search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி ஆறு"

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி பாளை சீவலப்பேரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த உரை கிணறுகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

    பின்னர் சிவந்தி பட்டியில் உள்ள நெடுஞ் சான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் அதனையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, வேளாண்துறை, நீர்வளத் துறை என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் ஒன்றிணைந்து சீரமைப்பு பணிகளில் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    சீவலப்பேரி பகுதியில் ஆய்வு செய்த பின்னர் தற்போது சிவந்திபட்டியில் குளம் உடைந்த பகுதியை ஆய்வு செய்துள்ளேன்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 328 உடைப்புகள் இதுவரை சரி செய்யப்பட்டுள்ளன.


    மீதமுள்ள குளங்களில் உடைப்புகளை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவந்திப்பட்டியில் ஏற்பட்டுள்ள குளம் உடைப்பு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குளங்கள் அடைக்கப்பட்டு சரி செய்யப்படும். நீர்வளத் துறை மூலமாக மீண்டும் இந்த குளங்களுக்கு அந்தந்த அணைகள் மூலமாக தண்ணீர் நிரப்பி விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யப்படும்.

    சாலைகளை பொறுத்த வரை இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 175 இடங்களில் சாலைகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 150 இடங்களில் சாலைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளோம். அதன் பின்னர் சாலைகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.

    அதேபோல் மின்சார இணைப்புகளை பொருத்த வரை நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று 2 இடங்களில் மட்டும் வெள்ளம் வடியாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் மின்விநியோகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

    இதுபோல் தூத்துக்குடி பகுதியிலும் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்விநியோகம் வழங்கப்பட வேண்டி உள்ளது. ஏரலில் இரவு முழுவதும் மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையிலும் அனைவரும் ஒன்றிணைந்து இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு மின் வினியோகம் வழங்கி உள்ளனர்.

    இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், கால்நடை துறை உள்ளிட்டவையும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரை தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் 2 மாவட்டங்களிலும் உள்ள 101 கூட்டு குடிநீர் திட்டங்களில் 71 திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் 34 திட்டங்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இன்னும் 36 திட்டங்கள் சரி செய்யப்பட வேண்டி உள்ளது.

    வெள்ளத்தால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளை பொறுத்தவரை இதுவரை நெல்லை மாவட்டத்தில் 13 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேரும் இறந்துள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தால் இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

    அதன் பின்னர் முழுமையான விவரம் தெரியவரும். இது தவிர நெற்பயிர்கள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்தது தொடர்பான கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறு வணிகர்கள், தொழிற்சாலை உள்ளிட்டவர்களின் பாதிப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் பின்னர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து அரசு உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கும். இது போன்ற வணிகர்கள் மற்றும் தொழிற் சாலை நிறுவனங்களுக்கு அரசு நேரடியாக உதவுவதை தவிர வங்கிகள் மூலமாகவும், காப்பீடு திட்டங்கள் மூலமாகவும் உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த கால கட்டங்களில் கேரளாவுக்கு நிவாரண பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து அதிக உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது கேரளாவில் இருந்து நீர்வளத்துறைக்கு டெக்னிக்கல் குழு இங்கு வந்துள்ளது. அவர்கள் குடிநீர் சப்ளை பணிகளுக்கு தேவையான அனைத்து சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
    • பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளம் பாதித்துள்ள மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடியில் ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் பல பகுதிகளில் தேங்கிய மழை நீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. இதனால், கடும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்த பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள ராட்சத மோட்டார்களை உடனடியாகக் கொண்டு சென்று தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தற்போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்றவற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் துவங்கிட இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்.
    • தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஒரு வேளை உணவு, குடிநீர், பால், உறைவிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நானும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் அவர்களை தினசரி சந்தித்து எங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.

    கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் இது. வெள்ள நிவாரண பணியில் தமிழக அரசின் செயல்பாட்டை எடை போட்டு பார்க்க கூடாது.

    அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண நிதியை விட அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று நெல்லை வந்தார்.

    அவர் பாளை வெள்ளகோவில் பகுதியில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அந்த பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது. அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக கொடுக்கக்கூடிய 6000 ரூபாயை ரேசன் கார்டு அடிப்படையாகக் கொண்டு கொடுக்காமல் கியாஸ் சிலிண்டர் முகவரிகளை கணக்கில் கொண்டு அதன்படி கொடுக்க வேண்டும்.

    மேலும் நிவாரணமாக கொடுக்கக்கூடிய ரூ.6 ஆயிரம் என்பது பொதுமக்களுக்கு போதாது. எனவே அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் நேரடியாக சென்று விசாரித்து பாதிப்பை அறிந்து பொதுமக்களிடம் கேட்டு கொடுக்க வேண்டும். வானிலை மையத்தை தமிழக அரசு குறை சொல்லக்கூடாது. உலக அளவில் சவால் விடும் வகையில் இந்தியாவின் வானிலை மையம் நவீன கருவிகள் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது.
    • வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதத்தை விளைவித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை பெய்து ஏற்பட்ட வெள்ளம் கடந்த ஒரு வாரமாகியும் இதுவரை பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. இன்றளவும் மாநகரின் முக்கிய பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அங்கு படிப்படியாக குறைந்து தற்போது முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

    மாவட்டத்தில் நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-தூத்துக்குடி பிரதான சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களாக பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் இந்த வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதுதவிர திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்படுகையையொட்டிய பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆழ்வார்தோப்பு, ஏரல், பழைய காயல், புன்னக்காயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் தனித்தீவுகளாக காட்சியளித்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


     அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் கிராம சாலைகள், நகர்ப்புற சாலைகள், ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்ட வைகளும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவற்றை கணக்கெடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் பணிகள் நடக்கிறது. அதன்பின்னர் பாலங்கள், சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. ஒரு சில கிராமங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஒரு வாரமாகியும் இதுவரையிலும் பொதுமக்கள் இருளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் வரையிலும் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்து முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் ஆய்வு செய்து வெள்ள நிவாரணமும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொன்னன்குறிச்சி, வல்லநாடு, முறப்பநாடு, அகரம், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மின்மோ ட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனால் காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி பல்லாயிரம் கன அடி நீர் வீணாக ஆற்றில் கலக்கும் சூழ்நிலையிலும் அப்பகுதி மக்கள் குடிக்க ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

    இதனால் ஆற்றில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்யும் பணி, கோரம்பள்ளம் ஆறு, சிற்றாறு பகுதிகளில் பாதிப்பை சரி செய்யும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி, கோவை, மதுரை மண்டலங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 12 செயற்பொறியாளர்கள், 20 உதவி செயற்பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    படிப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு முழுமையாக இயல்புநிலை ஏற்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள், இது தவிர களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்டவைகள் வெள்ளத்தால் கடுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் அதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களாக வெள்ள சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையான கணக்கெடுப்பு முடிந்த பின்னர் கலெக்டரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. அதன்பின்னரே வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.

    இதற்கிடையே வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த கிராமங்களிலும் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு விநியோகம் சீரடைந்துள்ளது. மாவட்டத்தில் இன்று சுமார் 110 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகிறது.
    • தூத்துக்குடி நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் அடைந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அந்த வகையில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், முக்காணி, வாழ வல்லான் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் தூத்துக்குடியில் ஆய்வு செய்தார். கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.

    இதற்கிடையே உடைப்பு ஏற்பட்ட தாமிரபரணி ஆற்றின் கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்தை இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    அப்போது குளம் உடைப்பு ஏற்பட்டது குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடமும் விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனமழை பெய்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகிறது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    அடிப்படை வசதிகளான மின் கம்பம் சீரமைப்பு, சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    மழை, வெள்ளத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகர மற்றும் ஊரக பகுதிகளில் சீரமைப்பு, நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ரூ.12 கோடியில் கோரம்பள்ளம் குளம் சீரமைக்கப்பட்ட நிலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமான இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் பழுதடைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், சமீபத்தில் சென்னையில் பெய்த மழை வெள்ளத்தில்போது வாகனங்கள் பழுதடைந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து முகாம்கள் அமைத்து பாதிக்கபட்ட வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து முகாம் அமைத்து சீரமைப்பு பணிகள் நடத்தப்படும் என்றார்.

    • பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது.
    • பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்களாக விடாமல் பெய்த பெரு மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக மாறின. மழை ஓய்ந்ததை தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏரல் பகுதியில் பாலம் உடைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    அங்கு தற்காலிகமாக மாற்று சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதே போல ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அவற்றை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    தூத்துக்குடியில் 112 இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதில், 84 இடங்களில் சாலைகள் செப்பனிடபட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு உள்ளது.


    திருச்செந்தூர், பாளையங்கோட்டை சாலையில் 3 இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்தன. தற்போது 2 இடங்கள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் 3 மீட்டர் நீளத்திற்கு சாலை உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனை சீரமைக்க பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

    ஏரல் பாலமும், ஆத்தூர் பாலமும் ரூ.19.94 கோடி ரூபாய் மதிப்பில் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன. அணுகு சாலை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு விட்டது. அப்பகுதியில் தரைப்பாலம் உறுதியாக இருக்கிறது.

    நெல்லை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது. அதில், ஒரே ஒரு தூண் மட்டுமே கீழே இறங்கி உள்ளது. என்ஜினீயர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப குழுவை உடனடியாக வரவழைத்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தரைப்பாலம் வழியே வாகனங்கள் செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 95 சென்டி மீட்டர் மழை பெய்ததால் சாலைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் 46, தூத்துக்குடி மாவட்டத்தில் 112, தென்காசி மாவட்டத்தில் 13, விருதுநகர் மாவட்டத்தில் 13, நாகர்கோவிலில் 5 சாலைகள் என நெடுஞ்சாலை துறையை பொறுத்த வரை ரூ.1000 கோடி அளவுக்கு சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 65 இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.
    • வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிகன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.

    6 நாட்கள் ஆகியும் இன்று வரை சில பகுதிகள் இன்னும் வெள்ளப்பாதிப்பில் இருந்து மீளவில்லை. அதில் புன்னக்காயல் கிராமமும் ஒன்று. இந்த கிராமத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலுக்கு சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. தாமிரபரணி கரையோர கிராமமான இங்கு கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புன்னக்காயல் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 அடிக்கும் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் தற்போதும் சில பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் புன்னக்காயலில் மட்டும் இன்று வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.


    இதனால் அங்கு செல்ல முடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு செல்ல முடியாமல் புன்னக்காயல் தனித்தீவாக காட்சியளிக்கிறது.

    பலத்த சேதம் அடைந்துள்ளதால் இன்று வரை அங்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் கடந்த 6 நாட்களாகவே இருளில் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் பல வீடுகள் முழுவதும், பகுதியாகவும் இடிந்து உள்ளது. தற்போது வெள்ள நீர் குறிப்பிட்ட அளவு வடிந்து இருந்தாலும் பொதுமக்கள் முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.

    வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தேவாலயங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கு அருகில் உள்ள திருச்செந்தூர் மற்றும் வீரபாண்டியன் பட்டிணத்தில் இருந்து படகுகள் மூலம் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளம் வடிந்த பகுதியில் வீடுகளில் சேறும், சகதிமாக காணப்படுகிறது. எனவே வீடுகளை பாராமரிப்பு செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    10 அடி மட்டத்திற்கு தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த டி.வி. மிக்சி, கிரைண்டர் என அனைத்து பொருட்களும் நாசமாகின. இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, கன மழை எங்கள் கிராமத்தையே புரட்டி போட்டுள்ளது. தனித்தீவில் இருப்பது போல் நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எனவே மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி நாங்கள் மீண்டும் வீடுகளில் குடியேற வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது. எங்கள் வாழ்வாதாரமும் முற்றிலும் அழிந்து விட்டது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது.
    • தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது.

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து செல்லப்பட்டு சேதமடைந்தது.

    இதனால் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரையிலான ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.


    இந்த பகுதியில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது. தண்டவாளத்தை ஒட்டியுள்ள மின் கம்பிகள் அனைத்துமே சாய்ந்து வயல்வெளிகளில் கிடக்கின்றன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    முதல்கட்டமாக ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளம் பகுதியில் தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களும் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அங்கு சிக்கியவர்களுக்கும், சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 4 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலும், நேற்று நெல்லை அரசு மருத்துவ மனையில் வெள்ளம் புகுந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்த பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.


    இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்று தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கீதா மெட்ரிக் பள்ளி, டி.எம்.சி. காலனி, கோரம்பள்ளம், முத்தையாபுரம், புன்னக் காயல், முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல் பஸ் நிலையம், ஏரல் காந்தி சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களில் 31 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் ஒரு நாளைக்கு 3 இடங்களுக்கு சென்று முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் 93 இடங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் 4 பேர் கொண்ட ஒரு மருத்துவ குழுவும் தினமும் 3 இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன் மூலம் 12 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இன்று நெல்லை மாவட்டத்தில் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் 4 குழுக்களும், புறநகர் மாவட்ட பகுதிகளில் ஒரு குழுவும் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    • தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது.
    • கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மீண்டும் ஆற்றில் குளிக்க தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து பெரிய அளவில் குறைந்து இருந்தாலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், புதர் செடிகள், பாறைகள் ஆங்காங்கே நீருக்கடியில் உள்ளன. மேலும் பல்வேறு நீர் நிலைகளில் சகதி அதிகமாக உள்ளது.

    எனவே தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்குள் இறங்கினால் இதுபோன்ற புதர்கள், கற்பாறைகள், சகதிகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. அவ்வாறு சிக்கிக்கொண்டால் மீட்பது மிகவும் கடினமாகும்.

    எனவே பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட எந்த நீர் நிலைகளுக்குள்ளும் இறங்க வேண்டாம். மேலும் கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    இதேபோல், பெருமழை வெள்ள காலத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நீர் வடிந்துள்ள இடங்களில் வீடுகளுக்கு செல்லும் மக்கள் மின் இணைப்புகளை முறையாக பரிசோதித்த பிறகு அவற்றை கையாள வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.

    விவசாய நிலங்கள், மரங்கள் ஆகிய பகுதிகளில் மின்கம்பிகள் ஏதேனும் உரசிக்கொண்டு உள்ளதா?, அறுந்துள்ளதா என்பதை எல்லாம் கவனமாக பார்த்த பிறகே மக்கள் செல்ல வேண்டும்.

    இது தொடர்பாக புகார்கள், தகவல்கள் ஏதும் இருந்தால் உடனடியாக 'மின்னகம்' உதவி மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.
    • மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி கன மழை பெய்ய தொடங்கியது.

    17, 18-ந்தேதிகளில் வரலாறு காணாத அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் அணைகளில் இருந்தும், கனமழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கன அடி தண்ணீர் சென்றது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உடைந்ததால் பொதுமக்கள் வெள்ள நீரில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட நகர பகுதிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.

    இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.

    எனினும் சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

    மாவட்டம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் என பல துறையினரும் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    எனினும் 5 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதிகளான ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அம்பேத்கர் நகர், கே.டி.சி. நகர், ராஜீவ் நகர், ஆதி பராசக்தி நகர், தனசேகர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இதே போல ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக வெள்ளம் வடியாத நிலையே உள்ளது.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து செல்ல முடியாத இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி சென்று அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு தவித்த பொதுமக்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பணி பகுதியில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்தது. கல்விளை உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளது. சாலோம் நகரில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ளவர்கள் மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் மாடியில் தவித்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை மீட்பு படையினர் நேற்று பத்திரமாக மீட்டனர்.

    தூத்துக்குடியில் ஏராளமான உப்பளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியை தொடங்க இருந்த நிலையில் அது முடியாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக உப்பள தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளதால் அது செயல்பட முடியாமல் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையமும் 5 அடி தண்ணீரில் மிதந்து வருகிறது.

    மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாநகர் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளத்தில் சிக்கி உள்ள வீடுகளில் வசிப்போர் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள்.

    அங்கு ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கேன் தண்ணீர் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே தங்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தென்திருப்பேரை, மேலகடம்பா, குட்டக்கரை, கேமலாபாத், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகள் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் ஏரல் ஆற்று பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டதால் ஏரல் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட சில இங்களும் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது.

    இதே போல் மணக்கரை, நடுவக்குறிச்சி, புன்னக்காயல், முக்காணி, உமரிக்காடு, ஆழிக்குடி, ஆழ்வார்தோப்பு, மாவடிப் பண்ணை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தற்போதும் வெள்ளம் வடியாமல் உள்ளது.

    தூத்துக்குடியில் தவிக்கும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிஸ்கட், தண்ணீர், பாய், போர்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு முகாம்களில் உள்ளவர்களுக்கும், வீடுகளின் மாடியில் வெள்ளத்தில் தவிப்போருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    ×