் கண்ணில் படும் இடமாக இருக்கட்டும்.

    அடிக்கடி புத்தகங்களைப் பார்க்கும் போது அதனை வாசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு சுயமாகவே ஏற்பட்டு விடும். அது மட்டுமின்றி வீட்டிற்கு வருகிற விருந்தினர்கள் பார்க்கும் இடத்திலும் புத்தகங்கள் இருந்தால் அது அவர்களையும் வாசிக்க தூண்டும்.

    அவர்களுக்கு உணவு விருந்து கொடுப்பதோடு சேர்த்து புத்தக விருந்தும் அளிக்கலாம். அதாவது புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். வாசிப்பு ஒரு மகத்தான செயல்பாடு. பாடப்புத்தகத்தையும், துறை சார் புத்தகத்தையும் கடந்து பிற புத்தகங்களை வாசிக்கும்போது பரந்துபட்ட அறிவும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் மன நிலையும் ஏற்படும். உட்கார்ந்து வாசிக்கும் போது நேரத்தை நாம் பயனுள்ளதாய் மாற்றுகிறோம்.

    ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் நம் நிலையில் இருந்து கடந்து மற்றவர் நிலையை, அவர்களது இன்ப துன்பங்களை புரிந்து கொள்கிறோம். வாசிப்பு, அறிவை பெருக்குவதையும் கடந்து நம்மை பக்குவப்பட்ட மனிதர்களாகவும் மாற்றுகிறது.

    எது சரி, எது தவறு என முடிவு எடுக்கும் புரிதலை தருகிறது. ஒரு தளத்தில் மட்டும் சாயாது நடுநிலையோடு பயணிக்க வாசிப்பு உதவுகிறது. இத்தகைய மகத்தான மாற்றத்தை நம்மில் விதைக்கும் வாசிப்பை நேசிப்போம். நாமும் வாசிக்க, பிறரையும் வாசிக்க வைக்க வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்!

    • பெண் குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு முக்கியமானது.
    • குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    பெண் குழந்தையின் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் தந்தையின் பங்கு முக்கியமானது. தந்தையுடன் அதிக பாசப்பிணைப்போடு வளரும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதையும் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிய தெளிவும், புரிதலும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ஆனால், நமது நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளின் வளர்ப்பில் பெரும்பாலும் தாயே அதிக பங்கு வகிக்கிறார். குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். குடும்பத் தலைவர் என்ற பொறுப்பு வகிக்கும் தந்தையின் பிம்பம் கண்டிப்பானவர் என்றே குழந்தைகளுக்கு உருவகப் படுத்தப்படுகிறது. இதைத் தவிர்த்து, பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தந்தையையும் ஈடுபடுத்தும் வழிகளை இங்கு பார்ப்போம்.

    நேரடித் தொடர்பு:

    குழந்தை பிறந்தது முதலே அதன் வளர்ப்பிலும். பராமரிப்பிலும் தந்தையின் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். டயப்பர் மாற்றுவது. குழந்தையுடன் விளையாடுவது. குழந்தைவைத் தூங்க வைப்பது ஆகிய செயல்பாடுகளில் தந்தையையும் ஈடுபடுத்த வேண்டும். இதன்மூலம் மகளுக்கும், தந்தைக்கும் இடையேயான இணக்கத்தை அதிகப்படுத்த முடியும் குழந்தை வளரும் பருவத்தில், அதன் சிறு சிறு தேலை களை நிறைவேற்றும் பொறுப்பையும் தந்தையி வசமே ஒப்படைப்பது அவசியமாகும்.

    நேரம் செல்விடுவது:

    வளரும் பருவத்தில் மகளுக்கு தந்தையின் அரவணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். தந்தை, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லது, வீட்டுப்பாடங்களை சொல்லிக் கொடுப்பது, இருவரும் இணைந்து தங்களுக்குப் பிடித்த உணவை சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, செடிகள் வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இருவருக்கும் இடையே புரிதல் உண்டாகும். அதன்மூலம் ஒருவர் மற்றவரின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

    பொறுப்பை ஏற்க வைப்பது:

    பெரும்பாலான குடும்பங்களில், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே தந்தையின் பொறுப்பாக இருக்கிறது. அதை தவிர்த்து குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். குழத்தை வளர்ப்பு தொடர்பான முடிவை எடுப்பதில் தந்தையையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். குழந்தைக்கு எந்த வயதில் எது தேவை, அதை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை தரலாம். ஆனால் அதை நிறைவேற்றும் பொறுப்பை தந்தையிடமே முழுமையாக ஒப்படைக்கலாம். இதன்மூலம் மகளின் நலன் மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களையும் தந்தை கவனித்து செய்ய முடியும்.

    உணர்வுகளை வெளிப்படுத்துவதும் இருவருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானதாகும். தனிப்பட்ட பல விஷயங்களை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வதில் தந்தை மகளுக்கு இடையே தயக்கம் இருக்கும். ஆனால் மகளின் உணர்வு சார்ந்த விஷயங்களில் கட்டாயம் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். பெண்கள் வளரும்போது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திப்பார்கள் அந்த நேரத்தில் தந்தையின் வழிகாட்டல் இருந்தால், மகள் சமூக ரீதியான மாற்றங்களை எளிதாக அணுக முடியும்.

    • ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும்போதே தடுப்பூசி போடப்படுகிறது.
    • தடுப்பூசி தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது.

    குழந்தை பிறந்ததும் தடுப்பூசி போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும் போதே தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை அட்டவணையில் பதிவிட்டு வழங்கப்படுகிறது.

    இந்த தடுப்பூசி மூலம் குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை தாக்கப்படும் நோய்களிலுருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இதில் முக்கியமானது எந்தெந்த நாட்களில் தடுப்பூசிகளை போட வேண்டுமோ அதை தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது. அது போல ஒவ்வொரு தடுப்பூசியும் எதற்காக போடப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    டிபிடி என்பது டிஃப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்ற நோய்கள் வராமல் தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் பாக்டீரியாவால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோய்களாக இருக்கிறது.

    டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகியவை காற்று, நீர், தொடுதல், இருமல், தும்மல் மற்றும் பிற முறைகள் மூலம் நபருக்கு நபர் பரவுகின்றன, அதேசமயம் டெட்டனஸ் பாக்டீரியா வெட்டுக்கள் மற்றும் காயங்கள் மூலம் உடலில் நுழைகிறது.

    டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் என்றால் என்ன.?

    டிப்தீரியா தொண்டை பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகள், பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.

    டெட்டனஸ் ஒரு பாக்டீரியா தொற்று. இது தசைகள் வலிமிகுந்த இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. தாடையனாது செயல்இழுக்கப்பட்டுவை திறக்க முடியாமல் செய்கிறது. டெட்டனஸ் உலகளவில் 10 சதவீதம் உயிரைக் கொல்கிறது. ஒழிப்பை இந்தியா நோக்கமாகக் கொண்டிருந்தாலும், கர்நாடகாவில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

    பெர்டுசிஸ் நோய் ஏற்பட்டால் குழந்தைகளால் சாதாரணமாக சுவாசிக்க முடியாது. தொடர்ந்து இருமல் இருந்து கொண்டே இருக்கும். அதோடு மட்டுமில்லாமல் இருமலோடு வாந்தி பிரச்சினையையும் ஏற்படுத்தும். மேலும் இவை தொடர்ந்து நீடிக்கப்பட்டு தண்ணீர் குடிப்பதில் பிரச்சினை, உணவு சாப்பிடுவதில் பிரச்சினை போன்றவையே ஏற்படுத்தும். இவற்றை கவனிக்காம விட்டால் நுரையீரலில் அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் நிமோனியா காய்ச்சல் மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

    2 மாதங்கள், 4 மாதங்கள், 6 மாதங்கள், 15 முதல் 18 மாதங்கள், 4 முதல் 6 ஆண்டுகள் இந்த ஊசியானது ஐந்து அளவுகளில் வழங்கப்படுகிறது.

    பக்க விளைவுகள்:

    ஊசி போட்ட இடத்தில் சிவந்து போதல் அல்லது அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு காணப்படும்.

    காய்ச்சல், பசியின்மை, தூக்கம், எரிச்சல், வாந்தி, வலிப்பு ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நல்லது.

    ×