search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி ஆறு"

    • 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.
    • கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் மழை தண்ணீர் வடியவில்லை. இதனால் குக்கிராமங்களில் சிக்கி இருக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இன்று 60 படகுகளுடன் மீனவர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் பிற்பகல் முதல் கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.

    • ஆடி மாதத்தில் காற்று அடித்தால் வாழைகள் சரிந்து இழப்பு ஏற்படும்.
    • ஓரிரு ஆண்டுகளில் அந்த இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு விடுவார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையில் விவசாயிகள் வரலாறு காணாத இழப்புக்கு தள்ளப்பட்டு உள்ளனர். முந்தைய காலங்களில் ஆடி மாதத்தில் காற்று அடித்தால் வாழைகள் சரிந்து இழப்பு ஏற்படும்.

    ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அந்த இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு விடுவார்கள். ஆனால் தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வாழைகள் வேரோடு சரிந்து விட்டன. இன்னும் சில மாதங்களில் குலைதள்ளி பலன் கொடுக்க வேண்டிய வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் கண்ணீர் மல்க கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார்கள்.

    • எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம்.
    • 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதி.

    ஆம்னி பஸ்சில் சிக்கி தவித்த பெண் பயணி நந்தினி கூறியதாவது:-

    நான் கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து எனது 2 குழந்தைகளுடன் ஆம்னி பஸ்கள் சொந்த ஊரான குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றேன். 19-ந் தேதி காலை தூத்துக்குடி வந்தபோது மழை வெள்ளத்தால் ஊரே தத்தளித்து கொண்டிருந்தது.

    வெள்ளத்தில் மிதந்தபடி நாங்கள் வந்த பஸ் சிரமத்திற்கு இடையே மாற்று வழியில் ஏரல் அருகே உள்ள தென் திருப்பேரை வந்தது.

    அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

    எங்களை பின் தொடர்ந்து வந்த சுமார் 25 ஆம்னி பஸ்கள் வரிசையாக அங்கேயே நிறுத்தப்பட்டன. சுமார் 500 பேர் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் பரிதவித்தோம். 19-ந் தேதி மதியம் தென் திருப்பேரை பேரூராட்சியில் உணவு கொடுத்தனர். பின்னர் யாரும் கண்டு கொள்ளவில்லை. சாப்பாடு மற்றும் செல்போன் இணைப்பு கிடைக்காமல் மின்சாரமும் இல்லாத இடத்தில் இரவு முழுவதும் தவித்து வந்தோம்.

    யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று (20-ந் தேதி) தகவலறிந்து ஹெலிகாப்டர் மூலம் எங்களுக்கு உணவு பொட்டலங்களை வீசினர். அதில் பொட்டலங்கள் மழை வெள்ளத்தில் விழுந்தன.

    என்ன செய்வதென்று தெரியாமல் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம். வெள்ளம் வடிந்து வரும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு சில பஸ்களில் அனைவரையும் ஒன்றாக ஏற்றி நாசரேத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தோம். 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதியும் மகிழ்ச்சியும் உள்ளது என்று அவர் கூறினார்.

    • தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
    • நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசாங்க உதவிகள் கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார்.

    பின்னர் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதில் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. அதற்கான ஒரு முழு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை பொறுத்த வரை 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோன்று 17 மணி நேரம் தொடர்ச்சியாக மழையை சந்தித்த மாநிலம் கிடையாது எனினும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை நீர் நிலைகளில் இருந்து அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை.
    • நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    பெரு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறி உள்ளன. இன்னும் பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் உமரி காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் மூன்று நாட்களாக தங்கள் கிராமத்தினர் வெளியேற முடியாமலும் யாரும் உதவிக்கு வராமலும் தவித்துக் கொண்டிருப்பதாக தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதை பார்த்ததும் நேற்று நள்ளிரவில் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பியுள்ளார். கலெக்டரும் அதை பார்த்துவிட்டு உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்துள்ளார். நள்ளிரவிலும் தூங்காமல் பணியாற்றிய நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    • கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
    • சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.

    சென்னையில் இருந்து கடந்த 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்ற ஆம்னி பஸ்கள் இன்னும் சென்றடையவில்லை.

    தென்திருப்பேரியில் 24 பஸ்கள் சிக்கி கொண்டதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து அதில் உள்ள பயணிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் இயக்க முடியவில்லை.

    மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 50 ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. கடந்த 17-ந்தேதி புறப்பட்ட பஸ்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.

    அந்த பஸ்களை இதுவரையில் வெளியே எடுக்க முடியவில்லை. பஸ்சின் பாதி அளவிற்கு வெள்ளம் புகுந்ததால் சேதம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடியாததால் 2 நாட்களாக மீட்க முடியவில்லை. இன்று தான் அவற்றை வெளியே எடுக்க வேண்டும். தற்போது மழை நின்று வெள்ளம் வடிந்து வருவதால் சிக்கிய பஸ்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து 3 நாட்களாக சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து புறப்படடு செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் தூத்துக்குடி சுங்கசாவடி வரை தற்போது இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு சேவை சீராகி விட்டது. வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது. மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து இன்னும் ஆம்னி பஸ் சேவை முழுமையாக தொடங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது.

    தென் மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை விடாமல் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது.

    குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு இடங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் நகரப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் என 2 மாவட்டங்களிலும் திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    மேலும் வெள்ளநீர் விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும்.

    இந்த மாவட்டத்தில் ஜூன் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடி மற்றும் நவம்பர்-பிப்ரவரி வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான சாகுபடியும் செய்யப்படுகிறது.

    இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிரதான பயிராக நெல்லும், அடுத்தபடியாக பயிறு வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது.

    தாமிரபரணி ஆற்று பாசனம் மூலம் மானூர், பாளை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த சாகுபடி பரப்பில் நன்செய் நெல் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.

    மானாவாரி பகுதிகளில் நீர் ஆதாரம் இருக்கும் பகுதிகளிலும் கூட நெற்பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், பயறு, நிலக்கடலை, எள், தென்னை, வாழை, மிளகாய் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் கார் பருவ சாகுபடியானது சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடைபெறும்.

    தொடர்ந்து முக்கியமான பருவ சாகுபடியாக கருதப்படும் பிசான பருவ சாகுபடி காலகட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் நடைபெறும்.

    இவ்வாறாக தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    இவை தவிர தாமிரபரணி ஆற்று நீர் பாசனம் அல்லாமல் மற்ற பாசனங்கள் வழியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையம், ராதாபுரம், திசையன்விளை என மற்ற பகுதிகளில் அணைகளின் நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் 2 நாட்களாக பெய்த பெரும் மழை காரணமாக அணைகளில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது.

    இது தவிர ஏராளமான குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டு வயலுக்குள் புகுந்ததால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகி வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் திடியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயி கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை காரணமாக குளங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் கடன் வாங்கி ஏராளமானவர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது பெய்த பெருமழையால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகிவிட்டது.

    பொதுவாக நெல் நடவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு உழவு செய்து மரம் அடிக்க ரூ.6 ஆயிரம் வரை டிராக்டருக்கு செலவாகிறது.

    அதன்பின்னர் வரப்பு வெட்டுவதற்கு ரூ.1,800-ம், நாற்று நடுவதற்கு வேலையாட்களுக்கு கூலியாக ஏக்கருக்கு ரூ.3,600 வரையிலும் செலவாகிறது. முன்னதாக நெல் விதை வாங்கி நாற்று வளர வைக்க ரூ.1,800 செலவாகிறது.

    அதன்பின்னர் நெல் நாற்று நடும்போதே அதற்கு அடி உரமாக ரூ.1,350 மதிப்பிலான டி.ஏ.பி. உரம், 266 ரூபாய்க்கு யூரியா உள்ளிட்டவையும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் களை பறிக்க ரூ.3 ஆயிரம் வரை கூலியாக கொடுக்க வேண்டியுள்ளது.

    இதேபோல் 3 முறைகளை பறித்தல், மருந்து அடித்தல், உரம் போடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் கடந்து நெல் விளைந்தவுடன் எந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஏக்கரை அறுவடை செய்ய 1 1/2 மணி நேரம் வரை ஆகிறது. இதற்கு கூலியாக ரூ.3,600 செலவு செய்ய வேண்டியுள்ளது.

    தற்போது நாங்கள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நாற்று நட்ட நிலையில், மழையால் அவை மூழ்கி நாசமாகி விட்டது. இந்த நிலங்களில் மீண்டும் உழவு செய்து நாற்று நட்டாலும், அவை நல்ல மகசூல் தராது. காலம் கடந்து விட்டதால் இனி விதை நெல் வாங்கி நாற்று பாவ முடியாது. மார்கழி மாத பயிறு மண்ணுக்கு ஆகாது என்பார்கள். எனவே இனி நாங்கள் நாற்று வாங்கி நடும்போது புகையான் உள்ளிட்ட நோய் தாக்குதல் தான் ஏற்படும்.

    எனவே அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களில் பெய்த மிக கனமழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

    வாழை, நெல் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. குளம், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விளைநிலங்களில் இன்னும் 1 ஆண்டுக்கு விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாது. எனவே ஒரு விவசாயி குடும்பத்துக்கு மாதம் தோறும் ரூ 10 ஆயிரம் என 1 ஆண்டுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.
    • மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.

    தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு:-

    1. ஐஸ்வர்யா இஆப கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830.

    2. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி தொலைபேசி எண். 9943744803 3. அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155 உதவியாளர் (பொது).

    இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைக்க அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப தொலைபேசி எண். 9442218000.

    அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.

    1. கிஷன் குமார். இஆப உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி தொலைபேசி எண் 9123575120 2. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி. தொலைபேசி எண் 9940440659. இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    • ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
    • தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆழ்வார் திருநகரி பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கின.

    ஸ்ரீவைகுண்டம்:

    வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அதிகனமழை பெய்தது.

    பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கிராமத்தை சுற்றிலும் தண்ணீர் நின்றதால் தனித்தீவாக மாறியது. இதனால் கிராம மக்கள் வெளியேற முடியவில்லை.

    இதற்கிடையே நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் அவரது மகன் உதயகுமார் ஆகியோர் கோழிப்பண்ணையில் வெள்ளம் சூழ்ந்ததால் அதில் உள்ள கோழிகளை திறந்து விடுவதற்காக சென்றனர். சிறிது நேரத்தில் ஆற்றின் வெள்ளம் அதிகரித்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தர்மலிங்கமும் அவரது மகன் உதயகுமாரும் அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறினர். ஆனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்ததால் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை.

    இதனால் அவர்கள் நேற்று காலை முதல் தண்ணீர், உணவு இன்றி விடிய விடிய மரத்திலேயே தவித்தபடி இருந்தனர். கிராம மக்கள் மீட்க முயன்றும் தண்ணீர் அதிக அளவு சென்றால் முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து கிராமத்தை சூழ்ந்த வெள்ள நீரும் வற்ற தொடங்கியது. இதன் பின்னர் இன்று காலை தர்மலிங்கமும் அவரது மகன் உதயகுமாரும் மரத்தில் இருந்து இறங்கி பத்திரமாக திரும்பி வந்தனர்.

    மரத்தில் தந்தை-மகன் சிக்கி இருப்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார், வெள்ளமீட்பு குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காலை முதல் தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    கிராமத்தை சுற்றிலும் வெள்ள நீர் செல்வதால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்குள்ள பள்ளிக்கூடம், கோவிலில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆழ்வார் திருநகரி பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கின. இங்கும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வீட்டுமாடியில் தஞ்சம் அடைந்து உள்ளனர். ஆழ்வார்திருநகரி-ஆழ்வார்தோப்பு மேம்பாலத்தை மூழ்கடித்து சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது. இன்று காலை வெள்ளம் சற்று குறைந்து உள்ளது. இதேபோல் பால்குளம், கேம்லாபாத், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, ஏரல், குரும்பூர், உமரிக்காடு உள்ளிட்ட கிராமங்களிலும் மழை வெள்ளத்தால் உதவி கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    • 300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது.
    • ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3-வது நாளாக தவித்து கொண்டிருக்கும் 500 பயணிகளையும் மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    திருச்செந்தூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் மழையில் சிக்கியது.

    300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது. எனவே அவர்களை மீட்க முடியவில்லை.

    ஒரு பக்கம் பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி ஆறு. மற்ற மூன்று பக்கமும் அளவுக்கு அதிகமான வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு குழுவினரால் நெருங்க முடியவில்லை. இன்று 3-வது நாளாக ரெயிலிலேயே தவிக்கிறார்கள்.

    சூலூர், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கடற்படை, விமானப்படையை சேர்ந்த 7 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி ரெயிலில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை இன்று ஹெலிகாப்டரில் மீட்டனர். அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகள் அளிக்கப்பட்டன. பின்னர் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் உள்பட 55 பெண்கள், 19 சிறுவர்கள், 3 கைக்குழந்தைகளை ராணுவத்தினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் பெட்டிகளில் இருக்கும் பயணிகளுக்கு இன்று காலையில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

    இன்று மாலைக்குள் அனைவரையும் மீட்பதற்கு முப்படைகளும் ஒருங்கிணைந்து வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவாக மீட்பு பணி தொடங்கும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
    • பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் பெய்த மிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் முற்றிலுமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சுமார் 3,500 பேர் நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகர பகுதியில் மட்டும் 12 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு உதவினர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

    இன்று மழை குறைந்துவிட்டதால் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. சந்திப்பு சிந்துப்பூந்துறை உள்ளிட்ட பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. சுமார் 20 படகுகள் மூலமாக பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 36 கிராமங்கள் மற்றும் 2 பேரூராட்சிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பொதுமக்களின் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

    • வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.
    • சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    தென்காசி:

    கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

    மெயின் அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவி மேல் பகுதியில் இருந்து மரத்துண்டுகள், பாறைகள் மற்றும் மண் அடித்து வரப்பட்டுள்ளது. மேலும் அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் முற்றிலும் குறைந்த பின்னர் அருவிப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

    ×