search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரை வைகோ"

    • ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
    • உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.

    சென்னை:

    ம.தி.மு.க.வுக்குள் நிலவி வரும் உட்கட்சி மோதலால் தொண்டர்கள் ஏமாந்தது போதும். இனி ம.தி.மு.க.வை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது நல்லது என்று அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    ஆனால் துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. வைகோ சொல்லட்டும் நான் பதில் அளிக்கிறேன் என்றார் துரைசாமி.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க. முடிவு செய்தது. அப்போது அதை எதிர்த்தவர் திருப்பூர் துரைசாமி. இப்போது அவரே ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் சொல்கிறார். ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்.

    ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே செயல்படும்.

    துரைசாமி தொழிற்சங்க நிர்வாகி. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்துகிறார். கட்சியை தனது பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டார்.

    கட்சியை தி.மு.க.வுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

    2021 சட்டமன்ற தேர்தலில் கட்சி நலன்களுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சி தொண்டர்கள் புகார் கூறினார்கள். ஆனால் வைகோ தான் துரைசாமியின் அனுபவம், வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதுவும் செய்யவில்லை.

    இப்போது உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.

    இதற்கிடையே அவரது சொந்த ஊரான திருப்பூரிலேயே அவரது கட்சி விரோத செயல்களை கட்சி தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் துரைசாமியின் கடிதத்துக்கு துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கிடையில் திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அவரிடம் துரை வைகோவின் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம். அவர் குற்றச்சாட்டு சொன்னாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தேவையில்லாமல் மற்றவர்களின் கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல தயாரில்லை என்றார்.

    • கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
    • வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க.வில் உட்கட்சிக்கு உள்ளேயே எழுந்துள்ள அதிருப்தி கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடலாம் என்ற கோரிக்கையாக உருவெடுத்து உள்ளது.

    இது தொடர்பாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு பகிரங்கமாகவே கடிதம் எழுதி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவரே அதிருப்தி அடையும் அளவுக்கு கட்சியின் நிலைமை மாறி இருக்கிறது.

    தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்ட பிறகு கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்ற பொருமல் இருந்து வருகிறது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு வைகோவின் முடிவுகளை எதிர்த்த மாவட்டச் செயலாளர்கள் செவந்தியப்பன் உள்பட 3 பேர் நீக்கப்பட்டார்கள்.

    தற்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் துரை வைகோ ஆதரவாளர்களை வெற்றி பெற செய்ய வேலைகள் நடப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    இப்படி கட்சிக்குள் எழுந்துள்ள மனக்கசப்பும் அதிருப்தியும் வைகோவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் தான் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியை தி.மு.க.வுடன் இணைந்து விடலாம் என்று கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தாங்கள் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டு வரும் நிலை குறித்து விரிவான கடிதங்களை எழுதியிருந்தேன். அதற்கு இன்று வரை தங்களால் பதிலேதும் சொல்ல இயலவில்லையா?

    லட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த தி.மு.க.வில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும் தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.விற்கே சென்றுவிட்டனர்.

    தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் ம.தி.மு.க.விற்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கழக தோழர்கள், தமிழகம் முழுவதும் பழைய கழக உறுப்பினர்களே தங்களை புதுப்பித்து கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதில் கழக தோழர்களிடம் தொய்வும், ஆர்வமும் குறைந்து உள்ளதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பட்ட சிரமங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.

    ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ம.தி.மு.க.வில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டியுள்ளது. இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை ம.தி.மு.க.விற்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலையில், விருதுநகர் மாவட்ட கழகம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அவருக்கே திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்ட கழக தோழர்களிடம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    எந்த அரசியல் கட்சியும் இப்படி பதவி கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றியதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறு மலர்ச்சிக்கு தான் என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க்கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது.

    வைகோவின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட முடிவெடுப்போம் என்று அதிருப்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் துரைசாமியின் கடிதத்துக்கு தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரது கடிதத்தை புறந்தள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    • சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும்.
    • அதானி பிரச்சினையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

    வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும். வதந்திகளைப் பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும் வட இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்குமான முயற்சியாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் காரணம் என அண்ணாமலை பேசி வருகிறார். அதானி பிரச்னையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க. இன்றைக்கு இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் புகையிலை பயன்பாட்டுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    மதுரை:

    திருமலை நாயக்கரின் 440-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது உருவச் சிலைக்கு ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் பாரம்பரியம் வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு ஈரோட்டில் வாக்காளர் ஆதரவு அதிகரித்து வருகிறது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெல்லும்.

    தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க. இன்றைக்கு இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த கட்சியை உடைத்ததில் பாரதிய ஜனதாவுக்கு பெரும் பங்கு உண்டு. இன்றைக்கு அவர்களே அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்துவோம் என்று பேசுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

    தமிழகத்தில் புகையிலை, குட்காவுக்கான தடையை விலக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் புகையிலை பயன்பாட்டுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைய தலைமுறை இளைஞர்கள் கல்வி, எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
    • ராமேசுவரத்தில் சேது சமுத்திர திட்டம் நடைமுறைக்கு வந்தால் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அடையும்.

    மதுரை:

    மதுரையில் இன்று ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு சினிமா ஆர்வம் இருப்பது தவறு அல்ல. இதற்காக அவர்கள் மோதல் போக்கை கையாளக்கூடாது. நடிப்பு என்பது ஒரு கலை. நானும் ஒரு காலத்தில் ரசிகனாக இருந்தவன் தான். அதற்காக மோதல் போக்கை கையாளுவது சரியல்ல.

    இன்றைய தலைமுறை இளைஞர்கள் கல்வி, எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் சேது சமுத்திர திட்டம் குறிப்பிடத்தக்கது.

    இது நேரு காலத்தில் இருந்தே தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பேசி உள்ளார்.

    ராமேசுவரத்தில் சேது சமுத்திர திட்டம் நடைமுறைக்கு வந்தால் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அடையும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, சனாதான மதவாதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். தமிழகத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்காக கலைஞர் வழியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    தமிழக கவர்னர் ரவி பாரதிய ஜனதா தலைவராக செயல்பட்டு வருகிறார். இங்கு பா.ஜனதாவுக்கு இரட்டை தலைவர்கள் உண்டு. ஒருவர் அண்ணாமலை, இன்னொருவர் கவர்னர் ரவி. தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கவர்னர் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பட்டியல் இன மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு மான இடஒதுக்கீடு ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் முறையாக நிரப்பப்படாமல் இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
    • சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    ம.தி.மு.க. மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், தலைமைக்கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடந்தது.

    துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தொடக்க உரை ஆற்றினார். தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மாநில ஆளுநர் பொறுப்புகள் தேவையில்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் மூலம் கொண்டுவர வேண்டுமென ஒன்றிய அரசையும், அனைத்துக் கட்சிகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

    பட்டியல் இன மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு மான இடஒதுக்கீடு ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் முறையாக நிரப்பப்படாமல் இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

    சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ம.தி.மு.க.வின் கூட்டணியும் தொடரும்.
    • தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேர் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்து உள்ளது. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு நிதிகளை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்காத நிலையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி குறித்து அதன் தலைவர் அண்ணாமலை கனவு கண்டு கொண்டிருக்கிறார். அது பலிக்காது. தமிழக மக்கள் மதவாத சக்திகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள். மதவாத சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்களின் செயல்பாடு இருக்கும்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி வளர முயற்சிக்கிறது. கவர்னர் மக்களுக்காக செயல்படவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசின் ஊது குழலாக செயல்பட்டு வருகிறார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ம.தி.மு.க.வின் கூட்டணியும் தொடரும். தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேர் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அரிசி, பருப்பு கொள்முதல் செய்ததில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதை மட்டும் வைத்து குற்றம் நடந்ததாக கூறிவிட முடியாது. இது பற்றி விசாரணை முடிந்த பின்னர் தான் பதில் சொல்ல முடியும்.

    மதிமுக பூரண மதுவிலக்கு கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்க போவதில்லை. தமிழக முதல் அமைச்சரின் முயற்சியால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன, புயல் மழை காலங்களில் பாதிக்கப்பட்ட 4 லட்சம் மக்களுக்கு உடனடியாக தங்குமிடம் நிவாரணம் போன்றவை அளித்தது பாராட்டக்கூடியது.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலைவாசியும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு மாட்டுத்தீவனம் மற்றும் யூரியா விலையை குறைக்கவில்லை.

    பாரத பிரதமர் மோடியின் பேச்சை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார்.
    • மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

    ஈரோடு:

    மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று ஈரோட்டில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார். தெலுங்கானாவில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்தபோது நானும் அவருடன் பங்கேற்றேன். அப்போது நாங்கள் வலதுசாரி அரசியலால் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசினோம். தமிழகம் உள்பட இந்தியாவில் வலதுசாரிகளால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள் குறித்து பேசினோம்.

    ஆனால் நான் விருதுநகர் தொகுதியை எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று பேசுவதற்காக சென்றதாக நாளிதழ் ஒன்று (தினத்தந்தி அல்ல) செய்தி வெளியிட்டது. அது தவறு. நான் எந்த தொகுதியை பெறுவது பற்றியும் அவருடன் பேசவில்லை.

    விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியதால் ஏற்படும் இழப்பை சமாளிக்க, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற வணிக பால் பாக்கெட்டுகளின் விலையை மட்டும்தான் அரசு உயர்த்தி இருக்கிறது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

    இவ்வாறு ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் வைகோவிற்கு தெரியாது.
    • தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் ‌ஆவணப்படம் திரையிடப்பட்டது.

    இத்திரைப்படத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆவணத்திரைப்படத்தை பார்த்தனர்.

    பின்னர் துரை வைகோ பேசியதாவது:

    இந்த ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் வைகோவிற்கு தெரியாது. தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன்.

    இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். இழந்ததை மீட்போம், வரலாறு படைப்போம், அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இந்த ஆவணப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தொண்டர்கள், நிர்வாகிகள் இணையதளங்கள் மற்றும் வீடு வீடாக எடுத்துச் சென்றுள்ளனர்.

    இதை சாதாரண தொண்டர்கள் செய்யும் பொழுது ஏன் மூத்த நிர்வாகிகள் செய்ய தயங்குகின்றனர்.

    இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்கள் கதவு திறந்தே உள்ளது வெளியே செல்லலாம். உழைப்பிற்கும், விசுவாசத்திற்கு மட்டும் தான் மரியாதை. வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×