search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பனை செய்தல்"

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    ×