என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamiraparani river"

    • முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது குளிக்க வரும் பொதுமக்கள் ஆற்றுக்குள் விட்டுச் சென்ற கந்தல் துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

    முக்கூடல்:

    முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளிக்க வரும் பொதுமக்கள் ஆற்றுக்குள் விட்டுச் சென்ற கந்தல் துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

    மேலும் ஆற்றின் கரைகள் மற்றும் தண்ணீரில் கிடந்த மது பாட்டில்களையும் அவர்கள் அகற்றினர். இதில் சுமார் 1½ டன் அளவிலான குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதாக தன்னார்வலர்கள் தெரி வித்தனர். மது பாட்டில்கள் மற்றும் கண்ணாடி துண்டுகளை சமூக விரோதிகள் ஆற்றுக்குள் வீசுவதால் அப்பகுதியில் குளிக்க வரும் பொது மக்க ளுக்கு காயம் ஏற்பட்டு மிகுந்த சிரம த்திற் குள்ளவ தாகவும் அவர்கள் கூறினார். தாமாக முன் வந்து ஆற்றை சுத்தம் செய்த தன்னார் வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
    • நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தப்பகுதி களுக்கு செல்லக்கூடிய குடிநீர், தற்போது சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் குடிக்க முடியாத நிலைக்கு மாறி வருவதாக புகார் எழுந்து வருகிறது.

    மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

    நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதியான மீனாட்சி புரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து நெல்லை மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    நெல்லை மாநகரப் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நீண்டகாலமாக புகார்கள் உள்ளது. இதை தடுக்க ரூ.295 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

    ஒரு குழுவை அமைத்து மாநகராட்சி பகுதியில் தாமிர பரணி ஆற்றின் நதிக்கரைகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்க உள்ளோம். மேலும் அந்தந்த பகுதியில் கழிவுநீர் ஓடைகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். மேலும் அவர்கள் வீட்டிற்கு அருகே பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் பாதாள சாக்கடை திட்டத்தில் உடனடியாக அந்த இணைப்புகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீண்டும் அதேபோல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாங்களே அவர்கள் வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

    ஆய்வின்போது, முன்னாள் மண்டல சேர்மனும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், கண்ணன், செல்வம், சிவா, போஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு நாள் ஆகும்.
    • தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு நாள் ஆகும். ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந்தேதியை குறிக்கும்.

    இந்த நாளில் பெண்கள் தங்களது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆற்றங்கரை யோரம் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். பெண் குழந்தைகளுக்கு கழுத்திலும், ஆண்களுக்கு கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விடுவார்கள்.

    திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர். இதன் மூலமாக அவர்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளான இன்று நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் நதிக்கரைகளில் தாலி பிரித்து கோர்த்தனர். இளம் வயது பெண்கள், சுமங்கலி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது.
    • மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை தாமிரபரணி ஆற்றில் சில இடங்களில் அடிக்கடி கழிவு நீர் கலந்து ஓடுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது. அந்த சாக்கடை தண்ணீர் மேலநத்தம் பகுதியில் நேரடியாக ஆற்றில் கலந்து நீர், கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இன்று காலை ஆற்றில் குளிக்க சென்ற பொது மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாக்கடை நீர் கலப்பது குறித்து அந்தப் பகுதி கவுன்சிலரிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலநத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் செல்லும் நீரை பாட்டில்களில் பிடித்து வைத்துள்ளனர். அதனை கலெக்டரிடம் காண்பித்து நிரந்தர தீர்வு காண மனு அளிக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, இதுபற்றிய தகவல் என்னுடைய கவனத்திற்கு காலையில் வநதது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி சாக்கடை நீர் தாமிரபரணி நதியில் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    • மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக அம்பையில் 49 மில்லி மீட்டரும், கருப்பா நதி பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 32 மில்லி மீட்டரும், கடம்பூரில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    இதே போல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, நாங்குநேரி, கடனாநதி பகுதி, ராமநதி பகுதி குண்டாறு பகுதி, கொடு முடியாறு பகுதி, அடவி நயினார் அணைக்கட்டு, சங்கரன்கோவில், சிவகிரி, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிர பரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது.

    இந்நிலையில் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டை கடந்து தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவை குண்டம் அணை கட்டு பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிர பரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்ட தாமிரபரணி பகுதிகளை கடந்து தண்ணீர் செல்வதால் நெல்லை மாவட்டத்திலும் தாமிர பரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், முடிந்த அளவு கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 120.70 அடியாக உள்ளது. அணைக்கு 870.509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதே போல் மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 86.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 133.89 கன அடியாகவும் உள்ளது. இதே போல் தென்காசி மாவட்ட அணைகளை பொறுத்த வரையில் குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 113.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.88 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. கடனா நதி அணை 81.40 அடியாக உள்ளது.

    • தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
    • பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் பெய்த மிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் முற்றிலுமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சுமார் 3,500 பேர் நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகர பகுதியில் மட்டும் 12 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு உதவினர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

    இன்று மழை குறைந்துவிட்டதால் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. சந்திப்பு சிந்துப்பூந்துறை உள்ளிட்ட பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. சுமார் 20 படகுகள் மூலமாக பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 36 கிராமங்கள் மற்றும் 2 பேரூராட்சிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பொதுமக்களின் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

    • இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.
    • புனித தோமையார் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    தமிழ்நாட்டில் தமிழ்மொழி முதன்முதலாக அச்சேறிய இடம், வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள புன்னக்காயல்.

    வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் தாமிரபரணி ஆறு 5 கிளைகளாக பிரிந்து கடலில் ஐக்கியமாகிறது. அவற்றின் நடுவில் கடலின் முகத்துவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கேரள மாநிலம் முசிறி துறைமுகம் வந்தடைந்து கிறிஸ்தவத்தைப் போதித்தார். பின்னர் தமிழகத்திலும் வேதத்தைப் போதித்தார்.

    அவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் புன்னக்காயலில் அவரது நினைவாக ஆலயம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில், ஏராளமான புதுமைகள் நிகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் புன்னக்காயலுக்கு வந்து, புனித தோமையார் ஆலயத்தில் வழிபட்டு செல்கின்றனர்.

    உள்ளூர் மக்கள் தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளின் வழியாகவும் நடந்தே புனித தோமையார் ஆலயத்துக்கு செல்கின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் படகில் பயணித்து புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபடுகின்றனர். தவக்காலத்தில் ஏராளமானவர்கள் இங்கு வந்து புனிதரை தரிசிக்கின்றனர். இங்கு புனிதர் நிகழ்த்திய அற்புதம் ஏராளம்.

    முன்பு தாழ்த்தப்பட்ட மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தினர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்த புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபட்டதும் அவர்களின் நோய் நீங்கிற்று.

    இதையடுத்து அந்த குடும்பத்தினர் நேர்த்திக்கடனாக ஆலயத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்காக அசைவ உணவு சமைத்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட பிற மதத்தினர் சமைத்த உணவு என்பதால் அதனை சாப்பிட யாருமே செல்லவில்லை.

    இதனால் வருத்தம் அடைந்த அந்த குடும்பத்தினர், தாங்கள் தயாரித்த உணவை, ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மண்ணில் குழி தோண்டி, பாத்திரங்களுடன் புதைத்துச் சென்றனர்.

    இதையடுத்து சில நாட்களில் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது புன்னக்காயல் ஊரையே தண்ணீர் சூழ்ந்தது. உடைமைகளை படகில் ஏற்றிக்கொண்டு மக்கள் கடலின் முகத்துவாரம் வழியாக வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கினர்.

    அவர்களில் பெரும்பாலானோர் முகத்துவாரத்தில் உள்ள புனித தோமையார் ஆலயத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் ஆலய வளாகத்தில் அடுத்தவேளை உணவின்றி, கடும் பசியுடன் துயருற்று சோர்வுடன் கண் அயர்ந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், "ஏன் உணவில்லாமல் அனைவரும் வாடுகிறீர்கள்? இங்குதான் அனைவருக்கும் தேவையான உணவு உள்ளதே?" என்று ஓரிடத்தை காட்டி விட்டு மறைந்தார்.

    அப்போது அங்கு சுடச்சுட சாதம் வடித்து, கறிக்குழம்பு வைத்த மணம் நிலத்துக்கு அடியில் இருந்து வெளிப்பட்டது. அந்த இடத்தை தோண்டியபோது, அங்கு ஏற்கனவே தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் புதைத்து வைத்திருந்த சாப்பாடு, கறிக்குழம்பு நெடுநாட்களாகியும், கெட்டுப் போகாமல் அப்போது சமைத்த நிலையிலேயே சுடச்சுட ஆவி பறந்து கொண்டிருந்தது.

    அதனை எடுத்து சாப்பிட்டு பசியாறிய மக்கள், மேலும் 2 நாட்கள் வைத்து அவற்றை ருசித்து சாப்பிட்டனர். அதற்குள் வெள்ளமும் முழுமையாக வடிந்ததால் மக்கள் தங்களது வீடுகளுக்கு படகுகளில் திரும்பிச் சென்றனர்.

    சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சமத்துவமாக வாழ, புனித தோமையாரே நேரில் வந்து தங்களுக்கு உணர்த்தியதாக அவ்வூர் மக்கள் இன்றும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதேபோன்று எண்ணற்ற புதுமைகளை புனிதர் நிகழ்த்தியதாக தெரிவிக்கின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளை மக்கள் கடந்து செல்லும்போது, யாரேனும் வழி தவறி சென்றால், அவர்களுக்கு முன்னால் நாய்கள் நீந்திச் சென்று ஆலயத்துக்கு வழிகாட்டி அழைத்து வந்து சேர்ப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே சாதுவான நாய்கள் சுற்றித் திரிவதை எப்போதும் காண முடியும். ஆற்றைக் கடக்கும்போது பாதைக்காக ஆங்காங்கே கொடிகளை நட்டு வைத்துள்ளனர். புனித தோமையார் ஆலயத்தின் முகப்பில் 2 சிலுவைகள் உள்ளன.

    அவற்றில் ஒரு சிலுவையை தோமையார் நிறுவி வழிபட்டதாகவும், மற்றொரு சிலுவை கடலில் மிதந்து வந்ததாகவும், அதனை ஆலயத்தில் நிறுவி வழிபடுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    • ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர், களக்காடு, அம்பை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, மேலச்சவல் பத்தமடை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    முக்கூடல் பகுதியில் இருந்து கடையம் நோக்கி செல்லும் சாலையில் இடை கால் அருகே சாலையில் முழங்கால் அளவுக்கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று இரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    24 மணி நேரமாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந் துள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை 2 நாட்களாக பெய்து வருவதால் களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அம்பை சுற்றுவட்டாரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதே போல் பாப்பாக்குடி, இடைகால், சீதபற்ப நல்லூர், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வீரவநல்லூர் பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் சரகம் புதூர் அருகே நான்கு வழி சாலையில் உள்ள முதியோர், பெண்கள் காப்பகம் ரோட்டின் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழை தண்ணீர் சூழ்ந்தது. முதியோர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    நெல்லை மாநகரப் பகுதியில் நெல்லையில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாநகரில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக டவுன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    டவுன் முகமது அலி தெருவில் நேற்று நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் தெரு, செண்பகம் பிள்ளை தெரு உள்ளிட்ட ஏராளமான தெருக்களில் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    காட்சி மண்டபம் அருகே உள்ள ஊசி மாடன் கோவில்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கி கிடந்தது. நெல்லையப்பர் கோவிலில் வடக்கு மண்டபம் பகுதியில் தண்ணீர் புகுந்தது.

    டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தபடி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பாளையங்கோட்டை பகுதியிலும் மனக்காவலம் பிள்ளை நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. அதிகாலையில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தங்கள் குழந்தைகளுடன் கடும் சிரமத்துக்கு இடையே பொதுமக்கள் வெளி யேறினர்.

    இதேபோல் கே.டி.சி நகரில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகரின் விரிவாக்க பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கிடப்பதால் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சுமார் 2000 வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று இரவு வரை பெய்த மழையிலேயே பஸ் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள சிந்து பூந்துறை தெருவில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர். அங்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வங்கி கட்டிடத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பேட்டை பழைய பேட்டை இணைப்பு சாலையில் வெள்ளநீர் கரை புரண்டு வருவதால் அங்குள்ள ஆதாம் நகர் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    இதேபோல் மாநகரின் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அவற்றை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று அப்புறப்படுத்தி னர். ஒரு சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டாலும் மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அவற்றை சரி செய்தனர்.

    டவுன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் அந்த சாலை ஆனது துண்டிக்கப்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைய ஆரம்பித்த நிலையில் ஏராளமான பொது மக்கள் தரைபாலத்தை பார்வையிட்டனர்.

    இதே போல் ஆபத்தை உணராமல் வண்ணார் பேட்டை கொக்கிரகுளம் ஆற்று பாலம், வடக்கு புறவழிச்சாலை ஆற்று பாலங்களில் நின்றபடி வெள்ளத்தை கண்டு ரசித்தனர். ஏராளமானார் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டதையும் காண முடிந்தது.

    கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை இடை விடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கோவில்பட்டி நகர் முழுவதும் சாலை களில் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள கார் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

    அப்பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் மழை நீர் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து இருந்துள்ளனர். தங்களது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர்.

    பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குறிஞ்சான் குளத்திற்கு செல்ல வேண்டிய மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. அதுமட்டுமல்லாது இ.எஸ்.ஐ.மருந்தக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீரும் வீடுகளுக்குள் புகுந்து வரும் சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

    கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் தெரு பகுதியில் உள்ள 20 வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், கியாஸ் சிலிண்டர் அனைத்துமே மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் புது ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பலத்த மழையின் காரணமாக இனாம் மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்கள் முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் இளையரசனேந்தல் சாலையில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியாமல் உள்ளன. மேலும் அண்ணா பஸ் நிலையத்திற்குச் சென்ற அரசு பஸ் மழைநீரில் சிக்கி வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளது.

    அதேபோன்று அப்பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க், லாரி செட்டுகள், தனியார் நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்திலும் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை இன்று காலை 9 மணி வரையிலும் பரவலாக பெய்தது. சிறிது நிமிடங்கள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் வறண்டு கிடந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அந்த குளங்களில் 70 சதவீதம் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    ஏற்கனவே குறைந்த அளவு தண்ணீர் கிடந்த குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளது.

    பல ஆண்டுகளாக நிரம்பாத குளங்கள் கூட நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரு சில இடங்களில் கோவில்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நேர் புகுந்தது. 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் சாலை துண்டிக்கப்பட்டது. அங்குள்ள புது குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பிய நிலையில் மறுகால் பாய்ந்ததால் மெயின் ரோட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    ஆலங்குளம் பஞ்சாயத்து அலுவலக தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியில் தெருக்களில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

    சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்ததன் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பியது. முக்கிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இது தவிர தென்காசி மாவட்டம் ராமநதி, கடனாநதி அணைகளில் இருந்தும் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் மூலமாகவும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வருவதால் இன்று காலை நிலவரப்படி 60 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

    இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தி உள்ளார். 

    • தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
    • தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.

    வி.கே.புரம்:

    நெல்லை மாவட்டம் அம்பை, முக்கூடல், வீரவநல்லூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் 50 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் முக்கூடல் பகுதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நீரேற்று நிலை யத்திற்கு அங்கு பணி யாற்றும் ஊழியர்களான ராஜரத்தினம், லோகராஜ், சங்கர சுப்பிரமணியன், சங்கர நாராயணன் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத்குமார் தலைமையில், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அவர்கள் கயிறு கட்டி, கடும் வெள்ளத்தில் நீரேற்று நிலையத்திற்குள் சென்று அங்கு சிக்கியிருந்த 4 பேரையும் அதே கயிறு மூலமாக பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி இன்று நடைபெற்றது.
    • பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி இன்று நடைபெற்றது.

    மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால் சென்னை யில் இருந்து பயிற்சி அளிப்பதற்காக பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாநகர போலீசாருக்கு கடந்த 2 நாட்களாக எழுத்துத்தேர்வு பயிற்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கிய வர்களை மீட்பது எப்படி என்பது குறித்து இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது படகில் எவ்வாறு சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் போலீசாருக்கு எடுத்துரைத்தனர்.

    • மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
    • அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர் அரசு விருந்தினர் மாளிகை அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து சென்று தாமிரபரணி ஆற்றில் மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவத்தின் 23- வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தாமிரபரணி ஆற்றில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் நீலகிருஷ்ணமுரளி யாதவ், மாவட்ட செயலாளர் குட்டி என்ற வெங்கடாசலபதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் லெட்சுமணன் தலைமையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் காசி விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் உடையார், மாநகர தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் பொதுச்செயலாளர் பால முருகன் நிர்வாகிகள் முத்து கருப்பன், பிரேம்குமார், பால்ராஜ், பச்சை தங்கவேலு. சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் நெல்லையப்பன், துரைபாண்டியன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். தமிழர் விடுதலை களம் சார்பில் முத்துகுமார், தமிழர் உரிமை மீட்பு களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை ெசலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து சென்று தாமிரபரணி ஆற்றில் மரியாதை செலுத்தினர்.

    ×