search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் துரைசாமி"

    • மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என வைகோ கூறுகிறார்.
    • நான் விலகுவதாக அறிவித்த பின்னர் எந்த தகவலும் கட்சியில் இருந்து வரவில்லை.

    திருப்பூர்:

    கட்சியின் நலன் கருதி ம.தி.மு.க.-வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டுமென அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்த வைகோ, 'தி.மு.க.-வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

    துரைசாமி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார். இதையடுத்து திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் இருந்து விலகினார். இதனிடையே ம.தி.மு.க.வில் அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் ம.தி.மு.க. 29-வது பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

    இந்தநிலையில் திருப்பூரில் இன்று துரைசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என வைகோ கூறுகிறார். அப்படியானால் எதுக்கு தனிக்கட்சி. தி.மு.க.வுடன் இணைக்க வேண்டியது தானே. வைகோவிற்கு இப்போதைய நிலையில் திறமை, ஆற்றல் இல்லை. இனியும் அவரால் கட்சியை நடத்த முடியாது.

    நான் விலகுவதாக அறிவித்த பின்னர் எந்த தகவலும் கட்சியில் இருந்து வரவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க நான் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுகிறார்கள். 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்., வைகோ கையெழுத்து போடும்போது நானும் உடன் இருந்தேன். அப்படியிருக்கும் பட்சத்தில் எப்படி நான் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை.
    • தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை.

    திருப்பூர்:

    ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த அவைத்தலைவர் துரைச்சாமி திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ம.தி.மு.க. இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியின் முன்னணி தோழர்களை ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்யக்கூறியதுடன், அவர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுதான் உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது. அப்படி என்றால் ஏற்கனவே நாம் தி.மு.க.வில் இணைந்துவிட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை.

    வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை. இனியும் ஒரு அமைப்பை வைத்து நடத்த முடியாது. தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்து அரசியல் செய்துவந்த என்னால் இனியும் உங்களுடன் பயணிக்க முடியாது.
    • உங்கள் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மை தொண்டர்களுக்காக கட்சியை உங்கள் காலத்திலேயே தி.மு.க.வுடன் இணைத்துவிடுவது நல்லது.

    திருப்பூர்:

    சமீபத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி எழுதிய கடிதத்தில், 'உங்களின் அண்மைக் கால நடவடிக்கைகளால், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. கட்சியின் நலன் கருதி ம.தி.மு.க.,வை தி.மு.க.,வுடன் இணைத்து விடுங்கள் என கூறியிருந்தார்.

    அவரது கடிதத்திற்கு பதிலளித்த வைகோ, 'தி.மு.க.,வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. துரைசாமி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார்.

    இந்தநிலையில் திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். இது குறித்து அவர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க. துவங்கப்பட்ட காலத்தில் இருந்து உங்கள் குடும்பத்தை சார்ந்த யாரும் கட்சி பதவிக்கு வர மாட்டார்கள் என்று தொடர்ந்து பேசி வந்தீர்கள். அதை தலைமைக்கழக நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் முழுவதுமாக நம்பினார்கள். பிற்காலத்தில் உங்களின் தவறான அரசியல் நிலைப்பாடு காரணமாக தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.வில் இணைந்து விட்டனர்.

    ம.தி.மு.க. துவங்கப்பட்ட காலத்திலிருந்து சட்ட மன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி மன்ற தேர்தல்களின் போது தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி என தனித்தனியாக நிதி திரட்டியுள்ளோம். ஆனால் நீங்கள் ஒருமுறை உயர்நிலைக்குழு கூட்டத்திலோ, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலோ, பொதுக்குழு கூட்டத்திலோ வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றதில்லை.

    பரந்த ஜனநாயகம் பேசிய நீங்கள், கட்சிக்கென்று பொருளாளர் இருந்தும், அவர் கையொப்பமின்றி நீங்களாகவே 17 ஆண்டுகளுக்கு மேலாக காசோலைகளில் தன்னிச்சையாக கையொப்பமிட்டு வங்கியில் பணம் எடுத்து வருகிறீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இது போன்ற தவறு நடக்கவில்லை.

    பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்று நீங்கள் முழங்கிவிட்டு அவற்றை மனசாட்சியின்றி காற்றில் பறக்கவிட்டு இப்படி சுயநலமாக நீங்கள் இருப்பீர்கள் என்று கழக தோழர்கள் யாரும் நினைக்கவில்லை.

    பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்து அரசியல் செய்துவந்த என்னால் இனியும் உங்களுடன் பயணிக்க முடியாது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மை தொண்டர்களுக்காக கட்சியை உங்கள் காலத்திலேயே தி.மு.க.வுடன் இணைத்துவிடுவது நல்லது. கடந்த 30 ஆண்டுகளாக ஏமாற்றியதை போல், இனியும் ஏமாற்ற வேண்டாம் என உங்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டு இன்று முதல் ம.தி.மு.க.வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட எல்லா பொறுப்புகளிலும் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் துரைசாமியின் கடிதத்துக்கு துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கிடையில் திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அவரிடம் துரை வைகோவின் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம். அவர் குற்றச்சாட்டு சொன்னாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தேவையில்லாமல் மற்றவர்களின் கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல தயாரில்லை என்றார்.

    • கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
    • வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க.வில் உட்கட்சிக்கு உள்ளேயே எழுந்துள்ள அதிருப்தி கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடலாம் என்ற கோரிக்கையாக உருவெடுத்து உள்ளது.

    இது தொடர்பாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு பகிரங்கமாகவே கடிதம் எழுதி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவரே அதிருப்தி அடையும் அளவுக்கு கட்சியின் நிலைமை மாறி இருக்கிறது.

    தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்ட பிறகு கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்ற பொருமல் இருந்து வருகிறது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு வைகோவின் முடிவுகளை எதிர்த்த மாவட்டச் செயலாளர்கள் செவந்தியப்பன் உள்பட 3 பேர் நீக்கப்பட்டார்கள்.

    தற்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் துரை வைகோ ஆதரவாளர்களை வெற்றி பெற செய்ய வேலைகள் நடப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    இப்படி கட்சிக்குள் எழுந்துள்ள மனக்கசப்பும் அதிருப்தியும் வைகோவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் தான் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியை தி.மு.க.வுடன் இணைந்து விடலாம் என்று கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தாங்கள் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டு வரும் நிலை குறித்து விரிவான கடிதங்களை எழுதியிருந்தேன். அதற்கு இன்று வரை தங்களால் பதிலேதும் சொல்ல இயலவில்லையா?

    லட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த தி.மு.க.வில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும் தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.விற்கே சென்றுவிட்டனர்.

    தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் ம.தி.மு.க.விற்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கழக தோழர்கள், தமிழகம் முழுவதும் பழைய கழக உறுப்பினர்களே தங்களை புதுப்பித்து கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதில் கழக தோழர்களிடம் தொய்வும், ஆர்வமும் குறைந்து உள்ளதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பட்ட சிரமங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.

    ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ம.தி.மு.க.வில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டியுள்ளது. இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை ம.தி.மு.க.விற்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலையில், விருதுநகர் மாவட்ட கழகம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அவருக்கே திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்ட கழக தோழர்களிடம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    எந்த அரசியல் கட்சியும் இப்படி பதவி கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றியதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறு மலர்ச்சிக்கு தான் என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க்கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது.

    வைகோவின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட முடிவெடுப்போம் என்று அதிருப்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் துரைசாமியின் கடிதத்துக்கு தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரது கடிதத்தை புறந்தள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    • மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை பேசினார்.
    • முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர்.

    சென்னை:

    மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயளலார் வைகோவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக கூறி உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் வைகோவின் சமீபகால குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர்.

    மகனை ஆதரிப்பதும் அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வைகோ இன்னும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது.

    இவ்வாறு திருப்பூர் துரைசாமி கூறி உள்ளார்.

    அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியின் இந்த கடிதம் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×