என் மலர்
உள்ளூர் செய்திகள்

வைகோவால் இனியும் கட்சியை நடத்த முடியாது- திருப்பூர் துரைசாமி பேட்டி
- மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என வைகோ கூறுகிறார்.
- நான் விலகுவதாக அறிவித்த பின்னர் எந்த தகவலும் கட்சியில் இருந்து வரவில்லை.
திருப்பூர்:
கட்சியின் நலன் கருதி ம.தி.மு.க.-வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டுமென அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்த வைகோ, 'தி.மு.க.-வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
துரைசாமி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார். இதையடுத்து திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் இருந்து விலகினார். இதனிடையே ம.தி.மு.க.வில் அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் ம.தி.மு.க. 29-வது பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் திருப்பூரில் இன்று துரைசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என வைகோ கூறுகிறார். அப்படியானால் எதுக்கு தனிக்கட்சி. தி.மு.க.வுடன் இணைக்க வேண்டியது தானே. வைகோவிற்கு இப்போதைய நிலையில் திறமை, ஆற்றல் இல்லை. இனியும் அவரால் கட்சியை நடத்த முடியாது.
நான் விலகுவதாக அறிவித்த பின்னர் எந்த தகவலும் கட்சியில் இருந்து வரவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க நான் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுகிறார்கள். 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்., வைகோ கையெழுத்து போடும்போது நானும் உடன் இருந்தேன். அப்படியிருக்கும் பட்சத்தில் எப்படி நான் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.