search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடரும்- துரை வைகோ
    X

    பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடரும்- துரை வைகோ

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ம.தி.மு.க.வின் கூட்டணியும் தொடரும்.
    • தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேர் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்து உள்ளது. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு நிதிகளை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்காத நிலையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி குறித்து அதன் தலைவர் அண்ணாமலை கனவு கண்டு கொண்டிருக்கிறார். அது பலிக்காது. தமிழக மக்கள் மதவாத சக்திகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள். மதவாத சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்களின் செயல்பாடு இருக்கும்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி வளர முயற்சிக்கிறது. கவர்னர் மக்களுக்காக செயல்படவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசின் ஊது குழலாக செயல்பட்டு வருகிறார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ம.தி.மு.க.வின் கூட்டணியும் தொடரும். தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேர் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அரிசி, பருப்பு கொள்முதல் செய்ததில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதை மட்டும் வைத்து குற்றம் நடந்ததாக கூறிவிட முடியாது. இது பற்றி விசாரணை முடிந்த பின்னர் தான் பதில் சொல்ல முடியும்.

    மதிமுக பூரண மதுவிலக்கு கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்க போவதில்லை. தமிழக முதல் அமைச்சரின் முயற்சியால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன, புயல் மழை காலங்களில் பாதிக்கப்பட்ட 4 லட்சம் மக்களுக்கு உடனடியாக தங்குமிடம் நிவாரணம் போன்றவை அளித்தது பாராட்டக்கூடியது.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலைவாசியும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு மாட்டுத்தீவனம் மற்றும் யூரியா விலையை குறைக்கவில்லை.

    பாரத பிரதமர் மோடியின் பேச்சை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×